Monday, September 29, 2008

தொன்னை நினைவுகள்

வலைத்தளத்தில் நிறைய பேர் திண்ணை நினைவுகள் பற்றி ஒரு சங்கிலித்தொடர் எழுதியிருந்தனர். நான் திண்ணையைப்பற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும் என் வீட்டு திண்ணை பற்றிய பதிவு ஏற்கனவே வலைப்பதிவாக உள்ளது.

ஆதலால் நான் தொன்னை பற்றிய என் நினைவுகளை எழுதுகிறேன். வலையுலகில் நிறைய பேருக்கு “நெய்க்கு தொன்னை ஆதாரமா?” என்கிற பழமொழி தாண்டி தொன்னை பற்றி எவ்வளவு தெரியும் என எனக்கு தெரியவில்லை.

நான் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில், விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் தொன்னையுடன் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. எனக்கு தெரிந்து இரண்டு வகை தொன்னைகள் உண்டு. பச்சை பனை மட்டையில் செய்யப்படும் தொன்னை, மாட்டுப்பொங்களன்று மாடுகளுக்கு சோறு ஊட்ட பயன்படும் பலா இலை தொன்னை. பலா இலை தொன்னை ஒரு விழாத்தொன்னை அத்தோடு அது முடிந்தது.

வயலில் நடவு போன்ற வேலை நடக்கும் போது 100-200 ஆட்கள் வேலை செய்வது சாதாரணம். இம்மாதிரி நேரங்களில் நடவு ஆட்களுக்கு மதிய உணவாக கஞ்சி கொடுக்கப்படும். அந்த கஞ்சியை குடிப்பதற்கு பச்சை பனைமட்டையில் செய்யப்படும் இயற்கை பாத்திரம் தான் தொன்னை.இந்த தொன்னை பனைமரம் இல்லாத ஊர்களில் இருக்க வாய்ப்பில்லை.

வேலையாட்களோடு அவர்களில் ஒருவராக தொன்னையில் கஞ்சி குடிப்பது ஒரு நல்ல அனுபவம். எங்கள் வீட்டில் நடவின் போது அனைவருக்கும் பெரும்பாலும் வயலில்தான் சாப்பாடு, இல்லை தொன்னையில் கஞ்சி.பெரிய பானையில் இருந்து கஞ்சியை அகப்பையில் எடுத்து ஒருவர் அனைவருக்கும் தொன்னையில் ஊற்றுவார். பசியாறும் வரை குடித்துக்கொள்ளலாம். பெரும்பாலும் தொட்டுக்கொள்ள மாங்காய் வத்தல் ஊறுகாய் தான் இருக்கும்.அபூர்வமாக அப்போதைக்கு விலை குறைவான காய்கறிகளும் தொட்டுக்கொள்ள கிடைக்கலாம்.

ஒருமுறை பயன்படுத்திய தொன்னையை குப்பையில் எரிந்து விடுவார்கள், அதே வயலுக்கு அடுத்த வருடம் உரமாகிவிடும்.
இந்த தொன்னையை ஓடும் வாய்க்கால் தண்ணீரில் விட்டு கப்பல் விட்ட அனுபவமும் உண்டு.கப்பல் விடும் போது மீன்கள் அதில் மிச்சம் உள்ள சோற்றை உண்ண போட்டி போடும்.

இதே தொன்னையை நான் கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரியின் வேலி தாண்டியவுடன் உள்ள சில இடங்களில்(தனி பதிவாக விரைவில்) வேறு காரணத்திற்கு பயன்படுத்துவதை பார்க்க நேரிட்டது. கள் குடிப்பவர்கள் பனைத்தொன்னையை கள் ஊற்றி குடிக்கும் ஒரு கலனாகவும் பயன்படுத்தினார்கள். ஆனால் விவசாயிகள் பயன்படுத்தும் தொன்னை போல் புதிய தொன்னை அல்ல. ஒரு சில பழைய தொன்னைகளையே அனைத்து கள் விரும்பிகளும் பயன்படுத்தினர். போதை தேடும் இடத்தில் சுகாதாரம் காணாமல் போவது சாதாரணமே,மொத்தத்தில் கள்ளும் பழசு தொன்னையும் பழசு.

