Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, April 26, 2010

கொண்டியார(ன்)கள்ளி இறுதி பாகம்


ரவி விபத்தில் இறந்த செய்திகேட்டு இரண்டு குழந்தைகளுடன் தவித்த ரவியின் மனைவியையும், கிறுக்கனாய்போன சந்திரனின் மனைவியையும் கொண்டியாரகள்ளி தனக்கே உரித்தான பாணியில் விளாசினார்

“ஏண்டி குச்சிகாரி முண்டைகளா, வீட்டுக்கு வந்து பெரியவன தூக்கிபோட்டு முழுங்கினிய, அடுத்தவன கிறுக்கனாக்குனிய இன்னம் இங்கே எதுக்குடி இருக்குறிய தட்டுவாணி செறுக்கியளா கெளம்புங்கடி”

இவ்வளவு பேச்சையும் பொறுக்கமுடியாமல் தட்டிக்கேட்க வந்த ஊர்பெரிசுகள் குச்சிகாரன்கள் ஆக்கப்பட்டதில் அவர்களும் ஒதுங்க , ரவியின் மனைவியும் , சந்திரனின் மனைவியும் ஆளை விட்டால் போதுமென்று ஊரை விட்டே சென்றுவிட்டனர்.

சந்திரன் சாப்பிடுவதை மட்டும் சரியாக செய்தான், மற்ற எந்த காரியத்திலும் அவன் சராசரி மனிதனாக தெரியவில்லை. கொண்டியாரகள்ளியும் வீட்டைப்பிடித்த சனியன்கள் தொலைந்ததால் என்றாவது ஒருநாள் சரியாகும் என்று இருந்தால்.

திருப்பதியின் மேல் குடும்ப பாரம் விழுந்தது, அண்ணன்களின் இந்த நிலையினால் சரிந்த குடும்பத்தை அவனும் தன்னுடைய போக்கில் சம்பாதித்து முன்னுக்கு கொண்டு வந்தான். திடீரென ஒருநாள் வீட்டிற்கு போலிஸ்காரர்கள் வந்தார்கள்.

“டேய் இந்த வண்டிமாடு எங்கடா வாங்கின என்று ”பலமாக தட்டியதில் உண்மையை கக்கினான் , இதுவரை ஐம்பது சோடி மாடுகள் களவாடியிருப்பதாக சொன்னான், இந்த சோடி நல்லா பலமா இருந்துச்சு அதான் நானே வெச்சிக்கலாமின்னு வீட்டுக்கு ஓட்டிட்டு வந்தேன் என்றான்.

ஒருவழியாக மிச்சமிருந்த சொத்துக்களையும் விற்று மாட்டுக்காரர்களுக்கு கொடுக்கவேண்டிய காசை அடைத்தனர். திருப்பதியும் திருட்டுக்கேஸில் சிறை சென்றான்.

”சம்பாதிச்சு போட்டவங்க எல்லாம் ஒன்னுமன்னா போயித்தாங்க , நீ இப்படியே குந்தி இருந்தா யாரு சோறு போடுறது , யாரு அந்த புள்ளைய ஒருத்தன் கிட்ட புடிச்சிக்கொடுக்கிறது, போய் எப்படியாவது சம்பாதிச்சினு வாய்யா ” என்று கொண்டியாரனிடம் கத்தினால் கள்ளி.

“நான் இருக்கிறதும் உனக்குப்பொறுக்கல என்ற படியே”

இப்போது பத்தினி செத்துக்கிடந்தாள் ஒரு XXXயும், எழவுக்கு வரவில்லை, உத்திரத்தில் தொங்கிய கொண்டியாரன் உட்பட.

முற்றும்.

பணம் எப்படியும் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியை மட்டுமே வளர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து எழுத நினைத்த தொடர். எனக்கு தற்போது இருக்கும் வேலைப்பளுவில் தொடரை தொடர்வது சிரமம் என்று தோன்றியதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Tuesday, August 11, 2009

அறிவு.

ஹாஸ்டலில் போரடித்துப்போன அறிவு ஒருநாள் எங்களிடம் ,டேய் எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி வாங்கடா, ரெண்டு மணி நேரத்தில வீட்டுக்கு போயிரலாம் .

சரிடா ஹாஸ்டல் சாப்பாடும் கடுப்பா இருக்கு நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் வரோம்டா,சாப்பாடு வெயிட்டா இருக்கனும். நான், ஷேக், மதிமாறன்,ஸ்டீபன் உட்பட ஆறு பேர் மேலூருக்கு அருகில் உள்ள அறிவின் குக்குக்குகிராமத்திற்கு சனி,ஞாயிறு சாப்பாட்டுகான பயணம்.

