Wednesday, December 30, 2009

ஊரு ரெண்டுபட்டா வெட்டிப்பயலுக்கு கொண்டாட்டம்

ஊரு ரெண்டுபட்டா வெட்டிப்பயலுக்கு கொண்டாட்டம். நான் நினைத்தது சரியாக நடக்கிறது.

ஒரு வரிப்பதிவுக்கெல்லாம் பின்குறிப்பு தேவையா?

Sunday, December 27, 2009

டாலஸில் ஸ்னோமேன்.



டெக்ஸாஸ் மாகாணத்திற்கு வேலைக்கு வந்து நான்கு வருடங்களில் இதுவரை இவ்வளவு பனி பெய்ததில்லை, இவ்வருடம் கிறிஸ்ட்மஸ் டெக்ஸாஸ் காரர்களுக்கு
வெள்ளை கிறிஸ்துமஸாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடைய மகளும் ஸ்னோவில் விளையாட்டு என்று வெள்ளைக்கிறிஸ்தமஸை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
என்னையும் ஸ்னோமேன் செய்ய அழைத்தார் , கிறிஸ்துமஸீக்கு முந்தின நாள் திடீரென்று ஏற்பட்ட முதுகுப்பிடிப்பினால் படுக்கையை விட்டு எழ முடியாததால்
என்னாலும் உதவமுடியவில்லை.

நல்லவேலையாக எதிர்வீட்டு சீனர் ஒரு பனிமனிதன் செய்தார், என் மகள் அதனைப்பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார், அப்படியே அந்த ஸ்னோமேன் படம் எனக்கு ஒரு பதிவுக்கும் ஆகிறது.

பிகு:

Wednesday, December 23, 2009

நான் எப்படி இப்படி

உலகியல் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளின் இன்றைய நிலைமையை கூர்ந்து நோக்குகையில் சமூகமானது ஒரு வல்லின கட்டமைப்பாகவே நமக்குப்படுகிறது. இந்த நிலைமையை நாம் சாதாரணமாக ஒரு சராசரி மத்திய வர்க்க நிலை மனிதனாக இருந்து நோக்கினால் அது அவனின் அறிவுக்கண்களுக்கு புலப்படாதவாறு ஒரு வல்லிய வலை இந்த அறிவு ஜீவிகளால் பின்னப்பட்டிருப்பதை அறியமுடியும், ஆனால் இதனை உணரும் நோக்கில் வேகம் சார்ந்த மனிதனின் வாழ்வியல் சூழ்நிலை அவனைக்கட்டிப்போடுகிறது, இதனை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே உள்ளோம். இந்த வல்லிய வலையை நீக்கிவிட்டு ஊடாடிப்பார்க்கும் மனப்பக்குவம் எம்மைப்போல பின்நவீனத்துவ கூறுபாடுகள் கொண்ட சிலருக்கு உண்டு, அதை நாம் அடிக்கடி இந்த மத்தியதர மக்களுக்கு சொல்லியபடியே இருந்து வருகிறோம்.மத்திய வர்க்கம் பொய்யினால் கட்டமைக்கப்பட்ட வர்க்கம், இவர்களின் உழைப்பு என்பது இழப்பின் பிரதியாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது, இவர்களால் எதையும் குந்தி ரசிக்கமுடியாமையின் காரணம் என்ன, இவர்கள் குந்தாமல் தேவையில்லாமல் உழைப்பதுதான், இவர்களால் ஒரு நவீன கால இலக்கியங்களைப் பற்றிப் பேசமுடியாத எல்லாம் இழந்தவர்கள் என்றே நாம் நோக்கவேண்டியுள்ளது. வளர்ச்சியென்னும் இது மாயவுலகம் வட்டிகளால் கட்டமைக்கபட்டது மத்தியவர்க்கம் தான் நேரடியாக உழைக்கமுடியாத துறையில் முதலீடு என்ற பெயரால் பணம் கொடுத்து கட்டமைக்கபட்டது தானே இந்த வலையும் அதைச்சார்ந்த இந்த உலகமும், வலையுலகம் இல்லாவிட்டாலும் நாம் எங்காவது உக்காந்து வெட்டியாக உளறிக்கொண்டுதானே இருப்போம்.


Tuesday, December 22, 2009

குஞ்சுகள் ...


குஞ்சுகள் ...

தின்ன தின்ன மிச்சங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத வயிறுப் பந்து
கோழிக்குஞ்சுகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகள் கனமின்றி காற்றில் உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
போன்று உரித்த கோழி
என்வீட்டு அறுவாமனையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
தின்று அலுத்துப் போய்
கக்கூஸ் தேடி அலைகையிலே
இன்னுமொரு குஞ்சு
என் வீட்டு அறுவாமனையில்
என் தொப்பை வளர்க்க!

Thursday, December 17, 2009

தெலுங்கானா பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.

தெலுங்கானா பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.

தெலுங்கானா பகுதி புறக்கணிக்கப்படுகிறது என்று தனித்தெலுங்கானா மாநிலம் கேட்பதில் உள்ள நியாயங்களைப்பற்றி பின்னர் விவாதிப்போம். நாம் அறிந்த வரையில் தெலுங்கானா பகுதியைச்சேர்ந்தவர்கள் முதல்வராகும் வாய்ப்புகள் இல்லாததாலேயே இந்தப்பிரிவினை பெரிதாக்கிவிட்டதாக நாம் மொக்கையாக யோசிக்க வேண்டியுள்ளது. தெலுங்கானாத்தலைவர்கள் முதல்வராக வருவதற்கு தேவையான அடிப்படைத்தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லை, முதல்வராக வேண்டும் என நினைத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட்டால்தானே முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே தெலுங்கானா தலைவர்களே நீங்கள் தமிழகத்தில் போட்டியிட்டு முதல்வராகுங்கள். பிரிவினையத்தவிருங்கள்.