Wednesday, December 30, 2009

ஊரு ரெண்டுபட்டா வெட்டிப்பயலுக்கு கொண்டாட்டம்

ஊரு ரெண்டுபட்டா வெட்டிப்பயலுக்கு கொண்டாட்டம். நான் நினைத்தது சரியாக நடக்கிறது.

ஒரு வரிப்பதிவுக்கெல்லாம் பின்குறிப்பு தேவையா?

Sunday, December 27, 2009

டாலஸில் ஸ்னோமேன்.



டெக்ஸாஸ் மாகாணத்திற்கு வேலைக்கு வந்து நான்கு வருடங்களில் இதுவரை இவ்வளவு பனி பெய்ததில்லை, இவ்வருடம் கிறிஸ்ட்மஸ் டெக்ஸாஸ் காரர்களுக்கு
வெள்ளை கிறிஸ்துமஸாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடைய மகளும் ஸ்னோவில் விளையாட்டு என்று வெள்ளைக்கிறிஸ்தமஸை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
என்னையும் ஸ்னோமேன் செய்ய அழைத்தார் , கிறிஸ்துமஸீக்கு முந்தின நாள் திடீரென்று ஏற்பட்ட முதுகுப்பிடிப்பினால் படுக்கையை விட்டு எழ முடியாததால்
என்னாலும் உதவமுடியவில்லை.

நல்லவேலையாக எதிர்வீட்டு சீனர் ஒரு பனிமனிதன் செய்தார், என் மகள் அதனைப்பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார், அப்படியே அந்த ஸ்னோமேன் படம் எனக்கு ஒரு பதிவுக்கும் ஆகிறது.

பிகு:

Wednesday, December 23, 2009

நான் எப்படி இப்படி

உலகியல் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளின் இன்றைய நிலைமையை கூர்ந்து நோக்குகையில் சமூகமானது ஒரு வல்லின கட்டமைப்பாகவே நமக்குப்படுகிறது. இந்த நிலைமையை நாம் சாதாரணமாக ஒரு சராசரி மத்திய வர்க்க நிலை மனிதனாக இருந்து நோக்கினால் அது அவனின் அறிவுக்கண்களுக்கு புலப்படாதவாறு ஒரு வல்லிய வலை இந்த அறிவு ஜீவிகளால் பின்னப்பட்டிருப்பதை அறியமுடியும், ஆனால் இதனை உணரும் நோக்கில் வேகம் சார்ந்த மனிதனின் வாழ்வியல் சூழ்நிலை அவனைக்கட்டிப்போடுகிறது, இதனை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே உள்ளோம். இந்த வல்லிய வலையை நீக்கிவிட்டு ஊடாடிப்பார்க்கும் மனப்பக்குவம் எம்மைப்போல பின்நவீனத்துவ கூறுபாடுகள் கொண்ட சிலருக்கு உண்டு, அதை நாம் அடிக்கடி இந்த மத்தியதர மக்களுக்கு சொல்லியபடியே இருந்து வருகிறோம்.மத்திய வர்க்கம் பொய்யினால் கட்டமைக்கப்பட்ட வர்க்கம், இவர்களின் உழைப்பு என்பது இழப்பின் பிரதியாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது, இவர்களால் எதையும் குந்தி ரசிக்கமுடியாமையின் காரணம் என்ன, இவர்கள் குந்தாமல் தேவையில்லாமல் உழைப்பதுதான், இவர்களால் ஒரு நவீன கால இலக்கியங்களைப் பற்றிப் பேசமுடியாத எல்லாம் இழந்தவர்கள் என்றே நாம் நோக்கவேண்டியுள்ளது. வளர்ச்சியென்னும் இது மாயவுலகம் வட்டிகளால் கட்டமைக்கபட்டது மத்தியவர்க்கம் தான் நேரடியாக உழைக்கமுடியாத துறையில் முதலீடு என்ற பெயரால் பணம் கொடுத்து கட்டமைக்கபட்டது தானே இந்த வலையும் அதைச்சார்ந்த இந்த உலகமும், வலையுலகம் இல்லாவிட்டாலும் நாம் எங்காவது உக்காந்து வெட்டியாக உளறிக்கொண்டுதானே இருப்போம்.


Tuesday, December 22, 2009

குஞ்சுகள் ...


குஞ்சுகள் ...

தின்ன தின்ன மிச்சங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத வயிறுப் பந்து
கோழிக்குஞ்சுகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகள் கனமின்றி காற்றில் உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
போன்று உரித்த கோழி
என்வீட்டு அறுவாமனையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
தின்று அலுத்துப் போய்
கக்கூஸ் தேடி அலைகையிலே
இன்னுமொரு குஞ்சு
என் வீட்டு அறுவாமனையில்
என் தொப்பை வளர்க்க!

Thursday, December 17, 2009

தெலுங்கானா பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.

தெலுங்கானா பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.

தெலுங்கானா பகுதி புறக்கணிக்கப்படுகிறது என்று தனித்தெலுங்கானா மாநிலம் கேட்பதில் உள்ள நியாயங்களைப்பற்றி பின்னர் விவாதிப்போம். நாம் அறிந்த வரையில் தெலுங்கானா பகுதியைச்சேர்ந்தவர்கள் முதல்வராகும் வாய்ப்புகள் இல்லாததாலேயே இந்தப்பிரிவினை பெரிதாக்கிவிட்டதாக நாம் மொக்கையாக யோசிக்க வேண்டியுள்ளது. தெலுங்கானாத்தலைவர்கள் முதல்வராக வருவதற்கு தேவையான அடிப்படைத்தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லை, முதல்வராக வேண்டும் என நினைத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட்டால்தானே முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே தெலுங்கானா தலைவர்களே நீங்கள் தமிழகத்தில் போட்டியிட்டு முதல்வராகுங்கள். பிரிவினையத்தவிருங்கள்.

Sunday, November 22, 2009

கல்லூரி சாலை: முதல் ஆண்டு தேர்வு முடிவும், புதிய குடிகாரர்களின் உதயமும்.

கல்லூரி முதலாண்டு முடிந்து சீனியராகி, மூன்றாவது பருவத்தில் அடி எடுத்து வைத்தாயிற்று. ஒரு மாதம் கழித்துதான் இடி மாதிரி வந்து சேர்ந்தது முதலாண்டு முடிவுகள். முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி, சிலருக்கு எதிர்ப்பார்த்தவை, வெகு சிலருக்கு மகிழ்ச்சி. தெரிந்த சீனியர்கள் என்னடா ஆல் கிளீயரா, பூண்டாயிருசா, தருசாயிருச்சான்னு கேக்க ஆரம்பிச்சாட்டாங்க.

என்னடா சோகமா இருக்கே எத்தனை பேப்பர் போச்சு?

அஞ்சு?

அப்ப நீ இங்கிலீசும் , B1 உம் பாஸ் சரியா? இதில யாரும் பெயில் ஆகமாட்டாங்க.

இல்ல ஏழும் போனவனெல்லாம் இருக்கான்.

அது யாருடா அது, இதுலக்கூட பெயில் ஆனவங்க..

அந்த ரெண்டு பேரும் இங்கிலீஸ்ல எழுத பயந்து எந்தப்பரீட்சையும் எழுதல..

அடப்பாவிகளா, முத வருசமே ஸ்கூட் விட்டாங்களா? இங்கே முக்கால்வாசிப்பேர் தமிழ் மீடியம் தானடா பாஸோ /பெயிலோ பரீட்சை எழுதுங்கடா? கொஞ்ச நாள்ல் புரிஞ்சுடும் மீடியம் ஒரு மேட்டரே இல்லன்னு. நீயும் தமிழ் மீடியந்தானே, அஞ்சு போச்சுன்னு கவலைப்படாதே எனக்கும் அஞ்சுதான் போச்சு, இந்த செமஸ்டர்ல உங்காந்து படிச்சீன்னா எல்லாத்தையும் தூக்கிரலாம்.அப்படியே அந்த ரெண்டு பேரையும் பரீட்சை எழுத சொல்லுடா.

சரிங்க சொல்றேன்..

ஹாஸ்டலுக்கு வந்தோம்.

"பூண்டுதான் கப்புதான் தருசுதான்
பூண்டுதான் கப்புதான் தருசுதான்"
பாடல் சத்தம் காதை கிழித்தது.

சென்னையைச்சேர்ந்த நண்பன் ஒருவன், எல்லாம் நல்லாதாண்டா எழுதிருந்தேன் ஆனா பிஸிக்ஸ் எப்படியோ போச்சுடா, அதுவும் பதினாலு மார்க் போட்டிருக்கான், எனக்கு ஒன்னும் புரியலடா வாழ்க்கையிலே முதன் முதலா பெயிலாயிருக்கேன்,டவுணுக்கு போய் தண்ணி அடிக்கலாமாடா?

ஆமாண்டா போய் அடிப்போம், ஆறு பேப்பர் போச்சு அதுக்கு கூட கவலைப்படல, ஆனா computer science ல பாஸாயிட்டேன், அந்த மகிழ்ச்சியை கொண்டாட இன்னைக்கு ஊத்திர வேண்டியதுதான் என்றான் அறந்தாங்கியான்

சரிடா நீங்களெல்லாம் இதுக்கு முன்னாடி குடிச்சிருக்கீங்களா? நான் இதுவரை குடிச்சதில்லை சென்னைக்காரன்

நானும் குடிச்சதில்லைடா -குடுகுடுப்பை.

நான் இருக்கேண்டா கவலைப்படாதீங்க நானெல்லாம் அந்தக்காலத்திலேந்த ஊத்தப்போடுறவங்க - காரைக்குடியான்.

பேசிட்டே இருந்தா வேலைக்காவாது,சரக்க ஞாபகப்படித்தீட்டீங்க கிளம்பலாம் - தூத்துக்குடியான்.

ஒரு வழியா டவுணில் ஒரு பாரில் கொஞ்சம் பீர்,விஸ்கி வாங்கினோம். காரைக்குடியானின் பரிந்துரையில், எல்லாரும் முத தடவை குடிக்கிறீங்க பீர் குடிங்க இல்லாட்டி கொஞ்சமா விஸ்கி குடிங்க என்றான். அவனுக்கு மட்டும் ஓல்ட் காஸ்க் ரம் வாங்கிக்கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமா குடிங்க இல்லாட்டி சரக்கு உள்ள போயி டகால்டி பண்ண ஆரம்பிச்சிரும் அப்புறம் நெஞ்சை அடைக்கும்.- காரைக்குடியான்.

ஆமாண்டா சிப் பண்ணிக்குடிங்க அப்பதான் சூப்பரா இருக்கும். தூத்துக்குடியான்.

நானும் காரைக்குடி, தூத்துக்குடி மாதிரி ஊர்ல பொறந்திருக்கலாம்டா குடி அனுபவம் உங்களுக்கு இருக்கு எனக்கு ஒன்னுமே இல்லடா - என பிஸிக்ஸ் போன சென்னைக்காரன் குடிக்கும் முன்னரே புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

எப்படியோ அந்த நாற்றத்தையும் சகித்துக்கொண்டு , நிறைய ஆம்லெட்டுடன் கொஞ்சமாக பீர், விஸ்கி என முதல்முறை குடிகாரர்கள் அனைவரும் குடித்திருப்போம்.

டேய் குடுகுடுப்பை, ஜெயின் @ ஜெயின் கெமிஸ்ட்ரி புத்தகத்தோடயோ திரிவ, கெமிஸ்ட்டரில எத்தனடா வாங்குன?

ஏதோ பத்துக்குள்ளதாண்டா , இந்த முறை மரியாதையா நோட்ஸ படிச்ச பாஸ் பண்ணிறவேண்டியதுதான்.

ஒரு வழியாக சோகத்தை பேசித்தீர்த்துக்கொண்டு மூன்றாவது செமஸ்டரில் எல்லாம் படித்து நான்காவது செமஸ்டர் செல்லும்போது ஆல் கிளியரா போகனும்டா, காசு செலவு பண்ணி கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க நாம இப்படி இருக்கக்கூடாது என உறுதிமொழியெல்லாம் எடுத்துக்கொண்டு சாப்ப்பிடுவதற்காக நகரில் பிரபலமான அபிராமி சைவ ஹோட்டலுக்குச்சென்றோம்.

ஆர்டர் பண்ணிய நெய் தோசை ஒன்று கூம்பு வடிவில் நிறுத்தி மேசை மேல் வைத்தார் அபிராமி ஊழியர், சென்னைக்காரன் உடனடியாக அதனை எடுத்து தன் தலையில் மாட்டிக்கொண்டு மாப்பிள்ளை நான் பிஸிக்ஸ்ல பெயிலா போனதுக்கு எனக்கு கிரீடம் கொடுத்துருக்காங்கடான்னா அழ ஆரம்பிச்சிட்டான், அப்படியே படியிறங்கி ரோட்டுக்கும் வந்து விட்டான். இதுல கொடுமை என்னான்னா அவன் பிஸிக்ஸ் மட்டும்தான் பெயிலு, மத்தவனுக்கெல்லாம் நாலுக்கு மேற்பட்ட நெய்தோசை வேணும் கிரீடம் வைக்க.

ஒருவழியாக சாப்பிட்டு பில் செட்டில் பண்ணி அபிராமியில் இருந்து படியிறங்கும்போது ஓல்ட் காஸ்க் , காரைக்குடியானின் வயிற்றில் டகால்டி வேலையைக்காண்பித்தது, படியிலேயே வாந்தி எடுத்தான், சுருண்டு விழுந்தான். பின்னர் வாடகைக்கார் எடுத்து அவனை ஹாஸ்டல் கொண்டு போய் சேர்த்த எண்ணிக்கை ஒன்றில் ஆரம்பம் ஆகியது இந்நன்னாளில்.

இந்த சம்பவத்தில் வந்த யாரும் வாழ்க்கையில் வழுக்கிவிடவில்லை, குடிகாரர்களாகவும் இல்லை. ஒருவனைத்தவிர, அவன் மிகவும் நல்லவன் ஆனால் சவால்களை சந்திக்க பயந்து தேர்வு எழுதவே எழுதாதவன். களவும் கற்று மற என்ற தமிழ்ப்பழமொழிக்கேற்ப அடி எடுத்து வைக்க துணிச்சல் இல்லாதவன் நடக்கமுடியாது, என்ற உண்மையை எங்களுக்கு உணர்த்தியவன்.இந்த பதிவில் அவன் குறிப்பிடப்படவும் இல்லை, ஆனாலும் என்றாவது ஒருநாள் அவனுக்கும் துணிச்சல் வரலாம்.

பி:கு: இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுயநினைவில் இல்லாத காரணத்தால் சரியாக ஆவணப்படுத்த முடியவில்லை, இருந்தாலும் இந்த வரலாற்று நிகழ்வு பின்வரும் தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஜக்கம்மா இட்ட கட்டளையால் இந்த பதிவு.

உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...

உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...

இடம் : சரவணா மேன்சன், திருவல்லிக்கேணி.

காலையில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது அறைக்கதவை யாரோ தட்டுகிறார்கள், திறந்து பார்த்தேன் ஊரிலிருந்து அருள் வந்திருந்தான்.அருள் என்னைவிட ஐந்து வயது பெரியவன் ஆனாலும் வாடா போடா என்றுதான் அழைத்துக்கொள்வோம்.

அருள்: என்னடா வாத்தி மவனே, எப்படி இருக்கே, நான் ஒரு வேலையா வந்தேன், எங்கண்ணன் மச்சான் துபாய்லேர்ந்து வந்திருக்கான் அசோக் நகர்ல ஒரு வீடு வருது வாங்கப்போறான், அதுக்கு உதவியா என்ன கூப்பிட்டு வந்திருக்கான்.

நான் : சரி சரி இங்கே தங்கிக்க, நான் ஆபிஸ் போயிட்டு சாயந்தரம் வரேன்.

அருள்: சரி போயிட்டு வா, நாங்களும் வேலையை முடிச்சிட்டு வரோம்.

----

அன்றிரவு:

அருள்: ஊர்லேந்து வந்திருக்கேன், என்னைக்கவனிடா, பணத்தை எடுத்துட்டு வாடா போய் பார்ல ஒரு ரவுண்டு உட்டுட்டு அப்படியே டிபன் பண்ணிட்டு வருவோம்.

நான்: பொறுடா ATM கார்ட எடுத்துக்கிட்டு வரேன்.

அருள் : நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ATM கார்டு , செக் புக்கு, எனக்கு தெரிஞ்சு உங்க ஊர்ல டவுசர் போடாம திரிஞ்சவன். எல்லாம் நேரம். நானும் உன்னை மாதிரி ஆகிருப்பேன், உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது.

நான்: எங்கப்பா எங்கடா உன் படிப்ப கெடுத்தாரு?

அருள்: ஆறாவது முனியங்கோயில் மந்தை பள்ளிக்கூடத்திலதான், சேத்தாங்க, நீ அப்ப ஒன்னாவது படிச்சிருப்ப,பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச முதநாளே உங்கூரு பயலுகளுக்கும் எங்கூரு பயலுகளுக்கும் தகறாறு ஆகிப்போச்சு, புதுசா சாமண்றி பாக்ஸ் வாங்கி கொடுத்திருந்தாங்க, அதுலேந்து காம்பஸ எடுத்து உங்கூரு பயலுவ சைக்கிள் எல்லாம் பஞ்சர் ஆக்கிப்புட்டேன், பத்து பாஞ்சு பேரு சேந்து என்னை மடக்கி முடிச்சி உங்கப்பன்கிட்ட ஒப்படைக்க வெச்சிருந்தாங்க, உங்கப்பன் பேர கேட்டாலே ஏரியாவிலே எல்லாரும் வணக்கம் சொல்வாங்க, மாட்டினா சங்குதான்னு எப்படியோ கழண்டு ஓடிட்டேன். அப்படியே கொண்டு போய் தஞ்சாவூர் ஆண்டனிஸ் ஸ்கூல்ல சேத்துட்டாங்க.

நான்: ஆண்டனிஸ் நல்ல ஸ்கூல்தானடா?

அருள்: அது என்னமோ சரிதான்,அதுனாலதான் அங்க சேத்தா அருள் வரும்னு சேத்தாங்க , ஆனா ஆண்டனிஸுக்கும் அருள் தியேட்டருக்கு ஒரே பஸ் ஸ்டாப் , இந்தப்பக்கம் ஆண்டனீஸ் அந்தப்பக்கம் அருள், ஆண்டனீஸ் போய்தான் அருள் வரனுமா என்னான்னு நான் நேரா அருளுக்கே போயிட்டேன், இரண்டு வருசம் ஆறாவது, ரெண்டு வருசம் ஏழாவது படிச்சேன், போதும்னு அழைச்சிட்டு வந்து முட்டி ஏர் அடிக்க விட்டுட்டாங்க. இதே தஞ்சாவூர் போகாம முனியங்கோயில்லயே படிச்சிருந்தா எப்படியும் பத்தாவது வரைக்குமாவது படிச்சிருப்பேன், மேலேயும் படிச்சிருக்கலாம் . இப்பக்கூட உங்கப்பன பாத்தா சொல்லுவேன் உன்னாலதான் நான் படிக்கலைன்னு அவரும் சிரிச்சிக்குவாரு நானும் சிரிச்சிக்குவேன்.

--------

ஒரு வழியாக ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திருவல்லிக்கேணி வீதிகளில் நடந்து வந்துகொண்டிருந்தோம், வரும் வழியெல்லாம் தஞ்சாவூர்காரங்கன்னா சும்மாவா அப்படி இப்படி என போதை தலைக்கேறியதால் வேகமாக கத்தியபடி வந்தான். எதிரில் ஒரு போலிஸ்காரர் வந்தார். சட்டென சப்த நாடியும் ஒடுங்கி நடந்து வந்தான்.

நான்: ஏண்டா பெரிசா பேசுன, போலிஸ பாத்தவுடன் வடிவேலு கணக்கா ஒதுங்கிட்ட..

அருள்: போலிஸ்காரங்ககிட்ட மட்டும் வாலாட்டப்புடாது, முதல்ல எப்படியும் லத்தி எடுத்து முட்டிக்கு முட்டி தட்டிருவான், அதுக்கப்புறம்தான், நம்ம பவரை காமிச்சி நம்மூரு காரங்கள கூப்பிட்டு வெளிய வந்திரலாம், ஆனா அடி வாங்கினது வாங்கினதுதானே, அதான் ஒதுங்கிப்போயிரனும். அதுவும் இன்னைக்கு அந்த வீடு முடிச்சு கொடுத்ததுக்கு ஒரு லட்சம் கமிசன் கெடச்சது அது வேற பாக்கெட்ல இருக்கு.

நான் : ஒரு லட்சம் காசு வெச்சிக்கிட்டு என் காசுல சரக்கு வாங்கி குடிச்சிட்டு வர, நியாயமா பாத்தா நீதானடா செலவழிக்கனும் ?

அருள் : அதுனால நான் பிஸினஸ் பண்றேன், நீ இன்னும் உங்கப்பன மாதிரி கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்க, அதுக்கெல்லாம் ஒரு சூட்சுமம் தெரியனும்டா? நீ எதுவும் இடம் வாங்கிறதுன்னா சொல்லு கமிசன் இல்லாம முடிச்சு தரேன்.

