Tuesday, January 26, 2010

ஆ.ஒ அல்லக்கை கார்த்தியும், சிக்கன் புளிசாதமும்.

ஆயிரத்தில் ஒருவனும் ஒரு வழியாக நானும் பார்த்துவிட்டேன், சந்தனமுல்லையின் பதிவின் சொன்னதுபோல் பிரபல தமிழ்/தெலுங்கு படங்களில் (கட்டிப்புடி , கட்டிப்புடிடா என்ற பாடலை விட ,ஒரு உதாரணத்துக்கு) உள்ள ஆபாசத்தை விட, இந்தப்படத்தில் எங்கே ஆபாசம் இருக்கிறது என்று எனக்குத்தெரியவில்லை, வன்முறை இருக்கிறது ஆனால் தேவைப்பட்டதாகத்தான் இருக்கிறது.தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக்கொள்வதும் , அதனை ராஜாக்கள் ஏற்றுக்கொள்வதும் அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம், அதற்கேற்றப் புனைவு தான் இது எனவும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். பலருக்கு இந்த வன்முறை அதிகமாக தோன்றியிருப்பதில் ஒன்றும் வியப்பில்லை.இந்தப்படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இப்படத்தில் கார்த்திக் ஏற்று நடித்திருக்கும் வேடமான எடுபிடி வேலை செய்பவர்களின் தலைவன் வேடத்தில்(தலையாரி) சிறப்பாக செய்திருக்கிறார், தமிழ் சினிமாக்களில் வழக்கமாக நடிகைகளுக்கு வேலை இருக்காது, ஆனால் இந்தப்படத்தில் இரண்டு நடிகைகளுக்கும் வேலை இருக்கிறது, ரீமா சென்னுக்கு பழிவாங்கும் பாண்டியத்தி வேடமென்பதால் ஆதிக்கம் செலுத்துகிறார், சோழர்களுக்கு சேதி கொண்டு போக தலையாரியாக சென்ற அவருடைய வேடத்தை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார், ஹீரோயிசத்தையே பார்த்து பழகிவிட்ட நமக்கு , அல்லக்கை வேடம் என்றாலே வடிவேல் அல்லது, தாமு போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் ஹீரோவுக்கு சொம்பு தூக்கும் வேடம் நம் மனதில் நின்றுவிட்டதால் , கார்த்தி அல்லக்கை வேடத்தில் வீனடிக்கப்பட்டுவிட்டார் என்று நம் மனம் கருதுகிறது. படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு ரீமாவைக்கொண்று, பார்த்திபனை காப்பாற்றி ஆண்டிரியாவை கைப்பிடித்திருந்தால், கார்த்தி கலக்கிவிட்டார் என்று விமர்சனம் வந்திருக்ககூடும்.அல்லக்கையோ , தலையாரி வேடமோ ஒரு ஹீரோவுக்கு உரிய கதாபாத்திரம் என்பதை நாம் என்றுக்கொள்ளும் போது இன்னும் நல்ல படங்கள் வரலாம். கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார் நல்ல நடிகராக வலம் வருவார்.

சிக்கன் புளிசாதம்

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு நானும் மனைவியும் வந்துகொண்டிருந்தோம் , என் வீட்டுக்கு வெகு அருகில் புதிதாக ருசி என்று ஒரு இந்திய உணவகம் திறந்திருந்தார்கள், இன்றுதான் என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் சொன்னேன், அவரும் உடனடியாக இன்று இங்கேயே சாப்பிடுவோம் என்றார். மாலை ஆறரை மணிக்கு நாங்கள் மட்டுமே அங்கே இருந்தோம். சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் ஆர்டர் செய்தோம், சில்லி சிக்கன் என்ற பெயரில் வேகவைத்த சிக்கனுடன் ரெடிமேட் சில்லி சாஸை சிக்கனில் ஊற்றி வெங்காயமும் எலுமிச்சையும் வெட்டி வைத்து கொடுத்தனர். அடுத்து வந்தது சிக்கன் பிரியாணி, பாஸ்மதி அரிசியில் புளிசாதம் பொடியை கலந்து சிக்கனையும் சேர்த்து செய்தது போன்ற சுவையுடன், பக்கத்தில் உள்ள குரோசரி கடையில் நான்கு டாலருக்கு மட்டன் பிரியாணி பார்சல் கிடைக்கும் சுவையும் அருமை. இவன் புளிசாதத்தில் சிக்கனைப் போட்டு அதை வேற உட்காந்து சாப்பிட வெச்சிட்டான். ஆனாலும் ஒரு நன்மை என் மனைவிக்கு புளிசாதம் மிகவும் பிடிக்கும் என்பதால் நன்றாக சாப்பிட்டார். மிச்சமுள்ள சி.புளி சாதத்தை பார்சல் செய்து கொண்டோம் , நாளைக்கு என் மனைவிக்கு அதுதான் மதிய உணவு. எனக்கு ஞாயிறு அன்று வைத்த பழைய மீன் குழம்பு இருக்கிறது அதை வைத்தே அரைபடி அரிசி சோறு இறங்கும். வழக்கமாக என் மனைவிக்கு புளி சாதம் வாங்க வேண்டா வெறுப்பாக எட்டு மைல் தூரம் உள்ள கடைக்கு சென்று புளி சாதம் வாங்கி வருவேன்,(இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்) இனி அந்த சிரமம் இல்லை, நடந்தே சென்று ருசியில் சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினா போதும் அலைச்சல் மிச்சம்.

Monday, January 18, 2010

டயட் பொங்கல்.

குக்கர் பொங்கல் வைத்து சாப்பிட்டாலும், உடல் உழைப்பில்லாத இந்தக்காலத்தில், பொங்கலில் உள்ள இனிப்பு,நெய் முந்திரி பொன்றவை உடல் எடை கொலஸ்டிராஸ், கார்பொஹைட்ரேட் எல்லாவற்றையும் அதிகரித்து உடல் பருமனை அதிகரித்துவிடும். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு டிரெட் மில்லில் தினம் ஒரு மணி நேரம் ஓடவேண்டும். இதற்கு மாற்றாக ஒரு புதுவகை டயட் பொங்கல் எப்படி செய்வதென்று இப்போது பார்ப்போம்.

தேவையானவை

ஓட்ஸ் முடிந்த அளவு (குவேக்கர் ஒன் மினிட் ஓட்ஸ் உபயோகப்படுத்தலாம்.) 2 கப்
0 கலோரி ஸ்வீட்னர் 20 பாக்கெட்
பிரவுன் கலர் பொடி(சக்கரை கலரில் கலோரி இல்லாத ஏதோ உண்ணக்கூடிய ஒரு பொடி, மிளகாய்த்தூள் அல்ல).
உலர் திராட்சை 10
பாதாம் பருப்பு(முந்திரிக்கு பதிலாக, இதில் ஒமேகா 3 கொழுப்பு இருப்பதால் கொலஸ்டிராலை குறைக்க உதவும்)
ஆலிவ் ஆயில் ஒரு மேசைக்கரண்டி.
ஸ்கிம் மில்க்(கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால்) ஒரு டம்ளர்.

