Sunday, November 22, 2009

கல்லூரி சாலை: முதல் ஆண்டு தேர்வு முடிவும், புதிய குடிகாரர்களின் உதயமும்.

கல்லூரி முதலாண்டு முடிந்து சீனியராகி, மூன்றாவது பருவத்தில் அடி எடுத்து வைத்தாயிற்று. ஒரு மாதம் கழித்துதான் இடி மாதிரி வந்து சேர்ந்தது முதலாண்டு முடிவுகள். முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி, சிலருக்கு எதிர்ப்பார்த்தவை, வெகு சிலருக்கு மகிழ்ச்சி. தெரிந்த சீனியர்கள் என்னடா ஆல் கிளீயரா, பூண்டாயிருசா, தருசாயிருச்சான்னு கேக்க ஆரம்பிச்சாட்டாங்க.

என்னடா சோகமா இருக்கே எத்தனை பேப்பர் போச்சு?

அஞ்சு?

அப்ப நீ இங்கிலீசும் , B1 உம் பாஸ் சரியா? இதில யாரும் பெயில் ஆகமாட்டாங்க.

இல்ல ஏழும் போனவனெல்லாம் இருக்கான்.

அது யாருடா அது, இதுலக்கூட பெயில் ஆனவங்க..

அந்த ரெண்டு பேரும் இங்கிலீஸ்ல எழுத பயந்து எந்தப்பரீட்சையும் எழுதல..

அடப்பாவிகளா, முத வருசமே ஸ்கூட் விட்டாங்களா? இங்கே முக்கால்வாசிப்பேர் தமிழ் மீடியம் தானடா பாஸோ /பெயிலோ பரீட்சை எழுதுங்கடா? கொஞ்ச நாள்ல் புரிஞ்சுடும் மீடியம் ஒரு மேட்டரே இல்லன்னு. நீயும் தமிழ் மீடியந்தானே, அஞ்சு போச்சுன்னு கவலைப்படாதே எனக்கும் அஞ்சுதான் போச்சு, இந்த செமஸ்டர்ல உங்காந்து படிச்சீன்னா எல்லாத்தையும் தூக்கிரலாம்.அப்படியே அந்த ரெண்டு பேரையும் பரீட்சை எழுத சொல்லுடா.

சரிங்க சொல்றேன்..

ஹாஸ்டலுக்கு வந்தோம்.

"பூண்டுதான் கப்புதான் தருசுதான்
பூண்டுதான் கப்புதான் தருசுதான்"
பாடல் சத்தம் காதை கிழித்தது.

சென்னையைச்சேர்ந்த நண்பன் ஒருவன், எல்லாம் நல்லாதாண்டா எழுதிருந்தேன் ஆனா பிஸிக்ஸ் எப்படியோ போச்சுடா, அதுவும் பதினாலு மார்க் போட்டிருக்கான், எனக்கு ஒன்னும் புரியலடா வாழ்க்கையிலே முதன் முதலா பெயிலாயிருக்கேன்,டவுணுக்கு போய் தண்ணி அடிக்கலாமாடா?

ஆமாண்டா போய் அடிப்போம், ஆறு பேப்பர் போச்சு அதுக்கு கூட கவலைப்படல, ஆனா computer science ல பாஸாயிட்டேன், அந்த மகிழ்ச்சியை கொண்டாட இன்னைக்கு ஊத்திர வேண்டியதுதான் என்றான் அறந்தாங்கியான்

சரிடா நீங்களெல்லாம் இதுக்கு முன்னாடி குடிச்சிருக்கீங்களா? நான் இதுவரை குடிச்சதில்லை சென்னைக்காரன்

நானும் குடிச்சதில்லைடா -குடுகுடுப்பை.

நான் இருக்கேண்டா கவலைப்படாதீங்க நானெல்லாம் அந்தக்காலத்திலேந்த ஊத்தப்போடுறவங்க - காரைக்குடியான்.

பேசிட்டே இருந்தா வேலைக்காவாது,சரக்க ஞாபகப்படித்தீட்டீங்க கிளம்பலாம் - தூத்துக்குடியான்.

ஒரு வழியா டவுணில் ஒரு பாரில் கொஞ்சம் பீர்,விஸ்கி வாங்கினோம். காரைக்குடியானின் பரிந்துரையில், எல்லாரும் முத தடவை குடிக்கிறீங்க பீர் குடிங்க இல்லாட்டி கொஞ்சமா விஸ்கி குடிங்க என்றான். அவனுக்கு மட்டும் ஓல்ட் காஸ்க் ரம் வாங்கிக்கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமா குடிங்க இல்லாட்டி சரக்கு உள்ள போயி டகால்டி பண்ண ஆரம்பிச்சிரும் அப்புறம் நெஞ்சை அடைக்கும்.- காரைக்குடியான்.

ஆமாண்டா சிப் பண்ணிக்குடிங்க அப்பதான் சூப்பரா இருக்கும். தூத்துக்குடியான்.

நானும் காரைக்குடி, தூத்துக்குடி மாதிரி ஊர்ல பொறந்திருக்கலாம்டா குடி அனுபவம் உங்களுக்கு இருக்கு எனக்கு ஒன்னுமே இல்லடா - என பிஸிக்ஸ் போன சென்னைக்காரன் குடிக்கும் முன்னரே புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

எப்படியோ அந்த நாற்றத்தையும் சகித்துக்கொண்டு , நிறைய ஆம்லெட்டுடன் கொஞ்சமாக பீர், விஸ்கி என முதல்முறை குடிகாரர்கள் அனைவரும் குடித்திருப்போம்.

டேய் குடுகுடுப்பை, ஜெயின் @ ஜெயின் கெமிஸ்ட்ரி புத்தகத்தோடயோ திரிவ, கெமிஸ்ட்டரில எத்தனடா வாங்குன?

ஏதோ பத்துக்குள்ளதாண்டா , இந்த முறை மரியாதையா நோட்ஸ படிச்ச பாஸ் பண்ணிறவேண்டியதுதான்.

