Monday, June 29, 2009

அந்த மூன்று சகோதர டாக்டர்கள் , கூடுதலாக ஒரு மொள்ளமாறி.

குடுகுடுப்பை: காலில் வெட்டிய மம்பட்டியும் தையல் போட்ட டாக்டரும்.

இந்த மூன்று சகோதர டாக்டர்களில் மூத்தவர் , கிராமப்புற மக்களின் அறியாமையை பயன்படுத்தி வயிற்று வலி வந்தால் ஊதிக்கல் எடுக்கிறேன் என்று வாயில் புல்லாங்குழல் போன்ற ஒன்றை வைத்து ஊதி இத்தனைக்கல் , வெங்காயத்தோல் , தக்காளித்தோல் எடுத்தேன் இனி சரியாகிவிடும் என்று கூறி கொடுக்கும் காசை வாங்கிக்கொள்வார். இவர் மருந்தெல்லாம் கொடுப்பதில்லை அந்த வகையில் நல்லவர்.! . காலப்போக்கில் இந்த மாதிரி ஏமாற்று வேலைகலை மக்கள் நம்பாமல் போனதால் இவருடைய வயிற்றுப்பிழைப்பும் மிகவும் சிரமமான நிலையிலேயே இருந்தது.

இரண்டாவது சகோதர டாக்டர், உருவான விதம் குறித்து எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் கூறியது, அன்றாட வாழ்க்கையில் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஏதோ ஒரு வேலைக்கான(சரியாக ஞாபகம் இல்லை) படிப்பும் , ஒரு வருடத்திற்கும் மேலான பயிற்சியும் எடுத்தவர். பின்னர் இவரும் ஏதோ RMP என்று தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டார், அது நிஜமாக படிச்சி வாங்கினதா அடிச்சி வாங்கினதா என்பதெல்லாம் தெரியாது. எங்கள் பகுதியில் மருத்துவம் செய்யத்தொடங்கினார், காய்ச்சல், வெட்டுக்காயம், பாம்புக்கடி என்று அனைத்துக்கும் மருத்துவம் பார்த்தவர். ஏழ்மை நிலையில் இருந்து வந்ததினால் மூன்றிலிருந்து ஐந்து ரூபாய்தான் வசூலிப்பார், சற்று பணக்காரர்களிடம் இருபது ரூபாய் வரை வாங்குவார். இவருடைய மருத்துவமனையில் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு நூறு பேருக்காவது மருத்துவம் பார்ப்பார். மக்கள் இப்படி இவரிடம் போய் மருத்துவம் பார்க்கிறார்களே MBBS படித்த டாக்டர்களிடம் செல்லாமல் என்று நினைப்பதுண்டு, MBBS படித்த டாக்டர்கள் அங்கு யாரும் இல்லை,இருந்தாலும் மக்கள் அங்கே சென்றிருப்பார்களா என்பதும் சந்தேகமே.ஆனால் இவர் தன் எல்லை மீறி மருத்துவம் பார்ப்பதில்லை, உடனடியாக பக்கத்து நகரில் குறைந்தது MBBS ஆவது படித்த மருத்துவரிடம் அனுப்பிவிடுவார். இவரின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இரண்டு வருட காலம் மருத்துவம் செய்யவில்லை, அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சுரத்திற்கு ஊசி போட கூட ஆளில்லாமல் தவித்தபோதுதான் அவரின் அருமை புரிந்தது. உடல்நிலை தேறிய பின் மீண்டும் மருத்துவத்தை ஆரம்பித்தார்.

மூன்றாவது சகோதரர் அதே பகுதியில் ஆனால் வேறு ஊரில் , கிளினிக் வைத்திருந்தார், இவர் மேல் மக்களுக்கு அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை, பெரும்பாலும் சைக்கிளில் ஊர் ஊராக சென்று வயோதிகர்களுக்கு ஊசி போட்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார். இவர் நகரில் சில டாக்டர்களிடம் கருக்கலைப்பு செய்வதில் உதவியாளராக சில காலம் பணி புரிந்திருக்கிறார். பின்னர் இதே வேலையை தனியாக செய்ததாக அரசல் புரசலாக செய்தி உண்டு, திருட்டு கருக்கலைப்பு செய்பவர்கள் உள்ளூரில் செய்ய மாட்டார்கள் அல்லவா அதனால் இவரைத்தேடி 100 கி.மீட்டர் தொலைவில் இருந்து இரவில் ஆள் வருவார்கள் என்ற வதந்தியும் உண்டு.

இந்த மூவரில் மூன்றாமவர் ஒருநாள் திடீரென்று மாரடைப்பில் காலமானார், இவர் இறக்கும்போது நாற்பது வயது இருக்கும்.குடும்பமும் குழந்தைகளும் பிழைக்க வழியில்லாமல் அவர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.

வெகு சிறிது காலத்தில் இரண்டாமவரும் மாரடைப்பில் காலமானார், ஆனால் இவர் தன் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் சொந்த வீடும் சிறிது சொத்தும் சேகரித்திருந்தார்.

முதாலாமவரும் பின்னர் மாரடைப்பில் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்.ஆனால் உண்மையா எனத்தெரியாது. மூன்று சகோதரர்களும் ஐம்பது வயதிற்கு முன்பாகவே மாரடைப்பால் காலமாகி இருக்கிறார்கள் என்ன காரணமாக இருக்கும்
.....

இன்னோரு மிகப்பெரிய மொள்ள மாறி இடைப்பட்ட காலத்தில் எங்கள் ஊர்ப்பகுதியில் மருத்துவம் பார்க்க வந்தார், இவர் வைத்தியத்தில் இவரேதான் மாத்திரை கொடுப்பாராம், ஒருநாள் அவரிடம் வேலை பார்த்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் அவர் கூற்றின் படி, இவர் மாத்திரை கேப்சூலில் வெறும் ரவையை (நல்லவேளை வெறும் ரவை)போட்டு இதுதான் மாத்திரை என்று சொல்லி விவசாயக்கூலி செய்யும் ஏழைகளிடம் விற்றிருக்கிறார். எப்படியோ தெரிந்து கிராம மக்கள் இவரை அடித்து துரத்திவிட்டனர். 4 வருடங்களுக்கு முன் ஒரு நாள் ஜீனியர் விகடனில் படித்தேன் இவர் ஏதோ மாந்திரீகம் அப்படி இப்படி என்று செய்வதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டதாக.

Thursday, June 25, 2009

காலில் வெட்டிய மம்பட்டியும் தையல் போட்ட டாக்டரும்.

பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப்பாவுக்கு உதவியா தண்ணிக்கட்டப்போறது உண்டு, அந்த நேரங்களில் என்னோட வேலை பொதுவா மடை கட்டுறது, வேற யாராவது தண்ணிய திறந்து அவங்க வயலுக்கு எடுத்துட்டு போகாம காவல் காக்கிறது இதுதான் என்னோட வேலை.