செய்முறை:

அடுப்பை மெதுவான தழலில் எரியவிட்டு, எவர் சில்வர் பாத்திரத்தில் ஸ்கிம் மில்க்கை ஊற்றவும், பால் பொங்கியவுடன், போங்கலோ பொங்கல் சொல்லிவிட்டு, ஓட்ஸ் போட்டு இரு நிமிடம் வேகவைக்கவும், பின்னர் சீரோ கலோரி ஸ்வீட்னர் சேர்த்து கலக்கவேண்டும், அத்துடன் உலர் திராட்சை, பொடியாக நறுக்கிய பாதம்பருப்பை சிறிது ஆலிவ் ஊற்றி ஒரு நிமிடம் வறுத்து பொங்கலில் சேர்க்கவும், தேவைக்கேறப் ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம், முடிந்த அளவு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் உபயோகபடுத்தவும். பொங்கல் இப்போது தயார். நேரமில்லாதவர்கள் இதையே மைக்ரோவேவ் ovenலும் செய்யலாம். பாத்திரத்தில் ஸ்கிம் மில்க்கை ஊற்றி பொங்கலோ பொங்கல் சொல்லிவிட்டு மேலே கூறிபடி செய்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்தால் சூடான ஓட்ஸ் பொங்கல் தயார்.

இந்தப்பொங்கல் இதுவரை நான் செய்யவில்லை ஆதலால் அதன் சுவை எனக்குத்தெரியாது, யாராவது செய்து எப்படி இருந்தது என்று சொல்லவும்.

Thursday, January 14, 2010

காணும் பொங்கலும் என் பங்காளி தனசேகரனும்

பாகம் 1.

வில்லு விமர்சனத்துல தவறவிட்ட முக்கியமான ஒரு விசயம். இந்தப்படத்தில ஏகப்பட்ட திருப்பங்கள் இருப்பது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயந்தான். ஆனா திருப்பவே முடியாத ஒன்னும் இருந்துச்சுங்க அதாங்க குஷ்பூவும் ஒரு குத்தாட்டம் போட்டாங்க திரும்பவே முடியாம....

என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்


மேலே உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டு, அடுத்த நாள் முறை பார்த்து யார் வீட்டு மாட்டை முதலில் அவிழ்த்து கோவிலுக்கு அழைத்துசெல்வது என்று ஒரு ஊர் கூட்டம்.இந்த முறை பாக்கிர தாத்தா இறந்து போனதுக்கு அப்புரம் தூங்கிரதுக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாத அவரோட பையன் வந்து அவங்கப்பா வெச்சிருந்த முறை பார்க்கும் நோட்ட (டேட்டாபேசு) மடியில வெச்சிட்டு கூட்டத்துக்கு வந்துருவார்.விசயம் எல்லாருக்கும் தெரியும்கிறதுனால அப்புரம் வேற ஒருத்தர் டேட்டாபேச படிச்சி இந்த வருசம் யார் வீட்டு மாடு கியூவில முதலில் இருக்குன்னு பார்க்கனும்.அதுல பிரச்சினை வேற வரும்.

பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்.இந்த வருசம் என் முறைதான் நாந்தான் மாடு அவுக்கனும் அப்படின்னு அலப்பறைய ஆரம்பிச்சிருவாரு. ஆமாண்டா தம்பி எங்கப்பன் ஊர விட்டு வெளில போனதுக்கு அப்புரம் எல்லாருக்கும் துளிர் விட்டு போச்சு சும்மா விடக்கூடாது அப்படின்னு சொல்லிட்டே வம்பு இழுத்த படி இருப்பாரு.

இந்த வருசம் அவரு வீட்டு முறை இல்லன்னு தெரிஞ்சா அது எப்படின்னு சண்டைக்கு நிப்பாரு.

இல்லப்பா பெரிய மனுசன் சொன்னா கேட்டுக்கனும்.

பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு. பேச வந்துட்டாங்க அது எப்படி என் முறை இன்னும் வரவேயில்லை.எங்கப்பன் வரட்டும்டா உங்களுக்கெல்லாம் வெச்சுக்கிறேன்.இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவனாவது அவுத்தான் இன்னைக்கு வெட்டுதான்.

சரி விடுங்கப்பா அவன் எப்பயுமே அப்படிதான் பேசுவான் கண்டுக்காதீங்க.

என்னாங்கடா கண்டுக்காதீங்க. நீங்க எல்லாம் இப்ப புதுப்பணக்காரன் திமிர்ல பேசரீங்களாடா.உங்க லெட்சணம் தெரியாது, இந்த குருசாமி வீட்டு பயலுவ இன்னைக்கு வேணா லட்சாதிபதியா இருக்கலாம், ஆனா அன்னைக்கு நீங்க கூலு குடிச்ச கொட்டாச்சியெல்லாம் என் வீட்டு வேலி ஓரம் இன்னைக்கும் கெடக்குதுடா, பிச்சைக்கார பயலுவலா.எங்கப்பன் வரட்டும் கணக்கு கேட்டு எவன் எவன் என் சொத்தை அனுபவிக்கிறான்னு பாக்கிறேன்.அன்னைக்கு இருக்குடா உங்களுக்கெல்லாம்.

ஒருவழியா அவர எப்படியோ அடக்கி முறை வீட்டில் மாடு அவிழ்த்து கோவிலுக்கு செல்ல புறப்படுவோம்.அதற்கு முன்னர் அன்று காலையிலேயே மாடுகளுக்கு செண்டிப்பூமாலை,பேப்பர் மால்,வண்டி மாடுகளுக்கு பிளாஸ்டிக் மாலை அவரவர்கள் சார்ந்த் அரசியல் கட்சிகளின் கலரில் மாடுகளின் கழுத்தில் ஜொலிக்கும்.மாட்டுக்கொம்புகளும் திமுக,அதிமுக,காங்கிரஸ்,மதிமுக அப்படி மாறிடும்.அண்ணன் அதிமுக தம்பி திமுக என்றால் மாடு ஒவ்வொரு கொம்பும் ஒவ்வொரு கட்சியில் இருக்கும்.

இந்த மாடுகளை அவித்துவிட்டு மல்லுக்கட்டி மாலைகளை அவிழ்ப்பதுதான் வீரவிளையாட்டு,வீரவிளையாட்டுன்னு சொன்னதுக்கப்புரம் அதுல நான் கலந்துக்கமாட்டேன்னு தனியா வேற சொல்லனுமா?ரோட்டில அவித்துவிட்டு குதூகலமான ஜல்லிக்கட்டும், மல்லுக்கட்டும்தான் இந்த நேரத்தில முக்கால்வாசிப்பேரு தண்ணிலதான் இருப்பாங்க,தானும் தண்ணி போட்டு மாட்டுக்கு தண்ணி போட்டு விடற ஒருத்தரும் எங்கூர்ல உண்டு. தனசேகரனும் எல்லா மாட்டையும் மல்லுக்கட்டி,ரகளை பண்ணி விழுப்புண்ணோடு கட்டியிருந்த வேட்டியையும் ஏதாவது ஒரு மாட்டுக்கொம்பில் இழந்து ஜட்டியுடன் சவுண்ட் விட்டபடி எங்காவது விழுந்து விடுவார்.

இந்தக்கூத்தெல்லாம் முடிந்தவுடன் காணும் பொங்கலுக்கு காசு உள்ளவர்கள் தஞ்சாவூருக்கு படத்துக்கு போயிருவாங்க, இல்லாதவனுக்கு பக்கத்து ஊரில் உள்ள கீழே காட்டாறும், மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க.சரி நான் எங்கே போவேன்.எங்கப்பா ரொம்ப கண்டிப்பு,உடனே எதாவது விழா நாள் வந்துட்டா வயலுக்கு தண்ணி கட்ட போ, அந்த சைக்கிள் தொடச்சி ஒரு மாசம் ஆகுதுன்னு வேல கை மேல வெச்சிருப்பாரு.