ஒரு வழியாக சோகத்தை பேசித்தீர்த்துக்கொண்டு மூன்றாவது செமஸ்டரில் எல்லாம் படித்து நான்காவது செமஸ்டர் செல்லும்போது ஆல் கிளியரா போகனும்டா, காசு செலவு பண்ணி கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க நாம இப்படி இருக்கக்கூடாது என உறுதிமொழியெல்லாம் எடுத்துக்கொண்டு சாப்ப்பிடுவதற்காக நகரில் பிரபலமான அபிராமி சைவ ஹோட்டலுக்குச்சென்றோம்.

ஆர்டர் பண்ணிய நெய் தோசை ஒன்று கூம்பு வடிவில் நிறுத்தி மேசை மேல் வைத்தார் அபிராமி ஊழியர், சென்னைக்காரன் உடனடியாக அதனை எடுத்து தன் தலையில் மாட்டிக்கொண்டு மாப்பிள்ளை நான் பிஸிக்ஸ்ல பெயிலா போனதுக்கு எனக்கு கிரீடம் கொடுத்துருக்காங்கடான்னா அழ ஆரம்பிச்சிட்டான், அப்படியே படியிறங்கி ரோட்டுக்கும் வந்து விட்டான். இதுல கொடுமை என்னான்னா அவன் பிஸிக்ஸ் மட்டும்தான் பெயிலு, மத்தவனுக்கெல்லாம் நாலுக்கு மேற்பட்ட நெய்தோசை வேணும் கிரீடம் வைக்க.

ஒருவழியாக சாப்பிட்டு பில் செட்டில் பண்ணி அபிராமியில் இருந்து படியிறங்கும்போது ஓல்ட் காஸ்க் , காரைக்குடியானின் வயிற்றில் டகால்டி வேலையைக்காண்பித்தது, படியிலேயே வாந்தி எடுத்தான், சுருண்டு விழுந்தான். பின்னர் வாடகைக்கார் எடுத்து அவனை ஹாஸ்டல் கொண்டு போய் சேர்த்த எண்ணிக்கை ஒன்றில் ஆரம்பம் ஆகியது இந்நன்னாளில்.

இந்த சம்பவத்தில் வந்த யாரும் வாழ்க்கையில் வழுக்கிவிடவில்லை, குடிகாரர்களாகவும் இல்லை. ஒருவனைத்தவிர, அவன் மிகவும் நல்லவன் ஆனால் சவால்களை சந்திக்க பயந்து தேர்வு எழுதவே எழுதாதவன். களவும் கற்று மற என்ற தமிழ்ப்பழமொழிக்கேற்ப அடி எடுத்து வைக்க துணிச்சல் இல்லாதவன் நடக்கமுடியாது, என்ற உண்மையை எங்களுக்கு உணர்த்தியவன்.இந்த பதிவில் அவன் குறிப்பிடப்படவும் இல்லை, ஆனாலும் என்றாவது ஒருநாள் அவனுக்கும் துணிச்சல் வரலாம்.

பி:கு: இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுயநினைவில் இல்லாத காரணத்தால் சரியாக ஆவணப்படுத்த முடியவில்லை, இருந்தாலும் இந்த வரலாற்று நிகழ்வு பின்வரும் தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஜக்கம்மா இட்ட கட்டளையால் இந்த பதிவு.

உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...

உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...

இடம் : சரவணா மேன்சன், திருவல்லிக்கேணி.

காலையில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது அறைக்கதவை யாரோ தட்டுகிறார்கள், திறந்து பார்த்தேன் ஊரிலிருந்து அருள் வந்திருந்தான்.அருள் என்னைவிட ஐந்து வயது பெரியவன் ஆனாலும் வாடா போடா என்றுதான் அழைத்துக்கொள்வோம்.

அருள்: என்னடா வாத்தி மவனே, எப்படி இருக்கே, நான் ஒரு வேலையா வந்தேன், எங்கண்ணன் மச்சான் துபாய்லேர்ந்து வந்திருக்கான் அசோக் நகர்ல ஒரு வீடு வருது வாங்கப்போறான், அதுக்கு உதவியா என்ன கூப்பிட்டு வந்திருக்கான்.

நான் : சரி சரி இங்கே தங்கிக்க, நான் ஆபிஸ் போயிட்டு சாயந்தரம் வரேன்.

அருள்: சரி போயிட்டு வா, நாங்களும் வேலையை முடிச்சிட்டு வரோம்.

----

அன்றிரவு:

அருள்: ஊர்லேந்து வந்திருக்கேன், என்னைக்கவனிடா, பணத்தை எடுத்துட்டு வாடா போய் பார்ல ஒரு ரவுண்டு உட்டுட்டு அப்படியே டிபன் பண்ணிட்டு வருவோம்.

நான்: பொறுடா ATM கார்ட எடுத்துக்கிட்டு வரேன்.

அருள் : நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ATM கார்டு , செக் புக்கு, எனக்கு தெரிஞ்சு உங்க ஊர்ல டவுசர் போடாம திரிஞ்சவன். எல்லாம் நேரம். நானும் உன்னை மாதிரி ஆகிருப்பேன், உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது.

நான்: எங்கப்பா எங்கடா உன் படிப்ப கெடுத்தாரு?

அருள்: ஆறாவது முனியங்கோயில் மந்தை பள்ளிக்கூடத்திலதான், சேத்தாங்க, நீ அப்ப ஒன்னாவது படிச்சிருப்ப,பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச முதநாளே உங்கூரு பயலுகளுக்கும் எங்கூரு பயலுகளுக்கும் தகறாறு ஆகிப்போச்சு, புதுசா சாமண்றி பாக்ஸ் வாங்கி கொடுத்திருந்தாங்க, அதுலேந்து காம்பஸ எடுத்து உங்கூரு பயலுவ சைக்கிள் எல்லாம் பஞ்சர் ஆக்கிப்புட்டேன், பத்து பாஞ்சு பேரு சேந்து என்னை மடக்கி முடிச்சி உங்கப்பன்கிட்ட ஒப்படைக்க வெச்சிருந்தாங்க, உங்கப்பன் பேர கேட்டாலே ஏரியாவிலே எல்லாரும் வணக்கம் சொல்வாங்க, மாட்டினா சங்குதான்னு எப்படியோ கழண்டு ஓடிட்டேன். அப்படியே கொண்டு போய் தஞ்சாவூர் ஆண்டனிஸ் ஸ்கூல்ல சேத்துட்டாங்க.