மேலூரில் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், அறிவு எங்களிடம் சொன்னான் பக்கத்து ஊருக்கு போற பஸ் போயிருச்சு நடந்துதான் போகனும், ஏழு கிலோமீட்டர்தான் ஒரு மணிநேரத்தில போயிரலாம்.

என்னடா சொல்ற?

அந்த நேரத்தில் அங்கே வந்த அறிவின் அப்பா, என்னடா அறிவு நீ எப்ப வந்த?

இப்பதான் வந்தேன் ,இவங்கெல்லாம் என்னோட படிக்கிறாய்ங்க, நம்ம ஊரை சுத்திக்காட்டலாம்னு கூட்டியாந்தேன்.

நல்லது , நான் மாட்டு வண்டிலதான் உரம் எடுக்க வந்தேன், உரத்தை ஏத்திட்டு நீங்க எல்லாரும் வண்டில போங்க தம்பிகளா வயசான நான் உங்க கூட வந்த நல்லா இருக்காது,நான் அப்புரமா வரேன்.
----------------------------------
அறிவின் ஊர் மொத்தம் 25 குடும்பங்களே உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம். அறிவு வீட்டு வாசலில் வண்டி நின்றவுடன் அறிவின் தம்பி நிலவும் அவங்க அம்மாவும் எங்களை வரவேற்றனர்.

ஏண்டா அறிவு சொல்லிட்டு வந்திருக்கலாம்லடா? காலை சாப்பாட்டுக்கு இட்லி தோசைக்கு ஊற வெச்சிருக்கலாம்லடா?

பரவாயில்லைம்மா நாங்க இருக்கிறத சாப்பிட்டுக்கறோம்.

என்னடா அறிவு இவ்வளவு சின்ன ஊரா இருக்கு.?

இப்ப இருட்டிருச்சு காலைல எந்திரிச்சி ஊர் சுத்தி பாப்பம்டா, நிறைய வயல் இருக்கு பெரியாத்துப்பாசனம் பச்சப்பசேல்னு இருக்கும்டா? அப்ப பாரு ஊரு பெரிசுன்னு சொல்வீங்கடா.!

அடுத்த நாள் காலையில் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

எல்லாரும் செருப்ப கையில எடுத்துக்கங்கடா , கம்மாங்கரைலதான் சாமி இருக்கு செருப்பு போட்டு நடக்கக்கூடாது?

சரளைக்கல்லா இருக்கு குத்துமேடா?

அதெல்லாம் குத்தாது எல்லாம் சாமி நடக்கிற பாதை, நீ நடந்து பாரு குத்தாது...

என்ன நிலவு ஓரளவு விவசாயம் பண்றீங்க ? ஆனால் எல்லார் வீடும் குடிசை வீடாவே இருக்கே ஏன்?

வசதியெல்லாம் பரவாயில்லை, இங்க யாரும் அவ்வளவா படிக்கலை, அண்ணன் தான் முதன்முதலா இஞ்சினியரிங்க் படிக்குது, இந்த ஏரியாவில அடிக்கடி சாதி சண்டை வரும், அதுக்கு கோர்ட் கேஸ்னு செலவுக்கே நிறைய செலவு ஆகும், அதுக்காக மட்டுமே எங்க ஊரு சார்பா 25 லட்சம் ஃபண்டு இருக்கு.

என்ன சொல்றீங்க இதை வெச்சே எல்லாரும் ஒரு நல்ல ஓட்டு வீடு கட்டிக்கலாம், ரோடு போட்டுக்கலாம் வசதியை பெருக்கிக்கலாமே, ஏன் அந்த சாதி காரங்க கூட சண்டை போட்டுட்டே இருக்கீங்க? இரண்டு பேரும் சேந்தே முன்னேறலாமே?

அது அப்படியே ஆகிப்போச்சு, நாங்க படிச்சு பெரிய ஆளாகி எதாவது நடந்தாதான் உண்டு.

'பாரதிராஜா இந்த ஊரை வெச்சி ஒரு படம் டிரெக்ட் பண்ணலாம்' - எங்களில் ஒருத்தன்

என்ன தம்பி இஞ்சினியருக்கு படிக்கறீங்க டிரெக்ட் அப்படிங்கறீங்க அது டைரக்ட், டைரக்சன்னு சொல்லனும்- அறிவின் பங்காளி வீட்டு அண்ணன்.

அவரு நல்லா இங்கிலீஸ் பேசுவாரு ஜெர்மனியருதி போயி ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்காரு-- நிலவு..