Thursday, November 19, 2009

தோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.

தோதுமாது உத்திராபதி, கிராமத்தின் வளர்ச்சியின் அக்கறை கொண்ட அந்தக்கால இளைஞன். அதுவும் தன் ஊர் பள்ளி வளர்ச்சி பெண்கள் கல்வியில் அக்கறை கொண்டவர். இவருக்கு தோதுமாது உத்திராபதி என்ற பெயர் வந்ததன் காரணம் அவருடைய சுருட்டுந்தந்தை, உரையாடிக்கொண்டிருக்கும் போது இந்தக்காரியத்தை இப்படி தோதுமாதா பண்ணினா நல்லபடியா நடக்கும் என்று அறிவுரை கூறியதால் தோதுமாது என்ற பட்டப்பெயரை பெற்றார், அவர் இறந்தவுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி அவர் மகனுக்கு தோதுமாது என்ற பெயர் கிடைத்தது.

மாதுதோது மருதன், பெயரே சொல்லும் காரணத்தை, இவர் ஒரு தமிழாசிரியர், தமிழ்ப்புலமையில் இவரை விஞ்ச அந்த வட்டாரத்தில் கண்டிப்பாக ஆசிரியர் கிடையாது, பாடம் நடத்தும் போது அத்தனை பேரையும் கட்டிப்போடும் வசீகரம், திருமணமான இளைஞன். இவர் பாடம் நடத்தினால் அதனைக்கேட்க பக்கத்து வகுப்பு மாணவர்களின் காது கூட இவர் வகுப்பில் இருக்கும்.

இவர் மாணவிகளிடம் குற்றாலக்குறவஞ்சி நடத்துவது போல் சற்றே அதிகமான குறுந்தொகை நகைச்சுவைகளைச்சொல்லி மாணவிகளை கணக்குப்பண்ண முயல்கிறார் என்று சிறிது சிறிதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இவைகள் அனைத்தும் மாணவிகளால் தோதுமாது உத்திராபதியிடம் பள்ளித்தலைமையையும் தாண்டி குற்றச்சாட்டாக சென்றது. ஆனாலும் தமிழாசிரியர் குறுந்தொகை நடத்தும்போது ஏதாவது தலைவன், தலைவி என்று சொல்லியிருப்பார், நீங்க தோதுமாதா நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.

ஆனாலும் கிராமத்துப்பெண்கள் அவரை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லி அவரை விசாரிக்கச்சொல்லினர். தோதுமாது உத்திராபதியும் பள்ளித்தலைமைக்கு என்ன காரணத்திற்கு பள்ளிக்கு வந்திருக்கிறேன் என சொல்லாமல் சாதாரணமாக வந்து அவருடைய வகுப்பை கவனித்தார்.

வகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

தமிழ் எவ்வளவு செம்மையான மொழி பாருங்கள், ஒருவன் தமிழைத்தவறாகப்படித்தால் என்ன ஆகும் பாருங்கள்.

"சோலைக்குள் பாம்பு நுழைந்தது"

இதனைப்படிக்கும் போது சுப்பன் தவறி, சோலையில் உள்ள காலை மறந்து, சேலைக்குள் பாம்பு நுழைந்தது என்று படித்துவிட்டான், ஆசிரியர் உடனே சுப்பனிடம் சொன்னார் தவறாகப்படிக்கிறாய் மீண்டும் படி என்றார்.

சுப்பனும் இப்போது இப்படி படித்தான், பாம்பிற்கு கால் கிடையாது ஆனால் பாம்பு என்ற எழுத்தில் உள்ள பா விற்கு கால் உள்ளதை மறந்து

"சேலைக்குள்..

என்று முடிக்குமுன் தோதுமாது உள்ளே நுழைந்து மருதனை நான்கு வாங்கு வாங்கியிருந்தார். இன்றோடு பள்ளியை விட்டு ஓடிப்போய்விடு என்று மீண்டும் மீண்டும் வெறி வந்தவாறு அடித்து துரத்திவிட்டார்.

அதன் பின்னர் தமிழாசிரியர் மருதனும் வேறு எங்கோ மாற்றலாகி சென்றுவிட்டார், தோதுமாது என்று பெயர் இருந்தாலும் தோதுமாதாக இருக்கத்தெரியாத உத்திராபதியும் ஏதோ ஒரு காரணத்திற்காக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மருதனும் அளவுக்கு மீறிய மதுவினால் ஐந்து வருடத்திற்குள் மாண்டு போனார். இந்த இரண்டு பேரும் திறமைசாலிகளே, இந்த தமிழாசிரியரிடம் படிக்காவிடினும் அவர் புகழ் மற்ற மாணவர்கள் பேச நிறையக்கேட்டிருக்கிறேன். சாதித்திருக்கவேண்டியவர்கள், இருவரும் தத்தம் துறையில் இன்னும் பேசப்படக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டியவர்கள். ஆளுக்கு ஒரு பலவீனம், இந்தப்பலவீனங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள கூடியனவே, ஆனாலும் இவைகள் இவர்களை உயிர்களை இடையிலேயே பறித்ததுவிட்டது.

Wednesday, November 18, 2009

தொவையல் : சமையல் மருத்துவமனை, பச்சைப்பயிறு அடை.

தொவையல் 1: சமீப காலமாக வேலைப்பளுவால் அதிகம் பதிவெழுத முடிவதில்லை, அதனால் கு.ஜ.மு.க வின் கொள்கைகளின் மிக முக்கியமானதும், கட்சியின் அடிப்படை உரிமையுமான வாரிசுப்பெருமை பேசமுடியவில்லை. கடந்த சில மாதங்களாக வாரிசும் கு.ஜ.மு.கவிற்கு உழைக்கும் நோக்கத்தில் ஒரு அட்டைப்பெட்டி மேல் ஏறி கீழே விழுந்து இடது கையை ஒடித்துக்கொண்டார். அழுதுகொண்டே வந்தார், ஏதோ சாதாரண அடி என நினைத்தால் வலியால் மிகவும் துடித்துப்போனார். முழங்கைப்பகுதியில் வீங்கியும் போனது, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் பொதுக்குழு கூடி முடிவெடுத்து, பொதுக்குழு பரிந்துரைத்தபடி அருகில் உள்ள குழந்தைகள் மருத்துமனைக்கு அழைத்து சென்றேன். அந்த மருத்துவமனையின் பெயர் Cook Childeren's Hospital. அதைப்பார்த்து என் மகள் கேட்டது அப்பா மருத்துவமனை எப்படிப்பா சமைக்கும். It is a funny name அப்படின்னாள். ஒரு வழியாக x-ray எடுத்து எலும்பு முறிவு கண்டுபிடித்து கட்டுபோட்டு , ஆறு வாரம் கழித்து பிரித்தாகிவிட்டது, இன்னும் மூன்று நான்கு வாரங்களில் கையின் முழுமையான இயக்கம் கிடைத்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள்.

பெல்ட் லைன் ரோடு என்ற பெயர் உள்ள சாலையில் காரில் சென்று கொண்டிருந்தோம், அப்போது கேட்டது

ஏம்பா பெல்ட் லைன் ரோட்ல கார்ல போகும் போது கண்டிப்பா பெல்ட் போட்டு இருக்கனுமா? அதுனாலதான் பெல்ட்லைன் ரோடுன்னு பேரு வெச்சாங்களா?

இல்லம்மா எந்த ரோட்டிலும் காரில் போகும் போது பெல்ட் போடனும்.

அப்ப ஏன் இந்த ரோட்டிற்கு மட்டும் பெல்ட் லைன் ரோடுன்னு பேரு வெச்சிருக்காங்க?

???அது டாலஸ சுத்தி பெல்ட் மாதிரி போறதினால அப்படி வெச்சிருக்காங்க.

அப்பா உங்களுக்கு மியூசிக்ல தாளம்னா என்ன தெரியுமா? ச,ரி,க,ம,த பாஆஆஆஆஆ , தாளம் (நோட்ஸல ஏதோ கமா வந்தா)வந்தா பாஆஆஆஆ அப்படின்னு சொல்லனும், (சரியா எனக்கு புரியலை, அதுனால தவறா கூட எழுதிருக்கலாம்)நீங்க மியூசிக் கிளாஸ் போகும்போது சொல்லிக்கொடுத்தாங்களா?

நான் மியூசிக் கிளாஸ் எல்லாம் போகலை? எனக்கு பாட்டெல்லாம் தெரியாது?

அப்புறம் எப்படிப்பா நீங்க வீட்ல தெலுகு பாட்டு பாடறீங்க? ஒரு தெலுகுப்பாட்டு பாடுங்க

ராஜாலூ கைலூ வெச்சுலூ, சத்யமு
ராங்குடு போனுடு,
பணமு எண்டுலு ஸ்டாக்கூ எண்டுலு
எல்லாம் என்னுலூ.
இன்வெஸ்டருக்கு துண்டுலு.

தொவையல் 2:

இயக்குனர் பதிவர் ஷண்முகப்பிரியன் அவர்களின் ஒரு பதிவில் பச்சைப்பயிறு அடை சொல்லியிருந்தார், அடை செய்ய பச்சைப்பயிறு ஆறு மாதம் முன்னரே வாங்கியாச்சு, இப்போதுதான் அடை செய்ய நேரம் கிடைத்தது.

1. பாசிப்பயிறு ஊறவைத்து முளைகட்டும் வரை வெளியில் வைத்திருக்கவேண்டும்.

முதல் நாள் செய்முறை:

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தைவிட இரு மடங்கு, வெங்காயம் போலவே வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: ஷண்முகப்பிரியன் சொன்னது போல் ஆம்லெட் மாதிரி இருந்தது.

இரண்டாம் நாள் செய்முறை:(முட்டைகோஸ் வீட்டில் இல்லை, ஆனால் பிராக்களி, ஸ்பினாச்சும் இருந்தார்கள்)

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, பிராக்களி, ஸ்பினாச் கீரை,சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: சற்றே வழவழப்புடன் இருந்தது, எனக்குபிடித்தது, ஆனால் வீட்டிற்கு இரண்டு நண்பர்கள் வந்தார்கள், சாப்பிடச்சொன்னேன், இனி அடை செய்தால் முன்னமே சொல்லிவிடுங்கள் நாங்கள் அடை செய்யாத பிரிதொரு நாளில் வருகிறோம் என்றார்கள்.

மூன்றாம் நாள் செய்முறை:(மீண்டும் முட்டைகோஸ், கூடுதலாக கொள்ளு, சீரகம் )

பாசிப்பயிருடன் கொள்ளும் கலந்து ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கவும்.

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, சீரகம்,சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தைவிட இரு மடங்கு, வெங்காயம் போலவே வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: வீட்டில் அனைத்து உறுப்பினர்களும் சாப்பிட்டார்கள்:)

உங்கள் விருப்பத்திற்ப உண்ண முடிந்த எதையும் சேர்த்து அரைக்கலாம், கடைசியில் வேகவைத்து உண்ணலாம். இதுதான் அடை ரெசிப்பீ

மேலே சொல்லப்பட்ட அடைகளின் மருத்துவ பலன்கள் எல்லாம் எனக்குத்தெரியாது, ஆனா தூள் படத்துல நடிச்ச பாட்டியின் கிராமத்து சமையலில் அரை லிட்டர் நல்லெண்ணெய், நெய் எல்லாம் சேத்து நல்லா கொழுப்போட உள்ள ஆட்டுகறிய சமைச்சுப்புட்டு மேலுக்கு நல்லதுன்னு சொல்ற மாதிரி இதுவும் மேலுக்கு நல்லது.

சிலருக்கு அடை என்ற பெயர் ரொம்பப்பழசா இருக்கிறதால பிடிக்காம போகலாம், அதனால் அவங்க இத சிறிது மாற்றத்தோட பீட்சா மாதிரி மாடர்னா செஞ்சும் சாப்பிடலாம்.

இதுவரை சேர்த்தவைகளோடு, பாசிப்பயியிறு பிரட் மேலே ஒரு கரண்டி சீஸ் போடவும், ரெட் சாஸ் அப்படின்னு டப்பாவில விக்கிறத வாங்கி ஒரு லேயர் ஊத்தவும், அதற்கு மேல் பெப்பரோனியோ, ரெட் மீட்டோ இல்லை சிக்கனோ, காய்கறிகளோ போட்டுக்கலாம்.
இதுக்கு நீங்க பச்சாஸ்ஸா(பச்சைப்பயிறுன்னு சொல்றவங்க) அல்லது பாசிஸ்ஸா(பாசிப்பயிறுன்னு சொல்றவங்க) என்று மாடர்னாக பெயர் வைத்தும் சாப்பிடலாம்.

சீஸ் போடவும் சாஸ் போடவும் மீட் போடவும் ஆகியன தொப்பை போடவும் உதவும்.

Wednesday, November 11, 2009

நாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.

சமீபத்தில் நாடோடிகள், பொக்கிஷம் மற்றுன் ஷ்ரேயாவின் சேவையில்
உருவான கந்தசாமி பார்த்தேன்.

நாடோடிகள்.

நாடோடிகள் படம் இயல்பான கிராமத்து சூழ்நிலைகளில் எடுக்கபபட்டிருந்தது, மொட்டைமாடியில் வெயில் வந்த பிறகும் துவைக்காத போர்வையின் மணத்தில் தூங்கும் வெட்டி கிராமத்து இளைஞர்கள், திருமணம் செய்ய ஆசைப்படும் ஒத்துக்கொள்ளக்கூடிய அளவில் உள்ள சினிமாத்தனமான குறும்புகள் கொண்ட சொந்தக்காரப்பெண், டிவி சீரியல் பார்வை பார்க்கும் சித்தி , உண்மையாகவே தவிக்கும் அப்பன் மற்றும் முதல் தாரத்தின் மகன். கொஞ்சம் அதிகம் சினிமாத்தனம் உள்ள, மகனின் காதலுக்கு உதவும் ஸ்கூட்டர் அப்பன்.

தன் காதலுக்கு உதவி தேடி ஊருக்கு வரும் நண்பனை கிணற்றில் இருந்து காப்பாற்றும் பெஞ்சு போட்டு தண்ணியை எடுக்கும் எங்கேயே பார்த்த அந்தக்கால நிகழ்வை படமாக்கியது. நண்பரின் காதலுக்கு உதவுவது, நண்பரின் நண்பனுக்கு உதவுவது எல்லாம் நன்று.

இதற்குப்பிறகு உச்சகட்ட ஹீரோத்தனம் பொண்ணு தூக்க காலை ஒடிச்சிக்கிறாங்க, காது செவுடாப்போகுது , கண்ணுக்குருடா போகுது, இதெல்லாம் பின்னால் இவர்களால் சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் கருத்து வேறுபாட்டால் பிரியப்போகிறார்கள் என்ற சொத்தைக்கதைக்கு சேர்க்கப்பட்ட ஓவர் பில்டப்.

கருத்து வேறுபட்டால் பிரிந்தவர்களை, நண்பர்கள் நாங்கள் காதலுக்காக (நட்பு அல்ல)சேர்த்து வெச்சோம் அதனாலே நீங்க சேர்ந்துதான் இருக்கனும் அப்படிங்கிறது எந்த விதத்தில நியாயம். கருத்து வேறுபாடு வந்தால் அந்தக்கருத்து வேறுபாட்டின் காரணம் கண்டு களைய நண்பர்கள், சமூகம் அறிவுரை கூறலாம், ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் ஒத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் பிரித்து வைக்கவும் நண்பர்கள் உதவலாம் அது நட்பு.

காதல் புனிதமானது காதலிச்சா எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் சேர்ந்து வாழனும், யாரு காதலிச்சாலும் தெரியாதவனா இருந்தாலும் உதவனும், உதைவாங்கனும் அப்படிங்கிறது என்ன கலாச்சாரம், கருத்துடா இது, காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் சேர்த்து வைத்தவர்கள் தீர்மானிக்கமுடியாது, அதை அந்த இருவர் மட்டுமே அவர்கள் வாழும்/சார்ந்த சூழ்நிலை, சமூக கலாச்சார அழுத்தங்களை வைத்து தீர்மானிக்கமுடியும்.

99 வருட குத்தைகை மாதிரி நாங்க சேத்து வெச்சா கடைசி வரைக்கும் சேர்ந்துதான் இருக்கனும்னு சொல்ற இந்தக்குப்பைக்கருத்தை சொல்லும் படத்தை என்னால ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

யாரோ தெரியாதவனுக்கு காதலுக்காக உதவி செய்யப்போகிறேன் என்று கிளம்பினால் என் பார்வையில் அது முட்டாள்தனம். நட்பு என்பது நண்பர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அவர்களின் தேவை எதுவோ அதற்குத்தான் உதவுவார்கள் அது சேர்த்தலோ, அறிவுரையோ, பிரிதலோ எதுவாகவும் இருக்கலாம் என் கருத்து.

படம் முடியும்போது சசிகுமார், யாரோ தெரியாதவரின் காதலுக்காக இருங்க நாங்களும் வரோம் என்று சொல்வார், இவர் நிஜமாக போகவேண்டிய இடம் மனநல மருத்துவமனைக்கு.

மொத்ததில் நல்லகளத்தில் சொல்லப்பட்ட குப்பைக்கருத்து.

பொக்கிஷம்.

எம்ஜியார் மாதிரி படுத்துக்கொண்டே பார்த்தேன், தியேட்டரில் சென்று பார்த்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன் படம் எப்படி என்று, அவன் லெட்டர் எழுதி,எழுதி அவன் கையெழுத்து நல்லா ஆயிடுச்சுன்னார். இனி படம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

எழுபதுகளில் நடந்தவை என்பதால் அந்தக்காலத்துக்கு சென்று பார்ப்பது சற்று சிரமமே, எழுபதாம் ஆண்டில் 25 வயது இளைஞன் இன்றைக்கு 65 வயது ஆகியிருக்கும், அதற்காக 65 வயது ஆளையேவா நடிக்கசொல்றது, அய்யா சேரன் உங்களைப்பார்த்தா ஏதோ ஒரு படத்திலே அம்மா நான் காலேஜ் போயிட்டு வரேன்னு எம்ஜியார் சொன்னதுதான் ஞாபகம் வருது. உங்க படத்துல பிரபலமான ஹீரோக்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு புரியுது , இந்தப்படத்தில் நீங்க என்னை ஹீரோவா போட்டிருக்கலாம், லெட்டர் எழுதி கையெழுத்தாவது எனக்கு நல்லா ஆகிருக்கும் , படம் பார்த்தவர்களும் இளைஞனின் வசீகரத்தை ஹீரோயினோடு சேர்த்து ரசித்திருப்பார்கள். கேரக்டரோட நானும் ஒன்றிப்போய் நல்லா பண்ணிருப்பேன். மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து உட்காரவும் வைக்கிறது படம், ஏதோ ஒரு கொரியப்படத்தில் இருந்து சுட்ட கதையாமே இது அப்படியா? கொஞ்சம் நீளம் குறைப்பு நிஜமாகவே ஒரு இளைஞன் நடித்திருந்தால் சேரன் என்ற நடிகருக்காக செய்யப்பட்ட சமாதானங்கள் இல்லாமல் இன்னும் நன்றாக படத்தை எடுத்திருக்கலாம்,நன்றாக ஓடியிருக்கக்கூடும்.

படத்தில் நான்/ என்னைப்போன்றவர் மட்டும் ரசிக்கக்கூடிய ஒன்று உண்டு, அதற்காக இன்னொரு முறை படுத்துக்கொண்டே பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

கந்தசாமி

இந்தப்படத்தை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, ஷ்ரேயாவை அரைகுறையாய் ஆங்காங்கே பார்த்ததோடு சரி, அல்லேக்ரா என்ற பாடல் என் மகளுக்கு பிடித்துப்போனதால் , திரும்பத்திரும்ப அதேபாடல்தான் ஓடுகிறது, அந்தப்பாடலின் இறுதியில் 'ஷேக் யுவர் பூட்டி' என்று தொடர்ந்தாற்போல் வருகிறது, இதையே 'ஆட்டு உன் சூத்தை' என்று தமிழில் பாடலாக எழுதியிருந்தால் சென்சார் அனுமதித்திருக்குமா? இதுக்கு பேருதான் ஆங்கில மறை காயாக சொல்வதா?

பி:கு: உண்மைத்தமிழன் மாதிரி நெடிய பதிவு எழுதும் முயற்சி இது.

Monday, November 9, 2009

வில்லன்,ரசிகர்,ஹீரோ, கல்லூரி நண்பர் சந்திப்பு.

கடந்த அக்டோபர் 24 அன்று , நசரேயனின் நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி கடலில் முத்து தவிர அனைத்தும் எடுத்தவருமான வில்லன் அவர்கள், வில்லாதி வில்லி(பெயர் உதவி நசரேயன்), மற்றும் மகளுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதிலிருந்து நசரேயன் சினிமா எடுக்க ஆசைப்படுவது நன்றாக தெரிந்தது, அதில் வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ஆசையிலேயே வில்லன் என்ற பெயரை பதிவுலகத்தில் பின்னூட்டமிட வைத்துக்கொண்டாராம்.