கஞ்சி குடிக்கும் இடத்திலும் கள் குடிக்கும் இடத்திலும் பழைய ஊறுகாய் பொதுவான செலுத்தியாக இருந்தது, மொத்ததில் குடிப்பதற்கு தமிழனுக்கு ஊறுகாய் தேவைப்படுகிறது என்ற உண்மை இதன் மூலம் தெளிவானது.


நெய்க்கு தொன்னை ஆதாரமா? என்று பழமொழி உள்ளது, ஆனால் பலருக்கு வயிற்றுக்கு ஆதாரமாய் இருந்த கஞ்சி தாங்கிய தொன்னை பற்றி ஒன்றும் இல்லையே, அதனால் தான் இந்த பதிவு.

என்ன படிச்சிட்டீங்களா?

இப்போ கேள்வி

தொன்னையின் படம் வரைந்து பாகங்களை குறி? 100 மதிப்பெண்கள்.

18 comments:

சுப்பிரமணியன் said...

வண்க்கம் அண்ணே!


தொன்னை எல்லாம் பனை ஓலை யில தான செய்வாங்க!

நையாண்டி நைனா said...

கேள்விக்கு விடை தெரியா என்னை
போடா வெண்ணை
என்று சொல்ல மாட்டீர்களே...

ers said...

தொன்னையை நான் பாத்ததில்லைங்க... குடுகுடுப்பை காரர் கள்ளுக்கடை பக்கமெல்லாம் போயிருக்காரா?

சந்தனமுல்லை said...

கோயில்களில் தொன்னையில் பொங்கல்/பிரசாதம் கொடுப்பார்களே!! :-))

பழமைபேசி said...

அண்ணா, அருமை அருமை. தாத்தா தொன்னை செய்யுற லாவகத்தை நினைவுபடுத்தி, இல்லாத ஒருத்தரை
நினைக்க வெச்சுட்டீங்க.... எனக்கு எங்க தாத்தா வேணும்...... :-(

நசரேயன் said...

தொன்னையை படுச்சு எனக்கு பனங்கள் ஞாபகம் வந்திருச்சு, ம்ம்ஹும் என்ன செய்ய.. குடிக்க வழி இல்லையே

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி கவிஞன்

//வண்க்கம் அண்ணே!


தொன்னை எல்லாம் பனை ஓலை யில தான செய்வாங்க!//

அதைத்தான் நான் பனைமட்டை அப்படினு சொல்லிருக்கேன் கவிஞரே

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி நையாண்டி நைனா

//கேள்விக்கு விடை தெரியா என்னை
போடா வெண்ணை
என்று சொல்ல மாட்டீர்களே...//

மதிப்பெண்கள் கிடையாது அவளோதான்.

அது சரி said...

//
இதே தொன்னையை நான் கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரியின் வேலி தாண்டியவுடன் உள்ள சில இடங்களில்(தனி பதிவாக விரைவில்) வேறு காரணத்திற்கு பயன்படுத்துவதை பார்க்க நேரிட்டது. கள் குடிப்பவர்கள் பனைத்தொன்னையை கள் ஊற்றி குடிக்கும் ஒரு கலனாகவும் பயன்படுத்தினார்கள்.
//

அடேங்கப்பா! அப்ப காலேஜுக்கு போறதுக்கு முந்தி, நீங்க கள்ளையும் பாத்ததில்ல, தொன்னையில கள்ளு குடிக்கிறதையும் பாத்ததில்ல! சரி, சரி, வீட்டுக்கு பயந்துகிட்டு எழுதறீங்கன்னு தெரியுது :0)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி தமிழ் சினிமா

//தொன்னையை நான் பாத்ததில்லைங்க... குடுகுடுப்பை காரர் கள்ளுக்கடை பக்கமெல்லாம் போயிருக்காரா?//

சும்மா வேடிக்கை பாத்ததோட சரிங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை
/
கோயில்களில் தொன்னையில் பொங்கல்/பிரசாதம் கொடுப்பார்களே!! :-))

/
மார்க்கெட் போற நிலைமயை பார்த்தா பிரசாதம் வாங்கிதான் பொழப்பு ஓட்டனும் போல

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி பழமைபேசி,நசரேயன்,டிவிஆர் மற்றும் அது சரி

/
தொன்னையை படுச்சு எனக்கு பனங்கள் ஞாபகம் வந்திருச்சு, ம்ம்ஹும் என்ன செய்ய.. குடிக்க வழி இல்லையே
/
பட்டையிருக்க பயமேன்