ராத்திரி நேரத்துல தூக்கம் வராமல் இருக்க எதாவது சூடா குடிக்கனுமில்லையா, இந்த தண்ணிக்கட்டற கூட்டத்த கணக்கு பண்ணியே என்னோட பங்காளி ஒருத்தரு நடுராத்திரி ஒரு மணிக்கெல்லாம் டீக்கடை திறந்துருவாரு, அப்போ ஒரு லிட்டர் பால் வாங்கி பத்து லிட்டர் தண்ணி ஊத்தி சுடவைப்பாரு, அன்னைக்கு இரவு வரைக்கும் பால் குண்டான் குறையாம அப்பப்போ தண்ணீர் ஊத்திட்டே இருப்பாரு. அமெரிக்கா காரன் என்னமோ 1% பால் 2% பால் அப்படிங்கறான் இப்போ, இவரோட கடைல உள்ள பால் குண்டான்ல எந்த நேரத்துல எத்தனை % பால் இருக்குன்னு எவனாலயும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனா இவரோட டீயில என்ன மகிமைன்னா , சூடுன்னு அப்படி ஒரு சூடா போட்டுக்குடுப்பாரு, அது போல சக்கரையும் அளவில்லாம போட்டுக்குடுப்பாரு,அதுனால டீயில பால் இல்லாத விசயம் அடிபட்டுப்போயிரும்.

இஞ்சினியரிங் காலேஜ்ல சேந்தப்புரம் ஒரு நாள் பங்காளி கடைல ஒரு மதிய நேரம் ஒரு சுடுதண்ணிய குடிச்சிட்டு மடைகட்ட போனேன், பெரிய படிப்பு படிக்கிற பந்தாவுல மம்பட்டிய ஸ்டைலா வெட்டினதுல, நேரா கால் பாதத்தில் விரல்கள் இணையும் இடத்தில வெட்டிருச்சு , கட்டை விரல் தவிர மீதி அனைத்து விரல்களையும் பாதிக்கற அளவுக்கு நீளமான வெட்டு, நல்லா ஆழமாகவும். உடனே தலைல கட்டிருந்த பச்சைத்துண்ட எடுத்து காலில் கட்டி, பங்காளி கடைக்கு வந்துட்டேன். இரத்தம் நிறைய போயிடுச்சு அப்பவே, டீத்தூள் வெச்சி கட்டினா இரத்தம் வருவது நின்னுரும்னு சொல்லி அவரு கடைல டீத்தூள்ங்கிற பேருல போடுற தூள வெச்சு கட்டுனார்.

அப்படியே பங்காளியோட பையனோடா சைக்கிள்ல டாக்டர் வீட்டுக்கு போயாச்சு, டாக்டருக்கு வயசு எழுபது தாண்டியாச்சு,அவரு நொடத்துக்கு கட்டுப்போடற மற்றும் ஹோமியோபதி டாக்டர், ஆனா உபயோகப்படுத்துற மருந்தெல்லாம் இங்கிலீசு மருந்துதான், ஊருல யாருக்காச்சும் காச்சல்னா ஒரு ஊசி போட்டு 3 ரூபா வசூல் பண்ணிப்பாரு. அவருகிட்டதான் காலைக்கொடுத்தேன்.

உடனே தையல் போடனும் இல்லாட்டி ஆறாது, என் பேரன் ராகவன யாராச்சும் பாத்தீங்களான்னு பக்கத்துல உள்ள எல்லாரையும் கேட்டாரு. இந்த ராகவன் அவரோட மகள் வயிற்று பேரன், அவனை பத்தாவது வரைக்கும் படிக்க வைக்க படாத பாடு பட்டு முடியாம அவனையும் டாக்டர் ஆக்கிட்டாரு, இவருக்கு துணையா கட்டு போடறது, இந்த மாதிரி வெட்டுக்காயங்கள், தட்டுக்காயங்களுக்கு தையல் போடுறதெல்லாம் அவந்தான்.இதற்கிடையில் அவரோட மகன் வயித்து பேரன பத்தாவது பாஸ் பண்ண வைக்க முயற்சி பண்ணி முடியாம அவனும் இப்ப ஜூனியர் டாக்டர்.

நிரம்ப நேரம் தேடியும் கண்ணு தெரிந்த இளம் டாக்டர்கள் இருவரையும் காணவில்லை, என் பங்காளி கூட டெய்லருதான் அவரையே தையல் போட சொல்லிருக்கலாம் ஆனா அவரு பொங்களுக்கு சட்டை தைக்க குடுத்தா தீபாவளிக்குதான் தைச்சு தருவாரு. அதனால பெரிய டாக்டரே தையல் போட்டாரு, அப்புரம் ஒரு ஊசியும் போட்டாரு சுத்தமா வலிக்கவே இல்லை.

ஒரு வாரம் கழித்து தையல் பிரிக்க போனேன், ராகவன் இருந்தான், உங்க தாத்தா எங்கடான்னேன்.

எதுக்கு மாப்பிளை, அவன தேடுற? நீ தையல் போட வந்தப்போ நான் பின்னாடி படுத்து தூங்கிட்டிருந்தேன் கிழப்பய எழுப்பல, சரி மாப்பிளை நான் தையல் பிரிக்கிறேன்.

உனக்கு தெரியுமாடா?

நீ வேற இப்ப நாந்தான் டாக்டரு , கிழவன் டம்மிதான். ஊரு காட்டுல உள்ள இழுத்துட்டு கெடக்கிற கெழங்கட்டையலுகெல்லாம் நாந்தான் மாப்பிளை சத்து ஊசி போடுறேன். ராசிக்காரன் நான் இப்போ சத்து ஊசி போட்டவுடன் கெழடெல்லாம் ஓட ஆரம்பிச்சிருது.

இங்க பாரு தையல் போடுறேன்னு கொதறி வெச்சிருக்கான்.என் தாத்தனுக்கு இப்பெல்லாம் கண்ணு சரியா தெரியறதில்லை. சரி மாப்பிளை அப்படியே ஒரு ஊசி போட்டிருவோம்

டேய் வலிக்குதுடா? உங்க தாத்தா ஊசி போட்டா வலிக்காதுடா?

அந்த ரகசியம் இது வரைக்கும் உனக்கு தெரியாதா? அவன் ஊசிய உடம்புலயே குத்த மாட்டான், சும்மா கிட்ட வெச்சு வலிக்குதா வலிக்குதா கேட்டுகிட்டே மருந்த வெளில விட்டிருவான். இது தெரியாம பெரிய டாக்டர் வலிக்காம ஊசி போடுவாருன்னு பல பேரு நெனச்சிட்டு இருக்காங்க.

எனக்குத் தெரிந்து இந்த மாதிரி டாக்டர்களிடம் ஊசி போட்டது அதுதான் கடைசி, இன்னமும் பாதத்தில் அந்த தையல் தடம் இருக்கிறது, அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உடனே இதையே பதிவா போட்டாச்சு.

கால ஓட்டத்தில் தாத்தா டாக்டரும் பேரன்களுக்கு பயந்து எங்கோ சொல்லாமல் கொள்ளாமால் ஓடிவிட்டார். பேரன்களும் தாத்தா இல்லாமல் டாக்டர் தொழில் செய்ய முடியாமல் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை. நல்லவேளை மத்திய தர மக்கள் அனைவரிடமும் மோட்டார் சைக்கிள் இருக்கும் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனிதாபிமானமும் மிச்சமிருப்பதால் பக்கத்து நகரத்தில் உள்ள மருத்துவமனைகளை அடைவது எளிதாகி உள்ளது.