என்னுடைய பதிவுகள் நசரேயன் பதிவுகள் எல்லாம் படிப்பீர்களா என்று வில்லியிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை நான் நசரேயனின் மனைவியின் நல்ல நண்பர், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போனில் பேசிக்கொண்டிருப்போம், அதனால் கண்ட குப்பைகளை படிக்க நேரமில்லை என்றார்.

வில்லன் அதிகம் டீ குடிக்கிறார், என்னுடைய மகளுக்கு பாட்டு கிளாஸ் இருந்ததால், எங்க வீட்டம்மா மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், நான் டீ போட்டு தருகிறேன் என்றேன், வில்லி அவர்கள் நான் நல்ல முறையில் டீ போட்டுத்தருகிறேன் என்றார்.அவர் விருப்பத்தை மீறமுடியவில்லை, அவரே இஞ்சியெல்லாம் போட்டு ஒரு அண்டாவில் டீ தயாரித்தார், நான் ஒரு டம்ளரும் வில்லன் அவர்கள் மூன்று டம்ளரும் குடித்தோம். இதற்கிடையே வெளியே சென்றிருந்த மகளும், அம்மிணியும் வந்துவிட்டனர்.

பரவாயில்லையே டீ போட்டு வெச்சிருக்கீங்க என்றபடியே அண்டாவில் இருந்து ஒரு டம்ளர் டீயை எடுத்துக்கொண்டார், குடிக்கும் முன்னர் டீ போட்டது வில்லி எனச்சொல்லிவிட்டேன். டீ நல்லா இல்லைன்னு சொல்ல வாய்ப்பில்லை என்பதால், டீ சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லிட்டாங்க. அண்டாவில் மிச்சமிருந்த டீயை வில்லனும் நானும் மீண்டும் சுடவைத்து குடித்தோம்.

இடையில் நசரேயனுக்கு வில்லன் போன் பண்ணி படத்துக்கு ஹீரோ கிடைத்துவிட்ட செய்தியை சொன்னார்.நசரேயன் டைரக்டரானால் விரைவில் உங்கள் அபிமான ஹீரோவை வெள்ளித்திரையில் காணலாம்.கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இப்படியே போனது, இந்த நேரத்தில் வில்லனின் மகள் எந்த சலனமும் இல்லாமல் டோராவை பார்த்துக்கொண்டிருந்தார்.

போனில் பேசும்போது நசரேயன் அவர் வீட்டுக்கு வரச்சொன்னார், வரும்போது நிறைய துண்டு வாங்கிவரச்சொல்லி இருக்கிறார்,வீட்டில் இருந்த துண்டு, அவர் ஊர் கடைகளில் உள்ள துண்டுகளையெல்லாம் யாருக்கோ எதற்கோ போட்டு விட்டாராம்.

சந்திப்பில் நடந்தவைகளை 95% மிகைப்படுத்தி எழுதி பத்திரிகை தருமத்தை காப்பாற்றியிருக்கிறேன்.

இரண்டாவது சந்திப்பு.

கல்லூரி நண்பன் சென்னையில் வசிக்கிறான், ஹீஸ்டனில் ஒரு வருடம் ஆன்சைட் அசைன்மெண்டுக்காக வந்திருக்கிறார், இந்தவாரம் டாலஸூக்கு மனைவி, மற்றும் குழந்தையுடன் வந்திருந்தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறோம். வெள்ளிக்கிழமை காலையிலேயே சொல்லிவிட்டான் சரக்கு வாங்கி வைக்கச்சொல்லி, என் புண்ணியத்துல நீயும் உன் புண்ணியத்துல நானும் அடிக்கவேண்டியதுதான், உன் பேர சொல்லி மனைவிகிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்னு சொன்னான். வெள்ளிக்கிழமை மாலை வேறு வேலைகளால் குறித்த நேரத்தில் அவன் வாங்கி வைக்கச்சொன்ன ஹாட் வாங்க முடியவில்லை. இதற்கிடையில் சரக்கு வாங்கியாச்சா என உறுதிப்படுத்திக்கொள்ள நண்பன் போன் பண்ணினான், இல்லடா இன்னும் சரக்கு வாங்கவில்லை என்றேன். டேய் எப்படியாவது வாங்கி வெச்சிருடா, இன்னொரு ஃபிரண்ட் வேற வராப்ல நைட்டே ஊத்திருவோம்னான். நான் இருக்கும் ஊரில் ஹாட் லிக்கர் விற்க தடையாம் நல்லவனான எனக்கு இது தெரியாது,மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கரோனாவை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நடுச்சாமத்தில் வந்து சேர்ந்தான் நண்பன், அவனுடன் வந்த அவன் மகனை பார்த்தவுடன் எனக்கு பயங்கர அதிர்ச்சி, என் வீட்டம்மா கேட்டபோது அவனுக்கு பெண் குழந்தை என்று சொல்லியிருந்தேன். அவர்களிடமும் சிரித்துக்கொண்டே சொன்னேன். நண்பனின் மனைவி உங்க பெண்ணுக்கு என்ன வயசு எனக்கேட்டார், ஆறு வயது என்றேன். ஆறா இவரு நாலுன்னுல்ல சொன்னாரு, ஆனாலும் பரவாயில்லை ஆண் பிள்ளைன்னு சொல்லலை அப்படின்னார்.

அடுத்த நாள் பகல் பொழுது வீட்டில் சென்றது, அதே நாளில் ஹாலோயின் திருவிழாவும் வந்ததால் , வீட்டிற்கு கேண்டி வாங்க நிறைய குழந்தைகள் வந்தனர், என் மகளும் , நண்பரின் மகனும் கேண்டி வாங்க சென்றுவிட்டனர். நான் எங்களுக்கான கேன் டீ வாங்க, டாலஸில் இருக்கும் குடி குடி (goodygoody) என்ற கடைக்கு சென்று சரக்கு வாங்கினேன், சரக்கு விற்பவர் எனக்கு 21 வயது ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள அடையாள என்னிடம் மட்டும் கேட்டார், என்னுடன் வந்த திருமணம் ஆகாத என் நண்பரின் நண்பனிடம் கேட்கவில்லை, நான் என்னுடைய அடையாள அட்டையை காண்பித்து 23 வயது ஆன விசயத்தை உறுதிப்படித்தியபின்னரே சரக்கு விற்றார்.

கொஞ்சமாக குடித்தோம், அப்போது சில உண்மைகள் வெளிவந்தது, என் நண்பர் பர்மிசன் வாங்காமல் நன்றாக திட்டு வாங்கியிருக்கிறான் என்று நண்பரின் நண்பர் சொன்னார். அப்படியே நீங்க பிளாக் படிப்பீங்களா, உங்க கம்பியூட்டர்ல தமிழ்மணம், பிளாக்ஸ்பாட் உரல் மட்டும்தான் ஹிஸ்டரில இருக்குன்னு கேட்டார்.

ஆமாம் படிப்பேன் நான்கூட குடுகுடுப்பை என்ற பெயரில் பதிவு எழுதுகிறேன் என்றேன். ஓ நீங்கதான் குகுவா நான் உங்க பிளாக் படிப்பேன், வடிவேலு கமல்ஹாசன் உரையாடல் சூப்பர் அப்படின்னார். எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி, நான் இப்பொழுது நேரமின்மையால் அதிகம் படிப்பதுமில்லை எழுதுவதும் இல்லை என்றேன்.

இரவு முழுவதும் கள் ஊறும் கல்லூரி நினைவுகள் ,முதல் மின்னசோட்டாவில் ஏழு வருடம் முன் சந்திந்தது வரை நிறைய பேசினோம். நண்பன் இப்போது நல்ல நிலையில் உள்ளான், எனது மனைவி அவரைப்பற்றி ரொம்ப, ரொம்ப நல்லவரா இருக்கிறார் அப்படின்னு ஆச்சர்யப்பட்டார்.

கொஞ்சம் பின்னால் சென்னைக்கு செல்வோம், படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த காலம், இரவு பகலாக படிப்போம் ஆனால் இண்டர்வியூ அட்டெண்ட் செய்ய ஒருவித தயக்கம்,வேலை தேடும் முயற்சியே செய்யாமல் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக போயிருந்தது. அந்த நேரத்தில் இந்த நண்பன் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான், அவனாகவே என்னுடைய ரெஸ்யூம் உள்ள பிளாப்பி டிஸ்க்கை எடுத்து, பிரிண்ட் எடுத்து அவனுடைய கம்பெனியில் கொடுத்து இண்டர்வியூ ஏற்பாடு செய்தான், வேலையும் கிடைத்தது. அவன் இந்த உதவியை செய்யாமல் போயிருந்தால் நான் இண்டர்வியூ பயத்தில் எதுவும் செய்யாமல் வாழ்க்கையில் வீணாகப்போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.இவ்வளவு பெரிய உதவி செய்த அவனுக்கு நன்றி என்று வாய் திறந்து இதுவரை சொன்னதில்லை.

வேலை தேடுபவர்கள் முதலில் செய்யவேண்டிய கடமை, தேடும் துறையில் நல்ல அறிவுடன் இருக்கவேண்டும், அதற்கு இரவு பகல் பாராமல் உழைக்கத்தேவையிருந்தால், அதை செய்யவேண்டும், இண்டர்வியூ பயங்களை கண்டிப்பாக நீக்கவேண்டும். என் நண்பர் போன்ற நல்ல நண்பர்கள் எல்லாருக்கும் கிடைப்பார்களா என்று சொல்லமுடியாது, அப்படியே கிடைத்தாலும் அவர்களால் எந்த அளவுக்கு உதவமுடியும் என்றும் சொல்லமுடியாது.

பில்டிங்க் ஸ்டராங்க் பேஸ்மேண்ட் வீக்கு அப்படி என்ற நிலை இல்லாமல், முதலில் இலக்கு நோக்கிய தயாரிப்பு, இண்டர்வியூ, நட்பு வட்டாரத்தின் உதவி என்று இருந்தால் எந்த இலக்கும் சாத்தியமே.

Wednesday, October 28, 2009

பன்றி ஆராய்ச்சி உதவி தேவை.

உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி, கண்டுபிடித்த மருந்து வேலை செய்கிறதா என்ற ஆராய்ச்சி, டாமிபுளு பன்றிக்காய்ச்சல் வந்த அனைவருக்கும் தேவையா ? இல்லையா? பன்றி ஃபுளூ,மற்ற ஃபுளூவைவிட எந்தவிதத்தில் அபாயமானது என்ற ஆராய்ச்சி, பன்றி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் பன்றிக்காய்ச்சல் என்ற ஒன்றே இருந்திருக்காது என்ற தெளிவான ஆராய்ச்சி முடிவு.

இந்த மாதிரி ஆராய்ச்சிகளுக்கிடையில். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் காட்டுப்பகுதியில் வசிக்கிறார்.அவர் வீட்டு நாய் கொண்டுவந்த அவர் வீட்டருகே போட்ட இந்த மண்டை பன்றியினுடையதா என்ற சந்தேகத்தில் உள்ளார். இந்த முக்கியமான ஆராய்ச்சியை நாங்கள் இப்போது நடத்திக்கொண்டிருக்கிறோம்.






இந்த பன்றி மண்டை என் கைக்கெட்டும் தூரத்தில் அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக உள்ளது. இது உண்மையாகவே பன்றி மண்டையா என பன்றியும் தெரிந்த பதிவர்கள் பின்னூட்டத்தில் எங்கள் ஆராய்ச்சிக்கு உதவலாம்.

பி.கு: பெப்பரோனி பிஸ்ஸா சாப்பிடுபவர்கள் எல்லாம் பன்றியும் தெரிந்தவர் என்றால், அந்த வகையில் நானும் பன்றியும் தெரிந்தவர் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். ஆனாலும் இது பன்றி மண்டையா என எனக்கு தெரியவில்லை.

Thursday, October 22, 2009

இங்கிலாந்து ஆராய்ச்சி, துக்ளக் பதில்,பப்புவின் கேள்வி,பெண் தூதுவர்.

இங்கிலாந்து ஆராய்ச்சி, துக்ளக் பதில்,பப்புவின் கேள்வி,பெண் தூதுவர்.

கே: பெண்களால் ரகசியத்தை காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளதே ?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹா பாரதத்தில் இது மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருகிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது ஆரய்ச்சியின் முடிவு. இதை ஏற்காதவன் மூட நம்பிக்கையில் உழல்பவன்.

அப்படியா ? பெண்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் ? (மஞ்சள் இட்லிவடை )

சித்திரக்கூடத்தில் பப்புவும் அவங்கம்மாவும்.

அவ்வப்போது ஆன்லைனில் கேம்ஸ் விளையாட பப்புவை அனுமதிப்பதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தவள், "ஆச்சி, நான் பாயா கேர்லா" என்றாள்! அவ்விளையாட்டின் இடையில் 'oh boy' என்று வரும், விளையாட்டை பற்றி விளக்கும்போதோ அல்லது ஊக்குவிக்கும் போதோ அப்படிச் சொல்வதை கேட்டபின் அவளுக்கு வந்த சந்தேகமே அது!!

'நீ கேர்ல்'தான் - என்று சொன்னதும், 'ஏன் என்னை ஓ பாய் ன்னு சொல்லுது" என்றுக் கேட்டாள்.

Its time to change!!

இந்த இரண்டையும் படிக்கும்போது எனக்கு தோன்றியது, ரகசியம் காக்கத்தெரியாத பெண்களில் ஒருவரை ஏன் இறைவன் இதுவரை தூதுவராக்கவில்லை. அப்படி இறைவன் மனிதனுக்கு அனுப்பிய செய்தியை பெண்கள் மூலம் அனுப்பியிருந்தால் எந்த ரகசியமும் இல்லாமல் சரியாக அனைவரிடமும் சேர்த்திருப்பார்களோ?

அப்படி அனைவரிடமும் சேர்த்திருந்தால் 'oh boy' என்று கேம் விளையாட்டின் மூளையாக இருந்தவர் ஒரு பெண்ணாக இருந்து 'oh girl' என்று வடிவமைத்திருக்கலாமோ?

இறைவன் வரும் காலங்களில் ஒரு பெண் தூதுவரை அனுப்புவாரா?

பி:கு: நான் ஆணாதிக்கவாதியும் அல்ல பெண்ணுரிமை வாதியுமல்ல, ஒரு நல்ல சுயநலவாதி. நான் என் குடும்பம் என்று இருப்பவன், அதில் பெண்களும் அடக்கம்.

Tuesday, October 20, 2009

பின்விளைவுகள்

இடம்: கல்பாக்கம் அனுமின் நிலையம் கேண்டீன்:
நான் : கொஞ்சம் கூட்டு கூட கொடுப்பா
சர்வர் : எக்ஸ்ட்ரா கூட்டு ஒரு கப் 1 ரூபாய் சார்.

இடம் : வசந்தபவன்,அடையார்

நண்பனும், நானும் இருந்த காச வெச்சு அளவு சாப்பாடு வாங்கி,கூட்டு,பொறியல் மூனு,நாலு தடவை சாப்பிடலாம்னு இங்கே அடையார் வசந்தபவன் போய் சாப்புட்டோம். சாப்பிடும் போது கல்பாக்கத்தில கூட்டுக்கு காசு கேக்கற கதையை நண்பனிடம் சொல்லிட்டு இருந்தேன். எதிரில் இருந்த நபர் என்னது கூட்டுக்கு எக்ஸ்ட்ரா காசான்னாரு. நாங்களும் ஆமாமா தலைய ஆட்டி வெச்சோம்.
பாவம் மனுசன் முதல் தடவை வெச்ச கொஞ்ச கூட்டு பொறியல வெச்சே சாப்பிட்டு போயிட்டார்.

இடம் : ரத்னா கபே, திருவல்லிக்கேணி

வழக்கமா இரண்டு இட்லி வாங்கி நாலு குவளை சாம்பார் குடிக்க போறது. இன்னைக்கு நண்பனும், நானும் இட்லி வாங்கி சாப்பிடறப்போ, எதிரில் ஒருத்தர் வலது கையில வாட்ச் கட்டி இருந்தார். பார்க்கவும் கிட்டதட்ட நடிகர் ரவிச்சந்திரன்(இளமையான) மாதிரி இருந்தார். சரி அப்படியே ஓட்டலாம்னு முடிவு பண்ணி, சார் நீங்க நடிகர் ரவிச்சந்திரன் ரசிகரான்னு கேட்டேன்.
அதுக்கு அவர் ஏன் கேக்கறீங்கன்னு கேட்டார். இல்ல அவரு மாதிரியே வலது கையிலே வாட்ச் கட்டியிருக்கீங்களே அப்படின்னேன்.

அப்ப மனுசன் திட்ட ஆரம்பிச்சார் பாருங்க, உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிறதுனாலதாண்டா …….. வேண்டாம் விடுங்க. இன்னும் கொஞ்சம் நேரமானா சாம்பார எடுத்து தலையில ஊத்திருவாரு போல இருந்திச்சி, அப்படியே இட்லியையும் பாதில வெச்சுட்டு தப்பிச்சம்டா சாமின்னு பின்னங்கால் பிடறில அடிக்க ஒடி வந்தேன்.

இடம்: தொடக்கப்பள்ளி

தொடக்கப்பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் போது நான்தான் பிரேயர் நடத்துவேன். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட எனக்கு பிடித்த இரண்டு பெண்களை நியமிப்பேன்.பிடிக்காத ஒரு பெண்ணை பள்ளியை கூட்டுறதுக்கு (ஆணாதிக்க வழக்கப்படி , (அது சரி அண்ணே நான் ஒரு சராசரி என்ன விட்டிருங்கோ) ) நியமிப்பேன். அந்த பிடித்த பெண்கள் இரண்டு பேரும் எங்க இருக்காங்கனு தெரியல,பிடிக்காத பெண் இப்போது என் நெருங்கிய உறவினரின் மனைவி.

இடம் : வீடு

ஏன் இந்த பேப்பர்லாம் எரஞ்சி கெடக்கு, இந்த cd வேனுமா, வேண்டாட்டி குப்பையில போட்டா என்னா? காபி குடிச்ச கப்ப இப்படிதான் வெப்பாங்களா………………………………………………………………………………………………………………………………………


இதுக்கு பேருதான் பின்விளைவா?

இந்த பதிவிற்கு பின்விளைவு?

Tuesday, October 6, 2009

மலையாளப்படத்தினால் ஏற்படும் நன்மைகள்.

நான் கிராமத்திலேர்ந்து தஞ்சாவூருக்கு டவுன் பள்ளிக்கூடத்திலே மேல் படிப்பு படிக்க போனப்பதான் மலையாளப்படங்கள் பற்றிய அறிவு எனக்கு கிடைத்தது.+1 படிக்கும் போது ஒன்னும் பாத்ததா ஞாபகம் இல்லை, ஆனா + 2 படிக்கும் போது எங்க கிளாஸ்ல ஒரு பெரிய குரூப்பா இந்த படங்களுக்கு போவோம்.

காலைல பஸ்ஸில் வந்து இறங்கி , பஸ்ஸ்டாண்டு சுவத்துல பாத்தாலே தெரியும் , திருவள்ளுவர் தியேட்டர்ல படம் மாத்தியாச்சுன்னு,அறத்துப்பால் பள்ளிக்கூடத்திலேயும், பொருட்பால் வீட்லேயும் சொல்லிக்கொடுத்துருவாங்கல்ல அதுனால இந்த திருவள்ளுவர் ஒன்லி காமத்துப்பால் மட்டுமே நடத்துன நவீன நகராட்சி தியேட்டர்.

11 மணி காலைக்காட்சிக்கு முதல் பிரீயடு 10.45 க்கு முடியும் அந்த கேப்புல , நண்பர்கள் குழு படத்திற்கு கிளம்பிருவோம், முக்கியமா தஞ்சாவூர் சேப்பனவாரிலேந்து இரண்டு பேர், மேல வீதிலேந்து ஒருத்தன், அய்யம்பேட்டைலேந்து ஒருத்தன் மற்றும் நான். டிக்கெட் வாங்கி உள்ளே போகும் போது அத அப்படியே முழுசா வாங்கிப்பாங்க, கிழிச்சி தாங்கன்னு கேட்டா , உங்கள கிழிச்சி தந்துருவாங்க.

உள்ளே போய் இருட்டுக்குள்ளே கிழிஞ்சிபோன சீட்டில மூட்டையாரோட முக்கால் மணிநேரம் அம்பலக்கார பஞ்சாயத்து, பிடிக்கிட்டா புள்ளி போன்ற படங்களை பாத்தா பிட்டே போட்டிருக்கமாட்டான், இதுக்குதாண்டா முத நாள் முத ஷோவுக்கு வரக்கூடாது, ஆபிஸர் ரெய்டு வருவாங்கன்னு ஜாக்கிரதையா இருக்காங்க போலருக்குன்னு சொல்லி கிளம்பிருவோம். ஆனாலும் நாலாவது பிரியடு கிளாஸுக்கு திரும்ப போயிரலாம் , அங்கே பாட்டனி வாத்தியார் கல்யாண முருங்கை தடவி பாத்தா நல்லா மொழ மொழன்னு இருக்கும்னு சொல்றது கேட்டு கிறங்கிப்போகவேண்டியதுதான் ,நேரமும் மிச்சம்.

