Thursday, November 10, 2011

எவருமில்லாமலில்லை


முதுகுக்கு
இந்தப் பக்கம்
இந்த மூஞ்சி
முகம் மாற்றி
அகம் மாற்றி
உனக்காகவே
காத்துக் கொண்டிருக்கிறது


உயிர்விட்டு
உயிரை வாங்குகிறது
ஊதிய சிகரெட்டுகள்
துண்டுகள் எண்ணிக்கை
ரொம்ப லேட் என்றே
உறுதி செய்கின்றன


எச்சரிக்கையை
ஏளனம் செய்தபடி
ஊதியபடி நிற்கிறது
மூஞ்சி..

காதலி
அவன் காதலனுடன்
இருக்கையைப் பின் தள்ளி
இறுக்கமாக
காதலிக்க கற்றுக்கொண்டேன்..
காதலி மட்டும் தேவை..

Tuesday, October 18, 2011

விவசாயம் தேவையா?

எந்த ஒரு பிரச்சினையிலும், பிரச்சினையோட மூல காரணத்தை ஆராய்ந்து அதை முளையிலேயே கிள்ளி எறியனும், அப்படியே விட்டா அது வளர்ந்து தீவிரவாதமாகிவிடும். ஒரு உதாரணத்துக்கு இன்றைக்கு தமிழக விவசாயிகளை எடுத்துங்கோங்க, காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடலைங்கிறான், முல்லைப்பெரியாரில் கேரளா தண்ணீர் விடலைங்கிறான், பாலாத்துல ஆந்திராகாரன் அணை கட்டுறான் இப்படியெல்லாம் பிரச்சினை பண்றாங்க, இதுக்கு மூல காரணம் என்னன்னு கண்டுபிடிச்சி தீர்க்கனும்.

"இதுக்கு மூல காரணம் என்னங்க?"

ரொம்ப சிம்பிள், தமிழ்நாட்டுக்காரன் விவசாயம் பண்றதே தவறு, விவசாயம் செய்வதால்தானே தண்ணீர் கேட்குறான், அவன் எப்படி கொடுப்பான், மிஞ்சி இருக்கிறத மட்டும்தான் கொடுப்பான், அதுனால தண்ணி கேக்குறத நிறுத்தனும், அதுனால விவசாயம் செய்வதை நிறுத்தனும், இல்லாட்டி இது தீவிரவாதம் வளர வழி வகுத்துவிடும்.விவசாயம் எனது பிறப்புரிமைம்பான் இன்னும் நிறைய வெத்துக்கோஷம் போடுவான்.

எப்படி நிறுத்த முடியும்?

விவசாயம் பண்ற எல்லாரையும் சும்மா விட்டா ஆடிய காலும்,பாடிய வாயும் போல சும்மா இருக்கமாட்டான், அந்தக்காலத்துல ஏழு போகம் வெள்ளாமை போட்டேன்னு அவ்வையார் பாட்டைப்பாடிட்டு வெறும்பேச்சு பேசிட்டு இருப்பான், அதுனால அவங்கள இரும்புக்கரம் கொண்டு அடக்கனும், ஒரு ஒரு ஆற்றுப்பகுதிக்கும், முகாம்கள் அமைத்து எல்லாரையும் அடைச்சிரனும், இலங்கையிலே இதே மாதிரி பிரச்சினை தீர்த்த புண்ணியவான்கள் பெயர்களான ராஜபக்ஷே சகோதரகள் பெயர்களை அந்த முகாம்களுக்கு பெயர் வைத்து அவர்களையும் கவுரவிக்கலாம். உலகத்துக்கே ஒரு முன்மாதியாக விவசாயத்தீவிரவாதத்தை ஒழித்த மாதிரியும் இருக்கும்

விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்?

எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, ஏன் இன்னும் விவசாயத்தைப்பத்தி பேசறீங்க, அவங்கள விவசாயிகள்னு சொல்றதே தப்பு, விவசாயத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள்னு வேணும்னா சொல்லலாம்
ஆறுகளில் தண்ணீர் பற்றாக்குறையினால்தான் விவசாயத்தை நிறுத்தறோம், ஆனா அதே ஆறுகளில் பல்வேறு பிஸினஸ் உருவாக்கலாம், ஆத்துல படகு சவாரி விடலாம், ரிட்டையர் ஆன பெரிசுகள் மீன் பிடிக்க வாடகைக்கு விடலாம், தண்ணீர் வராதபோது ரிரை ரிவர் ஷோ அப்படின்னு சொல்லி டிக்கெட் போட்டு பொழுது போக்கு காண்பிக்கலாம், அந்தக்காலத்து விவசாயிகள் இப்படியெல்லாம் பயிர் பண்ணினாங்கன்னு ஒரு புரோட்டோடைப் ஷோ வெச்சு வெளி மாநில/நாட்டு மக்களை கவரலாமே? நான் பொருளாதார நிபுணன் அல்ல, அவர்கள் இன்னும் நிறைய யோசனைகள் தரக்கூடும்

சரிங்க இதில அந்த விவசாயத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள்?