எங்கள் பகுதியில் மருத்துவம் செய்த சகோதர டாக்டர்கள் பற்றி விரைவில் ஒரு பதிவு.

தொடர் பதிவுகளை எப்படி நிறுத்துவது என்று ஒரு தொடர்பதிவு.

வலை உலக வலைமாமணிகளே, பட்டாம்பூச்சிகளே,கரப்பான் பூச்சிகளே, 32 கேள்விக்கும் உண்மையை பதிலாக சொன்ன வலை உலக புலிகளே. சமீப காலத்தில் இந்த 32 கேள்வி தொடர்பதிவினால் ,யார் பதிவை படித்தாலும் ஒரே மாதிரியாக இருந்தது எனக்கு,அதனால் நசரேயனின் அழைப்பை ஏற்கமுடியவில்லை.

ஆனால் அதற்கு பதிலாக, இந்த தொடர்பதிவுகளை எப்படி நிறுத்துவது என்று நீண்ட நேரம் உருண்டு புரண்டு யோசித்தேன். இதையே ஏன் ஒரு தொடர்பதிவாக்கி ஆலோசனை கேட்ககூடாது என்று எண்ணி நான் அழைக்கும் நபர்

சோம்பேறி

இவரை அழைக்க காரணம் அவர் தன்னுடைய சோம்பேறி வலைப்பதிவின்

"ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது..."

இந்த caption தான், அதனை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று கருதி இந்த பதிவை தொடர அழைக்கிறேன்.

Wednesday, June 24, 2009

ஈனப்பொழப்பு.

கண்டக்டர் முருகேசன் தனது ஆறாவது வருட கண்டக்டர் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக வேலை மாறி புது பஸ்ஸில் வேலைக்கு சேர்ந்தான்.

புது வேலையில் முதல் நாள் தஞ்சாவூரிலிருந்து பூவத்தூர் செல்லும் பஸ்ஸில் வேலை.

டிக்கட், டிக்கட்

யாருங்க அது உள்ள வாங்க சீட்டுதான் காலியா இருக்குள்ள ஏன் படில நிக்கறீங்க வந்து உட்காருங்க

எங்களுக்கு தெரியாதா பஸ்ஸு காலியா இருக்குன்னு,சும்மா கவர்மெண்டு பஸ்ஸுல கை நீட்டி சம்பளம் வாங்குற கண்டக்டர் பயலுக்கே இவளோ திமிருன்னா சொந்தமா வெவசாயம் பண்ணி மார்க்கெட்ல வாலைக்காய் வித்திட்டு வர்ற எனக்கு எவ்ளோ திமிரு இருக்கும். இந்தா கோயீலூருக்கு ஒரு டிக்கட்ட குடு.

என் நேரம் உங்கிட்ட திட்டு வாங்கனும்னு இருக்கு, அப்புரம் இது கவருமெண்டு பஸ்ஸூ இல்லை , தனியார் வண்டிதான் ஓனரு வந்தா பிரிச்சி மேஞ்சுருவாரு உன்னை, இந்தா டிக்கெட்ட பிடி, அப்படி போயி உட்காரு, ம்ஹீம் நாத்தம் தாங்கல , வாழைக்காய் வித்த காசுக்கு எல்லாத்துக்கும் குடிச்சிட்டியா?

ம்ஹ்ம், நான் சொந்தமா உலைச்சி வித்து குடிக்கிறேன், தனியார் வண்டில பிச்சைக்காரத்தனமா கை நீட்டி சம்பளம் வாங்கி ஈனப்பொலப்பு நடத்துற நீயெல்லாம் பேசப்படாது.

ஒழுங்கா வேட்டிய கட்டிட்டு உட்காரு, இல்லாட்டி இறக்கி விட்டிருவேன்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே வாழைக்காய் விவசாயி, கண்டக்டர் முருகேசனின் கன்னத்தில் பளார் என்று அறைகிறார், அச்சேற்ற முடியாத வார்த்தைகளை உபயோகித்தபடி. பதில் மரியாதையாய் ஏகப்பட்ட அடிகளை வாங்கிக்கொண்டு இறக்கிவிடப்படுகிறார் வாழைக்காய் விவசாயி.

நாளைக்கு இந்த பக்கமாதானடா வண்டி ஓட்டனும் , கோயிலூர்ல இருக்குடா உனக்கு, உன் சங்க அறுக்காம விட மாட்டண்டா ழேஏய்ய்ய்ய்ய்ய்..

முதல் நாள் அதுவுமே குடிகாரன் தொல்லை தாங்க முடியலையே என்னடா ரூட்டு இது என்று மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டான் முருகேசன். அடுத்த ஸ்டாப் வந்தது, கூட்டமாக நூற்றுக்கு மேலானவர்கள் பஸ்ஸில் ஏற காத்திருந்தனர்.

என்னா கூட்டமா ஊரே கிளம்பிட்டீங்க எங்க போறீங்க.

குடிக்காட்டுல ஒரு எலவு ,அதான் எல்லாரும் போறோம்.

யப்பா நாத்தம் தாங்கமுடியலேயே, ஏம்பா எழவு வீட்டுக்குமா குடிச்சிட்டு போவீங்க.

அட நீ வேற 90 வயசுல கெலவன் செத்துப்போனா துக்கப்படவா முடியும், ஒறமுறையான் வீடு போயிதான் ஆகனும், போனமா சீட்டு வெளாண்டமா , அங்க போய் மாமன்,மச்சாங்களோட சேந்து கெலவன எரிக்கிற வரைக்கும் குடிச்சமான்னு இருக்கனும்.

ம்ம் நடத்துங்க நடத்துங்க.

கண்டக்டரு தம்பி , நாங்க எலவுல அலுவுறதே இந்த கம்னாட்டி பயலுவ குடிச்சிட்டு பண்ணுற அலும்ப பாத்துதான்.- ஒரு அரை கிழவி

டேய் கண்டக்டர் பயலே என்னடா, என் பொண்டாட்டிய இடிக்கிற. - ஒரு முழு குடிகாரன்.

'ஹலோ நான் எங்க' அப்படின்னு சொல்லி முடிக்குமுன் குடிகாரர்கள் தரும அடி கொடுத்து முடித்திருந்தார்கள் கண்டக்டர் முருகேசனுக்கு.

குடிக்காடு பஸ் ஸ்டாப் வந்தது எல்லாரும் இறங்கிக்கொண்டிருந்தனர். இழவு வீட்டில் மைக் செட்டில் கிழவிகள் ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார்கள்

எப்படியம்மா ஒத்து ஒழக்கிறது
நம்ம நாட்டிலே எலந்த பட்டை சாராயம் காச்சுறது
எப்படியம்மா ஒத்து ஒழக்கிறது
நம்ம நாட்டிலே வேப்பம் பட்டை சாராயம் காச்சுறது

அடி வாங்கின வேதனையிலும் கண்டக்டர் முருகேசன் நினைத்துக்கொண்டான் குடிக்காடுன்னு ஊருக்கு காரணமாதான் பேரு வெச்சிருக்காங்க.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த முருகேசன் தன் அப்பாவிடம், நான் இனிமேல் இந்த வேலைக்கு போகல பெரிய ஈனப்பொழப்பா இருக்கு, குடிகாரப்பயகிட்டயெல்லாம் அடி வாங்க வேண்டியிருக்கு.

அப்பரம் வேற என்ன பண்ண போற

திருவள்ளுவர் பைனான்ஸ்ல 5000 ரூபாய் டெய்லி வட்டிக்கு வாங்கிட்டு வந்திருக்கேன், பாய் கடைல சாராய சக்கரை கடன் தரேன்னு சொல்லிருக்கான், நான் போய் சாமான் வாங்கிட்டு வரேன் நாளைக்கு நல்ல நாள்,நம்ம காட்டு கொல்லைல ஊறல் போடப்போறேன், நீ போயி விறவு வெட்டி காய வை அடுத்த வாரம் எரியல் இருக்கு.

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Sunday, June 21, 2009

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு

அமெரிக்காவில் இந்தியர்கள் நிறைய வசிப்பது தெரிந்ததே,அவர்களுக்கான இந்திய வகை உணவு மற்றும் கலாச்சாரத்தேவை மூலம் ஒரு மிகப்பெரிய வணிக வாய்ப்பு உள்ளது, நீங்களும் அந்த வணிகத்தில் பங்கெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

முதலில் நல்ல ஏற்றுமதி முகவர் ஒருவரை கண்டுபிடிக்கவேண்டும். மற்றவை மிகச்சுலபமான ஒன்றுதான்.

மிகவும் அதிகம் தேவையுள்ள குழம்பு பொடிகள்,தேங்காய் எண்ணெய், ஊறுகாய், சட்னி, பிஸ்கட், சாக்லேட்,குழந்தைகளுக்கு தேவையான பாலில் கலந்து கொடுப்பதற்கான சாக்லேட் கலந்த ஊக்க பானங்கள், டீ,காபி, நூடுள்ஸ் மற்றும் பல.

உங்களுடைய முதல் கவனம் expiry date ல் தான் இருக்கவேண்டும். மேலே சொல்லப்பட்ட பொருடகள் expiry date முடியும் தருவாயிலோ , அல்லது முடிந்து ஒரு ஐந்து வருடத்து முன்னரோ, டீத்தூள் போன்றவை expiry date முடிந்து பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்களில் கவனம் தேவை அவைகள் expiry date முடியும் தருவாயிலோ அல்லது முடிந்து ஒரு வருடத்துக்குள் இருக்கவேண்டும், ஏனென்றால் பெற்றோர்கள் expiry date பார்ப்பார்கள் வேற வழி இல்லைன்னா ஒரு வருடம் வரை சமாதானம் செய்துகொள்வார்கள். இவைகளை குப்பையில் கொட்டப்போகும் முன்னர் மொத்தமாக வாங்கிவிடவேண்டும் , இந்தக்குப்பைகளை நீங்கள் வாங்கிக்கொள்ள உங்களுக்கு அந்த மண்டிக்காரரே காசு கொடுக்கும் வாய்ப்பு நிறைய, அதன் மூலமும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

தவறியும் சாதாரண பிராண்டுகளை வாங்ககூடாது, expiry date முடிஞ்சு ஒரு வருடம் ஆனால் கூட பராவாயில்லை Name Brand பொருட்கள்தான் வாங்க வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் Name Brand பொருட்கள்தான் வாங்குவார்கள்.

வாங்கிய குப்பைகளை அந்த ஏஜெண்டிடம் கொடுத்து காசக்கிவிட வேண்டியதுதான் இரட்டை வருமானம், செலவு லாரி வாடகை மட்டும்தான் அதுவும் கூட மண்டிக்காரரிடம் பேரம் பேசி வாங்கிக்கொள்ளலாம்.

இன்னோரு வாய்ப்பும் உள்ளது வரவர நம்ம ஆட்கள் கொலஸ்டிரால்,saturated fat எல்லாம் பாத்துதான் சாமான் வாங்குராங்க, ஆனால் தேங்காய் சட்னியும் நெய்யும் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதுக்கு என்ன பண்ணனுன்னா frozen தேங்காய்ப்பால், தேங்காய் துருவலில்
கொலஸ்டிரால் 0%,
saturated fat / trans fat 0% அப்படின்னு போட்டிரனும்.முடிஞ்சா முழுத்தேங்காயிலேயும் கொலஸ்டிரால் 0% ,saturated fat / trans fat 0% அப்படின்னு ஸ்டிக்கர் ஒட்டுங்க.

நெய் பாட்டிலில் fat free நெய் அப்படின்னு அச்சடிச்சி ஒட்டிரனும், கொலஸ்டிரால் 0%,
saturated fat trans fat 0% அப்படின்னும் போட்டிரனும்.
வியாபாரம் பிச்சிக்கிட்டு போகும்.


டிஸ்கி: இவைகளை உண்மையாகவே செய்து FDAவில் மாட்டிக்கொண்டால் குடுகுடுப்பை பொறுப்பல்ல.
டிஸ்கி: expiry date பார்த்து வாங்குங்கள் என்று எச்சரிப்பதற்கான எண்ணத்தில் உருவான பதிவு.

ஏற்றுமதி செய்றீங்களே இல்லையோ பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க, ஓட்டு போடுங்க.


தந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து.

Wednesday, June 17, 2009

கல்லூரி சாலை: இதோ எந்தன் கள்ளுக்கடை

நான் படித்த கல்லூரி ஒரு வித்தியாசமான கல்லூரி, கல்லூரிக்குள்ளேயே நிறைய பனைமரங்கள் உண்டு, அதில் கள் இறக்கமாட்டார்கள் ஆனால் பதனீர் இறக்குவார்கள். பதனீர் காலையில் தான் இறக்குவார்கள், நானெல்லாம் காலை நேரம் என்ற ஒன்று இருப்பதே அறியாதவன்.சிலர் மாணவர்கள் காலையில் எழுந்து 75 பைசா கொடுத்துவிட்டு ஒரு டம்ளர் பதனீர் குடிப்பார்கள்.

எனக்கும் பதனீர் பிடிக்கும் ஆனால் குடிப்பதற்கான வாய்ப்பு ஒரு சில நாட்களே கிடைத்திருக்கிறது, ஆனால் கல்லூரியை சுற்றி அங்கீகரிக்கப்படாத கள்ளுக்கடைகள் நிறைய,கல்லூரி சென்று படித்த கலைப்பு நீங்க மாலை நேரங்களில் மதி மயங்க நாங்கள் தேர்த்தெடுக்கும் மதுபானம் கள், வெறும் பத்து ரூபாய்க்கு இரண்டு மட்டை கொடுப்பார்கள். இருக்கிற வசதிக்கேத்த மாதிரி வாழ்ந்துக்கனும் கிற விசயத்தை இந்தக்காலேஜ்லதான் நாங்க படிச்சோம். பொருளாதாரத்தில opportunity cost அப்படின்னு ஒன்னுசொல்வாங்க, மதி மயங்க தேவை போதை அதற்கு பாரின் சரக்கு அடிக்க தேவை பஸ்ஸுக்கு காசு , மேலும் குறைந்த பட்சம் ஒரு குவாட்டர் 50 ரூபாய் , குவார்ட்டர் எடுத்து வாந்தி எடுத்தால் லாட்ஜ்ல ரூம் போட்டு தங்க 100 ரூபாய் வேணும் , ஆனால் அதே போதையை 10 ரூபாய்க்கு பனைமரக் கள் தரும் இதுக்கு பேர் தான் opportunity cost. இஞ்சினியரிங் காலேஜ் படிச்சிட்டு கள்ளு குடிக்கிறோம்னு சொன்னா அது இழுக்கு இல்லையா அதுனாலா நாங்களும் ஸ்டைலா stoning அப்படின்னு இங்கிலீஸ் பேரு வெச்சிட்டோம்.

காலேஜ் சுத்தி பிரபலமா உள்ள ஸ்டோன் கடைகள்னா, முள்ளுவாடி சுருட்டண்ணன் கடை, மற்றும் பாட்டி கடை, சின்ன மாயாகுளம் பக்கம் போனா மரத்தடி கடை, இது ஹாஸ்டல் லேந்து 100 மீட்டர்தான். புது மாயாகுளம் இடுகாட்டுக்கடை மற்றும் தர்கா கடை. மரத்தடி கடைல பேண்ட் போட்டுட்டு போனா கள்ளு குடுக்கமாட்டாங்க , போலிஸ் கெடுபிடி ஜாஸ்தி அப்படின்னு விரட்டி விட்டிருவாங்க அதுனால லுங்கி கட்டிட்டுதான் போகனும், அங்கே விக்கிற பழைய மீன் குழம்ப சாப்பிட்டு கீழே கிடக்கிற எச்சித்தொன்னைல இரண்டு மட்டைய அடிச்சிட்டு ஹாஸ்டல் வந்து மட்டை ஆயிர வேண்டியதுதான்.பெற்றோர்கள் காச சேமிக்க இந்த மாதிரி சிரமங்களையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம்.

சுருட்டண்ணன் கடைக்கு ஹாஸ்டல் மெஸ்லேந்து கூஜாவில சுண்டல் எடுத்துட்டு போய் நல்லா நேரம் எடுத்து குடிக்கலாம். அவரு கிட்ட என் கூட படிச்சவங்க சிலர் தின வாடிக்கையாளர்கள், சுருட்டண்ணன் கிட்டேயே ஓசில பீடி வாங்கி குடிக்கிற அளவுக்கு சிநேகம்.
இவரு கடையில ஒருத்தர் சைடிஷ் ஆ கறி வித்துட்டு இருந்தார், வாங்கி சாப்பிட்டு பாத்தேன் ஜவ்வு மாதிரி இருந்தது , இது என்னா கறிங்க கேட்டதுக்கு ஆட்டின் மடிப்பகுதி கறி இதுக்கு பேரு சவாஸ்கறி அப்படின்னார். அடப்பாவிகளே சாப்பிடவே முடியாத ஜவ்வுக்கூட வியாபாரம் பண்றீங்களேன்னு நினைச்சிட்டிருக்கும்போதே அங்கே வந்த ஒல்லியன் சவாஸ்கறியை சாப்பிட்டு முடித்திருந்தான்.

இந்தக்கள்ளில் கூட, விஸ்கி,பிராந்தி , ரம் மாதிரி நிறைய வெரைட்டி இருக்குங்க, சிலர் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கள் மட்டும் குடிப்பார்கள், அது கூடுதலாக கசக்கும் அல்லது இனிக்கும் தினமும் குடிச்சா உடம்புக்கு நல்லதாம் குடிமக்கள் சொன்னது.

இன்னோரு வகை எல்லா மரத்திலேந்து இறக்கி மிக்ஸ் பண்ணி உடனே குடிக்கிறது, சிலர் புளித்த கள்தான் குடிப்பார்கள் கள் இறக்கி இரண்டு நாள் கழித்தோ ஒரு வாரம் கழித்தோ இது போதை அதிகம் தருமாம்.

கல்லூரி சாலைன்னு சொல்லிட்டு ஒரு கள்ளுசாலையைப்பத்தி எழுதிட்டிருகேன், கல்லூரில என்ன கத்துக்கிட்டோம் கிற ரொம்ப முக்கியமானது இல்லையா? அது என்னான்னா ஒரு புது தொழில்நுட்பம்

பாட்டி கடைல தெரிஞ்சுகிட்டது, இந்த பதநீர் இறக்குறாங்கள்ல அது சட்டப்படி குற்றமல்ல, பதநீர் காய்ச்சி கருப்பட்டி செய்யலாம் ஆனா அதுக்கு வேலை அதிகம் டிமாண்டும் கம்மி, அதுனால பதிநீர் இறக்கி(கள் பானையில் சுண்ணாம்பு தடவினால் மரத்தில் இருந்து கிடைப்பது பதநீர், போதை இருக்காது சுவையானது) அதுல மீண்டும் கொஞ்சம் கள் ஊற்றி உரை கட்டி இரண்டு நாள் புளிக்க வெச்சா மீண்டும் கள் ஆயிடுமாம். (பாலை தயிராக்குவது போன்று) இதுக்கு பேருதான் லீகலா பதிநீர் இறக்கி இல்லீகளா கள்ளாக்குறது.

இந்த மாதிரி புதிய தொழில் நுட்பங்களை நாங்க அறிந்துகொண்டோம்.

கதையின் நீதி என்னன்னா கள் குடிக்கிறவன் குடிச்சிட்டுதான் இருப்பான், ஏன்னா அவனோட பொருளாதார நிலைமை அப்படி, கிடைக்காட்டி வேலி முட்டியாவது வாங்கி குடிச்சிட்டு வேலிலதான் கிடப்பான். அதிகம் உடலுக்கு கேடு தராத கள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?ஏன் கள்ளுக்கடைய திறக்கக்கூடாது அதில் என்ன தவறு.? இயறகையாய் கிடைக்கும் ஒரு பாணம் தானே அது. இலங்கையில் இருந்து பாட்டிலில் அடைத்து வெளிநாட்டில் விற்கிறார்கள், மலையாளிகள் அதை வாங்கி ஆப்பம் சுட்டு சாப்பிடுகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பனைமரங்கள் நிறைய கள் தருமே அதை நியாயமாக காசாக்களாமே ?

Tuesday, June 16, 2009

தொவையல் : புதுக்கவிதை தேடுபவர்கள் பாவம்

கடந்த ஒரு மாத காலமாக நேரமின்மை காரணமாக பதிவெழுதாமல் இருந்த போதும் கூகிள் மூலமாக பலர் என்னுடைய பதிவைத் தேடி படித்தபடி இருந்தனர். நான் கூட நானும் பிரபலம் ஆயிட்டேன்னு நினைச்சேன் ஆனா பாருங்க எதைத்தேடி வந்திருக்காங்கன்னு.

முக்கியமாக டீச்சர், டியூசன் டீச்சர் என்று தேடி என்னுடைய குடுகுடுப்பை: டியூசன் டீச்சர் விமர்சனம் படித்து நொந்து போகிறார்கள்.

இன்னொரு வகையினர் கவிதை ஆர்வம் உள்ளவர்கள் புதுக்கவிதை என்று தேடி இந்தக்கவிதையை படித்து கவிதைக்கு ஒரு புது விளக்கம் இருப்பதை அறிந்து பரவசப்படுகிறார்கள்.
இது தான் அந்தப்புதுக்கவிதை
-----------------------------------
(புது) கவிதை

பேருந்து

கணினி

தொலைபேசி

அலைபேசி

புது பெயர்கள்

மட்டும் தான்

கண்டு பிடிப்போமா?

இல்லை இப்படி

கவிதையும்

எழுதுவோமா?
-------------------------------------------


என்னுடைய முந்திய பிரியாணிப்பதிவுக்கும் இனி நிறைய பேர் வரலாம் இன்பம் பெறலாம்.
---------------------------------------

நான் என்னோட எட்டு வருடமா உபயோகப்படுத்துற செல்போன் கம்பெனிய மாத்தலாம்கிற நோக்கத்தில் , இரண்டு வாரத்துக்கு முன்னாடி இரண்டு உலகத்தரம் வாய்ந்த ஓசி செல்போன் ஆர்டர் பண்ணி இருந்தேன். அதிலே ஒன்னு வீடு வந்து சேர்ந்தது, இன்னொன்னு வரலை. சரின்னு இன்னைக்கு இரண்டாவது முறையா கஷ்டமர் சர்வீஸுக்கு பேசினேன் 2 மணிநேர காத்திருத்தல் மட்டும் உரையாடல், கடைசில ரிபர்பிஸ்டு போன் வேணும்னா அனுப்புறோம் புதுசா ஓசி போன் இப்ப இல்லைன்னு சொன்னாங்க. என்னோட தற்போதைய போன் கம்பெனிகாரன் கொடுத்து வெச்சவன் போல, வீட்டிற்கு வந்த ஒரு போனையும் திருப்பி அனுப்ப போறேன்.இது எதுக்கு பதிவான்னு கேக்கறீங்க தானே , ரொம்ப கடுப்புல இருக்கேன் யாரையாவது அடிக்கனும் போல இருந்துச்சு அதான் டைப் அடிச்சிட்டேன்.

------------------------------------

கல்லூரி சாலை:

இஞ்சினியரிங் காலேஜ்ல சேர்ந்த வருடம், +2 ல ஒக்கேசனல் குரூப் எடுத்து படிச்ச பசங்களுக்கு அறிவியல் பாடங்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவார்கள் அதில் ஒரு மாணவர் கேட்ட சந்தேகம் இது.

கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் கேட்ட சந்தேகம்.

சார் முழங்கையை முன்பக்கமா மடக்க முடியுது , ஏன் சார் பின் பக்கம் மடக்க முடியல?

இந்த கேள்வி நான் கேக்கலங்க ஏன்னா நான் +2 ல ஒக்கேசனல் குரூப் இல்லை. அப்புரம் எப்படித்தெரியும். எல்லாம் செவி வழிச்செய்திதான்.

--------------------------
நான் எழுதிய முதல் கொலைவெறிக்கவுஜ

நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை.

Monday, June 15, 2009

OOPS பிரியாணி.

ஹலோ மாப்பிள்ளை நல்லாருக்கியா ,என்னமோ object oriented programming, OOPS methodology அப்படின்னு ஜல்லி அடிக்கிறாங்க எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது, தெரிஞ்சா கொஞ்சம் விளக்குடா மாப்பிள்ளை.

அது ஒன்னும் பெரிய விசயம் இல்லடா, நீ திங்கிர ஒரு குண்டான் பிரியாணி எப்படி பண்றது அப்படின்னு கத்துக்கிட்டாலே OOPS கத்துக்கலாம்டா.

பிரியாணியா இப்பவே பசிக்குதுடா, சரி சொல்லு உடனே பண்ணி சாப்பிட்டுருவோம்.

பிரியாணி அப்படிங்கறது ஒரு object. ஆனால் அதுல நிறைய object இருக்கு, அதாவது அரிசி,தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி,புதினா,நெய் உப்பு, கறி சிக்கன்/மட்டன்/முட்டை மற்றும் பிரியாணி மசாலான்னு இதெல்லாந்தான்.

இதுதான் எல்லாருக்கும் தெரியுமே.

எல்லாருக்கும் தெரிஞ்சதுதான், அதையே இங்கிலீஸ்ல ஜல்லி அடிச்சா பயமா இருக்கும் அவ்வளவுதான். இப்ப பிரியாணி எப்படி பண்றதுன்னு OOPS ரெசிப்பீ தரேன் அப்படியே பாலோ பண்ணு.

அரிசி, உப்பு, தக்காளி,வெங்காயம், பிரியாணி மசாலா, கறி,புதினா இதெல்லாம் தனித்தனி ஆப்ஜெக்ட், இதையெல்லாம் வெச்சி பிரியாணி பண்ணா அதுக்கு பேரு பிரியாணி ஆப்ஜெக்ட்.

புரியுது, எல்லா ஆப்ஜெக்டும் தனித்தனியா இருக்கு பிரியாணி மசாலான்னு ஒன்னு இருக்கே அதுல என்ன என்ன சாமான் (ஆப்ஜெக்டு) இருக்கு.

அது உனக்கு தேவையில்லை, அதுக்கு பேருதான் டேட்டா என்காப்சுலேசன், இன்பர்மேசன் ஹைடிங், புரியிற மாதிரி சொன்னா தொழில் ரகசியம்.

ஓ இப்ப புரியுது, சரி இப்ப ஊப்ஸ் பிரியாணிக்கு போகலாம்.

படத்தை கிளிக்கி பார்க்கவும்.





பொது அமைப்பு பிரியாணி{

அடுப்பு = அடுப்பு.நிரந்தர பயன் அடுப்பு().
அடுப்பு.பற்றவை();
அடுப்பு.தழல்(நடுத்தரதிற்கு மேல்)
சட்டி.நிரந்தர பயன் சட்டி().எடுசட்டி();
உதவி.வெட்டு(நீளம், 4, தக்காளி)
உதவி.வெட்டு(நீளம், 4, வெங்காயம்)
உதவி.அரை(இ.பூண்டு)
கொட்டுசட்டியில்(பொருள்)
சமை(5 நிமிடம்)
கலக்கு()
அரிசி(2);
தண்ணீர்(2 )
கறி()
சட்டு.மூடு()
சமை(30 நிமிடம்)
தழல்(மெதுவாக)
அடுப்பு.அனை();

}


இதுல பாத்தீங்கண்ணா என்ன கறி வேணும்னா போட்டுக்கலாம், அதுக்கு பேருதான் dependancy injection, இந்த spring framework மாதிரி. கறி போடலைன்னா வெஜ் பிரியாணி அவ்ளோதான்.

ஓ நம்ம ஆந்திராக்காரு வெச்சிருக்கிற மதுரை வீரமுனியாண்டில தக்காளி சாதத்துல என்ன பிரியாணி கேக்குறமோ அதுக்கு ஏத்த மாதிரி கறி வெக்கிறதுக்கு பேருதான் dependancy injection ஆ.

ஆமாம் மாப்பிள்ளை, சரி என்னா நான் சொன்ன படி பிரியாணி பண்ணியா எப்படி வந்திருக்கு.சட்டிய திறந்து பாத்து ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதானே.

போச்சுடா, எல்லாம் அப்படியே இருக்கு, எதுவும் வதங்கல வேகல சும்மா மிக்ஸ் ஆகிப்போயி இருக்கு.

ஏன் என்ன ஆச்சு.

அடுப்ப ஆன் பண்ணேன் எல்லாம் பண்ணேன் ஆனா கரண்டு இல்லை மாப்பிள்ளை. இப்ப என்ன பண்றது.

நீ சென்னைல இருக்கங்கிற்தயே மற்ந்துட்டேன்,கரண்டு third party interface இல்ல அடிக்கடி கட்டு இருக்கும் கிறது scope ல இல்லப்பா.

ரியல் டைம் ஆப்ஜெக்ட மாடலா வெச்சு மென்பொருள் உருவாக்கினா நல்லா வருது, ஆனா மென்பொருள் ஆப்ஜெக்ட மாடல வெச்சு ரியல்டைம் பிரியாணி பண்ண பெயிலாடுது. ஆனாலும் இது third party interface failure தான் .சரி ஒரு work around பண்ணலாம்.

என்னாது

நீதான் சும்மா அரிசியவே ஒரு படி திம்பியே , இப்ப தக்காளி வெங்காயம்லாம் போட்டு ஊறி வாசமா இருக்குமே சும்மா அப்படியே ஒரு காட்டு காட்டு.

இல்லாட்டி பழைய முறைப்படி ஒரு மண்பானைல எல்லாத்தையும் கொட்டி நல்லா விறகு அடுப்புல வெச்சு பொங்கி சாப்பிடு.

Sunday, June 14, 2009

நானும் அமெரிக்கா போறேன்.

முந்திய பகுதி
குடுகுடுப்பை: வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

ஒருவழியா வேலை கிடைச்சி வெற்றிகரமா வாழ்க்கை திருவல்லிக்கேணி மேன்சனில் வாழ்க்கை தொடர்ந்தது, இரண்டு வேலை நல்ல சாப்பாடு, வில்ஸ் பில்ட்டர் அப்படின்னு நல்லபடியா கழிந்தது.காலை உணவு எப்போதும் கிடையாது, காலை உணவாக எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பொங்கல், சேமியாவின் பலனாக அதனை இன்று வரை மறந்துவிட்டேன்.

திடீரென்று ஒருநாள் எங்க அலுவலக ஹெச்சார் கூப்பிட்டு உனக்கு பிராட்விசன்(Broadvision) training ஒரு மாசம் இருக்கு நீங்க நாளைலேந்து அந்த பில்டிங் போகனும் அப்படின்னாரு. எனக்கு ஒன்னும் புரியல ஒருவேலை என்னுடைய அழகிய கண்களை பார்த்து இப்படி ஒரு விசனுக்கு அனுப்புறாங்கன்னு நெனச்சிட்டேன்.

அங்கே போய் பாத்தப்ப தெரிஞ்சது அது ஒரு ஈகாமர்ஸ் சாப்ட்வேர் அதுக்கு டிரெய்னிங்,அமெரிக்காவிலேந்து ஒருத்தர் வந்து பாடம் நடத்தப்போறாருன்னு, பாடம் நடத்தும்போது அவரு சொல்லிட்டாரு நீங்க கூடிய விரைவில் அமெரிக்கா போகனும். ஹெச்சார் என்னோட பாஸ்போர்ட் வாங்கி உடனடியா B1 ஸ்டாம்பிங் பண்ணிட்டாங்க.

கூடிய விரைவில் அமெரிக்கா போகப்போறோம், அங்கே உள்ள உணவு பழக்கத்து தயாராகனும்னு முடிவு பண்ணி அதுவரைக்கும் பொன்னுசாமி, அஞ்சப்பர்னு மதியம் வலைச்சு அடிச்சு சாப்பிட்டு இருந்த நண்பர்கள் சிலர், கீரீம்ஸ் ரோட்டில் உள்ள அமெரிக்க இத்தாலியன் ஈட்டரிங்கற ரெஸ்டாரண்ட்ல லஞ்சப்போணோம். ஆளாளுக்கு என்னமோ ஆர்டர் பண்ணாங்க வந்து இருந்த எல்லாரும் என்னமோ பாஸ்டா அப்படி இப்படின்னி ஆர்டர் பண்ணாங்க, நான் என்னோட நண்பர் ஒருத்தன்கிட்ட என்னடா ஆர்டர் பண்ணலாம்னு கேட்டேன், அவன் சொன்னபடி சிக்கன் பர்கர் ஆர்டர் பண்ணியாச்சு.

கொண்டு வந்து கொடுத்தான் 50 காசு பண்ணுக்கு நடுவில ஒரு சிக்கன் வெச்சி அரை அடி உயரத்துல, நானும் அதை வாயில கடிக்கறதுக்குள்ள வாயெல்லாம் வலிக்குது, ஒரு வழியா கண்ணுல தண்ணிவர வாய் வலிக்க வலிக்க முதல் பர்கரில் கால் வாசி சாப்பிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒடி வந்தோம்.ஏற்கனவே இந்த பண்ணுல எனக்கு ஒரு அனுபவம் இருக்கு, திருவல்லிக்கேணி ரத்னா கபேல பாவ் பஜ்ஜின்னா என்னன்னு தெரியாம ஆர்டர் பண்ணி பண்ணையும் , வெங்காயத்தயும் வெச்சத பாத்து, பக்கத்து சீட்டில இரண்டு இட்லிக்கு குண்டான் சாம்பார் குடிக்கிறவன பாத்து வயித்தெரிசலோட வந்திருக்கேன்.

வழக்கம் போல இந்த வாட்டி B1 விசால யாரும் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க,ஆறு மாசம் இப்படியே போச்சு, அதுக்குள்ள H1விசா பண்ணிடாங்க. திரும்பவும் நாள் குறிச்சிட்டாங்க, நானும் கோட், சூட் குளிருக்கு ஜாக்கெட் எல்லாம் வாங்கி தயாராகிட்டென். எங்க ஊர்லேந்து எங்கப்பா அண்ணன் , கல்பாக்கம் நண்பர்கள் எல்லாரும் வழியனுப்ப வந்திட்டாங்க, எல்லாருக்கும் திருவல்லிக்கேணில ரூம் போட்டாச்சு. வழக்கம் போல ஒரு வாரம் இன்னைக்கு நாளைக்கு இழுத்ததில எங்கப்பா நான் ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டார்.