உதாரணத்துக்கு அஞ்சரைக்குள்ள வண்டி படத்தை மேட்னி ஷோ பாத்தா மூனு மணிக்கு 26 A (பஸ் நம்பர்தான் A )பஸ்ஸ பிடிச்சி அஞ்சரைக்குள்ள வீட்டுக்கு போயிரலாம், ஏண்டா சீக்கிரம் வந்துட்டேன்னு வீட்ல கேட்டா, சீக்கிரம் பள்ளிக்கூடம் மூடிட்டாங்க அதான் அப்படின்னு சொல்லிரலாம் , ஆஹா பய படமெல்லாம் பாக்காம வீட்டுக்கு வந்துட்டானேன்னு பஜ்ஜி கிடைக்க வாய்ப்பு இருக்கு.சினிமா டிக்கட்ட கிழிச்சி குடுக்காம அவங்களே வாங்கிக்கரதுனால, துவைக்கும் சட்டைப்பையில் இருந்து மாட்டிக்கவும் வாய்ப்பு இல்லை.

மலையாளப்படங்கள் தரமானவை நீங்க மம்பட்டியான் படமெல்லாம் பாத்ததில்லையான்னு நிறைய பேரு சொன்னாங்க , நானும் ஒன்னாவது பாத்திரனும்னு ஒரு நாள் தஞ்சாவூர் ராஜா கலையரங்கத்தில் DSP மம்மூட்டி ன்னு ஒரு படம் போட்டிருந்தான், நானும் கலைப்படம் பாக்கிற ஆவலோட போனேன், படத்திலே ரெய்டுக்காட்சிகள்ள DSP வந்தாரு ஆனா மம்முட்டி வரவேயில்லை. போஸ்டர் போட்டிருந்த படமே உள்ள ஓடலைன்னு படம் பாத்த பின்னாடிதான் தெரிஞ்சது.

மலையாளத்துல கலைப்படம் எடுக்கிறேன்னு ஒருத்தன் பல்லு விளக்குறதையும், உச்சா போறதையும் மூனு மணி நேரம் பாக்கிறது, பிசன் சிங் பேடின்னு ஒருத்தர் விக்கெட்டே எடுக்காம 125 ஓவர் ஒரு இன்னிங்ஸ் பவுலிங் போடுறத பாக்கிற மாதிரி போர் அடிக்கிற விசயம். இந்த முக்கா மணி நேர படங்கள் B.S சந்திரசேகர் பவுலிங் மாதிரி விழுந்தா விக்கெட் இல்லாட்டி ரண்.மாட்டிக்கிட்டா டின்னு.

காலேஜ் படிக்கும் போது தென்றல் அப்படின்னு ஒரு தியேட்டர் இருந்தது, அந்தக்கருமத்துக்கு கதவே கிடையாது அதுனால நாங்க போறது இல்லை, தஞ்சாவூர் வழியா ஊருக்கு போகிற நண்பர்கள் சிலர் திருவள்ளுவரின் அருமை அறிந்து ஒருநாள் தஞ்சை நகராட்சி தங்கும் விடுதியில் ரூம் போட்டு தங்கி மிஸ்.ஜானகின்னு ஒரு படம் பார்க்க போனோம், தியேட்டருக்கு கிட்ட போனா தியேட்டர் சீல் வெச்சிட்டாங்க அப்படின்னாங்க.

அதுக்கப்புறம் நானும் உண்மைத்தமிழன் , ஜாக்கி சேகர் மாதிரி திருந்தி நல்ல பிள்ளையா பொழப்ப பாக்க ஆரம்பிச்சாச்சி,பரங்கிமலை ஜோதி தியேட்டர் காரனும், திருவள்ளுவர் தியேட்டரும் திருந்தி உலகத்தரத்தில தமிழ்ப்படம் போட ஆரம்பிச்சிட்டாங்க.இந்தக்கலைப்படம் பாக்கிறோம்னு காலம் முழுவதும் பள்ளு வெளக்குறது வெறிச்சி வெறிச்சி பாத்துக்கிட்டே காலத்த ஓட்டறதுக்கு இது எவ்வளவோ மேல்.

தப்பு பண்றோம்னு ஒத்துக்கிட்டா திருந்திரலாம்கிறது உண்மைதானே, இது மலையாளப்படம் பாக்கிறதுக்கு மட்டும் இல்லை. இதுதான் பதிவோட மெஸேஜூ.

Friday, October 2, 2009

தொவையல் : பரிணாம வளர்ச்சி குழந்தைக்கு எப்படி சொல்லிக்கொடுப்பது?

தொவையல் 1 :

தூங்க செல்லும்முன் கதைகள் சொல்லச்சொல்லி எனது மகள் அவ்வப்போது கேட்பதுண்டு, சமயங்களில் அவை கேள்வி பதிலாகவும் ஆகிவிடும். சமீபத்தில் ஒருநாள் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்று அதிரடியாக ஒரு கேள்வியை கேட்டாள். நானும் டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லி புரியவைக்க ஒருகாலத்தில் ஒரு விதமான குரங்கிலிருந்து மனிதன் உருவாகி இருக்கலாம். அப்படின்னேன்.

அப்படின்னா நான் பிறந்தப்ப குரங்கா பிறந்து அப்புறம் இப்படி ஆயிட்டேனா?

இல்லைப்பா சில மில்லியன் வருடத்துக்கு முன்னாடி நம்முடைய மூதாதையர்கள் குரங்கா இருந்திருக்கலாம், அப்புறம் கொஞ்சமா மாறி பரிணாம வளர்ச்சியில் மனுசனா ஆயிட்டோம்.

அப்படின்னா நீங்க குரங்கா இருந்தீங்களாப்பா ? அப்புறம் மனுசனா மாறீட்டீங்களா?ஆனா குரங்குக்கு வால் இருக்குமே, உங்களுக்கு வால் இருந்துச்சா?

இல்லடா அதெல்லாம் மில்லியன் வருடத்துக்கு முன்னால், மனிதன் கொஞ்சம் கொஞ்சமா குரங்கிலிருந்தோ/ குரங்கு மாதிரி ஒன்றிலிருந்தோ வந்திருக்கலாம் அப்படின்னு டார்வின்னு அறிஞர் சொல்லிருக்கார்.

அப்படின்னா உங்கப்பா குரங்கா இருந்து அப்புறம் மனுசனா வந்திட்டாரா?.அப்புறம் மனுசனா மாறீட்டீங்களா?தாத்தாவுக்கு வால் இருந்துச்சா?


இல்லப்பா கிரேண்ட் கிரேண்ட் ........... தாத்தாவுக்கெல்லாம் கிரேண்ட் கிரேண்ட்.............. தாத்தாவோட மில்லியன் வருட முன்னாடி தாத்தாவுக்கு வால் இருந்திருக்கும், கொஞ்சம் கொஞ்சமா வால் தேய்ந்து நம்ம இப்படி ஆயிட்டோம்.

Its funny to have வால்.

இப்படியே கேள்விகள் தொடர்ந்தது நானும் பேச்சை மாற்றி ஒரு புத்தகத்தை படிச்சு தூங்கவெச்சிட்டேன். பரிணாம வளர்ச்சியை சொல்லிக்கொடுப்பதற்கு பதில் ஆதாம்,ஏவாள் கதை சொல்லிக்கொடுத்து சுலபமா வாயை அடைச்சிருக்கலாம். ஆனாலும் நான் நம்பாத ஒன்றை நான் சொல்லிக்கொடுக்க விரும்பவில்லை, பரிணாம வளர்ச்சி தியரி மூலம், மனிதன் எப்படி உருவானான் என்று ஆராய்ச்சி வாய்ப்பாவது இருக்கிறது, ஆனால் ஆதாம்,ஏவாள் தியரி, ஆதாம்,ஏவாள் யார் என்று கண்டுபிடிக்கலாம் என்ற ஆராய்ச்சியை தவிர மற்ற ரீதியில் சிந்திக்க வாய்ப்பளிக்குமா என்று தெரியவில்லை.

MSN news

தொவையல் 2:

கடந்த இரண்டு ஆண்டுகாளாக சன் டிவி வைத்துக்கொள்ளாமல் இருந்தேன், மகள் இப்போதெல்லாம் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டாள், சன் டிவி இருந்தால் மீண்டும் பேசவைக்கலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் இணைப்பு வாங்கினேன். ஆனால் அவள் சன் டிவியில் பார்த்த ஒரே நிகழ்ச்சி, கந்தசாமியில் ஸ்ரேயா உடையை கிழித்துக்கொண்டு கத்தும் காட்சி, பார்த்துவிட்டு this girl is funny..அப்படின்னு சொல்லிட்டு சன் டிவி வீட்டில் போடவே கூடாது என்று தடை போட்டுவிட்டாள்.

டோரா மட்டும்தான் ஓடுகிறது இப்போது. சன் டிவி பார்த்து கோலங்கள் , மேகலா, ராதிகாவின் சீரியலுக்கெல்லாம் விமர்சனம் எழுதி பதிவின் எண்ணிக்கையை கூட்டி, கோலங்கள் மாதிரி ஒரு ஆறு ஆண்டுகள் தரமா பதிவுகள் தரவேண்டும் என்ற என் எண்ணம் ஈடேறவில்லை.

Monday, September 28, 2009

நிலாவில் தண்ணீர் - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பும் மதங்களும்.

நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக, இந்தியாவின் சந்திராயன் எடுத்து அனுப்பிய படங்களின் மூலம் ஆராய்ந்து நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. தண்ணீர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மதங்கள்(மதத்தை அறிவியலோடு இணைக்கும் சிலர்) அவற்றின் அறிவியல் உரிமையை தாங்கள் சார்ந்த மதங்களுக்கு கொடுப்பர் அவை இப்படியெல்லாம் இருக்கலாம் என்ற கற்பனை.

மதம் 1:

"சந்திரஜலம் கொண்டு ஒரு காலம் அந்தணன் பூஜித்தான்" மறை: 1.2.21 இதிலிருந்து நிலாவில் தண்ணீர் இருந்தது தெரிகிறது.

மதம் 2 :

"நிலாவைப்படைத்தோம், அதற்கு ஒளியைப்படைத்தோம் அது சூடாகும் போது ஆற்றிக்கொள்ள தண்ணீரையும் படைத்தோம்" : மறை : 2.1.21

மதம் 3:

"நிலாவைப்படைத்தோம், அதில் குண்டு,குழிகளை படைத்தோம், நிலாமழை படைத்தோம், குண்டு குழிகளில் நிரம்பச்செய்தோம்" : மறை 3.2.4

பழந்தமிழர் பழமொழி:

நிலாநீர் ஓடிவர கொங்கைகள் ஆட
ஆடிவந்தாள் கன்னிப்பெண்.
கண்டதும் மையல் கொண்டான்
பழமைபேசி நிலாநீர் மேல் --- பழமை 3.4.1


ஷீப்ரமணியசாமி பேட்டி:

நாந்தான் அப்பவே சொன்னேனே , மூன்ல தண்ணி இருக்கு, இங்கே யாரும் நதிநீர் பிரச்சினைக்கு அடிச்சிக்காதேள்னு, நானே நாளைக்கு நிலாவுக்கு போய் நிலா நதி, பூமி நதி நீர் இணைப்பை உறுதிப்படுத்துகிறேன். நிலாவிலேந்து நேரடியா எல்லா நதியிலும் இணைச்சிட்டா சுற்றுப்புறச்சூழல் பத்தி ராகுல் காந்தி அறிக்கை விடாம பண்ணிறலாம், அறிக்கைன்னா அது நான் மட்டும்தான் விடனும்.

நாகம்மாள்: அதுதான் உப்புண்டா மாரி மாதிரி ஒருத்தி நிலாக்குளத்துள துணி துவைக்கிறது நீ அன்னாந்து பாத்தாலே தெரியுமே, இதை அமெரிக்கா ”நாசா”மான போனவங்க
இப்பதான கண்டுபிடிச்சாங்களா, நீ சீக்கிரம் கெளம்பி ஊரப்பாக்கா வாப்பா உங்க தாத்தன் மாதிரியே உங்கப்பனும் சரியா வெள்ளாமை போட மாட்டேங்குறான் நீயாவது வந்து நல்லா வெள்ளாமை பண்ணு.


பி:கு: இது ஒரு மொக்கைப்பதிவு.மதங்கள் பற்றிய அறிவு எனக்கு கிடையாது ஆர்குட் போன்ற தளங்களில் மதத்தையும் அறிவியலையும் இணைத்து உரிமை கொண்டாடும் சில கருத்துக்களை வைத்து உருவாக்கின மொக்கை.

Thursday, September 24, 2009

கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி.

கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி.

உன்னைப்போல் ஒருவன் படத்தில் மூன்று முஸ்லீம் தீவிரவாதிகள், ஒரு இந்து தீவிரவாதியையும் காண்பித்து உள்ள கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதியை காண்பிக்கவில்லை. இதிலிருந்து இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சண்டை மூட்டும் கிறிஸ்தவ தீவிரவாதி கமல்ஹாசன் என்று என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பி:கு: இது ஒரு மொக்கைப்பதிவு நானும் உன்னைப்போல் பற்றி ஒருவன் பதிவு போடவேண்டும் என்பதற்காக போட்டது.

Monday, September 21, 2009

முகிலனின் பிதற்றல்கள்.

முகிலனின் பிதற்றல்கள்.

கு.ஜ.மு.க பொதுச்செயலாலர் கைது என்று முகிலன் நேற்று பிதற்றியிருந்தார். கைதுக்கு, நான் புதிய செல்போன் வாங்கியதை காரணமாக சொல்லியிருந்தார். அது அப்பட்டமான பொய் என்பதை நான் இப்போது உபயோகிக்கும் இந்த செல்போனின் படமே விளக்கும்.







பி.கு: இந்த செல்போனை காப்பீடு செய்ய ஆசைப்படுகிறேன். உங்களுக்குத்தெரிந்த காப்பீட்டுக்கம்பெனிகள் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும்.

Tuesday, September 15, 2009

கொலம்பஸில் கொலம்பஸ் பற்றி ஒரு கொலம்பஸ்தனமான ஆய்வு.

நான் சிறிது காலம் ஒன்னுக்கும் உதவாத ஓகாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்த காலம், நானும் என்னோட வேலை பார்த்த சர்தார்ஜி நண்பரும்தான் ஆன்சைட் இன்ஜார்ஜ், பெரும்பாலும் இரவு பதினோரு மணிவரை இருந்து ஆப்ஷோர் டீமிடம் கை கலந்துவிட்டு(அறிவு பறிமாறல்) செல்வோம்.

ஒரு நாள் இரவு ஏழு மணியளவில், ரெஸ்ட் ரூமுக்கு உச்சா அடிக்க சென்றபோது, சர்தார்ஜி எல்லா டாய்லெட்டையும் ஓப்பன் பண்ணி டிஷ்யூ பேப்பர் இல்லைங்கிறத என்னிடம் சொன்னார். ஏன் காஸ்ட் கட்டிங்கா அப்படின்னு கேட்டேன்.அதுக்கு அவரு ஆமாம் காஸ்ட் கட்டிங்தான் ஆனா இந்த கம்பெனி காஸ்ட் கட்டிங் கிடையாது, நம்ம ஊருல உள்ள ஒரு கம்பெனிலேந்து சுமார் இருநூறு பேரு வந்திருக்காங்க அவங்களோட காஸ்ட் கட்டிங், வீட்டிலே டிஷ்யூ பேப்பர் வாங்காம இங்கேயே, மாலை ஆறு மணியளவில எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் போவாங்க, ஆறு மணிப்பக்கம் இந்தப்பக்கம் வந்தா எல்லா ரூம்லேயும் கால் தெரியும் அப்படின்னார்.அதுக்கப்புறம் சுத்தமா பேப்பர் இருக்காதுன்னார்.

இந்த ஆராய்ச்சியை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் எங்கள் இடம் திரும்பியபோது, பெங்களூரில் இருந்து பால்ராஜ் என்பவர் சர்தாருக்கு போன் பண்ணினார்.

பாஸ் அந்த டுக்சான்(Tucson) மெசின் டவுனா இருக்கு, ஆன் பண்ணி விடுங்க....

அது என்ன டுக்சான், அதை அப்படி சொல்லக்கூடாது. டுசான் அப்படின்னு சொல்லனும், முதல்ல உனக்கு அந்த மெசினுக்கு ஏன் டுசான்னு பேர் வந்தது தெரியுமா?

தெரியாது.

சரி நம்ம டீமோட டெஸ்ட் சர்வர் பேர் எல்லாத்தையும் சொல்லு

டுக்சான், மேசா, பீனிக்ஸ், கொலம்பஸ்

இதெல்லாம் நம்ம கிளையண்ட் பிராஞ்ச் இருக்கிற முக்கியமான ஊர். அந்தப்பேரிலதான் நம்ம டெஸ்ட் சர்வர் பேரெல்லாம் இருக்கு, இதுல டுசான், மேசா மற்றும் பீனிக்ஸ் அரிசோனா மாகாணத்துல இருக்கு. கொலம்பஸ் ஓகாயோ மாகாணத்துல இருக்கு, அரிசோனா வெஸ்டல இருக்கு, ஓகாயோ ஈஸ்ட்ல இருக்கு. அரிசோனால Grand canyon இருக்கு, பக்கத்துல லாஸ் வேகாஸ் இருக்கு.ஆனா ஒகாயோவில என்ன விசேசம்னா அமெரிக்காவில உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி போகனும்னா ஓகாயோ தாண்டிதான் டிரைவ் பண்ணி போகனும். 70 மைலுக்கு மேலே ஓட்டினா கண்டிப்பா டிக்கட் கிடைக்கும். சரி இது பத்தி அப்புறம் பேசலாம்.

சரி பாஸ்

ஆமா கொலம்பஸ் பத்தி சொல்ல மறந்துட்டேன், கொலம்பஸ்ன்னு ஒரு ஐரோப்பியர் இந்தியாவுக்கு மளிகை ஜாமான் வாங்க கப்பல் எடுத்துக்கிட்டு புதுவழியா போனார், ஆனால் அவர் இந்தியான்னு நினைத்து அமெரிக்காவில வந்து இறங்கிட்டார், அவர் வந்ததுக்கப்புறம் இங்கே இன்னும் நிறைய ஐரோப்பியர் வந்து, இங்கேயே வாழ்ந்த காட்டு வாசிகள் கையில் இருந்த அம்பை புடிங்கிட்டு சொம்ப கொடுத்துட்டாங்க, அதுனாலதான் இன்னைக்கு நானெல்லாம் இங்கே வந்து வேலை பாக்கிறேன், நீ அங்கேயே இருந்தாலும் இங்கதான் வேலை பாக்குறே என்ன புரியுதா?

புரியுது பாஸ், அப்படியே அந்த டுக்சான் மெசின ஆன் பண்ணுங்க பாஸ்

இவ்வளவு நேரம் சொல்லியும் நீ இன்னும் டுக்சான்னு சொல்றே, அது டுசான், ஏய் குடுகுடுப்பை அந்த டுசான் மெசின ஆன் பண்ணு. எப்படி ஆன் பண்ணனும்னு தெரியுமா? இல்லை நான் விளக்கமா சொல்லட்டுமா?

இல்லை கொண்டையரே , நான் ஆன் பண்ணி பால்ராஜ் பண்ணவேண்டிய வேலையும் முடிஞ்சிருச்சி, பீஸா வந்திருச்சி சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம் வாங்க..

Monday, September 14, 2009

கவிதையில்லா கவிதை

எந்த ஊர் என்றவனே
அத்திக்காய் காய் காய்
கிலியில் கிளியைக் கிழித்து
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
வாழ்வனத்தில் வழியும் துளிகள்
மரணம் உன்னைக் காதலிக்கிறது
மீண்டும் சந்திப்போம்

நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்

பச்சைமிளகாய் இளவரசி
வெளிச்ச அழைப்புகள்
அன்புடன் இதயம்
கிடைக்கும் இடங்கள்
சரணமென்றேன்


----

அன்புடன் புகாரி என்ற பதிவரின் லேபிள்களே மேலே இருக்கும் கவிதையில்லா கவிதை. அவரிடம் அனுமதி கேட்காமலே பதிவிடுகிறேன் புகாரி புகார் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்.

அவரைப்படிக்க அறிதலில்லா அறிதலுக்கு செல்லுங்கள்.

அறிதலில்லா அறிதல்

Saturday, September 12, 2009

அழகு நீ கோடி அழகு

நீள் ஆறுகள்
குறுக்கே பாலங்கள்
ஆதிக்கச் சூரியன்
துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
கருகின கால்கள் போல்
உயர்ந்து நிற்கும்
கரண்ட் மரங்கள்
அலைபாயும் மின்இலைகள்
கரண்ட் பில்
குறைத்திடவே
லேட்டாக பள பளக்கும்
வெள்ளைநிற பல்புகள் ...
கருப்பு நிற வாத்தியாரை
வெள்ளைக்காரன் கிள்ளிப் போட
நிறவெறி அப்பளமாய்
உடைந்தது பிரச்சினையே
ரிசெசன் ஒரு கண்ணிலா
மருத்துவம் மறு கண்ணிலா
உலகம் ஒரு வெண்ணிலா
இல்லாத அப்பளப்பிரச்சினை
தடுக்க பீருருஞ்சும் தலைமகன்...
மேலேப் பறக்கும் செலவினங்கள்...
தேவை உடனடி
பச்சை நிற பணம்.
பணம் ... பச்சை பணம் ... பண எந்திரம்
அழகே...!
பணம்
அழகே ..!
தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு !!!


அசல் இங்கே

Wednesday, September 2, 2009

மழிக்க சிரைக்க

சலூன்கள்

திறக்கப்படும்

நேரத்தில்

தாடி

சிரைக்கப் படுகையில்

மெதுவாக முளைத்திடும்

தாடியின் ஆயுள்

அடுத்து சலூன்

திறக்கப்படும் வரையோ ?!

சிரைக்கப் படுதலும்

வளர்தலுமாக

நகர்கின்றன தாடிகள்

சலூன்களை நோக்கி...!
கனவுகள் இங்கே

Tuesday, September 1, 2009

அழுக்கான வேட்டிகள்

அசுத்தமான கோடுகளுடன்
அழுக்காக கட்டிக் கொண்ட
ஒரு வேட்டி
துவைக்க முடிந்தும்
துவைக்க நினைத்தும்
துவைக்காமல் காத்துக் கொள்ளவே
அனுதினமும்
பிரம்மப் பிரயத்தனத்துடன்
வேட்டியை
தாண்டியபடியே நிற்கும்
கால்களுடன்
தள்ளாடிய நடை
சிவந்த பார்வை
திமிர்ந்த பானச் செருக்கும்
கொண்டவனாய்
நிற்பவன்
.
.
.
.
.
ஆண்

இப்படியும் கவிதை எழுத முடியும் இங்கே சென்று படியுங்கள்

Monday, August 31, 2009

விகடனுக்கு யாராச்சும் சொல்லுங்கப்பா

விகடன் வாழ்நாள் சந்தாதாரன் ஆகிய நான், கடந்த சில வாரங்களாக வைரஸ் பிரச்சினையால் அந்தப்பக்கம் உள்ளே செல்ல முடியவில்லை. விகடனுக்கு யாராவது இந்த வைரஸ் பிரச்சினையை சரி செய்யச்சொல்லி சொல்லுங்கப்பா.

இதைப்படிக்காதீங்க.
மிஸ்டர் மியாவ்.
எல்லாவற்றிற்கும் மேலாக N.R மூர்த்தியின் கமெண்ட்

ஆகியனவற்றை படிக்காமல் தூக்கம் வராமல் தவிக்கும்

குடுகுடுப்பை.

Saturday, August 29, 2009

கேலிக்கூத்து

பிகர்கள் இல்லா

கலரற்ற வெறுங்கானகம்

இரையும் பாட்டிகள்

இரையாகும் தாத்தாக்கள்

மத்தியானத் தூக்கத்தில்

முடிச்சு அவிழ்க்கும் பேரன்கள்

எந்நேரமும் நாசி துளைக்கும்

கடுக்காய் மரப்பட்டை

சுல்லென்று ... சரக்குண்டு ...

சுண்டி இழுக்கும் கஞ்சா உண்டு ...

பக்கத்தில் கடைப் பாட்டி ...!!!

யாரங்கே ... ?

தண்ணி அடித்து

தானாய் ஆடும் கேலிக்கூத்து

பேரன் கிழவியிடம் கேட்டான்

உங்கண்ணனுக்கு பேத்தி இருக்காளா?!

lகளிக்கூத்து இங்கே

Tuesday, August 25, 2009

வெள்ளை அண்டாத பல்

செங்கல்லை குழைத்துக் குழைத்து
பல்லில் தேய்த்து தேய்த்து
பரத்தி விட்ட பின்னும் கூட
அந்த பல்லொன்றும்
வெள்ளையாகிவிடவில்லை ...

அன்று மட்டுமல்ல
என்றென்றும்
காவி தாண்டி
வெள்ளை நுழைவதில்லை ...

வெத்திலைக்கு ஒரு நிறம்
பாக்குக்கு ஒரு நிறம்
புகையிலைக்கு ஒரு நிறம்
சுண்ணாம்புக்கு ஒரு நிறம்
பான்பராக்கிற்கு ஒரு நிறம்
வெள்ளை தவிர எல்லாமுமாய்
முலாம் பூசுவதைப் போல
பூசிப் பூசிப் பழகிய பல்
வண்ணங்கள் நிறைந்த இந்தப்பல்
நாற்றம் அடிக்காததில்
சிறிதொரு சமாதானம்
பிறிதொரு சாந்தம் ...
சாராயக் குடுவையில்
பொங்கிச் சிந்திய கள்,பீர்,வண்ணமடித்த
நாட்டுச்சரக்கு குழப்பி
அடித்த பின்
சொத்தென்று கீழே விழுந்தேன்
தெளிந்து எழுந்து
செங்கல் தேடி குழைத்து
தேய்க்கப்பல் தேடினேன்
எங்கோ விழுந்து காணாமல் போயிருந்தது
வர்ணக் கலவைகளில் ...
வதைப்பட்டிருந்த
அந்த பல் செட்?!

ஒரிஜினல் பல் இங்கே

Wednesday, August 19, 2009

முனியங்கோயில் மந்தை

என்னுடைய கிராமத்தின் அருகில் இருக்கும் ஒரு பெரிய கிராமத்தில், மாசி மகத்தன்று முனியங்கோயிலில் நடக்கும் ஜல்லிக்கட்டு திருவிழா அனுபவம் பற்றி மூன்றே கதாபாத்திரங்களை வைத்து மந்தை நிகழ்வுகள் உரையாடல் வழியாக.

கதாபாத்திரங்கள்: முனியங்கோயில் நண்பர், புதுக்கோட்டை லங்கர் கடைக்காரர் மற்றும் நான்.

முனியங்கோயில் மந்தை நடக்குமிடம் என் ஊரிலிருந்து, ஒரு கிலோமீட்டர் தூரமே, வயல்வழியாக நடந்து முனியங்கோயிலுக்கு மாலை மூன்று மணியளவில் சென்றடைந்தேன். மந்தையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம் ஆகும் நிலையில் இருந்தது.
-------------------------------------------------------------------

வாடா மாப்பிளை, மந்தைக்கு மாடு அடக்க வந்தியளா?

இதெல்லாம் ஒரு மந்தை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாதிரி மாட்டத் தொழுவில விட்டு அடக்கினா அது வீரம், நீங்க கோயில் மாட்டுக்கழுத்துல கயிர கட்டிவிட்டு பிடிக்காதவன் ஊர் மாடு வந்தா கயித்தை இழுத்து மாட்ட மடக்கிருவீங்க, இந்தக்காளை மாட்ட பாக்க நாங்க ஒன்னும் வரலை , உங்க ஊரு கிடாரிகக்கண்ணுகளெல்லாம் இன்னைக்கு குளிச்சிட்டு, பூவும் பொட்டுமா வருவாளுக எதாவது தேறுதான்னு பாக்கலாம்னுதான் வந்தோம்.

நாங்க மட்டும் என்னா காளை மாடு அடக்கவா மந்தை நடத்துறோம், உங்களை மாதிரி இளிச்சவாயங்க யாராவது வந்து எங்கூரு புள்ளைகளை கணக்கு பண்ணுவீங்கன்னு தெரியும், மாட்டுறவனுக்கு இன்னைக்கு ராத்திரியே கல்யாணந்தான். சரி எவ்ளோ காசு வெச்சிருக்க எடு , சூதாட்டத்திலே ஒரு ரவுண்டு போய் ஜெயிச்சிட்டு வருவோம்.

டேய் உங்கூரு மந்தைக்கு வந்திருக்கேன் நீதாண்டா எனக்கு செலவு பண்ணனும்.சூதாட்டம் விளையாட என்கிட்ட காசு கேக்கிற வெட்கமா இல்லை.

என்ன மாப்பிளை எங்கூரு பள்ளிக்கூடத்திலதான் நீ பத்து வருசம் படிச்ச இன்னும் எங்களைப்பத்தி தெரியாம இருக்க, பச்சைத்தண்ணியும் சத்துணவையும் தவிர எதையும் எங்ககிட்ட நீ ஓசில தேத்தமுடியாது மாப்பிளை. பள்ளிக்கூடத்துக்கு டொனேசனே நாங்க வெளியூர்காரங்க தலைய தடவித்தான் வாங்குவோம், நன்கொடை நோட்டிஸ்போர்ட்ல சுத்துப்பட்டு கிராமத்தான் பேரா இருக்கும் எங்க பேரு இருக்கவே இருக்காது.

அது தெரியும், ஆனா அதுக்குன்னு திருவிழாவுக்கு வந்தவங்கிட்டயே காசு கேக்கறது அநியாயம்டா, சரி இந்தா பத்து ரூபாய்தான் இருக்கு.
---------------------

சூதாட்டம் நடக்கும் இடம்.

என்ன கொட்டை உருட்டறவரே எந்த ஊரு நீங்க?

நான் புதுக்கோட்டைங்க.

என்னா புதுக்கோட்டையா அங்கேயும் திருவிழா சீசன்தானே அங்கே கொட்டை உருட்டாம இங்க வந்து இருக்கீங்க.

அது ஒன்னுமில்லீங்க தம்பி ,புதுக்கோட்டை மாவட்டத்தில சூதாட்டம் சரியா போகாது, அங்க வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரும் குறவன் குறத்தி டான்ஸ் பாக்க போயிருவாங்க,கையில வெச்சிருக்கிற அஞ்சு, பத்தையும் குறத்தி ஜாக்கெட்ல குத்திட்டு வந்துருவாங்க, அதே தஞ்சாவூர் மாவட்டத்திலன்னா அப்பன், மவன் வித்தியாசம் இல்லாம சூதாட்டம்,சீட்டு விளையாட்டுன்னு காசு புரளும் நாமளும் கொஞ்சம் காசு பாக்கலாம் தம்பி.

ஓ அப்படியா, சரி பத்து ரூபாய் கிளாவர்ல போடறேன்.

வை சார் வை சார் வை, பத்து வெச்சா இருபது, டவுளுக்கு முப்பது.

டேய் கிளாவர் அடிக்கலடா , இருந்த பத்து ரூபாயும் போச்சு, நான் கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு ஊரப்பாக்கப்போறேண்டா.

இருடா, இவங்கிட்ட அந்தப்பத்து ரூபாயை எப்படி திருப்பி வாங்கிறேன்னு பாரு

<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா

தம்பி நல்லா இருப்பீங்க இந்தாங்க உங்க பத்து ரூபாய் என் பொழப்ப கெடுக்காதீங்க, தயவு செய்து வேற இடத்துக்கு போயிருங்க..இங்க வந்ததுக்கு நத்தம் சாந்தி ஜாக்கெட்ல பத்து ரூபாய குத்திட்டு நான் எங்கூர் திருவிழாவிலேயே இருந்திருக்கலாம்.
--------------------------


இந்தாடா உன் பத்து ரூபாய், எங்கூரு புள்ளையள பாக்கத்தானே வந்த, போயி யாருக்காவது பூந்தி வாங்கி குடு.

உன் தங்கச்சிக்குதான் பூந்தி வாங்கி கொடுக்கலாம்னு இருந்தேன், அவ ஏற்கனவே பூந்தி சாப்பிட்டுகிட்டு இருக்கா. நான் இப்படியே குறுக்குப்பாதையிலே போய் பத்து ரூபாய்க்கு ஒரு மூட்டைய தூக்கிட்டு, பள்ளிக்கூடத்துல படுத்து தூங்கவேண்டியதுதான் இன்னைக்கு.

மூட்டைக்குறிப்பு: பட்டை சாராயம் பாக்கெட் பத்து ரூபாய், எங்க ஊர்ல அதை மூட்டைன்னு குழூவுக்குறில சொல்வாங்க

Tuesday, August 18, 2009

செந்தழல் ரவி, அது சரி, தமிழ்நம்பி ,இளா மற்றும் பிழைகளுடன் குடுகுடுப்பை.

தமிழ்மண நட்சத்திர வாரப்பதிவுகள் எழுத எனக்கு நிறைய நாட்கள் இருந்தது, என்னுடைய வேலைப்பளு மற்றும் உடல் நலன் காரணமாக வரலாறுபிக்சன், பாஸ் பண்ணது போதும் நிறுத்துடி பதிவுகள் தவிர அனைத்தையும் அன்றன்றே எழுதி அவரச கோலத்தில் வெளியிட்டு விட்டேன்.

நான் எழுத நினைத்த சில பதிவுகள் நிறைய கருத்தியல் எதிரிகளை பெற்றுத்தரக்கூடும் என்பதால், அவைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை நான் இன்னும் அடையாத காரணத்தினால் அவைகளை எழுதாமல் வெறும் மொக்கைப்பதிவுகளோடு நிறுத்திக்கொண்டேன்.

வரலாறுபிக்சன் பதிவு நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பாத்தேன், நான்கு தமிழிஸ் வோட்டுக்களை மட்டுமே பெற்று சேரனின் மாயக்கண்ணாடி போல ஆகிவிட்டது கொஞ்சம் வருத்தமே.

நண்பர்கள் செந்தழல் ரவி, அது சரி இன்னும் சிலர், நான் நிறைய எழுத்துப்பிழைகள் மற்றும் வாக்கியப்பிழைகளோடு எழுதியதை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டினார்கள். (குறிப்பாக 31 நூற்றாண்டு என்பது முப்பத்தொன்றாம் நூற்றாண்டு, 9 வதையே என்பதை ஒன்பதாவதையே என்றும் எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் என்றும், இன்னும் பல).

செந்தழல் ரவி இன்னும் ஒரு படி மேலே சென்று, பள்ளிக்கூடப்பையனின் எழுத்துக்கள் போல் உள்ளது என்று உரிமையுடன் கடிந்து கொண்டார்.இளா நட்சத்திர வாரத்தில் பதிவுகள் இன்னும் நன்றாக எழுதியிருக்கவேண்டும் என்றார். தமிழ்நம்பி என்னை மொழிச்செப்பத்தோடு எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.

பதிவு எழுதுவதில் தரக்கட்டுப்பாடு வைத்துக்கொள்ளாமல் மனம்போன போக்கில் இலக்கில்லாமல் எழுதி வெளியிடுவது அதனைப்படிக்கும் பலரை எரிச்சல் அடையவைக்கும் என்று இதன்மூலம் அறிந்துகொண்டேன். இது என் இடம் நான் இப்படித்தான் எழுதுவேன் என்று மறுதளித்து, நான் திருந்தும் வாய்ப்பை நானே இழக்க விரும்பவில்லை.அதனால் இனி எண்ணிக்கையை குறைத்து வாரம் ஒரு இடுகை எழுத்து/வாக்கியப்பிழைகள் இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.

Sunday, August 16, 2009

கனவு முயற்சி தன்னம்பிக்கை


ஹரிணிக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சென்ற ஆண்டு என் மனைவி முடிவெடுத்து, என்னிடம் ஹரிணியை நீச்சல் வகுப்பிற்கு அனுப்ப போகிறேன், வாரம் இருபது நிமிடம் வகுப்பு, மாதத்திற்கு $85 கட்டணம் என்றாள், எனக்கு நீச்சல் தெரியும் நான் கற்றுக்கொடுக்கிறேன் என்றேன். உங்களை நம்பி நீச்சல் குளத்தில் பாப்பாவை விட முடியாது, முறையாக நீச்சல் கற்றுக்கொண்டால்தான் முடியும் என முடிவு செய்து, இரண்டு மாதம் அந்த வகுப்பில் நீச்சல் கற்றுக்கொண்டாள், பட்டிக்காட்டில் பிறந்த எனக்கு அவர்கள் நீச்சல் கற்றுக்கொடுக்கும் முறையில் ஏனோ மனம் ஒட்டவில்லை. ஒரு மாதத்தில் ஐஸ் ஸ்கீரீம் ஸ்கூப், floaty என சில புதிய வார்த்தைகள்தான் கற்றுக்கொண்டால் ஆனால் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை.

இந்த ஆண்டு கடந்த மாதத்தில் நீச்சல் குளத்தில் நானே அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தேன், ஆனாலும் அவளிடம் பயம் போகவில்லை, கையை வீசி நீச்சலடிக்காமல் என்னைப்பற்றிக்கொள்வதிலேயே குறியாக இருந்தாள், ஆழம் என்னவோ மூன்று அடிதான் அவள் மூழ்கும் அளவுக்கு ஆழம் இல்லை. நான் அவளிடம் நீச்சல் என்பது தண்ணீரில் இருக்கவேண்டும், ஆனால் தரையைத்தொடாமல் இருக்க முயற்சிசெய்யவேண்டும் என்றேன்.

இரண்டு நாளில் கொஞ்சம் கொஞ்சமாக நான் சொல்வதில் அவளுக்கு நம்பிக்கை வந்தது, ஒரு நாள் அவளாக

I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it
I think I can really do it,I think I can really do it.

என்று கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள், பின்னர் மூன்று மீட்டர் தூரத்தை கால் தரையில் படாமல் கடந்தாள்.இந்த தன்னம்பிக்கை எனக்கு மிகவும் ஆச்சர்யம் தருவதாக இருந்தது. அதே நாளில் தொடந்து பதினொரு முறை மூன்று மீட்டர் தொலைவைக்கடந்தாள். அவங்க அம்மாவை கூப்பிட்டு நீச்சலடித்து காண்பித்தாள், இன்னமும் மூன்று அடி ஆழப்பகுதியை தாண்டி நான்கு அடிப்பகுடிக்கு செல்வதில் அவளுக்கு பயம் இருக்கிறது, ஆனால் அவள் கடந்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அவளுக்கும் நான்கு அடி ஆழப்பகுதியிலும் நீச்சல் கற்றுத்தந்துவிடுவார் என்று அப்பா மேல் நம்பிக்கை இருக்கிறது.

நீச்சலடிக்கவேண்டும் என்ற அவளின் கனவு, இலக்கை நோக்கிய விடாமுயற்சி,பயிற்சி, மனதினுள் அவளுக்குள்ளாகவே உருவாக்கிக்கொண்ட நம்பிக்கை எனக்கும் சிலவற்றில் நம்பிக்கையை அளித்திருக்கிறது.
---

நட்சத்திரப்பதிவராக வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், தொடர்ந்து நகைச்சுவைப்பதிவுகள் என்ற பெயரில் நான் எழுதுபவற்றை படித்து ஆதரவு தரும் வாசகர்களுக்கும் நன்றி.

Friday, August 14, 2009

மொக்கையா ஒரு தேர்வு.

ராகவன்: டேய் மாப்பிள்ளை நான் இன்னைக்கு காலேஜூக்கு வரலை, இண்டர்வெல்ல ஹாஸ்டல் பக்கம் வந்தீன்னா கேண்டீன்ல கோல்ட் பிளேக் பிளையின் இரண்டு வாங்கிட்டு வாடா?

நடேசன் : ஏன் ஹாஸ்டல்ல இருந்து என்னக்கிழிக்கப்போற அங்க வந்து உட்காந்து பாடத்தை கவனிக்கலாம்ல.

ராகவன்: அந்த ஏர்வாடி பார்ட்டி வந்து அதை வெச்சிக்கிட்டீங்கனாக்கும் இதை எடுத்துக்கிட்டீங்கநாக்கும்னு சொல்றத கேட்டு நாக்கும் தவிர எதுவும் புரியறதில்லை. அதுனால இன்னைக்கு உருப்படியா அந்த மரமல்லி மரத்தில் எத்தனை பூ பூத்திருக்குன்னா முழசா எண்ணப்போறேன்.

நடேசன்: ஏண்டா மரத்தில எத்தனை பூ பூத்திருக்குன்னு எண்ணறதெல்லாம் ஒரு பொழுதுபோக்காடா? உருப்படியா ஒரு ஐடியா சொல்றேன் அதைக்கேளு fast reading அப்படின்னு ஒரு காண்செப்ட் இருக்கு, ராஜ் பப்னான்னு ஒருத்தர்தான் அத எழுதிருக்கார், அந்த புத்தகப்படி ஒருதடவை படிச்சா அடுத்த பதினெட்டு மணிநேரத்தில 80 % மறந்துருமாம் , அதுனால வேகமா படிக்கனும், பதினெட்டு மணி நேரத்திற்குள் இரண்டு,மூனு முறை திரும்ப படிச்சிட்டா 95% மேல மறக்காதாம். இந்தாடா இதுதான் அந்தப்புத்தகம் என்ன சொல்லிருக்காருன்னு படிடா.

ராகவன்: பதினெட்டு மணி நேரம் இருக்கேடா, நம்ம எப்பயும் அடுத்த நாள் காலைல பரீட்சைக்கு ராத்திரி 12 மணிக்கு மேலதானே படிப்போம் , படிச்சு மறக்கறதுக்கு முன்னாடியே பரீட்சையே முடிஞ்சுரும், அப்புறம் மறந்தா என்னா இருந்தா என்னடா?

நடேசன்: டேய் வெண்ணை இப்படி படிச்சு பாஸ் பண்றதுல என்னடா புண்ணியம் நான் சொல்றத முயற்சி பண்ணிப்பாருடா? நானும் இந்த முறை தேர்வுக்கு இன்ஸ்ட்ரூமெண்டேசன் பாடத்தை பப்னா சொன்னது மாதிரிதான் படிக்கப்போறேன், கண்டிப்பா 90% மார்க் வாங்க முடியும் அதோட காலத்துக்கும் மறக்காதுடா.
-----------------

இருவரும் தேர்வுக்காக பப்னா புத்தகத்தையும், இன்ஸ்ட்ரூமெண்டேசன் புத்தகத்தையும் வைத்து தீவிரமாக படித்தனர்.தேர்வும் முடிந்து முடிவுகள் வந்தது, எப்பயும் குறைந்தபட்ச மார்க் எடுத்து பாஸ் பண்ணும் ராகவன் இந்த முறை 90% வாங்கிவிட்டான்.

நடேசன் : பரவாயில்லைடா நான் சொன்ன மாதிரி படிச்சு 90% வாங்கிட்ட, ஆனா நானும் தீவிரமா பப்னா சொன்ன மாதிரிதான் படிச்சேன், ஆனா பேப்பர் புட்டுகிச்சுடா ஆச்சர்யமா இருக்கு, எங்கியோ தப்பு பண்ணிட்டேன். நீ எப்படி படிச்ச சொல்லு.

ராகவன்: அது ஒன்னும் இல்லடா , பப்னா புத்தகத்தில முத மூனு பக்கத்தை நல்லா மனப்பாடம் பண்ணிட்டேன் , அப்படியே இன்ஸ்ட்ரூமெண்டேசன் புத்தகத்திலே ஹெட்டிங்கெல்லாம் நல்லா மனப்பாடம் பண்ணிட்டேன். பரிட்சையிலே , கேட்டிருக்க கேள்விக்கு தகுந்த மாதிரி ஹெட்டிங் எழுதி பச்சை கலர் ஸ்கெட்ச்ல அண்டர்லைன் பண்ணிட்டேன். அதுக்கு கீழே பப்னா புத்தகத்தில் படிச்சத அப்படியே எழுதினேன், இடையிடையில டிரான்ஸ்டியூசர் அப்படின்னு போட்டு ஊதா கலர் ஸ்கெட்ச்ல அண்டர்லைன் பண்ணினேன். இது மெயின் சீட்டு முடியுற வரைக்கும் கை கொடுத்துச்சு. அப்புறம் பப்னா புத்தகத்தில படிச்சது நிறைய மறந்து போச்சு ,என்ன பண்றதுன்னு யோசிச்சேன் அடிசனல் சீட்டு வாங்கி மத்த கேள்விக்கு தகுந்த மாதிரி ஹெட்டிங்க மாத்திட்டு மெயின் சீட்ட பாத்து அப்படியே எழுதி வெச்சிட்டேன், அண்டர்லைனும் கரெக்டா போட்டுட்டேன் அவளோதாண்டா.

நடேசன்: ???????????!!!!!!!!!!!!!!!!

ஏன் கூலி?

நான் பதிவராகி எழுதிய முதல் பதிவு, சென்ற ஆண்டு இதே நாளில் எழுதப்பட்ட பதிவு. ஒரு ஆண்டு நிறைவை ஒட்டி அதே பதிவை மீள்பதிவு செய்கிறேன்.இந்த ஒரு ஆண்டு காலத்தில் நூறுக்கும் மேற்பட்ட வாசகர்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கமும் இடித்துரைத்தலும் என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

நன்றி

குடுகுடுப்பை.



--------------
உலக மக்கள் தொகையில் சரிபாதி உள்ள இந்தியா ,சீனா மற்றும் சில ஆசிய நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் (நான் உட்பட) யாருக்காக உழைக்கிறோம் ,வெகு சிறிதளவே மக்கள் தொகை கொண்ட மேலை நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படும், ஒரு சில முறை உபயோகித்து தூக்கி எரியும் பொருட்களை உருவாக்கியோ அல்லது மேலை நாட்டு நிறுவனம் உருவாக்கும் மென்பொருள் ஒன்றில் ஒரு கூலியாக பங்கெடுத்து நம் உழைப்பை விற்று மிதமான சுக வாழ்க்கை வாழ்கிறோம்.

எனக்குள் பல கேள்விகள், நமது அதிக மக்கள் சக்தியை ஒரு சிறிய பகுதி மக்களுக்கு உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏன்?

நம்முடைய கல்வி முறை ஏறக்குறைய மேலை நாட்டினற்கு எப்படி வேலை செய்வது என்பதை சார்ந்தே உள்ளது(அல்லது நமது மன நிலை அப்படி உள்ளதா?) நமது ஆங்கில அடிமைத்தனமா? அப்படியும் தோன்றவில்லை.

பெரும்பாலான சீன பொருளாதாரம் மேலை நாடுகள் உபயோகிக்கும் ஆடம்பர / அத்தியாவசிய பொருடகள் சார்ந்தே உள்ளது.

இதுதான் கடவுள் நமக்கு இட்ட விதியா? சுமார 250 கோடி மக்கள் தொகை உள்ள நாம் , இந்த 250 கோடி மக்களுக்கும் உழைத்து உழைத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியாதா?

உலகமயமாக்களில் நமது பங்கு நமது உழைப்பை மட்டும் விற்பது தனா?
இதற்கெல்லாம் தீர்வு என்ன?

பி.கு : என் முதல் பதிவு. நான் சொல்ல நினைத்த கருத்தை எழுதி இருக்கிறேன்.ஒத்த / மாறுபட்ட கருத்துள்ள பதிவர்கள், ஒரு நல்ல பதிவை தர வேண்டுகிறேன்.

Thursday, August 13, 2009

தொவையல் : ஸ்டூடண்ஸூ, ஐபோனூ,இன்சூரன்சூ

தொவையல் 1:

கல்லூரியில் முதல் நாள், அப்பாவும் நானும் சென்றிருந்தோம், பெற்றோர்களுக்கான சிறப்பு பகுதியில் அப்பா உட்கார வைக்கப்பட்டார், புதிதாக சேர்ந்த முதலாண்டு மாணவர்களாகிய நாங்கள் வரிசையாக எங்களுக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பிற்குள் ஒருவொருவராக உள்ளே சென்றோம். நான் சென்றபோது மூன்று நபர்கள் அங்கே இருந்தனர்.,ஒவ்வொருவரிடமும் நான் குடுகுடுப்பை, தஞ்சாவூர் என அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களிடமும் அதையே விசாரித்தேன்

முதலாமவர் நான் முகமது , ஊர் தூத்துக்குடி அப்படின்னார், அடுத்தவரிடம் சென்றேன் நான் முகமது , ஊர் தூத்துக்குடி அப்படின்னார். அடுத்தவரிடம் கேட்டேன் நான் முஹ்ம்மத் , ஊர் தூத்துடி அப்படின்னார். என்னடா முதல் நாளே நம்மள இப்படி ஓட்டுறாங்களேன்னு ஆடிப்போய் பேந்த பேந்த முழிச்சேன். கொஞ்ச நேரத்திலே இன்னொருத்தர் தெலுங்கு பட ஹீரோ கணக்கா உள்ள நுழைஞ்சார், உங்க பேரு ? நான் குட்டி, ஊர் தஞ்சாவூர் அப்படின்னார். எனக்கு இப்போ கொஞ்சம் தைரியம் வந்துச்சு, தெலுங்கு ஹீரோ பக்கத்தில இருக்கும்போது என்ன பயம் .

ஒரு வழியா நாங்க எல்லாரும் விடுதியில் ஒரே அறையில் அடைக்கப்பட்டோம்.பின்னர் தூத்துடிக்காரங்களோட நானும் சேர்ந்து வில்லனாயிட்டேன், நம்ம தெலுங்கு ஹீரோ குட்டி, ஹிந்தி ஹீரோக்கணக்கா இருக்கிற ஹீரோங்களோட சேர்ந்துக்கிட்டாரு.இன்றைய தேதியில் முதலாம்,இரண்டாம் முகமதுவும்,குட்டியும் நண்பர்களாக துபாயில் இருந்து, இந்த வில்லன் எழுதுவதை படித்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த மூன்றாவது முஹம்மத், எல்லாரும் முகமதுன்னு சொல்லும்போதே முஹம்மத்துன்னு வித்தியாசமா சொல்லுவான், இப்ப வியாபார காந்தமாயிட்டான். ஆனால் வியாபாரம் கைகூடி வந்து ஒட்டும்போது பல சமயங்களில் காந்தந்தின் துருவத்தை மாற்றிவிடுவான்.

கல்லூரி முதல் நாளில் பெற்றோர்களுக்கும் ஒரு ரெப்ரெஷ்மெண்ட் அப்படின்னு பெரிசா கலர்,கலரா தட்டியெல்லாம் வெச்சு செங்கல்லுக்கு வெள்ளை அடிச்சி கலக்கலா வரவேற்பு கொடுத்திருந்தாங்க. மெஸ்ல ரெப்ரெஷ்மெண்டுன்னு சொல்லி, சரியா கழுவாத தட்டில், வேகாத சோற்றில், புளி(ளு)ரசத்தை ஊத்தினார்கள். எங்கப்பா என்னடா இது கருமாதில போடுற சாப்பாடே நல்லா இருக்குமேடான்னார். அடுத்த நான்கு வருடங்களும் இதே சாப்பாடுதான் எங்கள் வயிற்றை காயவைத்தது. இந்தக்கல்லூரியில் படித்ததன் மிகப்பெரிய பயன், எங்கள் கல்லூரி விடுதி மாணவர்களின் நட்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது போல் எனக்கு தோன்றியது. இதனை சென்னையில் நாங்கள் குழவாக வேலை தேடிய காலத்தில் அனுபவப்பூர்வமாக தெரிந்துகொண்டேன்.இன்றைக்கும் ஒரு புதிய சமூக சேவை முயற்சியில் இறங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.

தொவையல் 2:

இங்கே அமெரிக்காவில் செல்போன்கள் இரண்டு ஆண்டு பிளானுடன் வாங்கும்போது இலவசமாக அல்லது குறைந்த விலையில் கிடைக்கும். இடையில் போன் உடைந்து /தொலைந்து போனால் காசு கொடுத்து வாங்கவேண்டும். அதற்காக ஒரு இன்சூரன்ஸ் பிளான் இருக்கிறது,அதாவது மாதம் 2$ அளவுக்கு கட்டினால், தொலைந்து போனால் புதிய போன் தந்துவிடுவார்கள். எனக்கு தெரிந்து பெரும்பாலும் யாரும் இன்சூரன்ஸ் வைத்துக்கொள்வதில்லை. நான் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் அக்கட பூமியை சார்ந்த ஒருவர் ஐபோனூ வாங்கியிருந்தார் என்னிடம் அதில் உள்ள வசதிகளை டெமோ கொடுத்துக்கொண்டிருந்தார், அதன் விலை 200$ மேலும் மாதம் 30$ டேட்டா பிளானுக்கு கூடுதலாக கட்டவேண்டும், ஆனா ஐபோனுக்கு இன்சூரன்சூ கிடையாதுன்னார். ஏன் என்று கேட்டேன்,அதற்கு அவரு சொன்னது, இங்க யுனிவர்சிட்டில படிக்கிற ஸ்டூடண்ஸூ எல்லாம் போன் வாங்கி, இன்சூரன்சும் வாங்கி ஒரு மாதத்தில தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி புதுசு வாங்கிடுவாங்களாம், தொலைஞ்சு போன போனு அல்லுடு, மஜக்குடு,ஜொல்லுடுன்னு ரிங்க் டோனா ஆந்திராவில அடிக்கப் போயிருமாம். அது மாதிரி நிறைய நடக்கிறதால ஐபோனுக்கு நோ இன்சூரன்சூ. இப்படி மொள்ளமாறித்தனம் தொடர்ந்து பண்ணினா எதுக்குமே நோ இன்சூரன்சூதான்.

தொவையல் 3:
சில ஆண்டுகளுக்கு முன் சிகாகோ அருகில் உள்ள சாம்பர்க் என்ற ஊரில் வசித்தபோது, வேலை பார்த்தது ஒரு இந்திய மென்பொருள் கம்பெனியில், பெங்களூரிலிருந்து ஆட்கள் வருவதும்,போவதுமாக இருப்பார்கள், கார்ப்பரேட் அபார்ட்மெண்டில் தங்கி இருந்தோம், நான் கார் வாங்கியிருந்த நேரம் அது, புதிதாக வருபவர்களை கடைக்கு அழைத்து செல்வது ஒரு சாதாரணமான நிகழ்வு, அப்படி ஒரு நாள் ஒரு தேசிக்கடைக்கு அக்கட பூமியைச்சேர்ந்த ஒரு நண்பரை அழைத்துச்சென்றேன், கடைக்கார குஜராத்தியிடம் அரிசிப்பையை காண்பித்து புதுசா, பழசா என்றார்,அவர் உடனே நம்ம கடையில் எல்லாமே புதுசுதான் என்றார். யூனோ பழைய அரிசிதான் நல்லா இருக்கும் புது அரிசி ஸ்டிக்கியா இருக்கும் எனக்கு பழைய அரிசிதான் வேணும் வேற கடைக்கு ஓட்டுங்க வண்டிய குடுகுடுப்பைன்னுட்டார்.

கடந்த வாரம் டாலஸில் ஒரு புதிய தேசிக்கடையில் எப்போதும் வாங்கும் லட்சுமி பிராண்ட் இட்லி அரிசி இல்லாததால்,ஸ்வாட் பிராண்டு இட்லி அரிசி வாங்கினேன், அரிசிப்பை பழசாக இருந்தது, இட்லி இந்த முறை ருசிதான் என நினைத்தேன், மாவு அரைச்ச வைத்த அடுத்த நாளே கருப்பு கலரில் பூஞ்சை படிந்துவிட்டது, என்ன செய்வது இந்த மாவில் வார்த்த தோசை ருசி இல்லை அதனால் பத்து தோசைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.

Wednesday, August 12, 2009

யாரு வெட்டிப்பய?

வாடா வாத்தி மவனே, ரொம்ப நாளா இந்தப்பக்கம் ஆளையேக்காணோம்.

இல்லடா கணேசா இப்பதான் மெட்ராஸ்லேந்து வந்தேன், நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கணேசனின் அண்ணன் முருகேசன் வருகிறார்.

வாங்க தம்பி எப்ப வந்தீங்க, நல்லா இருக்கீங்களா, பேசிட்டு இருங்க நான் வயலுக்கு போயிட்டு வரேன்.

புதுக்கல்யாண மாப்பிள்ளை என்ன வயல் கியல்னு சொல்லிட்டு இருக்கீங்க.

அதுசரி அதெல்லாம் பாத்தா முடியுமா, அவசரமா ஒரு வேலை இருக்கு இந்தா வந்துர்றேன்.

அண்ணன்காரர் வயலுக்கு கிளம்பியவுடன், கணேசன் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபடியே... சத்தமாக

ஏய் நீலாவதி தீப்பெட்டி எடுத்துட்டு வா.

என்னடா அம்மாவ பேரு சொல்லி கூப்புடுற, அதுவும் சிகரெட்டு பத்த வைக்க தீப்பெட்டி கேக்கிற.

கணேசனின் அம்மா வருகிறார்.

"இந்தாடா, நீங்க எப்ப தம்பி வந்தீங்க, இவன பாத்தியளா ஒரு வேலையும் செய்யாம அம்மாவ தீப்பெட்டி எடுத்துட்டு வரச்சொல்லி சிகரெட் பதத வைக்கிறான். அவங்க அண்ணன் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல வயலுக்கு கெளம்பிட்டான்."

சரி சரி நீ உன் வேலையப்பாரு, ஒரு ஆளு மாட்டுனா போதுமே உடனே உன் பாட்டை ஆரம்பிச்சிருவியே.

சரி தம்பி நீங்க மெட்ராஸ்ல என்ன பண்றீங்க?

சும்மாதான் இருக்கேன்.

அப்ப நல்ல கூட்டாளிதான் இவனுக்கு நீங்க, என்னமோ போங்க..
..........

என்னடா கணேசா உங்க அத்தை மகன் கண்ணா பின்னான்னு பெருத்து போயிட்டான்.

அது ஒரு பெரிய கதைடா, படிப்பு சரியா வரலைன்னு படிப்ப நிறுத்திட்டு வயல் வேலைய பாத்துக்க சொன்னாங்க, வீட்டுக்கு வந்தப்புறம் அவன் டயட்டே மாறிப்போச்சு, இதுதான் அவனோட தினசரி டயட்டு

காலைல அஞ்சு மணிக்கு ஒரு குண்டான் பழைய சோறு, அப்புறம் அப்படியே பல்லு விளக்கிட்டு கடைவீதிக்கு வந்து முருவன் கடையில டிபன் பண்ணுவான். ஒரு இருவது புரோட்டா, 4 ஸ்பெசல் தோசை, கெட்டிச்சட்னி, சால்னாவெல்லாம் அதுக்கு ஏத்த மாதிரி சாப்புடுவான்.

அப்புறம் பதினோரு மணி வாக்குல முருவன் கடையில 10 வடை 10 போண்டா சாப்புடுவான். முருவன் கடைல காராசேவு, பக்கோடாவெல்லாம் சரியா இருக்காதுன்னு, கிட்னன் கடைல ஒரு 10-15 பொட்டலம் சாப்புடுவான். அவ்வளவுதான் காலை சாப்பாடு.

மத்தியானத்துக்கு இவந்தான் வயலுக்கு சாப்பாடு கொண்டு போறது,எங்கத்தை அம்பது பேருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டா , தொட்டுக்க குடுக்கற கூட்டு/பொறியல்ல நாப்பது ஆள் தொட்டுக்கய இவனே சாப்புட்டுருவான், மிச்சம் உள்ளதைதான் வேலையாளுங்க சாப்புடனும், எல்லாரும் எங்கத்தைதான் கொஞ்சமா கொடுத்துவிடுதுன்னு நெனச்சிட்டு இருக்காங்க, ஒரு நாளைக்கு எங்கத்தை குடுமிய அறுக்காம விடுறதில்லைன்னு வெறிகொண்டு அலையுறாங்க.பாவம் எங்கத்தை உருளைக்கிழங்கு,கத்தரிக்காய்,கொத்தரங்காய்,வாழக்காய்னு மலிவா கிடைக்கிற காய்கறிய வாங்கி நல்லா தொட்டுக்க பண்ணி கொடுக்குது, நீலாவதி மாதிரி ஓசில கிடைக்கிற திருமாங்கீரையும்,ஆளக்கீரையும் உப்பு போட்டு அவிச்சி குடுத்தாதான் அவங்களுக்கு தெரியும்.கொஞ்சம் காரம்,புளிப்பு சேத்தா கஞ்சி கூட குடிச்சிருவாங்கன்னு அதைக்கூட சேக்கறதில்லை.

இருந்தாலும் உனக்கு உங்க அத்தை பாசம் அதிகமாதாண்டா இருக்கு, சரி அவ்வளவுதான் உங்காளு சாப்பாடா?

அப்புறம் வெள்ளரிக்காய், மாம்பழம் அப்படி ஏதாவது கடைவீதில வித்துச்சுன்னா அதுல ஒரு பத்து பாஞ்சு சாப்பிடுவான், ஒரு பத்து பாஞ்சு டீ குடிப்பான்.ராத்திரிக்கு ஒரு பருக்கை கூட சாப்பிடமாட்டான்,ஒரு சொம்பு தண்ணி குடிச்சிட்டு தூங்கிருவான், காலைல அஞ்சு மணிக்கு எந்திருச்சு மூத்திரம் பேஞ்சிட்டு, பழைய சோத்துலேந்து ஆரம்பிச்சிருவான்.

நல்ல டயட்டுதாண்டா!!!!!!!!!!!!
......................

ஒரு மூன்று பேர் கணேசனின் அண்ணன் முருகேசனை கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு வந்தனர், பின்னாடியே ஒருவர் யமகாவை தள்ளிக்கொண்டு வந்தார்.

ஒன்னுமில்லை குட்டைகுளத்துக்கரைல ஓட்டிட்டு போகும் கப்பிக்கல்லு தடுக்கி வண்டிலேந்து விழுந்துட்டாப்ல கால்ல நல்லா அடிபட்டிருச்சு.
............
ஏண்டா என்னமோ வயலுக்கு போறேன்னு கெளம்புன, கக்கூஸ் போறதுக்கு குட்டைக்குளத்துக்கரைக்கு போறதுக்கு உனக்கு யமகா தேவைப்பட்டிருக்கு, உனக்கு அம்மா வேற சப்போட்டு. உன்னை சொல்லி குத்தம் இல்லை. உனக்கு ஒருத்தன் பொண்ணு குடுத்து ஒரு யமகா வேற வாங்கி கொடுத்துருக்கான் பாரு அவன சொல்லனும். நீலாவதி காச எடு உன் பெரிய மவன் கக்கூஸ் போயி காலை உடைச்சிட்டு வந்திருக்கான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவனும்.

நீ கெளம்புடா வாத்தி மவனே, ஒருநாள் கூட சும்மா ரெஸ்ட் எடுக்க விடுறாங்களா, இது மாதிரிதான் எதாச்சும் வேலை வந்துட்டே இருக்கு.

Tuesday, August 11, 2009

அறிவு.

ஹாஸ்டலில் போரடித்துப்போன அறிவு ஒருநாள் எங்களிடம் ,டேய் எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி வாங்கடா, ரெண்டு மணி நேரத்தில வீட்டுக்கு போயிரலாம் .

சரிடா ஹாஸ்டல் சாப்பாடும் கடுப்பா இருக்கு நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் வரோம்டா,சாப்பாடு வெயிட்டா இருக்கனும். நான், ஷேக், மதிமாறன்,ஸ்டீபன் உட்பட ஆறு பேர் மேலூருக்கு அருகில் உள்ள அறிவின் குக்குக்குகிராமத்திற்கு சனி,ஞாயிறு சாப்பாட்டுகான பயணம்.

மேலூரில் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், அறிவு எங்களிடம் சொன்னான் பக்கத்து ஊருக்கு போற பஸ் போயிருச்சு நடந்துதான் போகனும், ஏழு கிலோமீட்டர்தான் ஒரு மணிநேரத்தில போயிரலாம்.

என்னடா சொல்ற?

அந்த நேரத்தில் அங்கே வந்த அறிவின் அப்பா, என்னடா அறிவு நீ எப்ப வந்த?

இப்பதான் வந்தேன் ,இவங்கெல்லாம் என்னோட படிக்கிறாய்ங்க, நம்ம ஊரை சுத்திக்காட்டலாம்னு கூட்டியாந்தேன்.

நல்லது , நான் மாட்டு வண்டிலதான் உரம் எடுக்க வந்தேன், உரத்தை ஏத்திட்டு நீங்க எல்லாரும் வண்டில போங்க தம்பிகளா வயசான நான் உங்க கூட வந்த நல்லா இருக்காது,நான் அப்புரமா வரேன்.
----------------------------------
அறிவின் ஊர் மொத்தம் 25 குடும்பங்களே உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம். அறிவு வீட்டு வாசலில் வண்டி நின்றவுடன் அறிவின் தம்பி நிலவும் அவங்க அம்மாவும் எங்களை வரவேற்றனர்.

ஏண்டா அறிவு சொல்லிட்டு வந்திருக்கலாம்லடா? காலை சாப்பாட்டுக்கு இட்லி தோசைக்கு ஊற வெச்சிருக்கலாம்லடா?

பரவாயில்லைம்மா நாங்க இருக்கிறத சாப்பிட்டுக்கறோம்.

என்னடா அறிவு இவ்வளவு சின்ன ஊரா இருக்கு.?

இப்ப இருட்டிருச்சு காலைல எந்திரிச்சி ஊர் சுத்தி பாப்பம்டா, நிறைய வயல் இருக்கு பெரியாத்துப்பாசனம் பச்சப்பசேல்னு இருக்கும்டா? அப்ப பாரு ஊரு பெரிசுன்னு சொல்வீங்கடா.!

அடுத்த நாள் காலையில் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

எல்லாரும் செருப்ப கையில எடுத்துக்கங்கடா , கம்மாங்கரைலதான் சாமி இருக்கு செருப்பு போட்டு நடக்கக்கூடாது?

சரளைக்கல்லா இருக்கு குத்துமேடா?

அதெல்லாம் குத்தாது எல்லாம் சாமி நடக்கிற பாதை, நீ நடந்து பாரு குத்தாது...

என்ன நிலவு ஓரளவு விவசாயம் பண்றீங்க ? ஆனால் எல்லார் வீடும் குடிசை வீடாவே இருக்கே ஏன்?

வசதியெல்லாம் பரவாயில்லை, இங்க யாரும் அவ்வளவா படிக்கலை, அண்ணன் தான் முதன்முதலா இஞ்சினியரிங்க் படிக்குது, இந்த ஏரியாவில அடிக்கடி சாதி சண்டை வரும், அதுக்கு கோர்ட் கேஸ்னு செலவுக்கே நிறைய செலவு ஆகும், அதுக்காக மட்டுமே எங்க ஊரு சார்பா 25 லட்சம் ஃபண்டு இருக்கு.

என்ன சொல்றீங்க இதை வெச்சே எல்லாரும் ஒரு நல்ல ஓட்டு வீடு கட்டிக்கலாம், ரோடு போட்டுக்கலாம் வசதியை பெருக்கிக்கலாமே, ஏன் அந்த சாதி காரங்க கூட சண்டை போட்டுட்டே இருக்கீங்க? இரண்டு பேரும் சேந்தே முன்னேறலாமே?

அது அப்படியே ஆகிப்போச்சு, நாங்க படிச்சு பெரிய ஆளாகி எதாவது நடந்தாதான் உண்டு.

'பாரதிராஜா இந்த ஊரை வெச்சி ஒரு படம் டிரெக்ட் பண்ணலாம்' - எங்களில் ஒருத்தன்

என்ன தம்பி இஞ்சினியருக்கு படிக்கறீங்க டிரெக்ட் அப்படிங்கறீங்க அது டைரக்ட், டைரக்சன்னு சொல்லனும்- அறிவின் பங்காளி வீட்டு அண்ணன்.

அவரு நல்லா இங்கிலீஸ் பேசுவாரு ஜெர்மனியருதி போயி ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்காரு-- நிலவு..

அது ஒரு கதை தம்பி மலேசியா அனுப்பறேன்னு ஒரு திருட்டு கும்பல் கிட்ட காச குடுத்து , கடைசில ஜெர்மனி ஜெயிலில் இரண்டு வருசம் இருந்தேன்.

----------------

மீண்டும் அறிவின் வீடு.

அறிவின் அம்மா எல்லாருக்கும் பசுமாட்டுத்தயிருடன் பழையசோறு கலந்து சிறிய வெங்காயத்துடன் எல்லாருக்கும் காலை உணவு தந்தார், அமிர்தமாக இருந்தது, மதியம் அறிவு வீட்டில் இருந்த சில நாட்டுக்கோழிகள் எங்களுக்கு உணவாகின, இரண்டு நாளும் இப்படியே கழிந்தது.

தம்பிகளா தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வாங்க? நம்ம நிலவு மேலூர்ல வெடிக்கடை போடுறான் அவன் கூட இருந்து பாருங்க.சும்மா படிச்சா மட்டும் போதாது நாலு விசயம் கத்துக்கனும் என்று அறிவின் அப்பா எங்களை தீபாவளிக்கு அழைத்தார்.

சரிங்க கண்டிப்பா வர்றோம். தீபாவளிக்கும் சென்றோம்,வெடிக்கடையில் நின்று நிலவோடு வியாபாரம் பார்த்தோம், இது போல பலமுறை அறிவு வீட்டில் பழைய சோறு,நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி என்று அடிக்கடி விருந்து வாடிக்கையாகிப்போனது எங்களுக்கு.

----

கல்லூரி இறுதியாண்டு முடிந்து ரிசல்ட் வந்து மார்க் சீட் வாங்கிக்கொண்டு வந்து பஸ் ஸ்டாப்பில் உள்ள கணேசன் கடையில் டீ சொல்லி விட்டு திரும்பினேன். அறிவும் அவங்க அப்பாவும் உட்கார்ந்திருந்தனர். என்னைப்பாத்து அறிவின் அப்பா கேட்டார் ஏன் தம்பி வருசா வருசம் வீட்டூக்கு வந்தீங்க அறிவு ஒரு பரிட்சை கூட எழுதைலைங்கிற விசயத்தை எங்க காதுல ஒரு வாட்டி போட்டிருக்கலாமே என்றார்.

அறிவு வீட்டில் சாப்பிட்ட பழையசோறு புளித்த ஏப்பமாய் என்னமோ செய்தது எனக்கு.

Sunday, August 9, 2009

பாஸ் பண்ணது போதும் நிறுத்துடி

”ஏய் சாந்தி அருவாமனையை எடுத்து சுரைக்காய் வெட்டி வை, மத்தியானத்துக்கு கூட்டு பண்ணனும்.”

சரிம்மா நான் போய் யூரின் பாஸ் பண்ணிட்டு வந்து வெட்டி வைக்கிறேன்.

ஆமா 9 வதையே 3 வருசமா பாஸ் பண்றண்ணுதான் சொல்லிட்டிருந்த,அதெல்லாம் ஒன்னும் பாஸ் பண்ணவேண்டாம் நீ போய் வேலையப்பாரு ஆத்தா.

இந்த உரையாடல் சிரிப்பை வரவழைக்கும். ஆனால் எந்த மாதிரி சூழ்நிலையில் இம்மாதிரி உரையாடல் பிறக்கிறது,நான் எடுத்துக்கொள்ளப்போவது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.

மேலே சொல்லப்பட்ட சாந்தி, ஒரு கிராமப்பள்ளிக்கூடத்தில் மூன்று முறை பத்தாம் வகுப்பை எட்டிவிடும் முயற்சியில் தவறுகிறாள்,தவறாமல் பத்தாம் வகுப்பு சென்றவர்கள் எல்லாம் நம் தேர்வுத்திட்டத்தின் படி அறிவாளிகள், அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடுமையாக பயிற்றுவிக்கப்பட்டு, பத்து கேள்வி வங்கி புத்தகத்தை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டால் 100 % தேர்ச்சி பெற வைக்கமுடியும். எங்கள் பள்ளி 100% தேர்ச்சி என்று பெருமை அடித்துக்கொள்ளமுடியும். இந்த 100% தேர்ச்சி என்ற ஒரு மந்திரத்திற்காக 9 ம் வகுப்பில் 50 % மாணவர்கள் வடிகட்டப்படுவார்கள்.அவர்களில் ஒருத்திதான் சாந்தி.

இதே சாந்தி பத்தாவது படித்திருந்தால் ஒரு முறையோ இரண்டு முறையே தேர்வில் தவறி. கேள்வி வங்கிகளுக்கு பழக்கப்பட்டு எப்படியாவது வெற்றி பெற்று பின்னர் நல்ல வேலைக்கும் கூட சென்றிருக்க முடியும், ஆனால் 100% சதவீத தேர்ச்சி மந்திரம் அவளை முடக்கிவிட்டது.

முதலில் இதற்கெல்லாம் காரணம் இந்த தேர்வு முறைதான். பத்தாவது தேர்வு எந்த விதத்திலும் ஒரு மாணவனின் கற்றதை தேர்வு செய்யும் விதத்தில் இருப்பதாக இல்லை. இக்கல்வித்திட்டம் தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது போல் ஆகிவிட்டது.
பத்தாம் வகுப்பு கணக்குப்பாடத்தில் உள்ள அணிகள்(Matrix) மிகவும் எளிது. ஆனால் அதன் பயன் படிப்பவனுக்கும் தெரியாது சொல்லிக்கொடுப்பவருக்கும் தெரியாது. (எனக்கும் தெரியாது). பயிற்றுவித்து 100 மார்க் எடுக்க வைத்துவிடலாம்.

மற்றொரு சிறு உதாரணம் நான் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆயிரம் முறை எழுதச்சொல்லி கொடுக்கப்பட்ட இம்போசிசன் இது

”ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”

இதே மாதிரி பல, ஆங்கில வழியில் கற்றவனுக்கும் இன்றைக்கு வரைக்கும் ஞாபகம் இருக்கும். ஆனால் வேதிவினை என்றால் என்னவென்று கற்றிருக்கமாட்டோம்.

இந்த பத்தாம் வகுப்பு தேர்வு, கற்றல் இல்லா கல்வித்திட்டம், பள்ளிகளின் நூறு சதவீத தேர்ச்சி வெறி, நிறைய சாந்திகளை எளிதில் உருவாக்கும்.

நமது கல்வித்திட்டம் முதலில் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அவ்வப்பொழுது தேர்வாக வைத்து அவன் கற்றதை எழுத/செய்ய சொல்லவேண்டும். தேர்வுக்காக கற்றால் குறுக்கு வழி நிறைய கிடைக்கும், ஆனால் குறுக்கு வழி அனைவருக்கும் கிடைக்காது.ஒரு உருப்படியான கற்றல் கல்வித்திட்டத்துடன் ஆராய்ச்சிகள்,செயல்முறை, மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளும் ஒவ்வொரு ஆண்டும் மாறும் ஒரு சமச்சீர் கல்வித்திட்டம். செயல்படுத்தினால். பத்தாம் வகுப்பு தேர்வு என்ற ஒன்றை கண்டிப்பாக தூக்கிவிடலாம். எல்லாருக்கும் கற்கும்படியான கல்விமுறை வந்தால் தேர்வு என்பது அனைவருக்கும் இனிமையான ஒன்றே.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

"அம்மா நான் சுரைக்காய் வெட்டி வெச்சிட்டேன், நம்ம ஊரு பள்ளிக்கூடத்தில படிச்ச குடுகுடுப்பை மச்சான் பிளாக் எழுதுறார், தமிழ்மண நட்சத்திரம் ஆகிருக்கார், பக்கத்து வீட்டு மலர் வீட்டு கம்பியூட்டர்ல போயி படிச்சிட்டு வறேன்"

அவரு அமெரிக்காவில போய் வேலை பாத்து சம்பாதிச்சிட்டே பிலாக்காய் ஒடிக்கிறார், நீ சமையல் வேலையை பண்ணிட்டு போய் பிலாக்காய் ஒடி ஆத்தா.
---------------
குடுகுடுப்பை என்ன பதிவு எழுதிருக்காரு மலர்.

அடிப்போடி மாவட்டத்திலே பத்தாம் வகுப்புல முதல் ரேங்க் எடுத்து இஞ்சினியரிங் படிச்சிட்டிருக்கிற என்னைப்பத்தி எழுதுவாருன்னு பாத்தா, 9 ம் வகுப்பையை தாண்டாத உன்னைப்பத்தி எழுதிருக்காரு, பெரிய ஸ்டாருன்னு நெனப்புதான்.

Monday, August 3, 2009

தொவையல்: அமெரிக்கத்தொவையல்,பார்ப்பனர், தமிழ்.

1. எனெர்ஜி ஸ்டார்.(energy star).
பழைய குண்டு பல்புகள் 60 வாட் 100 வாட் எடுக்கிறது என்று புதிதாக ஐந்து வருட எனெர்ஜி ஸ்டார் பல்புகள் 13 வாட்டில் 60வாட் வெளிச்சம் கொடுக்கும், ஆனால் பல்பு விலை பத்து மடங்கு அதிகம், ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பல்புகள் 6 மாதத்தில் பஸ்பமாயின.
8000 மணிநேரம் எரித்தால் நீங்கள் 56$ சேமிக்கலாம், அதனால் மறக்காமல் லைட்டை எட்டாயிரம் மணிநேரம் இரவு பகலாக எரித்து 56$ மிச்சம் செய்யுங்கள்.

இரண்டாவதாக front loading வாஷிங் மெசின், இதுவும் பழைய மாடலை விட இரண்டிலிருந்து மூன்று மடங்கு விலை அதிகம் ஆனால் 60% சதவீதம் மின்சாரமும், 60% தண்ணீரும் சேமிக்கலாம்.ஆனால் இவற்றின் விலைக்கேற்ற தரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஐந்து வருடமாவது வேண்டும் நீங்கள் அதிகம் செலவு செய்த பணத்தை எடுக்க. இதற்கிடையில் தரம் குறைவாக இருப்பதால் இதற்கு 5 வருட வாரண்டி வாங்கினால் ஒரு $100 ஆகும். இந்தகாசுதான் நீங்கள் ஐந்து வருடத்தில் சேமிக்க முடியும் அதுவும் கடைக்காரர்களுக்கே சென்றுவிடும். மொத்தத்தில் உபயோகிப்பவர்கள் சுற்றுப்புற சூழலை காப்பாற்றினால், பொருளாதார ரீதியான பலன் அடைவது அவர்கள் இல்லை. இதில் மோட்டிவேசன் எங்கிருந்து வரும்.?

2. வீட்டு லோன்
அதாவது நீங்கள் $100000 க்கு கடன் வாங்கினால், அதுக்கான வட்டி 5% , ஆரம்பத்துல லோன் பீஸ் ஒரு ஆயிரம் டாலர் கைலேந்து கட்டணும், வட்டி குறைக்க ஒரு வழி இருக்கு. அதாவது லோன் அமவுண்டான $100000 ல ஒரு பாயிண்ட் அதாவது $1000 லோன் ஆரிஜினேசன் பீஸ் கட்டினா வட்டி 4.75 ஆ குறையும் உங்க மாதத்தவனை கம்மியாகிடும்.

அப்படிங்களா அப்ப 100 பாயிண்டு லோன் ஆரிஜினேசன் பீஸ் கட்டினா வட்டி எவ்வளவு சார்?

அப்போ உங்களுக்கு 0% வட்டில தறோம் அது மட்டுமில்லாம 90% லோன் தள்ளுபடியும் பண்றோம். நீங்க $10000மும் லோன் பீஸ் $1000ம் கட்டினா போதும்.

90% தள்ளுபடி 0% வட்டி நல்லா இருக்கு இந்த டீல் நான் இதையே எடுத்துக்கறேன்.

3.பக்கத்தில் வாழும் தமிழர்கள் ஒரு பத்து குடும்பங்கள் சேர்ந்து, குழந்தைகளுக்கான தமிழ் பாட்டு, நாடகம் நடத்தலாம் என்று என் மகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஏற்பாடு செய்திருந்தார். மூன்று வாரம் ஆடல்,பாடலில் கடினப்பயிற்சி தன் சொந்த முயற்சியில் அவருடைய வீட்டில் ஒரு பைசா காசு வாங்காமல் அனைவரையும் ஒருங்கினைத்து நடத்தினார். என் மகளின் பயிற்சி முழுவதையும் 1000% அற்பணிப்போடு என் மனைவி மட்டுமே செய்தார்(என்னுடைய பங்களிப்பு அவர்களின் உழைப்பை திருடி பதிவாக்குவது மட்டுமே). தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்தது. அனைத்துக்குழந்தைகளும் நல்ல தமிழில் பேசினர். பலருக்கு எழுதப்படிக்கவும் தெரியும்.தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சி அளப்பறியது.

சீராரும் வதனமென.... திராவிடநல் திருநாடும் .... என்று பாடியதில்,என்னையும் மற்றொருவரையும் தவிர தமிழின விரோதிகள் ஆரியர்கள் /பார்ப்பனர்கள் என வசைச்சொல் வாங்குபவர்கள்.

ஒன்று மட்டும் புரியவில்லை இவர்கள் தமிழை அவ்வளவு சிரமம் எடுத்து படிக்கிறார்கள். தமிழிலேயே குழந்தைகளோடு வீட்டில் பேசுகிறார்கள், தெரிந்த தமிழர்களை தமிழ் கற்றுக்கொடுக்க சொல்லி ஊக்குவிக்கிறார்கள்.அவர்களிடம் கடின உழைப்பும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்துகொண்டே இருக்கிறது, எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் தமிழையும் விடாமல் பேசுவார்கள் இவர்கள் தமிழ் விரோதிகள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனக்கும் அவர்களோடு பல கருத்து வேறுபாடுகள் உண்டு அது சுமூக சூழ்நிலையில் களையப்படவேண்டுமே தவிர வெறுப்புணர்ச்சியை தூண்டி அல்ல. அவர்கள் தமிழர் அல்ல என்று வேற்றுமை உருவாக்காமல் அனைத்து தமிழர்களும் உள்ளடக்கிய ஒரு சுமூக சூழ்நிலையை ஏற்படுத்தி அனைத்து அறிவும் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்..சமூகங்களிடையே புரிதலை ஏற்படுத்தி முன்னேற வழி இருந்தால் அதை செய்வோமே.

அவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை பதிவாகப்போடலாம். ஆனால் முதலில் சுய விமர்சனம்.

ஹரிணியின் பாட்டு இங்கே

Monday, July 27, 2009

இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே.

இடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு? கு.ஜ.மு.க முடிவு சரியே.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=12704

ஆட்சிப்பணியும் குடும்பப்பணியும் அதிகமாக இருப்பதால், கட்சிப்பணி எனக்கு தோளில் கிடக்கும் துண்டு போன்றதால் என்னுடைய கட்சியான கு.ஜ.மு.க பணிகளுக்கு சிறிது நாள் ஓய்வு.

குடுகுடுப்பை.

பி:கு: தலைப்புக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Friday, July 24, 2009

சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.

சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.

மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கு.ஜ.மு.க போட்டியிடுவதில்லை என்று கு.ஜ.மு.க பொதுக்குழு கூடி முடிவெடுத்துள்ளது.

நிறைய உருப்படியான வேலைகள் இருக்கும் இந்த நேரத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது கால விரயம் என்று கு.ஜ.மு.க பொதுக்குழு ஒரு மனதாக முடிவு செய்து உள்ளது.

குடுகுடுப்பை
பொதுச்செயலாளர்
குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.

Monday, July 13, 2009

தங்கமணி ஸ்பெசல் டீ

என்னங்க 6:30 மணியாச்சு எந்திரிங்க...
டீ வேணுமா , காபியா.

டீயே போடு , காபி வடியறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது.

சரி டீயே போடுறேன், நீங்க கொஞ்சம் இந்த டீ போடுற பாத்திரத்தை எடுத்து கொடுங்க

காலையிலேயே என்ன கம்பியூட்டர்ல, சீக்கிரம் வாங்க

ம்ம்ம்
எடுத்துட்டீங்களாஅப்படியே கொஞ்சம் அடுப்ப ஆன் பண்ணி ஒரு டம்ளர் தண்ணி சுட வைங்க..

வெச்சிட்டேன்.இன்னைக்கி மார்க்கெட் என்ன ஆகப்போகுதோ..

அது இருக்கட்டும், அந்த கப்ப எடுத்து மைக்ரோவேவ்ல 2% பால் 1:45 நிமிடம் வைங்க, நான் பாப்பாவை எழுப்புறேன்.

வெச்சிட்டேன்.

ரெண்டு ஸ்பூன் டீத்தூள் எடுத்து அந்த சில்வர் பாத்திரத்தில போட்டு அந்த வெண்ணீர எடுத்து ஊத்தி வைங்க நான் வரேன்.

ம்ம்ம்ம்

பால் எவ்ளொ நேரம் சூடு பண்ணீங்க்

2 நிமிடம்.

1:45 நிமிடம் தான வைக்க சொன்னேன், அது பொங்கி ஊத்தி போச்சு, யாரு தொடக்கிறது.

சரி விடு. எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

உங்களுக்கு தெரியாது, அந்த சில்வர் டம்ளரையும் டீ பில்டரையும் எடுங்க..

எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

டீ ஸ்டாராங்கா இருந்தா கசக்கும், நான் சரியா கலந்து தரேன். அப்படியே சக்கரையை எடுங்க..

ரெண்டு ஸ்பூன் சக்கரை போடுங்க..

மெதுவா கீழ கொட்டாம..

ம்ம்ம்

டீ நல்லா இருக்கா

ம்ம்ம்

என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

நல்லா இருக்கு

பி:கு: தினமும் டீ குடிப்பதால் மீள் பதிவு

Monday, July 6, 2009

பின் பழமைத்துவ வர்ணனை.

பின் பழமைத்துவ வர்ணனை.

அந்த சுவர் அவள் முதுகைப்பார்த்துக்கொண்டிருந்தது, அழகாக இருந்தது அவளின் முதுகு மட்டுமல்ல எதிரில் நின்று அவளின் கூர்மையான கண்களை மட்டுமே பார்த்து பேசிக்கொண்டிருந்தவனின் முகத்தில், அவளின் முதுகைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்த இந்த சுவரின் மீதான கோபத்தை அவளிடம் காண்பிக்காமல் சுவரிடம் காண்பித்த கோப உணர்ச்சியும்தான். சுவர் நினைத்தது ஜன்னல்கள் உடைக்கப்பட்ட பின் கவனிக்க ஆள் இல்லாமால் நான் அலங்கோலமாக இருக்கிறேன், அங்கே ஜன்னல் நீக்கப்பட்ட பின்னர் இத்தனை அழகாய் இருக்கிறதே அதனால்தான் பால் வித்தியாசம் இல்லாமல் அது கவனிக்கப்படுகிறதோ.சுவரில்லாத சித்திரம் அழகாய் இருக்கிறதே , அந்த சித்திரம் ஏன் என் மேல் இருக்கக்கூடாது, சித்திரத்தோடு சுவர் அழகாய் இருக்குமே.சற்றே கீழே இறங்கி பார்த்தது சுவர், அருமையான அழகான வளைவுகள், இது போன்று வளைவுகள் வைத்து சுவரும் கட்டியிருந்தால் எப்படி இருக்கும், ஒருவேளை வளைவுகள் ஆபத்தை தரும் என்பது தெரிந்தே கட்டவில்லையோ.எதிரில் நின்று பெண்ணிடம் பேசிக்கொண்டே சுவரைப்பார்த்துக்கொண்டிருந்த ஆடவன், சுவரின் அடுத்தகட்ட வர்ணனையை நினைத்து அச்சம் கலந்த கோபத்தோடு அவனுக்கு பின்பக்கம் உள்ள சுவற்றின் மீது சாய்ந்தான். அவன் முதுகு ஈரமாகியது. அவன் காதுக்குள் அந்த சுவர் சொன்னது முட்டாளே நகர்ந்து நின்றிருக்கலாமே, அந்த சுவர் பெண்ணின் பின் பக்கத்தை வர்ணித்துவிட்டது, நான் முன்பக்கம் வர்ணிக்கவேண்டும் நீ உன் முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறாய். பெண்ணின் முன்பக்கம் ஆணின் முதுகு போன்று இருக்கும் என்று ஒரு வரியில் வர்ணித்திருக்கிறேன்,நான் இப்போ என்ன செய்வது.

பின்:) குறிப்பு : எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.

Wednesday, July 1, 2009

தொவையல் :வட அமெரிக்க,சென்னை வலைப்பதிவர் கிசுகிசு,ஜாக்சன்.

இவர் சாக்லேட் உச்சரிப்பு போன்று வரும் ஊரில் வசிப்பவர், பழம்பெரும் நடிகை ஜெயஸ்ரீயை பார்ப்பதற்காக அட்லாண்டமான ஊருக்கு செல்கிறார் என்று செய்தி. சாக்லேட் ஊரில் வசிக்கும் இன்னொரு பதிவர் வீட்டிற்கு ஓசியில் புத்தகம் எடுக்க சென்ற போது பழம்பெரும் நடிகையை பார்க்கப்போகும் செய்தியை சொல்லவில்லையாம், எப்படியோ தெரிந்து கொண்ட அவர் காச்சுமூச்சு என்று கத்தினாராம்.

இப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.
----

மைக்கேல் ஜாக்சனுக்கு 400 மில்லியன் கடன் இருக்கு, அப்படின்னு அவரு இறந்த நாள் முதலா அதையே திரும்ப திரும்ப சொல்லி அதைவிட கூடுதலாக நிறைய ஊடகங்கள் சம்பாதிச்சிருப்பாங்க போல, நானும் அவர பத்தி எழுதிட்டேன், எல்லாரும் கொஞ்சம் பின்னூட்டமும் ஓட்டும் போடுங்க,அடுத்தவன் துயரத்துல எனக்கும் கொஞ்சம் பலன் கிடைக்கட்டும்.

---

தற்சமயம் சென்னைப்பதிவர்களை மையங்கொண்டு அடிக்கும், சாரு சம்பந்தமான சண்டை WWF மாதிரி எல்லாருமே சொல்லி வெச்சு சும்மாங்காட்டியும் அடிச்சிக்கிறாங்க அப்படின்னு ஒரு புரளிய கெளப்பலாமான்னு யோசிக்கறேன்.

Monday, June 29, 2009

அந்த மூன்று சகோதர டாக்டர்கள் , கூடுதலாக ஒரு மொள்ளமாறி.

குடுகுடுப்பை: காலில் வெட்டிய மம்பட்டியும் தையல் போட்ட டாக்டரும்.

இந்த மூன்று சகோதர டாக்டர்களில் மூத்தவர் , கிராமப்புற மக்களின் அறியாமையை பயன்படுத்தி வயிற்று வலி வந்தால் ஊதிக்கல் எடுக்கிறேன் என்று வாயில் புல்லாங்குழல் போன்ற ஒன்றை வைத்து ஊதி இத்தனைக்கல் , வெங்காயத்தோல் , தக்காளித்தோல் எடுத்தேன் இனி சரியாகிவிடும் என்று கூறி கொடுக்கும் காசை வாங்கிக்கொள்வார். இவர் மருந்தெல்லாம் கொடுப்பதில்லை அந்த வகையில் நல்லவர்.! . காலப்போக்கில் இந்த மாதிரி ஏமாற்று வேலைகலை மக்கள் நம்பாமல் போனதால் இவருடைய வயிற்றுப்பிழைப்பும் மிகவும் சிரமமான நிலையிலேயே இருந்தது.

இரண்டாவது சகோதர டாக்டர், உருவான விதம் குறித்து எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் கூறியது, அன்றாட வாழ்க்கையில் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஏதோ ஒரு வேலைக்கான(சரியாக ஞாபகம் இல்லை) படிப்பும் , ஒரு வருடத்திற்கும் மேலான பயிற்சியும் எடுத்தவர். பின்னர் இவரும் ஏதோ RMP என்று தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டார், அது நிஜமாக படிச்சி வாங்கினதா அடிச்சி வாங்கினதா என்பதெல்லாம் தெரியாது. எங்கள் பகுதியில் மருத்துவம் செய்யத்தொடங்கினார், காய்ச்சல், வெட்டுக்காயம், பாம்புக்கடி என்று அனைத்துக்கும் மருத்துவம் பார்த்தவர். ஏழ்மை நிலையில் இருந்து வந்ததினால் மூன்றிலிருந்து ஐந்து ரூபாய்தான் வசூலிப்பார், சற்று பணக்காரர்களிடம் இருபது ரூபாய் வரை வாங்குவார். இவருடைய மருத்துவமனையில் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு நூறு பேருக்காவது மருத்துவம் பார்ப்பார். மக்கள் இப்படி இவரிடம் போய் மருத்துவம் பார்க்கிறார்களே MBBS படித்த டாக்டர்களிடம் செல்லாமல் என்று நினைப்பதுண்டு, MBBS படித்த டாக்டர்கள் அங்கு யாரும் இல்லை,இருந்தாலும் மக்கள் அங்கே சென்றிருப்பார்களா என்பதும் சந்தேகமே.ஆனால் இவர் தன் எல்லை மீறி மருத்துவம் பார்ப்பதில்லை, உடனடியாக பக்கத்து நகரில் குறைந்தது MBBS ஆவது படித்த மருத்துவரிடம் அனுப்பிவிடுவார். இவரின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இரண்டு வருட காலம் மருத்துவம் செய்யவில்லை, அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சுரத்திற்கு ஊசி போட கூட ஆளில்லாமல் தவித்தபோதுதான் அவரின் அருமை புரிந்தது. உடல்நிலை தேறிய பின் மீண்டும் மருத்துவத்தை ஆரம்பித்தார்.

மூன்றாவது சகோதரர் அதே பகுதியில் ஆனால் வேறு ஊரில் , கிளினிக் வைத்திருந்தார், இவர் மேல் மக்களுக்கு அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை, பெரும்பாலும் சைக்கிளில் ஊர் ஊராக சென்று வயோதிகர்களுக்கு ஊசி போட்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார். இவர் நகரில் சில டாக்டர்களிடம் கருக்கலைப்பு செய்வதில் உதவியாளராக சில காலம் பணி புரிந்திருக்கிறார். பின்னர் இதே வேலையை தனியாக செய்ததாக அரசல் புரசலாக செய்தி உண்டு, திருட்டு கருக்கலைப்பு செய்பவர்கள் உள்ளூரில் செய்ய மாட்டார்கள் அல்லவா அதனால் இவரைத்தேடி 100 கி.மீட்டர் தொலைவில் இருந்து இரவில் ஆள் வருவார்கள் என்ற வதந்தியும் உண்டு.

இந்த மூவரில் மூன்றாமவர் ஒருநாள் திடீரென்று மாரடைப்பில் காலமானார், இவர் இறக்கும்போது நாற்பது வயது இருக்கும்.குடும்பமும் குழந்தைகளும் பிழைக்க வழியில்லாமல் அவர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.

வெகு சிறிது காலத்தில் இரண்டாமவரும் மாரடைப்பில் காலமானார், ஆனால் இவர் தன் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் சொந்த வீடும் சிறிது சொத்தும் சேகரித்திருந்தார்.

முதாலாமவரும் பின்னர் மாரடைப்பில் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்.ஆனால் உண்மையா எனத்தெரியாது. மூன்று சகோதரர்களும் ஐம்பது வயதிற்கு முன்பாகவே மாரடைப்பால் காலமாகி இருக்கிறார்கள் என்ன காரணமாக இருக்கும்
.....

இன்னோரு மிகப்பெரிய மொள்ள மாறி இடைப்பட்ட காலத்தில் எங்கள் ஊர்ப்பகுதியில் மருத்துவம் பார்க்க வந்தார், இவர் வைத்தியத்தில் இவரேதான் மாத்திரை கொடுப்பாராம், ஒருநாள் அவரிடம் வேலை பார்த்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் அவர் கூற்றின் படி, இவர் மாத்திரை கேப்சூலில் வெறும் ரவையை (நல்லவேளை வெறும் ரவை)போட்டு இதுதான் மாத்திரை என்று சொல்லி விவசாயக்கூலி செய்யும் ஏழைகளிடம் விற்றிருக்கிறார். எப்படியோ தெரிந்து கிராம மக்கள் இவரை அடித்து துரத்திவிட்டனர். 4 வருடங்களுக்கு முன் ஒரு நாள் ஜீனியர் விகடனில் படித்தேன் இவர் ஏதோ மாந்திரீகம் அப்படி இப்படி என்று செய்வதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டதாக.

Thursday, June 25, 2009

காலில் வெட்டிய மம்பட்டியும் தையல் போட்ட டாக்டரும்.

பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப்பாவுக்கு உதவியா தண்ணிக்கட்டப்போறது உண்டு, அந்த நேரங்களில் என்னோட வேலை பொதுவா மடை கட்டுறது, வேற யாராவது தண்ணிய திறந்து அவங்க வயலுக்கு எடுத்துட்டு போகாம காவல் காக்கிறது இதுதான் என்னோட வேலை.

ராத்திரி நேரத்துல தூக்கம் வராமல் இருக்க எதாவது சூடா குடிக்கனுமில்லையா, இந்த தண்ணிக்கட்டற கூட்டத்த கணக்கு பண்ணியே என்னோட பங்காளி ஒருத்தரு நடுராத்திரி ஒரு மணிக்கெல்லாம் டீக்கடை திறந்துருவாரு, அப்போ ஒரு லிட்டர் பால் வாங்கி பத்து லிட்டர் தண்ணி ஊத்தி சுடவைப்பாரு, அன்னைக்கு இரவு வரைக்கும் பால் குண்டான் குறையாம அப்பப்போ தண்ணீர் ஊத்திட்டே இருப்பாரு. அமெரிக்கா காரன் என்னமோ 1% பால் 2% பால் அப்படிங்கறான் இப்போ, இவரோட கடைல உள்ள பால் குண்டான்ல எந்த நேரத்துல எத்தனை % பால் இருக்குன்னு எவனாலயும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனா இவரோட டீயில என்ன மகிமைன்னா , சூடுன்னு அப்படி ஒரு சூடா போட்டுக்குடுப்பாரு, அது போல சக்கரையும் அளவில்லாம போட்டுக்குடுப்பாரு,அதுனால டீயில பால் இல்லாத விசயம் அடிபட்டுப்போயிரும்.

இஞ்சினியரிங் காலேஜ்ல சேந்தப்புரம் ஒரு நாள் பங்காளி கடைல ஒரு மதிய நேரம் ஒரு சுடுதண்ணிய குடிச்சிட்டு மடைகட்ட போனேன், பெரிய படிப்பு படிக்கிற பந்தாவுல மம்பட்டிய ஸ்டைலா வெட்டினதுல, நேரா கால் பாதத்தில் விரல்கள் இணையும் இடத்தில வெட்டிருச்சு , கட்டை விரல் தவிர மீதி அனைத்து விரல்களையும் பாதிக்கற அளவுக்கு நீளமான வெட்டு, நல்லா ஆழமாகவும். உடனே தலைல கட்டிருந்த பச்சைத்துண்ட எடுத்து காலில் கட்டி, பங்காளி கடைக்கு வந்துட்டேன். இரத்தம் நிறைய போயிடுச்சு அப்பவே, டீத்தூள் வெச்சி கட்டினா இரத்தம் வருவது நின்னுரும்னு சொல்லி அவரு கடைல டீத்தூள்ங்கிற பேருல போடுற தூள வெச்சு கட்டுனார்.

அப்படியே பங்காளியோட பையனோடா சைக்கிள்ல டாக்டர் வீட்டுக்கு போயாச்சு, டாக்டருக்கு வயசு எழுபது தாண்டியாச்சு,அவரு நொடத்துக்கு கட்டுப்போடற மற்றும் ஹோமியோபதி டாக்டர், ஆனா உபயோகப்படுத்துற மருந்தெல்லாம் இங்கிலீசு மருந்துதான், ஊருல யாருக்காச்சும் காச்சல்னா ஒரு ஊசி போட்டு 3 ரூபா வசூல் பண்ணிப்பாரு. அவருகிட்டதான் காலைக்கொடுத்தேன்.

உடனே தையல் போடனும் இல்லாட்டி ஆறாது, என் பேரன் ராகவன யாராச்சும் பாத்தீங்களான்னு பக்கத்துல உள்ள எல்லாரையும் கேட்டாரு. இந்த ராகவன் அவரோட மகள் வயிற்று பேரன், அவனை பத்தாவது வரைக்கும் படிக்க வைக்க படாத பாடு பட்டு முடியாம அவனையும் டாக்டர் ஆக்கிட்டாரு, இவருக்கு துணையா கட்டு போடறது, இந்த மாதிரி வெட்டுக்காயங்கள், தட்டுக்காயங்களுக்கு தையல் போடுறதெல்லாம் அவந்தான்.இதற்கிடையில் அவரோட மகன் வயித்து பேரன பத்தாவது பாஸ் பண்ண வைக்க முயற்சி பண்ணி முடியாம அவனும் இப்ப ஜூனியர் டாக்டர்.

நிரம்ப நேரம் தேடியும் கண்ணு தெரிந்த இளம் டாக்டர்கள் இருவரையும் காணவில்லை, என் பங்காளி கூட டெய்லருதான் அவரையே தையல் போட சொல்லிருக்கலாம் ஆனா அவரு பொங்களுக்கு சட்டை தைக்க குடுத்தா தீபாவளிக்குதான் தைச்சு தருவாரு. அதனால பெரிய டாக்டரே தையல் போட்டாரு, அப்புரம் ஒரு ஊசியும் போட்டாரு சுத்தமா வலிக்கவே இல்லை.

ஒரு வாரம் கழித்து தையல் பிரிக்க போனேன், ராகவன் இருந்தான், உங்க தாத்தா எங்கடான்னேன்.

எதுக்கு மாப்பிளை, அவன தேடுற? நீ தையல் போட வந்தப்போ நான் பின்னாடி படுத்து தூங்கிட்டிருந்தேன் கிழப்பய எழுப்பல, சரி மாப்பிளை நான் தையல் பிரிக்கிறேன்.

உனக்கு தெரியுமாடா?

நீ வேற இப்ப நாந்தான் டாக்டரு , கிழவன் டம்மிதான். ஊரு காட்டுல உள்ள இழுத்துட்டு கெடக்கிற கெழங்கட்டையலுகெல்லாம் நாந்தான் மாப்பிளை சத்து ஊசி போடுறேன். ராசிக்காரன் நான் இப்போ சத்து ஊசி போட்டவுடன் கெழடெல்லாம் ஓட ஆரம்பிச்சிருது.

இங்க பாரு தையல் போடுறேன்னு கொதறி வெச்சிருக்கான்.என் தாத்தனுக்கு இப்பெல்லாம் கண்ணு சரியா தெரியறதில்லை. சரி மாப்பிளை அப்படியே ஒரு ஊசி போட்டிருவோம்

டேய் வலிக்குதுடா? உங்க தாத்தா ஊசி போட்டா வலிக்காதுடா?

அந்த ரகசியம் இது வரைக்கும் உனக்கு தெரியாதா? அவன் ஊசிய உடம்புலயே குத்த மாட்டான், சும்மா கிட்ட வெச்சு வலிக்குதா வலிக்குதா கேட்டுகிட்டே மருந்த வெளில விட்டிருவான். இது தெரியாம பெரிய டாக்டர் வலிக்காம ஊசி போடுவாருன்னு பல பேரு நெனச்சிட்டு இருக்காங்க.

எனக்குத் தெரிந்து இந்த மாதிரி டாக்டர்களிடம் ஊசி போட்டது அதுதான் கடைசி, இன்னமும் பாதத்தில் அந்த தையல் தடம் இருக்கிறது, அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உடனே இதையே பதிவா போட்டாச்சு.

கால ஓட்டத்தில் தாத்தா டாக்டரும் பேரன்களுக்கு பயந்து எங்கோ சொல்லாமல் கொள்ளாமால் ஓடிவிட்டார். பேரன்களும் தாத்தா இல்லாமல் டாக்டர் தொழில் செய்ய முடியாமல் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை. நல்லவேளை மத்திய தர மக்கள் அனைவரிடமும் மோட்டார் சைக்கிள் இருக்கும் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனிதாபிமானமும் மிச்சமிருப்பதால் பக்கத்து நகரத்தில் உள்ள மருத்துவமனைகளை அடைவது எளிதாகி உள்ளது.

எங்கள் பகுதியில் மருத்துவம் செய்த சகோதர டாக்டர்கள் பற்றி விரைவில் ஒரு பதிவு.