அவங்க இந்த கம்பெனிகள் உருவாக்கும் வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம், அதனை சார்ந்து நிறைய அல்லக்கை தொழில்கள் உருவாகும், இந்தந்தொழில்களுக்கு தேவையான மின்சாரத்தை கூட புதிய அணுமின்சாரம் மூலம் தயாரிக்கலாம்,அதிலும் வேலைக்கு சேரலாம். புதிய ஆற்றங்கரை நாகரிகம் உருவாகும், ஆற்றங்கரைல கக்கா போகிற விவசாயிய அதே ஆற்றங்கரைல வெஸ்டர்ன் டாய்லெட்ல கக்கா போக வைக்கலாம், ஆற்றங்கரைலை பேப்பர்ல துடைக்கும்போது கிடைக்கும் வசதியை உணரும்போது, விவசாயியா இருந்த காலத்தில் ஆற்றில் கழுவிய அந்தக்காலத்தை நினைத்து ஒரு பழைய பின்னவீன இலக்கியம் படைக்கலாம்,விவசாயம் பொய்க்குமா இல்லையான்னெல்லாம் கவலைப்படாம வேலையப்பாத்தமா காமிடியா எதையாவது படிச்சமான்னு ஹாயா இருக்கலாம்.

எனக்கு ஒன்னும் புரியலீங்க, இதெல்லாம் செஞ்சாலும் சோறு எப்படி கிடைக்கும்?

அது டப்பாவில வரும் வாங்கி சுடவெச்சி சாப்பிட்டுக்கலாம்.


நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.



கொங்குப்பையன் : (மனசுக்குளே)என்னடா ஒரு காச்சப்பாடா இருக்.. பிஸினசும் சரியா போகல கோயமுத்தூரு போயி ஆர்டர் எடுத்துட்டு அப்படியே அந்த கம்பேனில வேல பாக்கிற அந்த வட இந்தியா காரிய மடக்க முடியாதுன்னு பார்ப்போம்.

அப்படியே உடுமலையில பஸ்ஸப்புடிச்சி கோயம்புத்தூர்ல அந்த அழகான புள்ளய மடிக்கிறதுக்கு அண்ணன் வந்து இறங்கி பாக்கிறார், ஆனா அங்க வேற ஒரு பொண்ணு இருக்கு.

கொங்குப்பையன்: ஏனுங் அம்மணி கம்பெனிக்கு புதுசாங்.. இப்பதானுங் ஒங்கள பாக்கிரனுங்..

நெல்லைப்பெண்: ஆமாவே நான் கோயம்புத்தூருக்கே புதுசு சார், நேத்தைக்கு என் பிரண்டு ஒருத்தி மூலமா சிபாரிசு பண்ணி இங்கே சேந்தேன்.

கொங்குப்பையன்:உங் பேரெண்ணங்.

நெல்லைப்பெண்: நீங்க என்ன சொல்லுதியன்னு சரியா வெளங்க மாட்டங்குதுவே.

கொங்குப்பையன்:அம்மினி அப்பா,அம்மா உங்களுக்கு வெச்ச பேரெண்ணங்..உங்கள் எப்படிங் ..கூப்பிட்டு போடரது..

நெல்லைப்பெண்: என் பேர கேக்குதியலா, எங்கய்யா வெச்ச பேரு லெட்சுமி, ஊருப்பக்கம் எல்லாரும் என்னிய வீரலெட்சுமின்னு சொல்வாக கூப்புடுதாங்க.

கொங்குப்பையன்: இருக்கட்டுங் நல்ல பேருங்.. அம்மினி இந்த ஆர்டரை எங்களுக்கு கொடுத்துப்போடுங்க , உங்களுக்காக ரெண்டு நாள்ல முடிச்சு கொடுத்துப்போடரனுங்க்...

நெல்லைப்பெண்: என்னமோ சொல்லுதிய நெல்லைக்காரிக்கு வாக்கு மாறுனா பிடிக்காது,அப்புரம் உங்களுக்கு ஆர்டர் கெடக்காது அத நல்லா தெரிஞ்சுகிடுங்க.

கொங்குப்பையன்: அது என்னமோ தெரியலங்.. உங்கள பாத்தோடனே மனசு பரி கொடுத்து போட்டனுங்..நீங்க ரொம்ப அலகா இருக்கீங்க அம்மினி உங்க பேரு மாதிரியே...சிறுவானி தண்ணி குடிச்சு போட்டு கொங்கு கார அம்மினிகளுக்கு குரல் நல்லா இருக்குமுன்னு சொல்லுவாங்... ஆனா அது நெசமில்லீங போலருக்குங்க .. தாமிரபரணி தண்ணி குடிச்ச உங்க குரலு குயிலு மாதிரி இருக்குங்... ஆள அப்படியே மயக்கி போடுதுங்.....

நெல்லைப்பெண்: நல்லாத்தேன் பேசுதீய, பாத்தவுடனே இப்படி சொல்லுதீய..உங்க பேரு என்னா?

கொங்குப்பையன்:துக்ளக்குங்..

நெல்லைப்பெண்: என்னா தூக்குலருக்கு சட்டிலருக்குன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேர ஒழுங்கா சொல்லுவே.

கொங்குப்பையன்: துக்ளக் மகேஷுங். துக்ளக் நம்ம கடைபேருங்..என்னங்க பேர சொன்னோன வெக்கப்பட்டு போறீங்..

நெல்லைப்பெண்: நல்ல பேராத்தேன் இருக்கு,பாக்கலாம் எனக்கு புடிக்குதான்னு.அப்புரம் எங்கய்யாவுக்கு வேற புடிக்கனும்.

கொங்குப்பையன் : (மனதினுள்)இரண்டு நாள் கழிச்சு ஆர்டரை முடிச்சு போட்டு கொடுத்துப்போட்டு தேத்திப்பாப்போம் இல்லாட்டி அல்வா கொடுத்துருவொம்.

காலையில ஆர்டர் முடிச்சு கொடுத்துட்டு,நாளைக்கு போயி நெல்லைப்பெண்ண் பாக்குற நெனப்புல வீட்டுக்கு போகிறார்

கொங்கு அம்மினி: வாங்க கால கழுவி போட்டு வாங்க இந்தாங்க தண்ணி.

கொங்குப்பையன் : என்ன சாப்பாடு அம்மினி.

கொங்கு அம்மினி: வழக்கமான சாப்பாடுதானுங்.., ஆனா பாருங்.. நீங்க ஏதோ கோயமுத்தூருக்கு.. ஒரு ஆர்டர் இன்னிக்கு காலைல கொடுத்துபோட்டிங்களாம், அங்கே இருக்கிர அம்மினி அதுக்காக இந்த அல்வாவ கொடுத்து போட்டிருங்காங்...கடைப்பசங்க கொண்டு வந்தாங்..நீங்க சாப்பிடுங்..

கொங்குப்பையன் : (மனதினுள்)ஆஹா நாம கடலை போட்ட வெசயம் கடைப்பசங்ககிட்ட சொல்லிப்போட்டாளோ..சே இருக்காது.. பாசமா அல்வா அனுப்பிச்சிருக்கா.. நாம வேற அல்வா கொடுக்கனும்னு நெனச்சோம் ஆனா அவ திருநெல்வேலி அல்வா கொடுத்து போட்டிருக்கா போல ,ஆமா திருநெல்வேலி அல்வா இளக்கமாத்தன இருக்கும் இது என்ன கல்லு மாதிரியாட்டம் இருக்கு..

கொங்கு அம்மினி: எனக்கு தெரியாதுங்..சும்மா சாப்பிடுங்க்.. நல்லா இருக்குதா..

கொங்குப்பையன் : ..........கடிக்க கொஞ்ச சிரமமா இருந்தாலும் நல்லாதான் அம்மினி இருக்கு..

கொங்கு அம்மினி: இது காயல்பட்டிணம் அல்வா, அடங்காம திரியரவனுக்கு கொடுத்தா பத்து நாளைக்கு பாத்ரூம் வராதாமுங்.. நீங்க வழிஞ்சு போட்ட லெட்சுமி என் கிளாஸ்மேட்தானுங்...பொண்ணுங்கள்ள கொங்கு,நெலலைன்னெல்லாம் ஒன்னும் வித்தியாசம் கெடயாதுங்..
அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..

கொங்குப்பையன் : பழமைபேசி அய்யா உங்க அனுபவத்தை வெச்சு அந்த ஓலைச்சுவடிய படிச்சு போட்டு ஒரு வைத்தியம் சொல்லுங்க, வாயைக்கட்டுனா பரவாஇல்லீங் ,இங்கன வேறய கட்டிப்புட்டாங்....

பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்...

மீள்பதிவு.

Friday, April 15, 2011

கல்லூரி சாலை: கல்லூரி சாலையும் சாத்தூர் சாலையும்.

இந்தப்பதிவு வருங்கால முதல்வரில் விருதுநகர் பற்றிய நாநாவின் பதிவிற்கு துணைப்பதிவாக எழுதலாமென்றிருந்தேன்.நாநா ரெண்டு பதிவுக்கு அப்புரம் ஆளையேக்காணோம் அந்த வலைத்தளமும் விருதுநகர் மாதிரியே காஞ்சு போச்சு. இடையில் சஞ்சய் காந்தி வந்து தரும புரிய அவங்க ஊரு தோட்டம் மாதிரி பசுமையா காமிச்சாரு, கோடை காலம் வந்திருச்சா திரும்பவும் காஞ்சு போச்சு, தண்ணீர் இல்லாமேலேயே உயிர் வாழும் கலை அறிந்த புதுக்கோட்டை பத்தி எழுதி உயிர் கொடுக்க சொல்லி புதுகை அப்துல்லா கிட்ட சொன்னேன் அவரு சிங்கப்பூர், துபாய்னு குடும்ப விசயமாவும் வேலை விசயமாவும் பறந்துட்டே இருக்கிறதானலே ஜி சாட்ல ’பதிவு விரைவில் ரெடி’ அப்படின்னு தந்தி அடிக்கிறார், நானும் ஒரு தந்தி அடிச்சேன் பதிவு எங்கேன்னு அது எங்க வீட்டு பரண் மேல கெடக்குன்னு எடக்கா சொல்றார்.

இஞ்சினியரிங்க் இறுதித்தேர்வு முடிந்த சமயம், ஒரே ஒரு செய்முறைத்தேர்வு மற்றும் சேர்த்தவைகள் எழுதவேண்டிய நேரம். அயன் வடமலாபுரம்ன்னு ஒரு ஊர் அருப்புக்கோட்டைக்கும் , எட்டையபுரத்துக்கும் நடுவில் சாத்தூர் , விளாத்திக்குளம் சாலை சந்திப்பின் அருகில் இருக்கிறது. இந்த ஊரைச்சேர்ந்த நண்பன் பெரிசு அவங்க ஊர் திருவிழாவிற்கு கூப்பிட்டிருந்தான். அந்த மிகச்சிறிய கிராமம் பற்றிய பதிவுதான் இது.

ஜூலை மாதம் மதியம் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள தாப்பாத்தி என்ற ஊரில் பெரிசுவுடன்,டொல்பி மற்றும் நான் சென்று இறங்கினோம். அங்கிருந்து பெரிசு ஊருக்கு 3 கிலோமீட்டர் நடக்கவேண்டும்.ஜூலை மாதம் கரிசல்காட்டில் தார் ரோட்டில் மதிய நேரம் என் வாழ்க்கையில் முதன் முதலாக பூமியில் இருந்து ஒரு சூரியனும் மேலேயிருந்து ஒரு சூரியனும் சேர்ந்து தாக்குவதை கண்டேன். வெயிலின் கொடுமையை சொல்வதென்றால், சங்கமம் என்றொரு படத்திற்கு குமுதம் விமர்சனத்தில் ரகுமானும், விந்தியாவும் நடனமாடுவதை உச்சி வெயிலில் தார் ரோட்டில் செருப்பில்லாதவன் படும் அவஸ்தை போன்று இருந்தது வர்ணித்திருப்பார்கள் , ஓசி செருப்பு அணிந்திருந்தும் எங்கள் நிலைமையும் அதுதான்.

ஊரில் திருவிழாக்கோலம் கலை கட்டி இருந்தது, ஊரில் வாழும் அனைவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள்.பெரிசு வீட்டின் அருகில் ஒரு மிகப்பெரிய பங்களா இருந்தது, அது மதுரை அரவிந்த கண் மருத்துவமனை உரிமையாளரின் வீடு. சிறிய ஊரில் பிறந்து கண் மருத்துவத்தில் பெரிய புரட்சி செய்த அவரை எப்படி வேண்டுமானாலும் பாரட்டலாம்.

100 வீடுகளுக்கு குறைவாக உள்ள ஊர், மிக ஒழுங்கான இரண்டு மூன்று தெரு, சாக்கடையை நடு ரோட்டில் ஓட விடமால் சிமெண்ட் குழாய்கள் வழியாக எடுத்துச்செல்ல வசதி, மழையே பெய்யாவிட்டாலும் அருமையான வடிகால் வசதி. கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பல ஏக்கர் நிலம் இருக்கிறது,ஆனால் அனைத்தும் விவசாயம் செய்யவே முடியாத கரிசல் காடு, ஏக்கர் 2000 ரூபாய்க்கு விற்றால் பெரிய விசயம் , அதுவும் இந்த ஊர்ப்பக்கம் உள்ள ரெஜிஸ்ட்டர் ஆபிஸில் கல்யாணம் ரெஜிஸ்ட்டர் ஆனால்தான் உண்டாம், பெரிசுக்கு தெரிந்து யாரும் நிலம் வாங்கியதோ விற்றதோ இல்லை.

திருவிழாவிற்கு வந்த இளம்பெண்கள் மத்தியில் எங்கள் பெரிசுதான் ஹீரோ, சினிமாவில மட்டும்தான் பெரிசுங்க ஹீரோ அப்படின்னு நெனச்சிருந்தா உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், பெரிசும் பெண்களும் தெலுங்கில் சிரித்துக்கொண்டார்கள் எங்களுக்கும் புரிந்தது, முளைப்பாறி பால் குடம் போன்ற திருவிழாக்கு உரித்தான அனைத்தும் முடிந்தவுடன், பெரிசு வீட்டில் எங்களுக்காக தயாராக இருந்த மட்டன் பிரியாணி நோக்கி நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.

போகும் வழியில் எங்கள் பெரிசுவிடம் அதைவிடப் பெரிசு ஒன்று
“என்ன விருந்தாடிகள் வந்திருக்காங்க வீட்டுல ஆட்டு மட்டனா , கோழி மட்டனா தம்பி எனக்கேட்டார்.பெரிசு சிரித்தபடியே ஆட்டு மட்டன் தான், கோழிக்கறிய சிக்கன்னு சொல்லுவாங்க என்று தெலுங்கிவிட்டு எங்களுக்கு நடந்ததை தமிழினார். நிறைய சிரிப்பு வந்தாலும் என் சிந்தனையெல்லாம் சீக்கிரமாக ஆட்டு மட்டன் பிரியாணியை சாப்பிடுவதிலேயே இருந்தது.

அருமையான பிரியாணி சாப்பிட்டோம், டொல்பி ரொம்பவே பிரியாணிய பாராட்டினான், உண்மையிலேயே துளுக்க வீட்டு பிரியாணி மாதிரியே இருக்கு அப்படின்னான். என்ன ஒரு குவாட்டர் உட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்னான்.அவன் குவாட்டர் உட்டிருந்தா எங்க நிலைமை வேற மாதிரி ஆயிருக்கும்.டொல்பி வீட்லேயும் பக்ரீத்துக்கு ஆடு வெட்டி சாப்பிட்டிருக்கேன்(நான் சாப்பிடதா ஊடு எதுன்னு கேக்காதீங்க) அதனால் அவன் சொன்னது சரியென்றே பட்டது.

எனக்கு அடுத்த நாள் செய்முறைத்தேர்வு இருந்ததால் நான் அன்று மாலையே மீண்டும் தாப்பாத்தி வந்து காலேஜுக்கு வந்துவிட்டேன்,அடுத்த நாள் ஹாஸ்டலுக்கு பெரிசு போன் பண்ணினார், டொல்பிய நட்டுவாக்கலி கடிச்சிருச்சு, இப்பதான் ஹாஸ்பிட்டலேந்து வரோம், ஒன்னும் பயமில்ல நாளைக்கு வந்திருவான் அப்படின்னார்.

இங்க ஹாஸ்டலில் நட்டுவாக்கலி , தேள், விஷப்பாம்புகள் வண்டுகள் எல்லாம் காசு குடுக்காம எங்க கூட தங்கியிருக்கும் ஜந்துக்கள்,ஆனாலும் ஒரு நாளும் இவைகள் எங்களை கடித்ததில்லை, இந்த அருப்புக்கோட்டை நட்டுவாக்கலி ஏன் டொல்பிய கடிச்சதுன்னு இன்னமும் எனக்கு புரியல..ஒருவேளை கரிசல் காட்டு நட்டுவாக்கலிக்கு செட்டிநாட்டு இரத்தம் பிடிக்குமோ?

Friday, March 4, 2011

டேவிட் Y கவின் பிறந்தார்.

டேவிட் Y கவின் பிறந்தார்.

தமிழ் வலை எழுத்துலகின் எழுத்துப்பிழைக்கு இலக்கணம் கண்டவரும் தளபதி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டவரும், கிடைத்த இடத்தில் எல்லாம் துண்டு போடுபவரும், பாண்டிய குறுநில மண்ணின் மைந்தருமான நசரேயனுக்கு, நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாமிருவர் நமக்கிருவர் என்ற நிலைய அடைந்துள்ள
நசரேயன் தம்பதிகளை வாழ்த்துவோம்.

Wednesday, March 2, 2011

காங்கிரஸிற்கு 80 தொகுதிகள்.

நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டு வந்த தி.மு.க காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஒரு வழியாக முடிவிற்கு வந்ததாக தெரிகிறது.காங்கிரஸிற்கு பெருந்தன்மையாக எண்பது தொகுதிகளை திமுக விட்டுக்கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதன்படி காங்கிரஸிற்கு ஈரோடு, புதுக்கோட்டை உட்பட்ட தொகுதிகள் கிடைக்கும் எனவும் தகவல் கசிகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை ஏற்று காங்கிரஸ் கையெழுத்திட்டால் , புதுக்கோட்டையில் காங்கிரஸ் சார்பாக பதிவர் அப்துல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புக்கிடைக்கும் என்றும் செய்திகள் கசிகிறது.ஈரோட்டில் இளங்கோவனா?

Friday, February 11, 2011

மூன்றாம் பாலினம் - விளக்கம் தேவை

பின்னூட்டவாதியின் அறிவியல் பதிவு
XXY பற்றி வைஸ்கீக்

XXY குறைபாடு உள்ள ஆண்கள் வேஷம் போடுவதே மூன்றாம் பாலினம் என்கிறார் அறிவியல் பதிவர் பின்னூட்டவாதி. ஆனால் மூன்றாம் பாலினத்தவர் யார்? XXY யா இல்லை வேறு எதாவது மாற்றங்கள் உள்ளவர்களா? அறிவியல் ரீதியாக தெரிந்தவர், அல்லது மூன்றாம் பாலினத்தவர் யாரேனும் வலையில் இருந்தால் விளக்கம் அளிக்கவும்.


என் அறிவுக்கு இதற்கு விடையில்லை.அல்லது தேடுவதற்கு நேரமில்லை.

Tuesday, February 8, 2011

பரிணாமமும், மத நம்பிக்கையும்.

மதநம்பிக்கை தாண்டி பரிணாமத்தை நம்பும் கிறிஸ்தவ/இஸ்லாமியர்கள் யாரேனும் இருந்தால் பின்னூட்டம் இடுங்களேன்.

Sunday, January 30, 2011

உன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா?






பிகு: பதிவு பிரியாமணியின் சட்டையை வைத்து உருவானது.

Sunday, January 9, 2011

கால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.

அமெரிக்கா வந்து இன்னும் இரண்டு வருடத்துல ஒரு மாமாங்கம் ஆகப்போகுது, ஆரம்ப காலத்தில் நான் வேலை பார்த்த இடங்கள் பெரும்பாண்மை தகவல் தொடர்பு ஆராய்ச்சி நிறுவணங்களே, அங்கேயெல்லாம் டிரெஸ் கோடு ஒரு டி ஷர்டும், ரொம்பக்கிழியாம இருக்கிற ஜீன்ஸுந்தான், அதுனால ஃபார்மல் சட்டை எடுக்கிற வேலையே இல்லை, சென்னையில இருக்கும் போது ஒரு வெண்ணெய் 900 ரூபாய்க்கு ஒரு லூயி பிலிப் சட்டை இனாமாத்தந்தான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணும்போது போடறதுக்காக, அதுதான் இன்னைய வரைக்கும் இண்டர்வியூ/ கிளையண்டுகளை பார்க்கப்போறதுக்கு போடறதுக்கு வெச்சிருக்கேன்.

தகவல் தொடர்பு ஆராய்ச்சி விட்டு, மருந்துக்கடைல பில்லு போடற சாப்ட்வேர் கட்டமைக்கவும் வந்தாச்சு, இங்கயும் கிழியாத ஜீன்ஸூம், பனியனும்
போதும் நீங்க கிழிக்கிற கிழிக்குன்னு சொல்லிட்டாங்க, நானும் அப்படியேத்தான் இருந்தேன், இடையிலே தமிழ் வலைப்பதிவுகள் சகவாசம் என்னோட உடன்பிறப்பு மூலமாக கிடைத்து, பெரிய எழுத்தாளராகவும் ஆகியாச்சு, என்னதான் பச்சை நோட்டுல சம்பளம் வாங்கினாலும், திங்கிறதுக்கு செலவு பண்ற அளவுக்கு நான் உடைக்கு பண்றதில்லை ஆனா பாருங்க எழுத்தாளனா மாறின பிறகு எனக்கு அந்த ஆசை வந்திருச்சு. இந்தவாரம் அதுக்கு நேரம் கூடி வந்துச்சு, எப்பவும் கூடவே வருகிற என் மனைவி, நான் வர இரண்டு
மணி நேரம் ஆகும் நீங்க மேசிஸ்ல அதுவரைக்கும் ஷாப்பிங் பண்ணுங்க, அந்த எலெக்ட்ரிக் தோசைக்கல்லு, கரண்டு விளக்குமாறு எல்லாம் பாத்து வைங்கன்னாங்க.
தனியா ஷாப்பிங் பண்ண வாய்ப்பு கிடைச்ச இந்த நேரத்துல கடைக்குள்ள நுழைஞ்ச உடன், கால்வின் கிளெயின் சட்டை கண்ணுல பட்டுச்சு, படார்னு எங்கியோ தமிழ் எழுத்துலகுல இந்தப்பேர பாத்த ஞாபகம் வந்தது, உடனே நானும் எடுத்திட்டேன், ஒரிஜினல் விலை $79.99. தள்ளுபடியெல்லாம் போக $34.99 விற்பனை வரி உட்பட, வாங்கிட்டேன்.

இப்பக்கூட ஒரு இணைய எழுத்தாளனா என் மேல எனக்கே கோபம் வந்தது, நம்மோட எழுத்த படிக்கிற யாரும் இந்த மாதிரி வரி கட்டறதில்லை, அப்புறம்தான் தோனுச்சு இலவசமா அதுவும் தெரியாத்தனமா படிக்கிறதுக்கெல்லாம் வரி எப்படி கட்ட முடியும்னு.

சட்டைய மடிச்சு மேஸில் கொடுத்த பிளாஸ்டிக் பையில வெச்சிக்கிட்டேன், திடீர்னு ஒரு சமூக ஆர்வலான ஏகாதிபத்தியத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பையை புறக்கணிக்கலாமான்னு தோனிச்சு, ஆனா பாருங்க பக்கத்து வீட்டு ரவி கொடுத்த வாத்துக்க்குழம்பு ரொம்ப நல்லா இருந்தது, அதுனால ராத்திரிக்கும் வைச்சிக்கலாமின்னு மிச்சம் வெச்சது சட்டைல கொட்டிருச்சுன்னா சட்டை வீனாப்போயிரும்னு பொது உடமை நாட்டுல உருவான அந்த பிளாஸ்டிக் பையிலேயே வெச்சுக்கிட்டேன்.

இந்த நேரத்துல ரவி வீட்டு வாத்துக்குழம்பு நல்லா இருக்குன்னு சொல்லச்சொல்லி எங்கம்மாகிட்ட போன் பண்ணி அவருகிட்ட சொல்லச்சொன்னது ஞாபகம் வருது. ரவி எனக்கு போன் ஏன் வாத்துக்குழம்பு நல்லா இல்லையான்னு கேக்கிறார், எங்கம்மா தமிழ்ல சொன்னது, தெலுங்கருக்கு புரியல இந்த மாதிரி கம்யூனிகேசன் கேப்பையாவது ஒத்துக்கலாம், பல எழுத்தாளர்கள் தமிழ்ல எழுதறது பல தமிழர்களுக்கு புரியுறதில்லை.

கடைய விட்டு வெளில வராலாமின்னு கிளம்பினேன், வழியில கால்வின் கிளெயின் ஜட்டி வேற இருந்தது, பச்சை நோட்டுல சம்பாதிச்சாலும், தமிழ்நாட்லேந்து ஜோக்கி ஜட்டி வாங்கி போட்டு பழகிட்டதால,கால்வின் கிளெயின் ஜட்டி பேரையே நான் கேள்விப்பட்டதில்லை,என்னடா கஞ்சப்பிசினாறின்னு நினைக்காதீங்க, என்னைவிட பல மடங்கு
சம்பாதிக்கிற என் நண்பர் ஒருத்தன் கிலோ நூறு ரூபாய்க்கு மதுரை நாடா ஜட்டிதான் போடுறான். சரி எழுத்தாளரா ஆயாச்சு, இனி ஜோக்கி வேணாம் கால்வின் கிளெயின் வாங்குவோம்னு போனா அந்த ஜட்டியெல்லாம் சேல்ல போட்டிருக்கான், ஒரு ஜட்டி இரண்டு டாலர்தான், அப்படிங்கிறான், குறைந்தபட்சம் ஆயிரத்து முன்னூறு ரூபாய் அதாவது $25க்குதான் எனக்கு ஜட்டி
வேணும் அப்படின்னேன், இப்ப இந்த ஜட்டிய அவ்வளவுக்கு நாங்க விக்க முடியாது சேல் இல்லாதன்னிக்கு வந்து வாங்கிக்க சொல்லிட்டான். நானும் சரின்னு சொல்லிட்டி வந்துட்டேன்.

கடையிலிருந்து வெளிய வரதுக்குள்ள பயங்கர கூட்டம், நீங்கதான் குகுவான்னு அப்படின்னு கேட்டாங்க, ஆட்டோகிராப் வேனும்னாங்க, உடனே $25க்கு ஒரு பேனாவை வாங்கினேன் அப்புறந்தான் ஞாபகம் வந்தது எனக்கு கையெழுத்து போடத்தெரியாதுங்கிற விசயமே, பேனாவை ரிட்டன் பண்ணிட்டு கைநாட்டு போட இங்க் பேடு இருக்கான்னு கேட்டேன், அதெல்லாம் இங்க இல்லை வேணும்னா டாலர் ஷாப்பில கேட்டுப்பாருங்கன்னாங்க, ஒரு எழுத்தாளன் கைநாட்டு வைக்க தரமான இங்க் பேடு கிடைக்கல, டாலர் ஷாப்பில வாங்கின இங்க் பேடு கைநாட்டு வெச்சா கை வெந்துப்போயிருமோன்னு ஒரு பக்கம் பயமா இருக்கு. மனைவிகிட்டேயிருந்து போன் வந்தது, மின்சார தோசைக்கல்லு பார்க்காத பயமும் வந்தது.

Wednesday, January 5, 2011

வரலாறு திரும்புகிறது.

ஆகஸ்ட் 11 ,3009.

ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று திண்ணியத்தில் உயர்சாதிக்காரர் வீட்டிலும் வயல்களிலும் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதியினரான மூர்த்தி தேவர், குரு ஐயங்கார், ஷண்முக நாயக்கர் ஆகியோர், உயர்சாதிப்பண்ணையார் முருகப் பறையனார் வீட்டில் உள்ள கோவிலின் உள்ளே சென்று சாமி கும்பிட்டதற்காக முருகப்பறையானாரும் அவரது மனைவி சசிரேகா பறைச்சியாரும் , கீழ்சாதி தேவப்பயலுக்கும் பாப்பாரப்பயலுகளுக்கு என்னடா திமிரு, நாயக்கப்பயலும் இவனுங்க கூட சேர்ந்து கொட்டமடிக்கிறீர்களா என்ன தைரியம் இருந்தா கோவிலுக்குள்ள நுழைவீங்க என்று கூறியவாரே வாயில் மலத்தை கரைத்து ஊற்றி முப்பத்தொண்றாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சாதி வன்கொடுமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த உலக நாட்டுத்தலைவர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

சவூதி அரேபியா பிரதமர் ஸ்வாதி நாயர் வழிபாடு அனைவருக்கும் பொதுவானது , அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றார்.அந்நாட்டுச்சட்டம் தனிமனித வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதை சுட்டிக்காட்டினார். சவூதி அரேபியாவில் கடந்த 50 வருடமாக இஸ்லாமிய மத வழிபாட்டுத்தளங்கள் தவிர மற்ற மத வழிபாட்டுத்தளங்களை வெடி வைத்து தகர்ப்போம் என்று கூறிய தீவிரவாதக் குழுவை இரும்புக்கரம் கொண்டு தான் அடக்கியதை, துபாய் பிரதமர் குட்டி முகமது பாராட்டியதை நினைவு கூர்ந்தார்.இவர் சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு ஓட்டுரிமையும் , ஓட்டுனர் உரிமையும் வழங்கி புரட்சி ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்சிய பிரதமர் சொராஸ்டிர் அகமதுவும்,குர்து பிரதமர் முகமது சேக்கும் தங்களது கணடனத்தை தெரிவித்தனர்.

பாலஸ்தீன பிரதமரும், இஸ்ரேலியப் பிரதமரும் ஜெருசலத்திலிருந்து விட்ட கூட்டறிக்கையில் இம்மாதிரி நிகழ்வுகள் களையப்பட்டு எங்களைப்போல ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றனர்.

மனித உரிமை எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என சீன ஜனநாயக கூட்டமைப்பின் தலைவர் தியானென்மென் சதுக்கத்தில் இருந்தபடியே இச்செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் சிவத்தமிழ்நம்பி வழிபாட்டு உரிமைகள் சாதியின் பேரில் தடுக்கப்படுவதை கடுமையாக கண்டித்ததோடல்லாமல், இலங்கையில் இந்து மதத்தில் சாதிப்பாகுபாடே இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் சந்திரகுப்த மவுரியர், எங்களின் ஆதித்தாயகமான இந்தியாவில் இவ்வாறு நடப்பது வருத்தமளிக்கிறது என்றார். இவர் புத்த மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட மசூதிகள் அனைத்தையும் மீளக்கட்டிந்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை இந்த நிகழ்வு கண்டிக்கப்படவேண்டிய ஒன்று, எனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊரில் இப்படி நடப்பது வருத்தமளிப்பதால் தான் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக கூறினார். கி.பி 2700 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு நிகராக சிங்களர்களுக்கும் உரிமையை தன் எள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை வாங்கிந்தந்ததையும், கி.பி 2500 ல் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினையை தன் எள்ளெள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை தீர்த்துவைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

இந்தியப்பிரதமர் ஸ்டீபன் காந்தி இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது, பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என்று தள்ளாத வயதிலும் உறுதிபடக்கூறினார்.

கடைசி நேரத்தகவலின்படி கருப்புசாமி தேவர், மற்றும் கபாலி ஐயர் தலைமையில் இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.

Monday, January 3, 2011

மனம்போன போக்கில் மாடு போன போக்கில்

மனம் போன போக்கில் வீட்டின் கொள்ளைப்புறத்திலிருந்து நடந்து கொண்டிருந்தேன், தூரத்திலிருந்து உத்திராபதியின் குரல் கேட்டது.

"மாப்பிளை உங்க மாடு எங்க வீட்டு தொட்டிய மொட்டை அடிக்குது, பிடிச்சிக்கட்டுங்க"


உத்திராபதிக்கு நான் பங்காளி அதனால் என் வீட்டு மாடு அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன், அப்படியே சித்தன் கடையில் டீ குடிக்கும் எண்ணத்தோடு மேலும் நடந்தேன்.

"மாப்பிளை தமிழ்ல தானே சொல்றேன் மாட்ட புடிச்சு கட்டுங்க"

இதுவரை அமைதியாக இருந்த வாத்தியார் சங்கரன் வாயைத்திறந்தார்.

"பரவாயில்லை மாப்பிளை நீங்க இங்கிலிசுலேயே சொல்லுங்க அப்புறமா புடிச்சி கட்டுறேன்"

"இந்த எடக்கு மயிருக்கெல்லாம் கொறச்ச இல்ல மாட்டைப் புடிச்சி கட்டலைன்னா, நான் புடிச்சி கட்டி ரெண்டு நாளைக்கு தீனி போடமாட்டேன்"
உத்திராபதி இப்போது என்னைக் கை காட்டி கூப்பிட்டான்.

"டேய் நீதான் இன்ஜினியருக்கு படிச்சிருக்க, இந்த சின்னப்பள்ளிக்கூடத்தான், என்னை இங்கிலீசுல மாடு புடிச்சி கட்டச்சொல்றான், நீ கொஞ்சம் இங்கிலிசுலே மாடு கட்டச் சொல்லி சொல்லுடா"

"இல்ல உத்திராபதி, நான் படிச்சது இன்ஜினியரிங் இங்கிலீசு அதுல மாடு புடிச்சி கட்டுறதுக்கெல்லாம் சொல்லித்தரலை"

"சரி ஏதோ படிச்சத சொல்லு , மாப்பிளை என்ன பண்ணுறார்னு பார்ப்போம்"

"டியர் மாப்பிள், யுவர் மொட்டைமாட் ஜம்புடு தி வேலி அன்ட் ஈட்டிங் தி பருத்திகொட் இன் உத்திரன்ஸ் வாட்டர் டேங், பிளீஸ் யூ கட் தி மொட்டமாட் இன் தி மொள ஸ்டிக்"

"மாப்பிளை நீங்க சொன்னது மாதிரியே என் பங்காளி இங்கிலீசுல சொல்லிட்டான் இப்பயாச்சும் கட்டுங்க"

"அவன் என் மொட்டமாடி தண்ணித்தொட்டி வேலி தாண்டி ஊத்தி வேஸ்டாப்போகுது, ஸ்டிக் வைச்சு அடைக்கச்சொல்றான், ஆனாலும் இன் ஜினியர்னா இன் ஜினியர்தான்"

"இல்ல சார் நான் மொட்டை மாட்டைத்தான் கட்டச்சொன்னேன்"

"என்ன இன் ஜினியரே , மோழ மாட்ட மொட்டை மாடின்னு சொல்றீங்க, என்னத்த படிச்சியளோ போங்க, உங்கப்பாரு காசு உன் படிப்பு என்னமோ போங்க, நீங்க படிச்சிப்புட்டு மாடியும் கட்டவேண்டாம் , மாடும் கட்டவேண்டும் கக்கூஸாவாது கட்டப்பாருங்க"

"காலைல டீக்குடிக்கலாமின்னு இந்தப்பக்கம் வந்ததுக்கு எனக்கு வேணும்"
இப்படியாக வெட்டிப்பேச்சு ஓட்க்கொண்டிருக்கையில் கொண்டியாரகள்ளி, சத்தம் போட்டுக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"ஏன்டா வாத்திப்பயலே மோழ மாட்டை அவுத்து விட்டு என் பயித்தை மொட்டையடிக்கலாமின்னா இருக்க, மாட்டை அவுத்து விட்டுப்புட்டு இங்க என்னடா பேச்சு வேண்டிக்கெடக்கு, இன்னொரு வாட்டி மாடு அந்தப்பக்கம் மாடு வந்திச்சு,பள்ளிக்கூடத்து வேலில ஆடு மேஞ்சா ஆட்டுக் காத அறுப்பியாமே நீ, நான் உன் காதை அறுத்துப்புடுவேன் பாத்துக்க"