நான்: ஆண்டனிஸ் நல்ல ஸ்கூல்தானடா?

அருள்: அது என்னமோ சரிதான்,அதுனாலதான் அங்க சேத்தா அருள் வரும்னு சேத்தாங்க , ஆனா ஆண்டனிஸுக்கும் அருள் தியேட்டருக்கு ஒரே பஸ் ஸ்டாப் , இந்தப்பக்கம் ஆண்டனீஸ் அந்தப்பக்கம் அருள், ஆண்டனீஸ் போய்தான் அருள் வரனுமா என்னான்னு நான் நேரா அருளுக்கே போயிட்டேன், இரண்டு வருசம் ஆறாவது, ரெண்டு வருசம் ஏழாவது படிச்சேன், போதும்னு அழைச்சிட்டு வந்து முட்டி ஏர் அடிக்க விட்டுட்டாங்க. இதே தஞ்சாவூர் போகாம முனியங்கோயில்லயே படிச்சிருந்தா எப்படியும் பத்தாவது வரைக்குமாவது படிச்சிருப்பேன், மேலேயும் படிச்சிருக்கலாம் . இப்பக்கூட உங்கப்பன பாத்தா சொல்லுவேன் உன்னாலதான் நான் படிக்கலைன்னு அவரும் சிரிச்சிக்குவாரு நானும் சிரிச்சிக்குவேன்.

--------

ஒரு வழியாக ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திருவல்லிக்கேணி வீதிகளில் நடந்து வந்துகொண்டிருந்தோம், வரும் வழியெல்லாம் தஞ்சாவூர்காரங்கன்னா சும்மாவா அப்படி இப்படி என போதை தலைக்கேறியதால் வேகமாக கத்தியபடி வந்தான். எதிரில் ஒரு போலிஸ்காரர் வந்தார். சட்டென சப்த நாடியும் ஒடுங்கி நடந்து வந்தான்.

நான்: ஏண்டா பெரிசா பேசுன, போலிஸ பாத்தவுடன் வடிவேலு கணக்கா ஒதுங்கிட்ட..

அருள்: போலிஸ்காரங்ககிட்ட மட்டும் வாலாட்டப்புடாது, முதல்ல எப்படியும் லத்தி எடுத்து முட்டிக்கு முட்டி தட்டிருவான், அதுக்கப்புறம்தான், நம்ம பவரை காமிச்சி நம்மூரு காரங்கள கூப்பிட்டு வெளிய வந்திரலாம், ஆனா அடி வாங்கினது வாங்கினதுதானே, அதான் ஒதுங்கிப்போயிரனும். அதுவும் இன்னைக்கு அந்த வீடு முடிச்சு கொடுத்ததுக்கு ஒரு லட்சம் கமிசன் கெடச்சது அது வேற பாக்கெட்ல இருக்கு.

நான் : ஒரு லட்சம் காசு வெச்சிக்கிட்டு என் காசுல சரக்கு வாங்கி குடிச்சிட்டு வர, நியாயமா பாத்தா நீதானடா செலவழிக்கனும் ?

அருள் : அதுனால நான் பிஸினஸ் பண்றேன், நீ இன்னும் உங்கப்பன மாதிரி கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்க, அதுக்கெல்லாம் ஒரு சூட்சுமம் தெரியனும்டா? நீ எதுவும் இடம் வாங்கிறதுன்னா சொல்லு கமிசன் இல்லாம முடிச்சு தரேன்.

Thursday, November 19, 2009

தோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.

தோதுமாது உத்திராபதி, கிராமத்தின் வளர்ச்சியின் அக்கறை கொண்ட அந்தக்கால இளைஞன். அதுவும் தன் ஊர் பள்ளி வளர்ச்சி பெண்கள் கல்வியில் அக்கறை கொண்டவர். இவருக்கு தோதுமாது உத்திராபதி என்ற பெயர் வந்ததன் காரணம் அவருடைய சுருட்டுந்தந்தை, உரையாடிக்கொண்டிருக்கும் போது இந்தக்காரியத்தை இப்படி தோதுமாதா பண்ணினா நல்லபடியா நடக்கும் என்று அறிவுரை கூறியதால் தோதுமாது என்ற பட்டப்பெயரை பெற்றார், அவர் இறந்தவுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி அவர் மகனுக்கு தோதுமாது என்ற பெயர் கிடைத்தது.

மாதுதோது மருதன், பெயரே சொல்லும் காரணத்தை, இவர் ஒரு தமிழாசிரியர், தமிழ்ப்புலமையில் இவரை விஞ்ச அந்த வட்டாரத்தில் கண்டிப்பாக ஆசிரியர் கிடையாது, பாடம் நடத்தும் போது அத்தனை பேரையும் கட்டிப்போடும் வசீகரம், திருமணமான இளைஞன். இவர் பாடம் நடத்தினால் அதனைக்கேட்க பக்கத்து வகுப்பு மாணவர்களின் காது கூட இவர் வகுப்பில் இருக்கும்.

இவர் மாணவிகளிடம் குற்றாலக்குறவஞ்சி நடத்துவது போல் சற்றே அதிகமான குறுந்தொகை நகைச்சுவைகளைச்சொல்லி மாணவிகளை கணக்குப்பண்ண முயல்கிறார் என்று சிறிது சிறிதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இவைகள் அனைத்தும் மாணவிகளால் தோதுமாது உத்திராபதியிடம் பள்ளித்தலைமையையும் தாண்டி குற்றச்சாட்டாக சென்றது. ஆனாலும் தமிழாசிரியர் குறுந்தொகை நடத்தும்போது ஏதாவது தலைவன், தலைவி என்று சொல்லியிருப்பார், நீங்க தோதுமாதா நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.