காணும் பொங்கலுக்கு அடுத்த நாள் நிறைய பேர விழுப்புண்ணோட பாக்கலாம். பங்காளி தனசேகரனும் நல்ல பிள்ளையா மாறி அவரு வேலைய பாக்க போயிடுவாரு.....

நீங்களும் உங்க கருத்த சொல்லிட்டு போங்க மக்களே.

Wednesday, January 13, 2010

பிரித்தலும்,மேய்தலும், கோர்த்தலும்


தலையை மட்டும் குழம்பு வைக்கலாம்
சொல்கிறாள் அம்மா.
குடல் பொறியல் செய்யலாம்
சொல்கிறார் அப்பா
தொடைக்கறி முடிச்சுகள் உடுத்தியபடி.
உப்புக்கண்டம் அப்புறம் பிரிச்சுக் கோர்த்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் காய வைத்துக்கொண்டிருந்தாள்
வாசம் இழுத்தபடியே
அவனை பார்க்கிறேன்
கழுத்தில் பளபளத்தது புதுமணி.
வெறும் எலும்புதானா, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
ஏறிக்கெழுத்தி வலையில் பிடிபட்டது
மாமனாரும் வந்து சேர்ந்தார் சாக்கு நிறைய மீனோடு.
தாலி கட்டியவனை புளிவாங்க அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்து
சாக்கு மீனும் சமைத்தெடுத்து
பிரித்து மேயப்பட்டது மீன்கள்
தட்டு மட்டும் முட்களுடன்.
சாப்பிட்டு முடித்து ஏப்பம்
விட்டுத் திரும்புகையில்
அவனது
கழுத்து மணி ஓசை
விரைவில் உப்புக்கண்டம் ஆகப்போவது
தெரியாமல்
அவனது தொடைய பிரித்துக் கோர்ப்பது
யார்??

அசல் இங்கே


மாட்டுப்பொங்கலும் என் பங்காளி தனசேகரனும்.

ஒன்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது , என் சொந்த கிராமத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடி,அந்த அனுபவம் ஒரு சுகமான அனுபவம்,மாட்டுப்பொங்கல் அன்று எப்படியும் கிரிக்கெட் மேட்ச் இருக்கும். காலையிலேயே எங்க அண்ணனும் நானும் கிளம்பிருவோம்.எங்கண்ணன் வேகப்பந்து வீச்சாளர், நான் விக்கெட் கீப்பர்,விக்கெட் கீப்பிங் பண்ணாட்டி என்ன சேத்துக்கமாட்டாங்க.மோங்கியா மாதிரி கீப்பிங் பண்ணுவேன்,பேட்டிங்கும் அப்படிதான்.ஒரு வழியா விளையாடிட்டு மாலை ஒரு 4 மணிக்கு மேல வீட்டுக்கு வருவோம்.தம்பி மாட்டுக்கு புல் அறுக்க போயிடுவான்.

ஊரில் உள்ள அனைத்து மாடுகளும் ஒரே நேரத்தில் ஏரியில் தண்ணியில் அடிக்கவேண்டும்,பெரும்பாலும் இது மாலை ஆறு மணி அளவில் இருக்கும். கிரிக்கெட் விளையாடிட்டி வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் நல்ல திட்டு கிடைக்கும்.எங்கண்ணனுக்கு கோபம் வரும் நமக்கு அதெல்லாம் கிடையாது உடனே இருக்கிற கறிச்சாப்பாட ஒரு வெட்டு வெட்டிட்டு, மாடு தண்ணில அடிக்க எல்லா மாட்டையும் ஒட்டிட்டு போவோம்.

இந்த நேரம் என் பங்காளி தனசேகரன் அவர் வேலை பார்க்கும் ஊரில் இருந்து ஊர் வந்து சேரும் நேரம்.இவரின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பதில் முதன்மையானவன் நான்.பொங்கல் அன்று வரமாட்டார் ஆனால் மாட்டுப்பொங்கல் அன்று மாடு தண்ணியில் அடிக்கும் முன் எப்படியும் வந்து விடுவார்.

என்னடா பங்காளி மாடு தண்ணில அடிக்கறப்ப எவனாவது பிரச்சினை பண்றானா? வெட்டிருவோம் வெட்டி சொல்லிட்டே வருவார். ஒரு வழியா மாடுகள் ஏரியில் தெற்கில் இருந்து வடக்காக நீச்சலடிக்க அனுப்பப்படும், முதலில் பசுமாடு கரையேறுமாறு பார்த்துக்கொள்வர்.

அப்படியே வீட்டில் மாடுகளை புதிதாக அடிக்கப்பட்ட அச்சுகளில் கட்டிவிட்டு, வீட்டு வாசலில் மாட்டுக்கு பொங்கல் வைப்போம், இது வெறும் உப்பும் பச்சரிசியும், கூடுதலாக நெல்லிக்காய் வாழைப்பழம்,கரும்பு போன்றவைகளையும் சேர்த்து செய்வது.

மாடுகளுக்கு சோறு ஊட்ட தேவையான தொன்னைகள் பலா இலையில் செய்வோம்.ஆவாரம்பூ இலை,பிரண்டை மற்றும் சில இலைகளை வைத்து மாலை செய்வோம்.

ஒரு வெங்கல சொம்பில் தண்ணீர், இது மாடுகளுக்கு வாய் கழுவ,ஒரு தொன்னையில் குங்குமம்,மஞ்சள்.சற்றே பெரிய தொன்னையில் பொங்கல் எடுத்துக்கொள்வோம். இதற்கு முன்னர் எங்கம்மா அரிசி மாவில் கோலம் போட்டிருப்பார், எங்களுக்கு சகோதரி இல்லை,இருந்திருந்தால் அவர்தான் கோலம் போட்டிருப்பார்.

விவசாயியும் ஒரு கோலம் போடவேண்டும்,அந்தக்கோலம் வீட்டில் இருக்கும் ஏர் கலப்பையின் மோத்தாடியை (மாட்டின் கழுத்தில் பூட்டப்படும் ஒரு உலக்கை போன்ற ஒரு மரம்). உலக்கை என்றால் என்ன? மோத்தாடி என்றால் என்ன?(பழமைபேசி கவனத்திற்கு).வைத்து செங்கல்லின் மூலம் கிடைத்த கோல மாவின் மூலம் ஒரு சதுரம் போட்டு குறுக்காக ஒரு பெருக்கல் குறி இடுவதுதான் கோலம்.இந்தக்கோலம் நான் நன்றாக போடுவேன்.

இப்போது மாட்டுக்கு சோறு ஊட்டுதல், ஒவ்வொருவரும் ஒரு தொன்னை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும்,பக்கத்து வீட்டு சிறுவர்களும் வருவார்கள்.தாம்பலத்தை எடுத்து இசை முழங்க பொங்கலோ பொங்கல்,கோவிந்தா கோவிந்தா என்று மாட்டுக்கு சோறு ஊட்டுவோம். நான் சிறுவனாக இருக்கும்போது பக்கத்து வீட்டு கோவிந்தா, அடுத்த வீட்டு கோவிந்தா என்று கூறியும் இருக்கிறேன்.