ஒருவழியா மூன்று பேர் அடுத்த வாரத்தில் ஒருநாள் கிளம்பினோம்.அதில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்கா சென்று வந்தவர், நீங்க கவலைப்படாதீங்க என் பின்னாடியே வாங்க நான் பாத்துக்கறேன்னு சொன்னார். பிரிட்டிஸ் ஏர்வேய்ஸ் பிளைட் லண்டன் சென்று பின்னர் சிகாகோ வரை செல்லவேண்டும். ஏர்போர்ட்டில் அவர் வழிகாட்டுதலில் அவர் பின்னாடியே சென்றோம்.அவர் செக்கின் பண்ணி முடித்துவிட்டார். அவருக்கு பின்னால் நான் எனக்கு பின்னால் என் நண்பர். செக்கின் செய்பவர் என்னை சிறிது நேரம் காத்திருக்க சொன்னார், இந்த பிளைட் ஓவர்புக் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆஹா நம்மள திருப்பி அனுப்பிச்சிட்டாங்கடான்னு நானும் நண்பனும் முடிவு பண்ணிட்டோம்.

கவலைப்படாதீங்க உங்க டிக்கெட் அப்கிரேட் பண்ணி நீங்க business class ல போறீங்கன்னாங்க, அப்படின்னா என்னான்னு கூட எனக்கு தெரியாது, ஆனா நம்மள திருப்பி அனுப்பலன்னு மட்டும் தெரிஞ்சது. சென்னை, லண்டன் பயணம் மிக சொகுசு, நினைச்ச நேரமெல்லாம் சரக்கு சாப்பாடு, உயர்தரமான இருக்கை , முதல் விமானப்பயணம் இனித்தது.

லண்டனில் இருந்து சிகாகோ மீண்டும் economy class க்கு மாத்திட்டாங்க, அப்பதான் தெரிஞ்சது 36 ம் நம்பர் பஸ்ஸுல படிக்கட்டுல கர்ச்சிப்ப போட்டு உட்காந்து வர வசதி கூட இதில இல்லையேன்னு, முதுகு பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. சிகாகோல வந்து இறங்கியாச்சு கூப்பிட்டு போக யாரும் வரலை.நல்லவேலையா அனுபவசாலி கூடவே இருந்ததினால் அவரு வழக்கமா வருகிற கேப் டிரைவருக்கு போன் பண்ணி ஒரு வழியா ஹோட்டல் அறையை அடைந்தேன்.

இனி எதிர்பாத்தவை எதிர்பாராதவை.......


Thursday, June 11, 2009

சென்னை ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடன் ஒரு அனுபவம்.

இது நடந்தது 5 வருடத்துக்கு முன்னால், சென்னையில் ஒரு வீடோ அல்லது இடமோ வாங்கலாம் என்ற நோக்கத்தில் நண்பர்கள் /உறவினர்கள் மூலம் சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளை பார்த்து சில இடங்களை பார்க்க சென்றோம்.

முதலில் ஒரு ஏஜெண்ட் வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு இடத்தை காட்டினார், விலை இவ்வளவு என்றார். ரொம்ப நல்ல இடம் சார் ரயில்வே டேசன் பக்கம் வாங்கிப்போடு சார்.

ஆமா நல்ல இடந்தான், இது CMDA அப்ரூவ்டா?

அன் அப்ரூவ்டுதான் சார் , அருமையான இடம் சார், சீக்கிரம் மூனு மடங்கா விலை போகும் சார்.

இங்கதான் கவனிக்கனும் "அன் அப்ரூவ்டுதான்" அன் சத்தம் மட்டும் வெளிய வராமல் ரொம்ப அருமையா பேசினார்.

வேண்டாம்னு சொல்லிட்டு இன்னொருத்தரை கூட்டிட்டு வேற இடம் பாத்தோம், சோலிங்கநல்லூர் அருகில் ரஜினிகாந்த ஆசிரமம் கட்ட வாங்கிப்போட்டிருக்கிற இடம் பக்கத்தில். அவர் நாந்தான் ரஜினிக்கு இந்த இடம் வாங்கிக்கொடுத்தேன், ரஜினி இப்படி, லதா அப்படின்னு பேசிட்டு வந்தார் நல்லா பொழுது போச்சு, ஆனா இடம் எனக்கு பிடிக்கலை.

மூன்றாவதா முகப்பேர் பக்கமா , ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், அவர் கொஞ்சம் பிரபலமானவர் சுருக்கமா சொல்லப்போனா தல ஏஜெண்ட், நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரம் போக, மீதி நேரம் அவர் கடையில் இருக்கும் அனைத்து சாமி போட்டோக்களையும் வணங்கிய படியே இருந்தார்.இவரைப்பார்க்க நிறைய அல்லக்கை ஏஜெண்டுகளும் வந்தபடியே இருந்தனர்.

அதில் ஒருவர்

வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா? உங்கள இன்னைக்கு பாக்க முடிஞ்சதே பெரிய விசயம்..

ஆமாமா நீங்க எப்படி இருக்கீங்க , பிஸினெஸ் எல்லாம் எப்படி போகுது, நான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஒன்னு பண்றேன் அதுனால கொஞ்சம் பிஸிதான். என்ன விசயம் சொல்லுங்க.

நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன சார் கவலை.நாங்க மெக்காவுக்கு போறதுக்கு எப்படி ஒரு அமைப்பு அமையனுமோ , அது மாதிரி உங்களுக்கு ஒரு நல்ல அமைப்பு வந்திருக்கு அதான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ண முடியுது.

ஆமாம் அமைப்புதான் ரொம்ப முக்கியம். உங்களுக்கு சீக்கிரம் வரும் நீங்களும் மெக்கா சீக்கிரம் போவீங்க நானும் உங்களுக்காக முருகன்கிட்ட வேண்டிக்கிறேன். என்ன எதாவது இடம் இருக்கா?

ரொம்ப நல்லது, ஆமாம் ஒரு இடம் இருக்கு சார், அம்பத்தூர் பக்கத்தில ஒரு 10 கிரவுண்ட் வருது, அருமையான பீஸு, யாரவது வெளிநாட்டு பார்ட்டி இருந்தா சொல்லுங்க சார்.

வெளிநாட்டு பார்ட்டிக்கெல்லாம் நல்ல இடமா இருக்கனும்யா, அவங்களுக்கு வீடு கட்டத்தான் தேவைப்படும், அம்பத்தூர் இண்டஸ்டிரியல் ஏரியாவில இருக்கா வெளியவா?

இண்டஸ்டிரியல் ஏரியா ஒட்டிதான் இருக்கு, பழைய பில்டிங்கெல்லாம் இடிச்சிரலாம் , அருமையான உருப்படி சார் , கிரவுண்ட் அஞ்சு ரூவாக்கு முடிக்கலாம் சார்.

தல ஏஜெண்ட் என்னைப்பாத்து என்ன சார் சீப்பா பத்து கிரவுண்ட் வருது முடிச்சிரலாமா?

இல்லங்க எனக்கு ஒரே ஒரு கிரவுண்ட் வீடு கட்ட வேணும் இது ஒத்து வர மாதிரி தெரியல.

தம்பி வெளிநாட்டுல இருக்கியலா, அருமையான உருப்படி தம்பி

இல்லங்க எனக்கு வேணாம் நான் வரேன்.