ஆனாலும் கிராமத்துப்பெண்கள் அவரை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லி அவரை விசாரிக்கச்சொல்லினர். தோதுமாது உத்திராபதியும் பள்ளித்தலைமைக்கு என்ன காரணத்திற்கு பள்ளிக்கு வந்திருக்கிறேன் என சொல்லாமல் சாதாரணமாக வந்து அவருடைய வகுப்பை கவனித்தார்.

வகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

தமிழ் எவ்வளவு செம்மையான மொழி பாருங்கள், ஒருவன் தமிழைத்தவறாகப்படித்தால் என்ன ஆகும் பாருங்கள்.

"சோலைக்குள் பாம்பு நுழைந்தது"

இதனைப்படிக்கும் போது சுப்பன் தவறி, சோலையில் உள்ள காலை மறந்து, சேலைக்குள் பாம்பு நுழைந்தது என்று படித்துவிட்டான், ஆசிரியர் உடனே சுப்பனிடம் சொன்னார் தவறாகப்படிக்கிறாய் மீண்டும் படி என்றார்.

சுப்பனும் இப்போது இப்படி படித்தான், பாம்பிற்கு கால் கிடையாது ஆனால் பாம்பு என்ற எழுத்தில் உள்ள பா விற்கு கால் உள்ளதை மறந்து

"சேலைக்குள்..

என்று முடிக்குமுன் தோதுமாது உள்ளே நுழைந்து மருதனை நான்கு வாங்கு வாங்கியிருந்தார். இன்றோடு பள்ளியை விட்டு ஓடிப்போய்விடு என்று மீண்டும் மீண்டும் வெறி வந்தவாறு அடித்து துரத்திவிட்டார்.

அதன் பின்னர் தமிழாசிரியர் மருதனும் வேறு எங்கோ மாற்றலாகி சென்றுவிட்டார், தோதுமாது என்று பெயர் இருந்தாலும் தோதுமாதாக இருக்கத்தெரியாத உத்திராபதியும் ஏதோ ஒரு காரணத்திற்காக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மருதனும் அளவுக்கு மீறிய மதுவினால் ஐந்து வருடத்திற்குள் மாண்டு போனார். இந்த இரண்டு பேரும் திறமைசாலிகளே, இந்த தமிழாசிரியரிடம் படிக்காவிடினும் அவர் புகழ் மற்ற மாணவர்கள் பேச நிறையக்கேட்டிருக்கிறேன். சாதித்திருக்கவேண்டியவர்கள், இருவரும் தத்தம் துறையில் இன்னும் பேசப்படக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டியவர்கள். ஆளுக்கு ஒரு பலவீனம், இந்தப்பலவீனங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள கூடியனவே, ஆனாலும் இவைகள் இவர்களை உயிர்களை இடையிலேயே பறித்ததுவிட்டது.

Wednesday, November 18, 2009

தொவையல் : சமையல் மருத்துவமனை, பச்சைப்பயிறு அடை.

தொவையல் 1: சமீப காலமாக வேலைப்பளுவால் அதிகம் பதிவெழுத முடிவதில்லை, அதனால் கு.ஜ.மு.க வின் கொள்கைகளின் மிக முக்கியமானதும், கட்சியின் அடிப்படை உரிமையுமான வாரிசுப்பெருமை பேசமுடியவில்லை. கடந்த சில மாதங்களாக வாரிசும் கு.ஜ.மு.கவிற்கு உழைக்கும் நோக்கத்தில் ஒரு அட்டைப்பெட்டி மேல் ஏறி கீழே விழுந்து இடது கையை ஒடித்துக்கொண்டார். அழுதுகொண்டே வந்தார், ஏதோ சாதாரண அடி என நினைத்தால் வலியால் மிகவும் துடித்துப்போனார். முழங்கைப்பகுதியில் வீங்கியும் போனது, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் பொதுக்குழு கூடி முடிவெடுத்து, பொதுக்குழு பரிந்துரைத்தபடி அருகில் உள்ள குழந்தைகள் மருத்துமனைக்கு அழைத்து சென்றேன். அந்த மருத்துவமனையின் பெயர் Cook Childeren's Hospital. அதைப்பார்த்து என் மகள் கேட்டது அப்பா மருத்துவமனை எப்படிப்பா சமைக்கும். It is a funny name அப்படின்னாள். ஒரு வழியாக x-ray எடுத்து எலும்பு முறிவு கண்டுபிடித்து கட்டுபோட்டு , ஆறு வாரம் கழித்து பிரித்தாகிவிட்டது, இன்னும் மூன்று நான்கு வாரங்களில் கையின் முழுமையான இயக்கம் கிடைத்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள்.

பெல்ட் லைன் ரோடு என்ற பெயர் உள்ள சாலையில் காரில் சென்று கொண்டிருந்தோம், அப்போது கேட்டது

ஏம்பா பெல்ட் லைன் ரோட்ல கார்ல போகும் போது கண்டிப்பா பெல்ட் போட்டு இருக்கனுமா? அதுனாலதான் பெல்ட்லைன் ரோடுன்னு பேரு வெச்சாங்களா?

இல்லம்மா எந்த ரோட்டிலும் காரில் போகும் போது பெல்ட் போடனும்.

அப்ப ஏன் இந்த ரோட்டிற்கு மட்டும் பெல்ட் லைன் ரோடுன்னு பேரு வெச்சிருக்காங்க?

???அது டாலஸ சுத்தி பெல்ட் மாதிரி போறதினால அப்படி வெச்சிருக்காங்க.

அப்பா உங்களுக்கு மியூசிக்ல தாளம்னா என்ன தெரியுமா? ச,ரி,க,ம,த பாஆஆஆஆஆ , தாளம் (நோட்ஸல ஏதோ கமா வந்தா)வந்தா பாஆஆஆஆ அப்படின்னு சொல்லனும், (சரியா எனக்கு புரியலை, அதுனால தவறா கூட எழுதிருக்கலாம்)நீங்க மியூசிக் கிளாஸ் போகும்போது சொல்லிக்கொடுத்தாங்களா?

நான் மியூசிக் கிளாஸ் எல்லாம் போகலை? எனக்கு பாட்டெல்லாம் தெரியாது?

அப்புறம் எப்படிப்பா நீங்க வீட்ல தெலுகு பாட்டு பாடறீங்க? ஒரு தெலுகுப்பாட்டு பாடுங்க

ராஜாலூ கைலூ வெச்சுலூ, சத்யமு
ராங்குடு போனுடு,
பணமு எண்டுலு ஸ்டாக்கூ எண்டுலு
எல்லாம் என்னுலூ.
இன்வெஸ்டருக்கு துண்டுலு.

தொவையல் 2:

இயக்குனர் பதிவர் ஷண்முகப்பிரியன் அவர்களின் ஒரு பதிவில் பச்சைப்பயிறு அடை சொல்லியிருந்தார், அடை செய்ய பச்சைப்பயிறு ஆறு மாதம் முன்னரே வாங்கியாச்சு, இப்போதுதான் அடை செய்ய நேரம் கிடைத்தது.

1. பாசிப்பயிறு ஊறவைத்து முளைகட்டும் வரை வெளியில் வைத்திருக்கவேண்டும்.

முதல் நாள் செய்முறை:

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தைவிட இரு மடங்கு, வெங்காயம் போலவே வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: ஷண்முகப்பிரியன் சொன்னது போல் ஆம்லெட் மாதிரி இருந்தது.

இரண்டாம் நாள் செய்முறை:(முட்டைகோஸ் வீட்டில் இல்லை, ஆனால் பிராக்களி, ஸ்பினாச்சும் இருந்தார்கள்)

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, பிராக்களி, ஸ்பினாச் கீரை,சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: சற்றே வழவழப்புடன் இருந்தது, எனக்குபிடித்தது, ஆனால் வீட்டிற்கு இரண்டு நண்பர்கள் வந்தார்கள், சாப்பிடச்சொன்னேன், இனி அடை செய்தால் முன்னமே சொல்லிவிடுங்கள் நாங்கள் அடை செய்யாத பிரிதொரு நாளில் வருகிறோம் என்றார்கள்.

மூன்றாம் நாள் செய்முறை:(மீண்டும் முட்டைகோஸ், கூடுதலாக கொள்ளு, சீரகம் )

பாசிப்பயிருடன் கொள்ளும் கலந்து ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கவும்.

முளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, சீரகம்,சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தைவிட இரு மடங்கு, வெங்காயம் போலவே வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.

சுவை: வீட்டில் அனைத்து உறுப்பினர்களும் சாப்பிட்டார்கள்:)

உங்கள் விருப்பத்திற்ப உண்ண முடிந்த எதையும் சேர்த்து அரைக்கலாம், கடைசியில் வேகவைத்து உண்ணலாம். இதுதான் அடை ரெசிப்பீ

மேலே சொல்லப்பட்ட அடைகளின் மருத்துவ பலன்கள் எல்லாம் எனக்குத்தெரியாது, ஆனா தூள் படத்துல நடிச்ச பாட்டியின் கிராமத்து சமையலில் அரை லிட்டர் நல்லெண்ணெய், நெய் எல்லாம் சேத்து நல்லா கொழுப்போட உள்ள ஆட்டுகறிய சமைச்சுப்புட்டு மேலுக்கு நல்லதுன்னு சொல்ற மாதிரி இதுவும் மேலுக்கு நல்லது.

சிலருக்கு அடை என்ற பெயர் ரொம்பப்பழசா இருக்கிறதால பிடிக்காம போகலாம், அதனால் அவங்க இத சிறிது மாற்றத்தோட பீட்சா மாதிரி மாடர்னா செஞ்சும் சாப்பிடலாம்.

இதுவரை சேர்த்தவைகளோடு, பாசிப்பயியிறு பிரட் மேலே ஒரு கரண்டி சீஸ் போடவும், ரெட் சாஸ் அப்படின்னு டப்பாவில விக்கிறத வாங்கி ஒரு லேயர் ஊத்தவும், அதற்கு மேல் பெப்பரோனியோ, ரெட் மீட்டோ இல்லை சிக்கனோ, காய்கறிகளோ போட்டுக்கலாம்.
இதுக்கு நீங்க பச்சாஸ்ஸா(பச்சைப்பயிறுன்னு சொல்றவங்க) அல்லது பாசிஸ்ஸா(பாசிப்பயிறுன்னு சொல்றவங்க) என்று மாடர்னாக பெயர் வைத்தும் சாப்பிடலாம்.

சீஸ் போடவும் சாஸ் போடவும் மீட் போடவும் ஆகியன தொப்பை போடவும் உதவும்.

Wednesday, November 11, 2009

நாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.

சமீபத்தில் நாடோடிகள், பொக்கிஷம் மற்றுன் ஷ்ரேயாவின் சேவையில்
உருவான கந்தசாமி பார்த்தேன்.

நாடோடிகள்.

நாடோடிகள் படம் இயல்பான கிராமத்து சூழ்நிலைகளில் எடுக்கபபட்டிருந்தது, மொட்டைமாடியில் வெயில் வந்த பிறகும் துவைக்காத போர்வையின் மணத்தில் தூங்கும் வெட்டி கிராமத்து இளைஞர்கள், திருமணம் செய்ய ஆசைப்படும் ஒத்துக்கொள்ளக்கூடிய அளவில் உள்ள சினிமாத்தனமான குறும்புகள் கொண்ட சொந்தக்காரப்பெண், டிவி சீரியல் பார்வை பார்க்கும் சித்தி , உண்மையாகவே தவிக்கும் அப்பன் மற்றும் முதல் தாரத்தின் மகன். கொஞ்சம் அதிகம் சினிமாத்தனம் உள்ள, மகனின் காதலுக்கு உதவும் ஸ்கூட்டர் அப்பன்.

