Wednesday, July 14, 2010

ராவணன் மணிரத்ணம்.

ராவணன் மட்டமான இதிகாச ரீமிக்ஸ் முதல் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராவணன் என்று கிழித்துப்போட்ட படம், கொடுத்த ஆறு டாலருக்கு நானும் ஒரு பதிவு போட்டு என் இருப்பை உறுதிப் படுத்திக்கொள்கிறேன்.

மணிரத்னம் மேட்டுக்குடிகளுக்கான இயக்குனர் , அவரின் படத்தின் பார்வையாளர்களுக்கு தான் சொல்ல வந்ததை அவருடைய பாணி சினிமாவில் சொல்லியிருக்கிறார்.

அனுமன் வேடத்தில் நடித்த கார்த்திக்/கோவிந்தாவை குரங்கு போலவே நடிக்க வைத்து எரிச்சல் ஆக்கிவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு, மற்றும் பல இராமாயண கதா பாத்திரங்களை காட்ட வெளிப்படையான அடையாளத்தை வைத்து ராமனை சில வசனங்கள் செயல்கள் மூலம் விமர்சித்து இதிகாச ராவணன் நல்லவன் என மேட்டுக்குடி மக்களுக்கு புரியவைக்க முயன்றிருக்கிறார். இதற்கு ஏன் தூதுவனை குரங்கு போல் காட்டவேண்டும், காட்டாவிட்டாலும் புரியுமே என்பது பலரின் கேள்வி, ரோஜா சத்தியவான் சாவித்திரியின் ரீமேக், மவுனராகம் வேறு ஏதோ இதிகாச ரீமேக் என்று அறிவுஜீவிகள் எழுதுகிறார்கள், ஆனால் படம் பார்த்த மேட்டுக்குடிகளுக்கு இது தெரியாது, ஆனால் இங்கே இதிகாச ராவணனை நல்லவன் என்று காட்ட ராமாயண கதாபாத்திரங்களின் தோற்றங்கள் உதவும் என்று நினைத்திருக்கலாம்(ராவண் என்ற பெயர் ஒன்றே போதுமா என்று எனக்குத்தெரியவில்லை). குறிப்பாக வட இந்தியர்களுக்கு.

ராமனின் தந்திரங்களை காட்டிய அளவுக்கு, ராவணன் , ராமனின் மனைவியை கவர்வதற்கு இன்னும் அழுத்தமாக காரணம் காட்டியிருக்கலாம். மணிரத்தினம் பெரும்பாலும் கணவன் மனைவியை பிரிப்பதில்லை , அதே போல இந்தப்படத்திலும் ராமன் மனைவியை சந்தேகப்படுவதாக சதி செய்து ராவணனை கொல்வதாகக் காட்டியிருக்கிறார். பாலசந்தர் போல பயப்படாமல் சீதை ராமனை துறப்பதாக வைத்திருக்கலாம்.

தன்னுடைய பயத்தினால் / அல்லது வியாபார பயத்தினால் பதுங்கியதால்,ராவணன் சரியாக மேட்டுக்குடிகளிடம் சேரவில்லை, முயற்சியில் தோற்றிருந்தாலும் ராவணன் நல்லவன் என்று வட இந்தியர்களுக்கு காட்டந்துணிந்த மணிரத்ணம் பாராட்டுக்குறியவரே.

Tuesday, July 13, 2010

முதலாளித்துவத்தை விமர்சிப்போம்


கடந்த பதிவில் விவசாயத்தை அடிப்படையாக வைத்து என் மனதில் தோன்றியதை எழுதியதை , ஏழரை மென்மையாக விமர்சித்திருந்தார், முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ள எனக்கு உடனடியாக பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை, அதனால் தாமதமாகஇந்தப்பதிவு.விவசாயமோ , பெட்டிக்கடையோ முதலாளித்துவமல்ல , கார்ப்பரேட்திருடர்கள்தான் முதலாளித்துவம் என்றும் கூறியிருந்தார்.

ஒரு பெட்டிக்கடை முதலாளியோ, சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியும் பொதுவுடமைத் தத்துவத்தின் கீழ் கண்டிப்பாக வரமுடியாது என்பதால் இவர்களும் முதலாளித்துவத்தின் கீழ் வருபவர்களே என்பது என் புரிதல்.

முதலாளித்துவம் ஊழல்கள் மலிந்து கிடைக்கும் இடம், முதலாளித்துவம் கண்டிப்பாக கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். கார்ப்பரேட்டுகளின் தவறுகள் தண்டிக்கப்படவேண்டும். விமர்சிக்கப்பட்டு விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படவேண்டும்.

உழைப்பே மூலதனம், உழைப்பை ஒருங்கினைப்பதும் , சரியான வழியான வழியில் செயல்படுத்துவதும் உழைப்புதான், இந்த உழைப்பை சுரண்டுவது எப்படி என்று மட்டுமே சிந்திக்கும் திருடர்களும் இங்கே அதிகம், இவர்கள் கடைசி வரையிலும் இருப்பார்கள், ஆனால் அதையும் மீறி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முதலாளித்துவத்தால் முடியும் என்றே கருதுகிறேன்.

பொது உடமை தத்துவம் மனிதனின் இயல்பான ஆசைகளுக்கு எதிரானது, ஆசையே துன்பத்திற்கு காரணம் , ஆனால் அதுதான் இன்பத்திற்கும் காரணம், அந்த ஆசை இல்லாவிட்டால் இந்த பிளாக்கர் இருந்திருக்காது, இண்டர்நெட், மின்சாரம் எதுவும் இருந்திருக்காது, இவைகளெல்லாம் பொது உடமையின் கீழ் சாத்தியமாக்க இயலாது. எல்லாம் பொது உடமை நீ இப்படி உழைக்கனும் , அப்படி உழைக்கனும் என்று பீரோவுக்குள் இருந்து கட்டுப்பாடுகள் போட்டால் ஒன்றும் நடக்காது. நல்ல உள்ளம் கொண்ட தோழர்கள் நல்ல முதலாளிகளாகி சமூகத்தின் பொருளாதார முன்னேற்றதிற்கு பாடுபடுதலே சரியான விடைதரும்.

முதலாளித்துவ விதிகள் விமர்சிக்கப்பட்டு மாறிக்கொண்டேதான் இருக்கும், ஏழை, பணக்காரன், ஆண்டி, போண்டியெல்லாம் மாறி மாறி வந்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

தனிப்பட்ட முறையில் விதிமுறைகள் இல்லாத மனித விலங்காக வாழத்தான் எனக்கும் ஆசை, ஆனால் அதற்கு முதலாளித்துவமும் தேவையில்லை, எல்லாவற்றையும் விமர்சித்து எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளாத பீரோவுக்குள் முடிவெடுக்கப்படும் இசங்களும் தேவையில்லை.

Friday, July 9, 2010

புரட்சிகர முதலாளி,தொழிலாளி

விவசாயி முருகேசன் வீட்டு வாசலில் கூலி கேட்டு தொழிலாளர்கள் கோஷமிட்டுக்கொண்டிருந்தனர்.

"கூலி எங்கள் பிறப்புரிமை, வேலை எங்கள் உரிமை"
"தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக", இன்குலாப் ஜிந்தாபாத்"

எல்லாம் சரிதான் தம்பிகளா, இந்த வருசம் ஆத்துல தண்ணியும் வரலை, மழையும் பேயலை, அதனாலே வேலையில்லை, செய்யாத வேலைக்கு நான் எப்படி தம்பி கூலி தரமுடியும்.

"கூலி இல்லாமல் நாங்க எப்படி சாப்பிடமுடியும்", முதலாளித்துவமே ஏழைகள் வயிற்றில் அடிக்காதே.

"நானே சாப்பாட்டுக்கு இல்லாம இருக்கேன் , நான் ஏம்பா உன் வயித்துல அடிக்கிறேன், நாம சேந்து யோசிச்சு எதவாது வயித்துப்பொழப்புக்கு பாப்போம்யா.அது சரி இந்த வெயில்ல கருப்புக்கொடைய பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க.வெயிலுக்கு கருப்புக்கலர் கொடை ஆகாதுப்பா"

"நெல்லு ஊர்ல மழை பேயுது அதுக்காக கொடை பிடிச்சிருக்கோம்", வர்க்கம் , புரட்சி, மாவு , மார்க்கு .................................

---------

"என்ன முருகேசன்னே என்ன பிரச்சினை"

ஒன்னுமில்லை முனியா, நம்ப ஊரு தம்பிகதான், இந்த வருசம் வெள்ளாமை இல்லாததினால், கூலி இல்லை அதுக்காக ஒரு அமைப்பா சேந்து கூலி கேக்கறாங்க"

"அது எப்படின்னே வேலையே இல்லாதப்ப முடியும்."

கேட்டா இல்லாத நெல்லுல அரிசி எடுத்து வருத்து மாவாக்கி மார்க் போட்டு எங்கேயோ கொட்டி எல்லாருக்கும் சோறு போடுற கம்பசூத்திரம் தெரியுதுங்கிறாங்க, நாமளும் அப்படியே பேசிட்டிருக்கமுடியாதே, லாபத்தை மட்டும் சிந்திக்கிற முதலாளிகளாலதான் இவங்கள மாதிரி இளைஞர்கள் உருவாகுறாங்க, உழைப்பை சரியாக பயன்படுத்தி எல்லோருமே உழைப்பாளி/முதலாளிங்கிற மாதிரி கொண்டுவர நாமதான் சிந்திக்கனும், தண்ணி இல்லைன்னு விதை நெல்லையும் அவிச்சி தின்னாச்சி, இனி அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன வழின்னு நாம யோசிக்கனும் , நாமளும் இல்லாத நெல்லு வருக்கிற சிந்தனையில இருந்தா யாருக்கும் சோறு கெடக்காது, ஏதாவது மாற்றுப்பயிர் செஞ்சு வேலை வாய்ப்புகள உருவாக்குவோம்.

அது சரிண்ணே,, நம்ம காசா பாய் வராரு..

"என்ன பாய் இந்தப்பக்கம்"

"நம்ம ஊரு பசங்க வந்தாங்க, கூலி கொடுக்கலன்னு , ஒரே கலகம் பண்ணாங்க, வீட்டில பொம்பல சனம் இருக்காங்க அப்புறம் பேசிக்கலாம்னேன், உடனே , ஆனாதீக்க பார்ப்பனீயம்னு கூச்சல் போடுறாங்க, நான் பாய் என்ன ஏன் பாப்பான்னு திட்டுறீங்கன்னு கேட்டேன், அதுக்குள்ள எங்க வீட்டம்மா பால் பனியாரம் கேக்கிறாங்கன்னு நினைச்சு அதுல ரெண்ட தட்டுல வெச்சு எடுத்துட்டு வந்துட்டாங்க, ஆனாலும் எதையும் கேக்காம இருந்த கலப்பையையும் உடைச்சிப்போட்டிட்டு கிளம்பிட்டாங்க"

"ஏன் வீட்டுக்கலப்பையையும் உடைச்சிட்டாங்க பாய், அதுக்காக கவலைப்பட முடியாது மாத்தி யோசிப்போம்."

ஆமா முருகேசு, விவசாயம் போச்சுன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன், அவங்க கலப்பையை உடைச்சோனதான் தோனுச்சு, பழைய இரும்பு யாவாரம் பண்ணலாமின்னு, எப்படியும் உங்க வீட்லயும் உடைஞ்ச கலப்பை இருக்கும்னு தெரியும், அத வாங்கிட்டுப் போகலாமின்னுதான் வந்தேன்.

Tuesday, June 22, 2010

ஆரோக்கியமான பாதாம் அல்வா

நீண்ட நாளாக பாதாம் அல்வா செய்யவேண்டும் என்ற ஆசை நேற்று நிறைவேறியது, ஏதோ ஒரு தளத்தில் படித்த பாதாம் அல்வா செய்முறை நான் செய்த முறையில் இங்கே

தேவையானவை

2 கப் பாதாம் பருப்பு
2 கப் நெய்
2 கப் சக்கரை
2 கப் பால்(காய்ச்சிய)
சிறிது குங்குமப்பூ

முதலில் பாதாம் பருப்பை சிறிது நேரம் வேக வைத்து , தோலினை நீக்கிடவேண்டும், தோல் நீக்கிய பாதாம் பருப்புடன் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். கிட்டத்தட்ட இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவேண்டும்.

அடி பெருத்த கடாயில் அரை கப் நெய் ஊற்றி, நெய் சூடானவுடன் பாதாம் + பால் மாவையும் சேர்ந்து இளஞ்சூட்டில் அரை மணி நேரம் அடி பிடிக்காமல் கிண்டிக்கொண்டே வேகவைக்கவேண்டும்.பின்னர் மீதமுள்ள ஒன்னரை கப் நெய் மற்றும் இரண்டு கப் சக்கரை போட்டு அடிபிடிக்காமல் கிண்டவேண்டும், கொப்பளிக்க ஆரம்பித்தவுடன் இறக்கி நெய் தடவப்பட்ட தட்டில் ஊற்றவேண்டும். சிறிது குங்குமம்பூவை வைத்து மேக்கப் போடவேண்டும்.

முக்கியமாக நெய்யின் அளவு குறைக்கவே கூடாது அல்வா சரியாக வராது.


செய்து முடித்தபின் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்தால் விரும்பி உண்பர்.நமது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் நாம் பாதாமில் இருந்து நீக்கப்பட்ட தோலை எடுத்து உண்டால் நார்ச்சத்து கிடைக்கும். வீட்டில் இருந்த நெய் சக்கரையை வைத்து பாதாம் அல்வா செய்து உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு பாதாமின் தோலை மட்டும் நாம் உண்பதால் நமது ஆரோக்கியமும் கூடும், கொழுப்பு சக்கரை பொருள்களும் வீட்டில் குறைந்து ஆரோக்கியம் பேண வழிகாட்டும்.

Saturday, June 12, 2010

குப்பைமேனியா இது?

வடிவேலுவும் கமலும் உரையாடல்:

முன் குறிப்பு: சும்மா ஒரு நகைசுவை உரையாடல், யாரையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்

வடிவேலு: வாங்கய்யா உங்கள பேட்டி எடுக்க சொல்லி வலை உலகத்தில கேட்டுக்கிட்டாக வந்து கொடுங்கய்யா கொடுங்க?

கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.

வடிவேலு: கம்பராமாயணம் நான் படிச்சதில்லை, ஆனா நீங்க சொல்றது எனக்கு புரிஞ்ச மாதிரியே இருக்கு, உங்க படம் மருதநாயகம் என்ன ஆச்சு?

கமல்ஹாசன் : தேவர் மகனில் நான் உங்களை நடிக்க அழைக்கும்போது உங்களை இசக்கியாக பார்த்தேன், மருதநாயகம் கண்டிப்பாக வரும், உங்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன், உங்களின் எட்டு வருட கால்ஷீட் அதற்கு தேவைப்படலாம். டைரக்டர் பாலாவும் நானும் இணைந்து இயக்கும் எண்ணமும் உள்ளது.

வடிவேலு: (மனதிற்குள்) இவருக்கு நம்ம மேல இவ்ளோ கோபம்.ஒருவேளை விஜயகாந்த் மூலமா எதுவும் சதி நடக்குதோ.

ரொம்ப நன்றி கமலய்யா ஆனா எனக்கு ஹீரோ வேசமெல்லாம் வேண்டாம்யா ஹீரோயினியோட ஒரேயொரு குத்து டான்ஸ் மட்டும் வெச்சு ஒரு காமெடி ரோல் மட்டும் போதும்யா சம்பளம் கூட வேண்டாம், அப்புறம் மருதநாயகம் படத்துல விஜயகாந்த ஹீரோவா போட்டு ஒரு பத்து வருடம் வெளிநாட்டுல சூட்டிங் வெச்சுக்கிட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்யா?

கமல்ஹாசன் : உங்களின் திறமையை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று நான் எண்ணவில்லை வியாபாரிகளின் சினிமாவில் நீங்கள் ஒரு விட்டில்பூச்சி, இதை நான் சொல்வதால் நான் விட்டில்பூச்சி இல்லை என்று அர்த்தம் கொண்டால் அது என்னுடைய தவறல்ல.

வடிவேலு: (மனதிற்குள்)பார்த்திபன் என்னை வேற மாதிரி குழப்புனாரு,ஆனா இவரு தெளிவா பாராட்டியே குழப்புறாரே.

அய்யா உங்களுக்கும் கவுதமிக்கும் பிரச்சினைன்னு?

கமல்ஹாசன் : நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல, இப்படி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வி தேவையில்லாதது இது உங்களுக்கும் பொருந்தும் மற்றவர்களுக்கு பொருந்தாது என்று பொருள் அல்ல.வெளிநடப்பு செய்கிறார்.

வடிவேலு: அய்யா நான் தேவர்மகன் படத்துல உள்ள சீன பத்திதானே சொன்னேன் அதுக்கு ஏன்யா கோபபடுறீங்க, நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா..............

Sunday, June 6, 2010

டீக்கடையில் வாழ்பவை

வெட்டிப் பேச்சுக்கேற்ப..
கூட்டம் சேரும்..
முச்சந்திகள்..

தேனீரில் சேர்க்கப்பட்ட..
செயற்கை வண்ணம்..
ருசிப்பதாக..
உறிஞ்சிக் கொண்டிருக்கும்..
அல்லக்கை கொழுந்துகள்..

பணம் தருவதாகச் சொல்லி..
வடை எண்பதை எடுத்து..
கடனை கடையில் வைத்து..
வெட்டிப்பேச்சை சிரமேற்கொண்டு..
தினம் பேசித் திரியும்..
இணையத்தின் சாதகத்தால்..

இட ஒதுக்கீடுகள் பல..
உடையவனை அடைய முடியாமல்..
தாத்தன் அப்பா அம்மா
நான் என் வாரிசு என் வாரிசின்...
பேரன் வரை அடைவது..
சமுதாயச் சிறப்பென்றும்..
தன் சாதியில் முதல் முறை பயனாளிக்கு
தகுதி போதாதென்றும் ..

இன்னும் பற்பல கணக்கு..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
உயர்சாதியை காட்டி..
உயர்கல்வியில் தனக்கு..
ஒரு சீட்டு எனும்..
உயரிய நோக்குடன்.. !