//அடேங்கப்பா! அப்ப காலேஜுக்கு போறதுக்கு முந்தி, நீங்க கள்ளையும் பாத்ததில்ல, தொன்னையில கள்ளு குடிக்கிறதையும் பாத்ததில்ல! சரி, சரி, வீட்டுக்கு பயந்துகிட்டு எழுதறீங்கன்னு தெரியுது :0)//

எனக்கு கல் தெரியும் ஆனா கள் தெரியாது, காலேஜ் படிக்கும்போதுதான் தெரியும் அதுவும் வேடிக்கை பார்த்த்தது தான்

தமிழ் அமுதன் said...

காலம்பர tvs வண்டிய எடுத்துகிட்டு ஏரில காலைக்கடன் எல்லாம் முடிச்சு வேப்பங்குச்சில பல்லு வெலக்கி, நல்லா குளிச்சிட்டு , பக்கத்துல இருக்குற தென்னந்தோப்பு குள்ள போனா பனங்கள்ளு கிடைக்கும் . அங்கேயே தோச சுட்டு விப்பாங்க . பனங்கள்ளு தொன்னைல குடிச்சா வாய் ஓரத்துல வழியும் நாங்கல்லாம் கப்புல தான் குடிப்போம் . கள்ளுக்கும் , நண்டுக்கும் ,காம்பினேசன் அப்படிதான் இருக்கும் .ம்ம்ம்ம் இப்போ எங்க போய் கள்ளுக்குடிக்க ? (அய்யா நானும் தஞ்சை மாவட்ட ஒரு கிராமத்தான் தான் )

குடுகுடுப்பை said...

வாங்க ஜீவன்

//காலம்பர tvs வண்டிய எடுத்துகிட்டு ஏரில காலைக்கடன் எல்லாம் முடிச்சு வேப்பங்குச்சில பல்லு வெலக்கி, நல்லா குளிச்சிட்டு , பக்கத்துல இருக்குற தென்னந்தோப்பு குள்ள போனா பனங்கள்ளு கிடைக்கும் . அங்கேயே தோச சுட்டு விப்பாங்க . பனங்கள்ளு தொன்னைல குடிச்சா வாய் ஓரத்துல வழியும் நாங்கல்லாம் கப்புல தான் குடிப்போம் . கள்ளுக்கும் , நண்டுக்கும் ,காம்பினேசன் அப்படிதான் இருக்கும் .ம்ம்ம்ம் இப்போ எங்க போய் கள்ளுக்குடிக்க ? (அய்யா நானும் தஞ்சை மாவட்ட ஒரு கிராமத்தான் தான் )//

பரவாயில்ல பல்லு வெளக்கிட்டுதான் கள்ளு குடிக்கறீங்க நீங்க

(அய்யா நானும் தஞ்சை மாவட்ட ஒரு கிராமத்தான் தான் )//

எந்த ஏரியான்னே(அல்லது நாடு)

CA Venkatesh Krishnan said...

எங்க வரையறது ?

செல்வ கருப்பையா said...

மார்கழி மாசத்துல கோயில்ல பொங்கல் கொடுக்கிற தொன்னைய உட்டுட்டீங்க? அதே சமயத்துல சபரி மலை போயிட்டு வந்து தொன்னையில அக்கார வடிசலோ என்னவோ தருவாங்களே? இந்தத் தொன்னை எல்லாம் வாழை இலையில பண்ணுறது.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
கருப்பையா
இளைய பல்லவன்.
/மார்கழி மாசத்துல கோயில்ல பொங்கல் கொடுக்கிற தொன்னைய உட்டுட்டீங்க? அதே சமயத்துல சபரி மலை போயிட்டு வந்து தொன்னையில அக்கார வடிசலோ என்னவோ தருவாங்களே? இந்தத் தொன்னை எல்லாம் வாழை இலையில பண்ணுறது./

இனிமே போயிருவோம் சோறு கெடச்சா போதும். வாழை தொன்னை நானும் பாத்திருக்கேன்

/எங்க வரையறது ?/

தனிப்பதிவா உங்க பிளாக் ல வரையுங்க, குடுகுடுப்பைக்கு எதிர்ப்பதிவுன்னு போடுங்க, எனக்கும் விளம்பரம் கெடச்சமாதிரி இருக்கும்