தன் காதலுக்கு உதவி தேடி ஊருக்கு வரும் நண்பனை கிணற்றில் இருந்து காப்பாற்றும் பெஞ்சு போட்டு தண்ணியை எடுக்கும் எங்கேயே பார்த்த அந்தக்கால நிகழ்வை படமாக்கியது. நண்பரின் காதலுக்கு உதவுவது, நண்பரின் நண்பனுக்கு உதவுவது எல்லாம் நன்று.

இதற்குப்பிறகு உச்சகட்ட ஹீரோத்தனம் பொண்ணு தூக்க காலை ஒடிச்சிக்கிறாங்க, காது செவுடாப்போகுது , கண்ணுக்குருடா போகுது, இதெல்லாம் பின்னால் இவர்களால் சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் கருத்து வேறுபாட்டால் பிரியப்போகிறார்கள் என்ற சொத்தைக்கதைக்கு சேர்க்கப்பட்ட ஓவர் பில்டப்.

கருத்து வேறுபட்டால் பிரிந்தவர்களை, நண்பர்கள் நாங்கள் காதலுக்காக (நட்பு அல்ல)சேர்த்து வெச்சோம் அதனாலே நீங்க சேர்ந்துதான் இருக்கனும் அப்படிங்கிறது எந்த விதத்தில நியாயம். கருத்து வேறுபாடு வந்தால் அந்தக்கருத்து வேறுபாட்டின் காரணம் கண்டு களைய நண்பர்கள், சமூகம் அறிவுரை கூறலாம், ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் ஒத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் பிரித்து வைக்கவும் நண்பர்கள் உதவலாம் அது நட்பு.

காதல் புனிதமானது காதலிச்சா எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் சேர்ந்து வாழனும், யாரு காதலிச்சாலும் தெரியாதவனா இருந்தாலும் உதவனும், உதைவாங்கனும் அப்படிங்கிறது என்ன கலாச்சாரம், கருத்துடா இது, காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் சேர்த்து வைத்தவர்கள் தீர்மானிக்கமுடியாது, அதை அந்த இருவர் மட்டுமே அவர்கள் வாழும்/சார்ந்த சூழ்நிலை, சமூக கலாச்சார அழுத்தங்களை வைத்து தீர்மானிக்கமுடியும்.

99 வருட குத்தைகை மாதிரி நாங்க சேத்து வெச்சா கடைசி வரைக்கும் சேர்ந்துதான் இருக்கனும்னு சொல்ற இந்தக்குப்பைக்கருத்தை சொல்லும் படத்தை என்னால ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

யாரோ தெரியாதவனுக்கு காதலுக்காக உதவி செய்யப்போகிறேன் என்று கிளம்பினால் என் பார்வையில் அது முட்டாள்தனம். நட்பு என்பது நண்பர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அவர்களின் தேவை எதுவோ அதற்குத்தான் உதவுவார்கள் அது சேர்த்தலோ, அறிவுரையோ, பிரிதலோ எதுவாகவும் இருக்கலாம் என் கருத்து.

படம் முடியும்போது சசிகுமார், யாரோ தெரியாதவரின் காதலுக்காக இருங்க நாங்களும் வரோம் என்று சொல்வார், இவர் நிஜமாக போகவேண்டிய இடம் மனநல மருத்துவமனைக்கு.

மொத்ததில் நல்லகளத்தில் சொல்லப்பட்ட குப்பைக்கருத்து.

பொக்கிஷம்.

எம்ஜியார் மாதிரி படுத்துக்கொண்டே பார்த்தேன், தியேட்டரில் சென்று பார்த்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன் படம் எப்படி என்று, அவன் லெட்டர் எழுதி,எழுதி அவன் கையெழுத்து நல்லா ஆயிடுச்சுன்னார். இனி படம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

எழுபதுகளில் நடந்தவை என்பதால் அந்தக்காலத்துக்கு சென்று பார்ப்பது சற்று சிரமமே, எழுபதாம் ஆண்டில் 25 வயது இளைஞன் இன்றைக்கு 65 வயது ஆகியிருக்கும், அதற்காக 65 வயது ஆளையேவா நடிக்கசொல்றது, அய்யா சேரன் உங்களைப்பார்த்தா ஏதோ ஒரு படத்திலே அம்மா நான் காலேஜ் போயிட்டு வரேன்னு எம்ஜியார் சொன்னதுதான் ஞாபகம் வருது. உங்க படத்துல பிரபலமான ஹீரோக்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு புரியுது , இந்தப்படத்தில் நீங்க என்னை ஹீரோவா போட்டிருக்கலாம், லெட்டர் எழுதி கையெழுத்தாவது எனக்கு நல்லா ஆகிருக்கும் , படம் பார்த்தவர்களும் இளைஞனின் வசீகரத்தை ஹீரோயினோடு சேர்த்து ரசித்திருப்பார்கள். கேரக்டரோட நானும் ஒன்றிப்போய் நல்லா பண்ணிருப்பேன். மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து உட்காரவும் வைக்கிறது படம், ஏதோ ஒரு கொரியப்படத்தில் இருந்து சுட்ட கதையாமே இது அப்படியா? கொஞ்சம் நீளம் குறைப்பு நிஜமாகவே ஒரு இளைஞன் நடித்திருந்தால் சேரன் என்ற நடிகருக்காக செய்யப்பட்ட சமாதானங்கள் இல்லாமல் இன்னும் நன்றாக படத்தை எடுத்திருக்கலாம்,நன்றாக ஓடியிருக்கக்கூடும்.

படத்தில் நான்/ என்னைப்போன்றவர் மட்டும் ரசிக்கக்கூடிய ஒன்று உண்டு, அதற்காக இன்னொரு முறை படுத்துக்கொண்டே பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

கந்தசாமி

இந்தப்படத்தை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, ஷ்ரேயாவை அரைகுறையாய் ஆங்காங்கே பார்த்ததோடு சரி, அல்லேக்ரா என்ற பாடல் என் மகளுக்கு பிடித்துப்போனதால் , திரும்பத்திரும்ப அதேபாடல்தான் ஓடுகிறது, அந்தப்பாடலின் இறுதியில் 'ஷேக் யுவர் பூட்டி' என்று தொடர்ந்தாற்போல் வருகிறது, இதையே 'ஆட்டு உன் சூத்தை' என்று தமிழில் பாடலாக எழுதியிருந்தால் சென்சார் அனுமதித்திருக்குமா? இதுக்கு பேருதான் ஆங்கில மறை காயாக சொல்வதா?

பி:கு: உண்மைத்தமிழன் மாதிரி நெடிய பதிவு எழுதும் முயற்சி இது.

Monday, November 9, 2009

வில்லன்,ரசிகர்,ஹீரோ, கல்லூரி நண்பர் சந்திப்பு.

கடந்த அக்டோபர் 24 அன்று , நசரேயனின் நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி கடலில் முத்து தவிர அனைத்தும் எடுத்தவருமான வில்லன் அவர்கள், வில்லாதி வில்லி(பெயர் உதவி நசரேயன்), மற்றும் மகளுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதிலிருந்து நசரேயன் சினிமா எடுக்க ஆசைப்படுவது நன்றாக தெரிந்தது, அதில் வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ஆசையிலேயே வில்லன் என்ற பெயரை பதிவுலகத்தில் பின்னூட்டமிட வைத்துக்கொண்டாராம்.

என்னுடைய பதிவுகள் நசரேயன் பதிவுகள் எல்லாம் படிப்பீர்களா என்று வில்லியிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை நான் நசரேயனின் மனைவியின் நல்ல நண்பர், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போனில் பேசிக்கொண்டிருப்போம், அதனால் கண்ட குப்பைகளை படிக்க நேரமில்லை என்றார்.

வில்லன் அதிகம் டீ குடிக்கிறார், என்னுடைய மகளுக்கு பாட்டு கிளாஸ் இருந்ததால், எங்க வீட்டம்மா மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், நான் டீ போட்டு தருகிறேன் என்றேன், வில்லி அவர்கள் நான் நல்ல முறையில் டீ போட்டுத்தருகிறேன் என்றார்.அவர் விருப்பத்தை மீறமுடியவில்லை, அவரே இஞ்சியெல்லாம் போட்டு ஒரு அண்டாவில் டீ தயாரித்தார், நான் ஒரு டம்ளரும் வில்லன் அவர்கள் மூன்று டம்ளரும் குடித்தோம். இதற்கிடையே வெளியே சென்றிருந்த மகளும், அம்மிணியும் வந்துவிட்டனர்.

பரவாயில்லையே டீ போட்டு வெச்சிருக்கீங்க என்றபடியே அண்டாவில் இருந்து ஒரு டம்ளர் டீயை எடுத்துக்கொண்டார், குடிக்கும் முன்னர் டீ போட்டது வில்லி எனச்சொல்லிவிட்டேன். டீ நல்லா இல்லைன்னு சொல்ல வாய்ப்பில்லை என்பதால், டீ சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லிட்டாங்க. அண்டாவில் மிச்சமிருந்த டீயை வில்லனும் நானும் மீண்டும் சுடவைத்து குடித்தோம்.

இடையில் நசரேயனுக்கு வில்லன் போன் பண்ணி படத்துக்கு ஹீரோ கிடைத்துவிட்ட செய்தியை சொன்னார்.நசரேயன் டைரக்டரானால் விரைவில் உங்கள் அபிமான ஹீரோவை வெள்ளித்திரையில் காணலாம்.கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இப்படியே போனது, இந்த நேரத்தில் வில்லனின் மகள் எந்த சலனமும் இல்லாமல் டோராவை பார்த்துக்கொண்டிருந்தார்.

போனில் பேசும்போது நசரேயன் அவர் வீட்டுக்கு வரச்சொன்னார், வரும்போது நிறைய துண்டு வாங்கிவரச்சொல்லி இருக்கிறார்,வீட்டில் இருந்த துண்டு, அவர் ஊர் கடைகளில் உள்ள துண்டுகளையெல்லாம் யாருக்கோ எதற்கோ போட்டு விட்டாராம்.

சந்திப்பில் நடந்தவைகளை 95% மிகைப்படுத்தி எழுதி பத்திரிகை தருமத்தை காப்பாற்றியிருக்கிறேன்.

இரண்டாவது சந்திப்பு.

கல்லூரி நண்பன் சென்னையில் வசிக்கிறான், ஹீஸ்டனில் ஒரு வருடம் ஆன்சைட் அசைன்மெண்டுக்காக வந்திருக்கிறார், இந்தவாரம் டாலஸூக்கு மனைவி, மற்றும் குழந்தையுடன் வந்திருந்தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறோம். வெள்ளிக்கிழமை காலையிலேயே சொல்லிவிட்டான் சரக்கு வாங்கி வைக்கச்சொல்லி, என் புண்ணியத்துல நீயும் உன் புண்ணியத்துல நானும் அடிக்கவேண்டியதுதான், உன் பேர சொல்லி மனைவிகிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்னு சொன்னான். வெள்ளிக்கிழமை மாலை வேறு வேலைகளால் குறித்த நேரத்தில் அவன் வாங்கி வைக்கச்சொன்ன ஹாட் வாங்க முடியவில்லை. இதற்கிடையில் சரக்கு வாங்கியாச்சா என உறுதிப்படுத்திக்கொள்ள நண்பன் போன் பண்ணினான், இல்லடா இன்னும் சரக்கு வாங்கவில்லை என்றேன். டேய் எப்படியாவது வாங்கி வெச்சிருடா, இன்னொரு ஃபிரண்ட் வேற வராப்ல நைட்டே ஊத்திருவோம்னான். நான் இருக்கும் ஊரில் ஹாட் லிக்கர் விற்க தடையாம் நல்லவனான எனக்கு இது தெரியாது,மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கரோனாவை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நடுச்சாமத்தில் வந்து சேர்ந்தான் நண்பன், அவனுடன் வந்த அவன் மகனை பார்த்தவுடன் எனக்கு பயங்கர அதிர்ச்சி, என் வீட்டம்மா கேட்டபோது அவனுக்கு பெண் குழந்தை என்று சொல்லியிருந்தேன். அவர்களிடமும் சிரித்துக்கொண்டே சொன்னேன். நண்பனின் மனைவி உங்க பெண்ணுக்கு என்ன வயசு எனக்கேட்டார், ஆறு வயது என்றேன். ஆறா இவரு நாலுன்னுல்ல சொன்னாரு, ஆனாலும் பரவாயில்லை ஆண் பிள்ளைன்னு சொல்லலை அப்படின்னார்.

அடுத்த நாள் பகல் பொழுது வீட்டில் சென்றது, அதே நாளில் ஹாலோயின் திருவிழாவும் வந்ததால் , வீட்டிற்கு கேண்டி வாங்க நிறைய குழந்தைகள் வந்தனர், என் மகளும் , நண்பரின் மகனும் கேண்டி வாங்க சென்றுவிட்டனர். நான் எங்களுக்கான கேன் டீ வாங்க, டாலஸில் இருக்கும் குடி குடி (goodygoody) என்ற கடைக்கு சென்று சரக்கு வாங்கினேன், சரக்கு விற்பவர் எனக்கு 21 வயது ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள அடையாள என்னிடம் மட்டும் கேட்டார், என்னுடன் வந்த திருமணம் ஆகாத என் நண்பரின் நண்பனிடம் கேட்கவில்லை, நான் என்னுடைய அடையாள அட்டையை காண்பித்து 23 வயது ஆன விசயத்தை உறுதிப்படித்தியபின்னரே சரக்கு விற்றார்.

கொஞ்சமாக குடித்தோம், அப்போது சில உண்மைகள் வெளிவந்தது, என் நண்பர் பர்மிசன் வாங்காமல் நன்றாக திட்டு வாங்கியிருக்கிறான் என்று நண்பரின் நண்பர் சொன்னார். அப்படியே நீங்க பிளாக் படிப்பீங்களா, உங்க கம்பியூட்டர்ல தமிழ்மணம், பிளாக்ஸ்பாட் உரல் மட்டும்தான் ஹிஸ்டரில இருக்குன்னு கேட்டார்.

ஆமாம் படிப்பேன் நான்கூட குடுகுடுப்பை என்ற பெயரில் பதிவு எழுதுகிறேன் என்றேன். ஓ நீங்கதான் குகுவா நான் உங்க பிளாக் படிப்பேன், வடிவேலு கமல்ஹாசன் உரையாடல் சூப்பர் அப்படின்னார். எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி, நான் இப்பொழுது நேரமின்மையால் அதிகம் படிப்பதுமில்லை எழுதுவதும் இல்லை என்றேன்.

இரவு முழுவதும் கள் ஊறும் கல்லூரி நினைவுகள் ,முதல் மின்னசோட்டாவில் ஏழு வருடம் முன் சந்திந்தது வரை நிறைய பேசினோம். நண்பன் இப்போது நல்ல நிலையில் உள்ளான், எனது மனைவி அவரைப்பற்றி ரொம்ப, ரொம்ப நல்லவரா இருக்கிறார் அப்படின்னு ஆச்சர்யப்பட்டார்.

கொஞ்சம் பின்னால் சென்னைக்கு செல்வோம், படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த காலம், இரவு பகலாக படிப்போம் ஆனால் இண்டர்வியூ அட்டெண்ட் செய்ய ஒருவித தயக்கம்,வேலை தேடும் முயற்சியே செய்யாமல் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக போயிருந்தது. அந்த நேரத்தில் இந்த நண்பன் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான், அவனாகவே என்னுடைய ரெஸ்யூம் உள்ள பிளாப்பி டிஸ்க்கை எடுத்து, பிரிண்ட் எடுத்து அவனுடைய கம்பெனியில் கொடுத்து இண்டர்வியூ ஏற்பாடு செய்தான், வேலையும் கிடைத்தது. அவன் இந்த உதவியை செய்யாமல் போயிருந்தால் நான் இண்டர்வியூ பயத்தில் எதுவும் செய்யாமல் வாழ்க்கையில் வீணாகப்போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.இவ்வளவு பெரிய உதவி செய்த அவனுக்கு நன்றி என்று வாய் திறந்து இதுவரை சொன்னதில்லை.

வேலை தேடுபவர்கள் முதலில் செய்யவேண்டிய கடமை, தேடும் துறையில் நல்ல அறிவுடன் இருக்கவேண்டும், அதற்கு இரவு பகல் பாராமல் உழைக்கத்தேவையிருந்தால், அதை செய்யவேண்டும், இண்டர்வியூ பயங்களை கண்டிப்பாக நீக்கவேண்டும். என் நண்பர் போன்ற நல்ல நண்பர்கள் எல்லாருக்கும் கிடைப்பார்களா என்று சொல்லமுடியாது, அப்படியே கிடைத்தாலும் அவர்களால் எந்த அளவுக்கு உதவமுடியும் என்றும் சொல்லமுடியாது.

பில்டிங்க் ஸ்டராங்க் பேஸ்மேண்ட் வீக்கு அப்படி என்ற நிலை இல்லாமல், முதலில் இலக்கு நோக்கிய தயாரிப்பு, இண்டர்வியூ, நட்பு வட்டாரத்தின் உதவி என்று இருந்தால் எந்த இலக்கும் சாத்தியமே.