இப்ப மாட்டுக்கு சோறு ஊட்டியாச்சு, மாலையை போட்டிட்டு அப்படியே புல்லையும் சாப்பிட கொடுத்திட்டு. நாங்க சாப்பிட போகனும்.

என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்

குடுகுடுப்பைக்காரார் இதையெல்லாம் சாப்பிடனும்.பங்காளி தனசேகரனின் சாகசங்களோட மீண்டும் சந்திப்போம்.

Tuesday, January 12, 2010

இக்கொடுமை எதிரிக்கும் கூடாது

தூக்கி வீசப்பட்ட ஊறுகாய் பாட்டில்

சரக்கு மட்டும் ஊறுகாயற்று

எனக்கு நானே சமாதானம் கொண்டவன் போல்

சாவதானமாகவே குடித்தேன்

சைடிஷ் இல்லாமல் குடிப்பவன் என்ற

பெருமைகளை புறம் தள்ளி

சரக்கு மட்டுமே கதி

சரக்குக்கு நானே கதி

என்றொரு காலம்

இருந்தவரை எல்லாமே சரியெனும்

போதையில் மூழ்கிப்போய்

ஊறுகாய் தவிர்க்கப்பழகி

முழுதும் குடித்தபின்

அடுப்படியில்

எனக்கே எனக்கென சமைத்த

சிக்கன் ஊறூகாய்

சட்டி நிறைய

கிடைத்த குஷியில்

சரக்கு தேடினேன்

பூட்டப்பட்ட வீட்டில்

சரக்கில்லாமல் தேம்பியழும் நான்

இக்கொடுமை எதிரிக்கும் கூடாது!!

அசல் இங்கே


Friday, January 8, 2010

பின்பக்கம் கிழிந்த என் காருக்கு பட்டர்பிளை எபெக்ட் காரணமா?.

வட அமெரிக்காவில் தற்போது நிகழும் கடும்குளிர் மற்றும் பனிப்பொழிவினால், எப்போதும் பனிப்பொழுவு /குளிரினால் பாதிக்கப்படாத மாடு சார்ந்த டெக்ஸாஸ் மாகானமும் பாதிக்கப்பட்டது, வழக்கமா பனிப்பொழிவு அதிகம் உள்ள மாகானங்களில் சாலையில் பனியை சுத்தம் செய்யும் வாகனம் இருக்கும், டெக்ஸாஸில் அதெல்லாம் கிடையாது. நேற்று கொஞ்சம் ஐஸ் ஸ்லீட் இருந்தது, ஆனாலும் கடமையே கண்ணாக வாழும் நான் ,கடுங்குளிர் மற்றும் சாலைகளில் உள்ள ஐஸ் ஸ்லீட்களை துச்சமாக மதித்து அலுவலகம் செல்ல காரை எடுத்து பனி படர்ந்த சாலைகளில் செலுத்தினேன்.(ராஜேஸ்குமார் நாவலில் வரும் கார் மாதிரி)

ஸ்டாப் சைனில் காரை நிறுத்தும்போது பிரேக் வழுக்கி எப்படியோ நிறுத்தியும் விட்டேன். ஆனாலும் விதி வலியது, என் பின்னால் வந்தவர் காரை நிறுத்தமுடியாமல் பனியில் சறுக்கி என் காரின் பின்பக்க பம்பரை காலிசெய்துவிட்டார். என்னுடன் என் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணியும் வந்தார், இவர் சாலை சூழ்நிலை சரியில்லாத நாட்களில் தனியாக கார் ஓட்டமாட்டார்.

இருவரும் இறங்கி எங்கள் காரை இடித்தவரை நோக்கி நடந்தோம், போலிஸை அழைக்கச்சொன்னார் என் மனைவி, ஏற்கனவே ஒருமுறை இவர் கார் ஓட்டிச்செல்லும்போது இன்னொருவர் எங்கள் காரில் இடித்துவிட்டார், போலிஸில் சொல்லாமல் போன் நம்பரை மட்டும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார், ஆனால் அந்த மனிதர் இன்சூரன்சுக்கு போன் செய்து தவறு என் மனைவி மேல் என்று அழகாக மாற்றிச்சொல்ல கடைசியில் நாங்கள் டிடக்கிடிபிள், மூன்று வருடம் அதிக இன்சூரன்ஸ் பிரிமியமெல்லாம் கட்டினோம், அந்த அனுபவத்தால் போலிஸ் ரெக்காட் யார் மேல் தவறு என்பதை பதிவு செய்துவிடும் என்பதாலும் அப்படிச்செய்யச் சொன்னார்.

மோதியவரிடம் பேசினோம் அவர் தவறு என்னுடையதுதான் என்றார், போலிஸை அழைக்கவேண்டுமா, இல்லை இன்சூரன்ஸ் நம்பர் மட்டும் வாங்கிக்கொள்ளட்டுமா என்றேன். உங்கள் விருப்பம் என்றவர், தன்னுடைய கணவருக்கு போன் செய்துவிட்டு போலிஸை அழைப்பது கட்டாயமாம் என்றார், இருவரும் அழைத்தோம் , யாருக்கும் அடிபடாமலும் , கார் ஓட்டக்கூடிய நிலையிலும் இருந்தால் இன்சூரன்ஸ் தகவல்களை பறிமாறிக்கொண்டு கிளம்பச்சொன்னார்.

இன்சூரன்ஸ் தகவல் பரிமாறும் போது அவருடைய கடைசிப்பெயரை வைத்தே அவர் தமிழர் என்று தெரிந்துகொண்டேன், பின்னர் தமிழிலேயே பேசிவிட்டு என் காருக்கு வந்தேன், ஒரு வெளிநாட்டுக்காரரோடு மோதியிருந்தால் இது ஒரு உலகத்தரமான் மோதல் என்று சிலாகித்திருப்பேன்.கார் ஓடும் நிலையில் இருந்தாலும் பம்பர் உடைந்து அடுத்த லேனையும் ஆக்கிரமித்தபடி இருந்ததால், மீண்டும் வீட்டுக்கு வந்து மற்றொரு காரை எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் தாமதமாக அலுவலகம் வந்தேன்.

பார்க்கிங்க் லாட்டில் சில கார்களே இருந்தன ,அலுவலத்தின் உள்ளே சென்றேன் ஒருவர் மட்டும் இருந்தார், இன்றைக்கு அலுவலகம் பனிப்பொழிவிற்காக மூடப்பட்டுள்ளது என்றார், வழக்கமாக இந்த மாதிரி நேரங்களில் அலுவலக பிரத்யோக நம்பருக்கு போன் செய்தால் தகவல் இருக்கும். சமீப காலமாக ஏற்பட்ட இலக்கியவாதி , பின்நவீனத்துவவாதி சிக்கலில் இதைச்செய்ய மறந்துபோனேன்.ஒருவேளை நசரேயன் இதைத்தான் எதிர்பார்த்திருப்பாரோ?

காரில் இடித்தவர் எனக்கு போன் செய்து அவருடைய இன்சூரன்ஸ் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார், இன்சூரன்ஸ் காரர்களும் அவ்வாறே கூறினர். இன்றைக்கு காலையில் காரை எடுத்துச்சென்றேன், பம்பரின் இடது பக்கம் கிழிந்து தொங்கியதால் பம்பர் முழுவதும் மாற்றவேண்டும் என்றார், ஆனால் பம்பரின் வலது பக்கத்தில் என் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு ஒரு சின்ன கீறல் அது இந்த இடித்தலால் வந்ததல்ல அதனால் அதற்கு நீங்கள்தான் பணம் கொடுக்கவேண்டும் என்றார். ஒரே பாகம்தானே எப்படி இருந்தாலும் மாற்றித்தானே ஆகவேண்டும். நான் காசு கொடுக்கமுடியாது வேண்டுமென்றால் மாற்றாமல் சரி செய்து கொடுங்கள் என்றேன். இல்லை நாங்கள் புரோரேட் பண்ணிதான் பே பண்ணுவோம் என்று இறுதியாக சொல்லிவிட்டார், என் பங்கு சிறிய தொகைதான் அவரின் வாதிடலும் ஒரு வகையில் சரிதான், ஆனால் இடிபடாமல் இருந்தால் இந்த சிறிய கீறலை நான் சரி செய்யப்போவதில்லை என்றேன், ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. எனக்கும் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருந்ததாலும் தொகை சிறிதாக இருந்ததாலும் சரி தொலைகிறது என்று வந்துவிட்டேன். திங்கள் கிழமைதான் சரி செய்யக்கொடுக்கவேண்டும்.

இந்த ஆக்ஸிடெண்டுக்கு ஐஸ் ஸ்லீட் அதிகமாக இருந்தது மட்டுமே காரணம், ஆனாலும் இலக்கியவாதியாகிவிட்ட பிறகு யாரையாவது குறை சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது, பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் இதற்கு காரணம் பதிவர் முகிலன் என்று. உங்களுக்குத் தெரிந்து இருக்கும் பதிவர் முகிலனின் கார் சமீபத்தில் ஆக்ஸிடெண்ட் ஆன செய்தி, நேற்றைக்கு முந்திய இரவு என்னிடம் அது பற்றி போனில் பேசினார், அடுத்தநாள் என் கார் ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கிறது, ஆகவே ஒரு பட்டர்பிளை எபெக்டினால்தான் இது நடந்ததாக உறுதியாக இல்லாவிட்டாலும் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.

முகிலன் சுயேச்சையாக நிற்கிறார் அவரை வம்புக்கு இழுத்து குற்றம் சாட்டவேண்டும் என ஆவலாக இருந்த வானம்பாடிகளின் ஆசை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்தப் பதிவை படிப்பவர்கள், யாருடைய வாகனமோ விபத்துக்குள்ளாவதை கேள்விப்பட்டால் அதற்கும் பட்டர்பிளை எபெக்ட்தான் காரணம் என்று நீங்கள் கதைக்கலாம்.இலக்கியவாதிகள் இலக்கியத்தை மட்டும்தான் விமர்சிக்கவேண்டுமா என்ன ? இந்த மாதிரி கொஞ்சம் கூட புத்தியில்லாத / நேர்மையில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது நம் இலக்கியவாதி உலகத்தில் சாதாரணம்தானே.

அடைக்கப்படாத கடை

கிளர்ந்தெழும் பசி
அடங்காப் பசி
பசியில் துடிக்கும் சோகம்
அடையப்படா உணவு
பசியில் கண்டபடி உண்டபின்
எப்போதும் பெருங்கொண்ட ஏப்பம்
எல்லோர்க்கும் பொதுவென்றே கொள்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அடையாளம் பிரிக்கும்
உறுப்புகளை மறந்து போ
உள்ளிருக்கும் சதை
வறுத்து சிவக்கட்டுமே;
அந்த வெளிச்சத்தில் பார்
தின்றால் ருசிக்கத்தான் செய்யும்
ஆனாலும் !?
பட்டியல் படித்து விலை அறிந்ததால்
நீ ஆடு
நீ கோழி
நீ மீன்
ஏதும் அறியா எண்ணற்ற உயிர்களுக்கு !
விலைப்பட்டியல் அதிகாரச் சின்னங்கள் ஆனதும்
அதற்கொரு கடை!
அதற்கொரு கத்தி !
அதற்கொரு எடை.
ம்...மகாப் பெரிய அலுப்பு வந்து தொலைக்கட்டும்
கடைகாரனுக்கு ;
மாயா லோகத்தின்
மயக்கும் வசீகரங்களில்
சில்லறை காசாகி சிதறிச் சிரிக்கும்
ஒரு வெஜிடேரியன் பெண்ணை அவன் லுக்கும்போது
அவனிடம் நான்
கேட்டுக் கொள்வது
ஆடும், கோழியும், மீனும்
இலவசமாய் ...
எனக்கே கிடைக்கட்டும்!


இங்கே அசல்

Thursday, January 7, 2010

ஒரு(மீள் )பின்னவீனத்துவ பதிவு.

எனக்கு பின்நவீனத்துவம் தெரியாது என்று உளறிக்கொண்டிருப்பவர்களுக்காகவும், என்னுடைய பின்நவீனத்துவப்பதிவை இதுவரை படிக்காத என் வாசகர்களுக்காகவும் உலகத்தில் பின்நவினத்துவத்தை இப்படி இதுவரை யாரும் எழுதியதாக உலக பின்நவீனத்துவ வரலாற்றில் இல்லை என்பதை நிருபிக்கவும் அந்தப்பதிவை மீண்டும் தருகிறேன்.

ஒரு பின்னவீனத்துவ பதிவு எழுதும் முயற்சி.இது பின் நவீனத்துவம் இல்லையென்றால் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்.

--------------------------------------------------------------------------------------


நவீன கட்டண XXப்பிடம்- நுழைவுக்கட்டணம் 50 பைசா மட்டும்.
(முழுக்கட்டணம் 5 ரூபாய்,தள்ளுபடி 4.50 ரூபாய் வசந்த கால சிறப்பு சலுகை)

விதிமுறைகள் பின்வருமாறு.

நுழைவுக்கட்டணம் (நம்பர் 2)50 பைசா மறு நுழைவு அனுமதி கிடையாது.
+
முறை 1: டிஷ்யூ பேப்பர் : 5 ரூபாய் பேப்பர். + ரூம் சர்ஜார்ஜ் 10 =15 ரூபாய்
உச்சா இலவசம்.(நம்பர் 1) (5 ரூபாய் மதிப்பு)

முறை 2 : பக்கெட் தண்ணீர் : 5 ரூபாய் தண்ணீர் :கீழ் நாட்டு முறை சிறப்பு அறை 17 ரூபாய்= 22 ரூபாய்.
உச்சா இலவசம்..(நம்பர் 1) (5 ரூபாய் மதிப்பு)

இரண்டில் ஒன்று கண்டிப்பாக தேர்வு செய்யவேண்டும், இல்லையென்றால் தண்டம் 50 ரூபாய்.

+

சீவேஜ் சர்ஜார்ஜ் = 7 ரூபாய்

+
சீவேஜ் பில்லிங் Fee: 3 ரூபாய்.

+

சுகாதாரத்துறை வரி : 2 ரூபாய்

+

நகராட்சி வரி : 1 ரூபாய்.

மொத்தம் வரிகள் உட்பட: 0.50+ 22.00+7.00+3.00+2.00+1.00= 35ரூபாய் 50 காசுகள் மட்டுமே.
(உங்கள் கவனத்திற்கு:நீங்கள் 4.50 ரூபாய் சேமித்துள்ளீர்கள்,முறை 1 ஐ தேர்ந்தெடுத்து அடுத்த முறை ரூ 7 மிச்சம் செய்யுங்கள்).

அடுத்தமுறை இந்த டிக்கெட்டை காண்பித்தால் 10% சிறப்புத்தள்ளுபடி உண்டு.

(கட்டிய வரிகளுக்கு வருமான வரிச்சலுகை உண்டு)
(billing software by பின்ந billing systems)

எங்க ஆளக்காணோம்.

பில் நவீனத்துவம் பாத்து பயந்து தெரு நவீனத்துவம் தேடி ஓடிட்டார்.

Wednesday, January 6, 2010

நசரேயனின் அட்டூழியம் - HOT

திணமனி ,குங்குமம், விகடன் வரை பிரபலமான பதிவர் நசரேயன், நேற்று இலக்கியவாதி யார் என்று ஒரு பதிவு எழுதியிருந்தார், முற்றிலும் எள்ளல் மிகுந்த அந்தப்பதிவில், முடிவில் என்னுடைய பெயரைப் பயன்படுத்தி நான் தான் அந்த இலக்கியவாதி என்று முடித்திருக்கிறார். இலக்கியவாதி அப்படின்னு அவரு என்னைப்புகழந்ததா சிலர் நினைக்கலாம். ஆனால் நசரேயனின் நோக்கமே வேறு, அதனை நீங்கள் அந்தப்பதிவில் பின்னூட்டமிட்ட கோவி.கண்ணன் பின்னூட்டம் மூலம் அறியலாம். கோவி.கண்ணன் பின்னூட்டம் சொல்வது இலக்கியவாதி என்பவர் ஒரு வரைமுறைக்குள் எழுதுபவர். இதன் மூலம் தெரிவது என்னவென்றால் என்னை வரைமுறைக்குள் எழுதும் பதிவர் என்று சிறுமைப்படுத்தும் ஒரு கீழ்த்தரமான முயற்சியே. எனக்கு பின்நவீனத்துவம் தெரியாது என்று நடுவீதியில் நின்று சொல்வதே இதன் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற அவர் கோவி.கண்ணனை பயன்படுத்திக்கொண்டுள்ளார். இவரது பதிவின் மூலம் விதூஷ் என்ற பதிவர் என்னுடைய பதிவை பாலோ செய்கிறார், அவர் என்னிடம் இலக்கியம் எதிர்பார்த்தால் நான் எங்கே போவது.

அது மட்டுமில்லாமல் நான் இலக்கியவாதி என்பதற்கு சான்றாக ஒரு பதிவை தந்துள்ளார், அவரது நோக்கம் அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் நாய்ப்பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பை என்று குற்றச்சாட்டு என்மேல் வைக்கப்பட்டது, அதனை வைத்தவர் அது சரி என்னும் பதிவர், அவர் நீண்ட நாட்களாக என்னுடைய கு.ஜ.மு.க வில் சேர்ந்து கட்சியை கைப்பற்ற நினைப்பவர். ஆனால் கு.ஜ.மு.க ஒரு ஓர் உறுப்பினர் கட்சி, ஜக்கம்மா சொல்வதை கேட்டு அப்படியே வழிநடத்தும் ஒரு பொதுச்செயலாலர் மட்டுமே நான். அந்தப்பதிவிற்கு இணைப்பு கொடுத்து உண்மையாகவே நான் நாய் பத்திர ஊழல் செய்ததாக நம்மவைக்கும் முயற்சியே அன்றி வேறல்ல.

இந்த துவேஷம் நேற்றைய என்னுடைய பதிவில் அவருடைய பதிவில் 75% பதிவுகளில் வரும் "நான் கருப்பன் " என்ற கதாபாத்திரத்தை விமர்சித்ததற்காக என நீங்கள் நினைக்கலாம், ஆனால் அப்படி இல்லை, நான் ஒரு நல்ல நண்பனாக அவருடைய பதிவை விமர்சித்தேன், அதே சமயத்தில் அவர் எழுதிய பிளாக்கர் எக்ஸ்போர்ட் டூலை படுபயங்கரமாக பாராட்டியும் இருந்தேன். ஆனால் இவர் என் மேல் இதற்கு முன்னமேயே காழ்ப்புணர்ச்சி கொண்டவர் என்பதை என்னுடைய "பிரிந்த நண்பர்கள் சந்திந்தால்" பதிவில் அவர் இட்ட பின்னூட்டம் மூலம் அறிந்துகொண்டேன், அந்தப்பின்னூட்டம் " அந்த ஜட்டி கருப்பன் நான் இல்லை" அப்படின்னா என்ன சொல்லவருகிறார்.

இவர் என்னை கிறிஸ்துமஸூக்கு நியூயார்க வரச்சொன்னார், நான் போகவில்லை ஆனால் வில்லனை என்னுடைய உளவாளியாக அனுப்பி வைத்தேன், ஆனால் என்னுடைய நேரம் அவருடைய உளவாளியாக மாறிவிட்டார். வில்லன் டாலஸில் இருந்து நியூயார்க்குக்கு குடும்பத்தோடு பிளைட் டிக்கெட் வாங்கித்தரச்சொன்னார்,என்னால் முடியவில்லை இதனை நசரேயன் தன் பணவலிமையால் செய்து வில்லனை தன்வசப்படுத்தியுள்ளார் என்றே அறியமுடிகிறது, இப்போது நான் வில்லனுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை.

இதிலும் முத்தாய்ப்பாக அந்தப்பதிவில் முடிவில் "இப்படி ஒரு அடையாளமாக வாழும் மனிதர் குடுகுடுப்பையார்" என்று முடித்திருக்கிறார், "வாழும்" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து அவர் வன்மத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

Tuesday, January 5, 2010

பழமைபேசிக்கு ஒரு எச்சரிக்கை.

"அண்ணே நல்லா இருக்கீங்களா" ன்னு பெரிய சித்தப்பா வயசுக்காரரான நீங்க போன் பண்ணி பேசறத கேக்கமுடியாத தவிப்பிலும், நீங்கள் செய்யும் காரியத்தின் மேல் உள்ள கோபத்திலும் , உங்கள் மேல் உள்ள அக்கறையிலும், கிட்டத்தட்ட அனைத்துப்பதிவுமே மீள்பதிவு போட்டுவிட்ட நிலையில் புதிதாக ஒரு பதிவுக்காக ஆபத்தில்லாத உங்களை எச்சரித்து இப்படி ஒரு பதிவு எழுதுகிறேன்.

ஒன்னும் இல்லீங்க பழமையாரே நீங்க ஊருக்கு கிளம்பின நேரத்தில ஐந்து வருடம் முன்னால் வாங்கிய என்னுடைய நோக்கியா செல்போன் காணாமல் போச்சு, அதனால் உங்க குரல கேக்கமுடியல, அதுக்கப்புறம் உங்கள மாதிரி ஐபோன் வாங்கலாம்னு பிளான் பண்ணி கடைக்கு போய் ஆட்டுக்கறி வாங்கி சமைச்சு சாப்பிட்டு, திரும்பவும் ஒரு ஓட்டை போனு வாங்கினேன் அப்படியே உங்க குரலையும் கேக்கமுடிஞ்சதுங்க வாய்ஸ்மெயிலில் அப்படியே உங்க ஞாபகம் வந்திருச்சு, உங்களுக்கு பேச்சி ஞாபகம் வந்த மாதிரி.

இந்தியாவில நீங்க போய் பெரிய பேச்செல்லாம் பேசி கலக்கிட்டு இருக்கீங்க.யாரும் படத்தை வலையில போடவேண்டாம்னு சொல்லிட்டு நீங்க மட்டும் ஒரு தொப்பிய தலையில போட்டுட்டு, பழங்காலத்து ஓலைசுவடி படிச்சு சிகப்புச்சாயமெல்லாம் பூசி செயற்கை இளமையா அழகா போஸ் கொடுக்கறீங்க. இந்தப்போட்டோவா பாத்துட்டு உங்க வாயால தளபதி பட்டம் வாங்கின நசரேயன் தன்னோட பதிவுகளில் 75% நான் கருப்பு, அட்டைக்கருப்பு,கறுப்பு,ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட கரிப்பு, குறுப்பு, கரிபால்டி, துண்டு போட்டுக்கறேன் இப்படியே பதிவ போட்டு ரஜினிகாந்த ரேஞ்சுக்கு ஒரு இமேஜ் பில்டப் பண்ணி வெச்சிருக்காரு. இவரோட பதிவெல்லாம் 1MB ய தாண்டி பெரிசா போனதுக்கு தானே கஷ்டப்பட்டு GWT பயன்படுத்தி ஒரு எக்ஸ்போர்ட் டூல் எழுதிருக்காரு. அதுல பாருங்க அந்த டூல அவரோட தளத்தில டெஸ்ட் பண்ணிருக்காரு, அது ஒரு மெஸேஜ் கொடுத்திருக்கு இப்படி

"நீங்கள் , கருப்பு, கறுப்பு,கரிபால்டி, துண்டு போன்ற வார்த்தைகளை நீக்கினால் உங்கள் பதிவு 40 மெகா பைட்டில் இருந்து 2 கிலோ பைட்டா குறைந்துவிடும்"," குறைக்க விருப்பமா?" அப்படின்னு கேக்குதாம். உங்களால் எந்த அளவுக்கு உங்க தளபதி பாதிக்கப்பட்டிருக்கார் பாருங்க.

இதனாலதான் அவரோட போட்டோவ தன் பதிவில போட பயப்படுறாரு, தினமும் என்கிட்ட போன் பண்ணி பழமையார அந்தத்தொப்பியில்லாமல் போட்டோவ போடச்சொல்லுங்கன்னு பாடாப்படுத்துறார். நீங்க தொப்பியில்லாமல் போட்டோவ போட்டவுடன் அவரும் தன்னுடைய முகத்தை தன் பதிவில் இடும் எண்ணத்தில் இருக்கிறாராம். எனக்குத்தெரிந்து நான் முன்னமே சொன்னது இது ஒரு நல்ல தருணம் , அப்படியே பழனிக்கு போய் தொப்பிய கழட்டி சந்தனத்தை தலையில தடவி ஒரு போட்டோ எடுத்து உங்க பதிவில போடுங்கண்ணே, "பழனியில் முடி எடுத்தபின்" அப்படின்னு பதிவும் போட்டிரலாம். என்னதான் கழுதை படத்தை போட்டு திருஷ்டி கழிச்சாலும் இப்ப இருக்கிற மாதிரி கவர்ச்சித் தொப்பியோட படமெல்லாம் போட்டா உங்களுக்கு ஆபத்து, காலம் கெட்டுப்போய் கெடக்கு பெண்கள் எல்லாம் வேற வேலை சோலி இல்லாம உங்க போட்டோவப்பாத்து உருகிப்போறாங்களாம்.

நீங்கள் தொப்பிய கழட்டி உங்கள் கவர்ச்சியை இழந்து போட்டோ போட்ட அடுத்த நாள், தளபதி தன்னுடைய வலைப்பதிவில் தன்னுடைய திருமுகத்தை ஏற்றுவார். கூடுதலாக குடுகுடுப்பையாரும் இணைந்து மிரட்டும் எண்ணம் உள்ளது. நசரேயனின் துண்டுக்கு ஒரு அர்த்தம் கிடைக்க நீங்கள்தான் மனசு வைக்கவேண்டும் பெரியவரே.

இப்படிக்கு உங்கள் பேச்சி போல் யார் பேச்சையும் கேக்காத ஒரு அப்பிராணி.


பிகு: ஆளாளுக்கு எச்சரிக்கை பதிவ ஆரம்பிச்சிராதீங்கப்பா.

Monday, January 4, 2010

பிரிந்த நண்பர்கள் சந்தித்தால்.

ஆறு வருடங்களாக ஐடி துறையில் வேலை பார்த்தாலும், முருகனுக்கு என்னமோ பெங்களூர் தாண்டி வந்த வாய்ப்புகள் , ஆன்சைட் வாய்ப்புகள் அனைத்தையுமே தவிர்த்து வந்தான், அமெரிக்காவில் இருந்த கிளையண்டுக்கும், வேலை பார்க்கும் கம்பெனிக்கும் இந்தமுறை அவனிடம் இருந்த தனித்திறமை ஆன்சைட்டில் தேவைப்பட்டதால் தவிர்க்கமுடியாத முருகன் இந்த முறை விர்ஜினியாவில் இரண்டு மாத வாசம்.

இண்டர்ன்நெட்டில் தேடிக்க்கொண்டிருக்கையில் கல்லூரி நண்பன் கருப்பனும் விர்ஜினியாவில், அதுவும் அதே நகரத்தில் குடும்பம், குழந்தைகளோடு இருப்பது கண்டு, தொடர்பு கொண்டு இப்போது கருப்பனின் வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளான்,

விருந்துக்கு வந்த இடத்தில் அந்தக்காலத்து நினைவுகள் இனி உரையாடலாக.

கருப்பன் : வாடா முருகா, ஆள் அப்படியேதான் இருக்கே, பெங்களூரு காத்துக்கு கொஞ்சம் வெளுத்தது மாதிரி தெரியுது.

முருகன்: நல்லா இருக்கேன், நீ கொஞ்சம் குண்டாயிட்டே, ஆனா இவ்ளோ சிகப்பா இருக்க உணக்கு உங்கப்பன் ஏண்டா கருப்பன்னு பேருவெச்சான்.

கருப்பன்: அதுக்கென்ன பண்ண , உனக்குகூட முருகன்னு பேரு வெச்சிருக்காய்ங்க,அதுக்காக நீ வள்ளியும், தெய்வானையுமா திறியற, ஒத்தைப்பொண்டாண்டியோடதான பொட்டிப்பாம்பா இருக்க.

முருகன்: உன்னை நெனச்சாலே எனக்கு அந்த ஜட்டி ஞாபகந்தாண்டா வருது. மதுரைலேந்து கிலோ ஒன்னரை ரூபாய்க்கு உங்க வீட்ல வாங்கி கொடுப்பாங்களே எப்ப நினைசாலும் சிரிப்பு வரும்டா, பரவாயில்லே ஒரு கிலோ ஜட்டி ஒன்னாருவாக்கி வாங்கி போட்டதெல்லாம் அந்தக்காலம், இப்போ வசதியா இருக்க அதுதான் முக்கியம்.

கருப்பன் : ஆமாண்டா இப்பவெல்லாம் கிலோ இருபத்தி அஞ்சி ரூபா ஆக்கிட்டாங்க, ஆளும் பெரிசாயிட்டதால கிலோவுக்கு 25 ஜட்டிதாண்டா இருக்கு.

முருகன்: டேய் கருமம் , இன்னமும் அந்த நாடா வெச்சத்துணியத்தான் போடறீயா, வெட்கமா இல்லை, கொஞ்சமா சம்பாதிக்கிற எழுத்தாளர் சாருநிவேதிதாவே ஒரு கால்வின் கிளைன் ஜட்டி ரூ-1200க்கு வாங்கி போடுறார். லட்சக்கணக்குல சம்பாதிக்கிற இன்னும் கிலோ கணக்கில ஜட்டி வாங்கி போடுற படுபாவி.

கருப்பன்: இந்த நாடா ஜட்டி இங்கே பயங்கர பேமஸ்டா, பெட் அனிமல்ஸ் சாரிட்டி காரங்க துணி டோனேசனுக்கு வீட்டு வாசல்ல பேக் வெச்சிட்டு போவாங்க, நம்ம பழைய துணியெல்லாம் அதுல போட்டா டாக்ஸ் பர்பஸூக்கே ரெசிப்ட் வெச்சிட்டு போவாங்க, அதுல எல்லாத்தையும் வருடம் ஒருக்கா போட்டிருவேன், இரண்டாவது முறை பேக் கூட ஒரு நோட்ஸ் வெச்சிட்டான், தயவு செய்து எலி ஜட்டியை டொனேட் செய்யவேண்டாம், நாங்கள் எலி வளர்ப்பதில்லை, வளர்த்தாலும் எலிக்கு ஜட்டி தேவையில்லைன்னு. நாம எங்கடா எலி ஜட்டிய டொனேட் பண்ணோம், ஏதோ தப்பா நோட் வெச்சிட்டான்னு நெனச்சி திரும்பவும் இந்த வருடம் இரண்டு கிலோ டொனேட் பண்ணினேன். சாரிட்டிலேந்து வந்து அவளோ ஜட்டியையும் கொட்டிட்டு எலி ஜட்டி மட்டுமல்ல உங்கள் வீட்டு டொனேசனே எங்களுக்கு வேண்டாம்னு போயிட்டான்,அவனுக்கு தெரியல , அது அப்படி சுருங்கி இருக்கு, நாடாவ இழுத்தா யானைக்கு கூட போடலாம்கிற விசயம்.

முருகன்: சரிடா நான் ஹோட்டலுக்கு கிளம்பறேன், டின்னருக்கு ரொம்ப நன்றிடா.

கருப்பன் : இருடா நாளைக்கு லீவுதான , அப்படியே இங்கியே தூங்கிட்டு காலைல டிபன் சாப்பிட்டு அப்புறம் கிளம்புடா.
------------

அடுத்தநாள் காலை

முருகன்: டேய் உன் வீட்டு பேக்யாட்ல இருக்கிறது வேப்ப மரமாடா? வேப்ப மரம் மாதிரியே இருக்கு.

கருப்பன்: இல்லடா வேப்பமரம் மாதிரிதான் இருக்கும், ஆனா வேப்பமரம் இல்லைடா.

முருகன்: பரவாயில்லை , நான் ஒரு குச்சி உடைச்சி பல் விளக்கிக்கறேன்.

கருப்பன்: என்னது குச்சில பல் விளக்குறியா, காலேஜ்ல நிறைய வேப்பமரம் இருந்துச்சு ஏதோ பேஸ்ட் இல்லாத நேரத்துல உதவுச்சு, அதுக்காக இப்பவுமாட முயற்சி பண்ணனும்.

முருகன்: டேய் காலேஜ் படிக்கும்போது என் டூத் பிரஷூம் , ஜட்டியும் காயவெக்கும்போதோ , இல்லை பாத்ரூம்லயோ மூனு நாளு காணா போச்சு, அப்பயே நான் வேப்பக்குச்சிக்கு மாறிட்டேன், ஜட்டி வாங்குறதையும் விட்டுட்டேன், இப்பயும் பெங்களூர்ல இருக்கறதே அங்க நிறைய மரம் இருக்கிறதால, வேம்புன்னு இல்லை ஏதோ ஒரு குச்சிய ஒடிச்சு பல் விளக்கிருவேன், ஆன் சைட் , வேற ஊருக்கு டிரான்ஸ்பர் எதையும் நான் இதுக்காகத்தான் ஒத்துக்கறதில்லை, இங்கே வந்து பிரஷ் வாங்கி விளக்கிப்பாத்தேன், வாயெல்லாம் எரியுது, மரத்துலேந்து குச்சி ஒடிக்கலாம்னாலும் பயமா இருக்கு, அதுனால சும்மா கம்ம மென்னு துப்பி காலத்த ஓட்டுறேன், இன்னிக்குதான் நிம்மதியா பல் விளக்கனும். அப்படியே கொஞ்சம் குச்சி உடைச்சி பார்சல் எடுத்துட்டு போகனும்

கருப்பன்: அடப்பாவி அப்ப இப்பயும் நீ பல்லு மட்டும் தான் விளக்குறீயா?

Sunday, January 3, 2010

பயக்க வழக்கம்

கருவாடு
உப்புக்கண்டம்.
இரால்கறி

செதில்களற்ற
விலாங்குமீன்
கோழி

கோழிமுட்டை
எல்லாம் வைத்து
பாட்டனுக்கு
படைத்தாலும்

நீங்க சாப்பிடக்கூடாது
கொலஸ்ட்ரால் சேரும்..

இரவில் கவிச்சி சாப்பிட்டால்
செரிக்காது..

டாக்டரின்
பலநூறு
பாடங்களை
சொல்லியபடி.
மனைவி..

'மனைவி'யற்ற
தேசத்திலும்
குடித்து
விழுந்து
வெடுக்கென்று
பயந்தெழுந்து
தெளிந்து பின்னர்
துண்டு பீடி குடிப்பது
வழக்கமாயிருக்கிறது..!


தொட்டில் பழக்க வழக்கம் இங்கே

Saturday, January 2, 2010

வேதகால முறையில் கணிதம்.

கடந்த ஆண்டு மதுரையைச் சேர்ந்த நண்பன் ஒருவனால் வேதிக் மேத்தமேட்டிக்ஸ் எனக்கு அறிமுகமானது, நண்பன் யாருக்கும் பரிசுப்பொருளாக இந்தப்புத்தகத்தை வழங்குவதை வழக்கமாக கொண்டவன். நானும் வாங்கினேன் சில சூத்திரங்களை அறிந்துகொண்டேன். இதன் தேவை எனக்கு இப்போதைக்கு இல்லாததால் படிக்கவில்லை. ஆனால் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்கள் , தங்கள் வீட்டில் பத்து வயது குழந்தைகள் உள்ளவர்கள் குழந்தைகளுக்கு கணிதம் சொல்லிக்கொடுக்க இந்த முறை மிகவும் உதவும் என நம்புகிறேன். பல நேரங்களில் வேத முறை கணிதம் அதிசயிக்க வைத்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இங்கே சென்று படியுங்கள்

இங்கேயும்

2010ம் ஆண்டு வீண் விவாதங்களில் ஈடுபடாமல் வழக்கம்போல் நம் மொக்கைப்பணியை ஆற்றலாம் என்றிருக்கிறேன். இடையிடையே இப்படி உருப்படியான சில பகிர்வுகள்.