அது ஒரு கதை தம்பி மலேசியா அனுப்பறேன்னு ஒரு திருட்டு கும்பல் கிட்ட காச குடுத்து , கடைசில ஜெர்மனி ஜெயிலில் இரண்டு வருசம் இருந்தேன்.

----------------

மீண்டும் அறிவின் வீடு.

அறிவின் அம்மா எல்லாருக்கும் பசுமாட்டுத்தயிருடன் பழையசோறு கலந்து சிறிய வெங்காயத்துடன் எல்லாருக்கும் காலை உணவு தந்தார், அமிர்தமாக இருந்தது, மதியம் அறிவு வீட்டில் இருந்த சில நாட்டுக்கோழிகள் எங்களுக்கு உணவாகின, இரண்டு நாளும் இப்படியே கழிந்தது.

தம்பிகளா தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வாங்க? நம்ம நிலவு மேலூர்ல வெடிக்கடை போடுறான் அவன் கூட இருந்து பாருங்க.சும்மா படிச்சா மட்டும் போதாது நாலு விசயம் கத்துக்கனும் என்று அறிவின் அப்பா எங்களை தீபாவளிக்கு அழைத்தார்.

சரிங்க கண்டிப்பா வர்றோம். தீபாவளிக்கும் சென்றோம்,வெடிக்கடையில் நின்று நிலவோடு வியாபாரம் பார்த்தோம், இது போல பலமுறை அறிவு வீட்டில் பழைய சோறு,நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி என்று அடிக்கடி விருந்து வாடிக்கையாகிப்போனது எங்களுக்கு.

----

கல்லூரி இறுதியாண்டு முடிந்து ரிசல்ட் வந்து மார்க் சீட் வாங்கிக்கொண்டு வந்து பஸ் ஸ்டாப்பில் உள்ள கணேசன் கடையில் டீ சொல்லி விட்டு திரும்பினேன். அறிவும் அவங்க அப்பாவும் உட்கார்ந்திருந்தனர். என்னைப்பாத்து அறிவின் அப்பா கேட்டார் ஏன் தம்பி வருசா வருசம் வீட்டூக்கு வந்தீங்க அறிவு ஒரு பரிட்சை கூட எழுதைலைங்கிற விசயத்தை எங்க காதுல ஒரு வாட்டி போட்டிருக்கலாமே என்றார்.

அறிவு வீட்டில் சாப்பிட்ட பழையசோறு புளித்த ஏப்பமாய் என்னமோ செய்தது எனக்கு.

Wednesday, June 24, 2009

ஈனப்பொழப்பு.

கண்டக்டர் முருகேசன் தனது ஆறாவது வருட கண்டக்டர் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக வேலை மாறி புது பஸ்ஸில் வேலைக்கு சேர்ந்தான்.

புது வேலையில் முதல் நாள் தஞ்சாவூரிலிருந்து பூவத்தூர் செல்லும் பஸ்ஸில் வேலை.

டிக்கட், டிக்கட்

யாருங்க அது உள்ள வாங்க சீட்டுதான் காலியா இருக்குள்ள ஏன் படில நிக்கறீங்க வந்து உட்காருங்க

எங்களுக்கு தெரியாதா பஸ்ஸு காலியா இருக்குன்னு,சும்மா கவர்மெண்டு பஸ்ஸுல கை நீட்டி சம்பளம் வாங்குற கண்டக்டர் பயலுக்கே இவளோ திமிருன்னா சொந்தமா வெவசாயம் பண்ணி மார்க்கெட்ல வாலைக்காய் வித்திட்டு வர்ற எனக்கு எவ்ளோ திமிரு இருக்கும். இந்தா கோயீலூருக்கு ஒரு டிக்கட்ட குடு.

என் நேரம் உங்கிட்ட திட்டு வாங்கனும்னு இருக்கு, அப்புரம் இது கவருமெண்டு பஸ்ஸூ இல்லை , தனியார் வண்டிதான் ஓனரு வந்தா பிரிச்சி மேஞ்சுருவாரு உன்னை, இந்தா டிக்கெட்ட பிடி, அப்படி போயி உட்காரு, ம்ஹீம் நாத்தம் தாங்கல , வாழைக்காய் வித்த காசுக்கு எல்லாத்துக்கும் குடிச்சிட்டியா?

ம்ஹ்ம், நான் சொந்தமா உலைச்சி வித்து குடிக்கிறேன், தனியார் வண்டில பிச்சைக்காரத்தனமா கை நீட்டி சம்பளம் வாங்கி ஈனப்பொலப்பு நடத்துற நீயெல்லாம் பேசப்படாது.

ஒழுங்கா வேட்டிய கட்டிட்டு உட்காரு, இல்லாட்டி இறக்கி விட்டிருவேன்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே வாழைக்காய் விவசாயி, கண்டக்டர் முருகேசனின் கன்னத்தில் பளார் என்று அறைகிறார், அச்சேற்ற முடியாத வார்த்தைகளை உபயோகித்தபடி. பதில் மரியாதையாய் ஏகப்பட்ட அடிகளை வாங்கிக்கொண்டு இறக்கிவிடப்படுகிறார் வாழைக்காய் விவசாயி.

நாளைக்கு இந்த பக்கமாதானடா வண்டி ஓட்டனும் , கோயிலூர்ல இருக்குடா உனக்கு, உன் சங்க அறுக்காம விட மாட்டண்டா ழேஏய்ய்ய்ய்ய்ய்..

முதல் நாள் அதுவுமே குடிகாரன் தொல்லை தாங்க முடியலையே என்னடா ரூட்டு இது என்று மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டான் முருகேசன். அடுத்த ஸ்டாப் வந்தது, கூட்டமாக நூற்றுக்கு மேலானவர்கள் பஸ்ஸில் ஏற காத்திருந்தனர்.

என்னா கூட்டமா ஊரே கிளம்பிட்டீங்க எங்க போறீங்க.

குடிக்காட்டுல ஒரு எலவு ,அதான் எல்லாரும் போறோம்.

யப்பா நாத்தம் தாங்கமுடியலேயே, ஏம்பா எழவு வீட்டுக்குமா குடிச்சிட்டு போவீங்க.

அட நீ வேற 90 வயசுல கெலவன் செத்துப்போனா துக்கப்படவா முடியும், ஒறமுறையான் வீடு போயிதான் ஆகனும், போனமா சீட்டு வெளாண்டமா , அங்க போய் மாமன்,மச்சாங்களோட சேந்து கெலவன எரிக்கிற வரைக்கும் குடிச்சமான்னு இருக்கனும்.

ம்ம் நடத்துங்க நடத்துங்க.

கண்டக்டரு தம்பி , நாங்க எலவுல அலுவுறதே இந்த கம்னாட்டி பயலுவ குடிச்சிட்டு பண்ணுற அலும்ப பாத்துதான்.- ஒரு அரை கிழவி

டேய் கண்டக்டர் பயலே என்னடா, என் பொண்டாட்டிய இடிக்கிற. - ஒரு முழு குடிகாரன்.

'ஹலோ நான் எங்க' அப்படின்னு சொல்லி முடிக்குமுன் குடிகாரர்கள் தரும அடி கொடுத்து முடித்திருந்தார்கள் கண்டக்டர் முருகேசனுக்கு.

குடிக்காடு பஸ் ஸ்டாப் வந்தது எல்லாரும் இறங்கிக்கொண்டிருந்தனர். இழவு வீட்டில் மைக் செட்டில் கிழவிகள் ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார்கள்

எப்படியம்மா ஒத்து ஒழக்கிறது
நம்ம நாட்டிலே எலந்த பட்டை சாராயம் காச்சுறது
எப்படியம்மா ஒத்து ஒழக்கிறது
நம்ம நாட்டிலே வேப்பம் பட்டை சாராயம் காச்சுறது

அடி வாங்கின வேதனையிலும் கண்டக்டர் முருகேசன் நினைத்துக்கொண்டான் குடிக்காடுன்னு ஊருக்கு காரணமாதான் பேரு வெச்சிருக்காங்க.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த முருகேசன் தன் அப்பாவிடம், நான் இனிமேல் இந்த வேலைக்கு போகல பெரிய ஈனப்பொழப்பா இருக்கு, குடிகாரப்பயகிட்டயெல்லாம் அடி வாங்க வேண்டியிருக்கு.

அப்பரம் வேற என்ன பண்ண போற

திருவள்ளுவர் பைனான்ஸ்ல 5000 ரூபாய் டெய்லி வட்டிக்கு வாங்கிட்டு வந்திருக்கேன், பாய் கடைல சாராய சக்கரை கடன் தரேன்னு சொல்லிருக்கான், நான் போய் சாமான் வாங்கிட்டு வரேன் நாளைக்கு நல்ல நாள்,நம்ம காட்டு கொல்லைல ஊறல் போடப்போறேன், நீ போயி விறவு வெட்டி காய வை அடுத்த வாரம் எரியல் இருக்கு.

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது