Wednesday, July 25, 2012

கோபாடெக்ஸ், திராவிடன் பண்ட்.


 மிகச்சிறிய கிராமத்தில் வளர்ந்தாலும், அப்பா ஆசிரியராக பணி ஆற்றியதால் நடுத்தர விவசாய குடும்பத்தினரை விட வசதியான ஒரு பிம்பம் எங்கள் குடும்பத்தின் மேல் எப்போதும் உண்டு. அதற்கு இரண்டு காரணம் எங்கப்பாவின் ஆசிரிய வருமானம் மற்றும், நகரத்தில் பிறந்த அம்மா.

தஞ்சை மாவட்ட விவசாய குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்தாலும், நகர மக்களை போல் விரும்பிய உணவு உட்கொள்ள முடியாது, வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கும் சமைக்க வேண்டும் என்பதால் பெரும்பாலும், காலையில் பழைய சோறும், மதியம் சில நாட்களில் பருப்பு கொழம்பு அல்லது ரசமோ தான் அன்றாட விவசாய குடும்பத்தின் உணவு, அதுவும் நடவு போன்ற பெரு வேலை நாட்களில் வெறும் கஞ்சி ஆகிவிடும்.(இப்பொழுது கஞ்சி இல்லை). கிராமங்களில் உள்ள குளங்களில் மீன் பிடித்தாலோ, பாய் ஆடு வெட்டினாலோ உயர் தர கவிச்சியும் , காசு இல்லாத நிலையில் ஒரத்தநாடு சந்தையில் வாங்கிய திருக்கை கருவாட்டை ரசம் சோத்துக்கு சுட்டுதின்பதும்தான் பெரும்பாலான விவசாயிகளின்  உணவு முறை. எங்கள் வீட்டிலும் இப்படியும் உண்டு  என்றாலும், பள்ளிக்கு செல்வதால், தினமும் மதிய உணவு, புது விதமான குழம்புகளுடன் நல்ல சாப்பாடு அம்மா புண்ணியத்தால் உண்டு.மேலும் விவசாய குடும்பங்களில் சில திண்ணு கெட்ட குடும்பங்கள் இருக்கும், அவர்களோடு நாங்கள் நெருக்கமாக இருப்போம், அவர்களோடு சேர்ந்து ஆடு வாங்குவது, மீன் வாங்க ஊரனிபுரம் செல்வது போன்றவை என்னுடன்  படிப்பவர் சிலருக்கு வசதியான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது.


அப்பா அதே பகுதியில் வேலை பார்த்ததாலும், நான் அவர் பள்ளியிலேயே படித்ததாலும் ஏற்பட்ட சங்கடங்கள் நிறைய. அதிலும் பள்ளி இருக்கும் ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் குடும்பம் எங்களுக்கு உறவும் கூட. அவர் ஒரு வித நக்கல் கலந்த சோகத்தோடும் பொறாமையோடு பேசுவார். அவரின் அப்பாவோ அடிக்கடி என்னிடம் ‘நான் பள்ளிக்கூடம் கட்டி வெச்சேன், ஒங்ஙொப்பன் சம்பாதிக்கிறான்’ என்பார். பள்ளிக்கூடம் கட்டினேன் என்று அவர் சொல்வது அவர் காண்ட்ராக்ட் எடுத்து கட்டிய பள்ளி. எனக்கு அப்போதுமே கொஞ்சம் வாய்க் கொழுப்பு அதிகம்.

‘நீங்க பள்ளிக்கூடம் கட்டாட்டியும், அவர் வேற ஊர்ல வாத்தியாரா இருந்து சம்பளம் வாங்கியிருப்பார்!’ என்று பதிலடி கொடுப்பேன்.

அவர் மகனும் அவர் போலவே ஆரம்பித்தான்.

’உனக்கென்னடா! உங்கப்பா தீவாளி, பொங்கலுக்கு கோபாடெக்ஸ்ல கெவருமெண்ட் காசுல துணி வாங்கி கொடுப்பாரு’ என்பான். உண்மையில் தீபாவளிக்கு வீட்டில் கோ ஆப்டெக்ஸ் போர்வை வாங்குவோம். அதோடு சகோதரர்கள் மூவருக்கும் போர்வை மாதிரியே இன்னோரு துணி அஞ்சு மீட்டர் எடுத்து சட்டைக்கு கொடுப்பார்கள். அதையும் என் பங்காளி டெய்லர் ஆறு மாசத்துக்கு பிறகு தைத்துக் கொடுப்பார்.

அதோடு அவன் புலம்பல் நிற்காது. ‘உங்களுக்கு பணத்துக்கு என்னடா குறைச்சல்? கெவருமெண்டு திராவிடன் ஃபண்டுல பணம் போட்டு வைக்கிறான். அடிச்சி மொழக்குவீங்கன்னு சொல்லுவான்.

இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அப்பாவால் எங்களைப் படிக்க வைத்திருக்க முடியாது. அவரின் ப்ராவிடன்ட் ஃபண்ட் கடன், நிலங்களை விற்றகாசோடு சம்பளமும் கொஞ்சம் உதவி இருக்கிறது.

விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருக்கிற அத்தனை குடும்பங்களும் இன்று மேலும் நலிவடைந்து இருக்கிறது.கிராமங்களில் இன்னும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலம் கண்டிப்பாக ஒரு வறட்சி தன்மையை எதிர் நோக்கியிருக்கிறது. வறுமை பல நேரம் போராட்ட குணத்தை கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும், ஆனால் கிடைக்கும் இலவச அரிசிக்கும் நூறு நாள் வேலைக்கும்,சாராயத்துக்கும் அடிமையாகி ஒட்டு உரிமை கொண்ட ஜனநாயக அடிமைகள் ஆகும் வாய்ப்பும் கண்ணுக்கு தெரிகிறது.

Tuesday, July 17, 2012

தஞ்சைக்கள்ளர் - முதலியார்கள்.


முதலியார்களில் பலவகை சாதி முதலியார்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் மட்டும் வாழும் தஞ்சைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த முதலியார்களைப் பற்றி எனக்கு வாய் வழியாக கிடைத்த தகவல்களை பகிர்கிறேன். 

முதலிப்பட்டி எனும் கிராமம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்,பழைய புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம், தற்போது முதலிப்பட்டி எனும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், அதனைச்சார்ந்த அவிச்சிக்கோன்பட்டி எனும் ஊர் தஞ்சை மாவட்டத்திலும் இருக்கிறது, முன்பு ஒன்றாக இருந்திருக்கவேண்டும்,இன்றும் இதன் ஊரின் எல்லை வீடுகளின் கொள்ளைப்புறம்தான். இந்தப்பெயரில் இருக்கும் முதலி மற்றும் கோனில் வரலாறு இருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டிற்கு முன் அல்லது சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முதலிப்பட்டி எனும் கிராமம், தற்போது இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மஹாராஜா சமுத்திரம் எனும் காட்டாற்றின் கரையில் இருந்திருக்கிறது, இன்னும் கிட்டத்தட்ட  ஐநூறாண்டு பழைய சிவன் கோவிலும், பொன்னிநதியின் பெயர் கொண்ட சாமியாகிய பொன்னியம்ம்மன் கோவிலும் இடிபாடுகளுடன் உள்ளது. இங்கு வாழ்ந்தவர்கள்தான் இந்தப்பதிவில் வரும் முதலியார்கள்.இன்றும் பொன்னியம்மன் கோவிலுக்கு காணும் பொங்கல் அன்று செல்வார்கள், சில காலம் முன் வரை பொன்னியம்மனுக்கு படையல் எல்லாம் செய்திருக்கிறார்கள், சிதிலமடைந்த சிவன் கோவிலில் பெரும்பாலும் யாரும் வழிபடுவதில்லை.

காட்டாற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு உயிரிழப்புகளும்,கால்நடை இழப்புகளும் ஏற்பட்டதால், மிச்சமிருந்தவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனார்கள் சிலர் வசித்த மேடான இடத்திற்கு குடியேறியிருக்கிறார்கள் முதலியார்கள், மேலும் சில குழுக்கள் இடம்பெயர்ந்து பட்டுக்கோட்டை பகுதி நோக்கி சென்றுள்ளனர், இவர்களின் தற்போதைய கிராமம் திருநல்லூர், கிளாமங்களம், கரம்பயம் ஆகியவை, கிளாமங்களம் குஞ்சான் தெருவில் இன்றைய முதலிப்பட்டியில் அன்று இருந்த கோனார்கள் குடியேறி இருக்கிறார்களாம், குஞ்சான் தெருவில் உள்ளவர்கள் இன்றைக்கும் முதலிப்பட்டி கிராமத்தினருக்கு தங்கள் இருப்பிடத்தில் இருந்து விரட்டி விட்டதால் குடிக்க தண்ணீர் கொடுக்கமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் முதலிப்பட்டியில் இருந்து செல்பவர்களிடம் எங்களுடைய பூர்வீகம் முதலிப்பட்டி என்று பொன்னாப்பூர், திருநல்லூர் பகுதி முதலியார்கள் சொல்வது கேள்விப்பட்டிருக்கிறேன்.

மன்னார்குடி பகுதி நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் பொன்னாப்பூர்,மூவரக்கோட்டை,பெருகவாழ்ந்தானிலும்,தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள குளிச்சப்பட்டு, கருப்பமுதலியார்கோட்டை போன்ற கிராமங்களிலும், ஊருக்கு அருகே இடம் பெயர்ந்தவர்கள் ஈச்சங்கோட்டை மற்றும் குருங்குளம் பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

தஞ்சைப்பகுதியில் இருப்பவர்கள் ,அதுவும் தஞ்சைக்கள்ளர் சாதியை சார்ந்தவர்களுக்கே பலருக்கு முதலியார் என்ற பட்டம் இருப்பது தெரியாது, என்னுடைய முந்திய பதிவின் மூலம் இவர்கள் பற்றி யாருக்கும் தெரியுமா என்று அறிய முயன்றேன்,எதிர்பார்த்தது போல் யாருக்கும் தெரியவில்லை.

இன்றைய அவிச்சிக்கோன்பட்டியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் செட்டியார்கள்,ஒரே ஒரு கோனார் குடும்பம்தான் உள்ளது.  முதலியார்கள் நகரமயமாக்கப்பட்ட சூழலில் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நாளைய முதலிப்பட்டியில் வேறு யாரோ இருக்கலாம்.

நாடோடி இலக்கியன் எழுதிய பதிவினை காணவில்லை, கிடைத்தவுடன் இணைப்பு தருகிறேன்.

Monday, July 16, 2012

தஞ்சை மாவட்ட முதலியார்கள், ஆனால் முதலியார் ஜாதி அல்லாதவர்கள்.


தஞ்சை மாவட்ட முதலியார்கள், ஆனால் முதலியார் ஜாதி அல்லாதவர்கள்,தஞ்சை குருங்குலம், சுந்தராம்பட்டி, குளிச்சப்பட்டு, வாகரைகோட்டை,ஒரத்தநாடு ஈச்சங்கோட்டை, மன்னார்குடி மூவரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், கீழ்க்கரம்பையம், நீடாமங்கலம்,திருவரங்கநல்லூர், பட்டுக்கோட்டை கிளாமங்கலம், பொன்னாப்பூர், திருநல்லூர் ,ஒரத்தநாடு முதலிப்பட்டி என்னும் ஊரில் வாழும் முதலியார்கள் யார்?

அம்மாப்பேட்டை கருப்பமுதலியார் கோட்டையிலும் வசிக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

இவர்களுக்கும் செங்குந்த முதலியார், ஆற்காடு முதலியார் மற்றைய முதலியார் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்களை பற்றிய பதிவு ஒன்று விரைவில் எனக்கு வாய் வழியாக தெரிந்த செய்தியினை வைத்து எழுதப்போகிறேன், மேற்கண்ட ஊர்களில் வசிக்கும் நபர்கள் யாரும் இருந்தால் kudukuduppai@gmail.com தொடர்பு கொண்டு அவர்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

சில ஊர்களின் தகவல்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.

Thursday, June 7, 2012

உலகமயமாக்கலில் ஓரங்கட்டப்பட்ட சாதிகள்.



தலைப்பின் படி இது உலகமயமாக்கலின் சாதிகள் ஒழிந்துவிட்டதாக வெற்றுக்கோஷம் பேசும் பதிவு அல்ல,உலகமயமாக்கப்பட்ட இந்த சூழலில் தங்களை புதுப்பித்துக்கொள்ளாத/ வாய்ப்பளிக்கப்படாத சாதிகளைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையை என்னுடைய அனுபவம்,நான் சார்ந்த பகுதியில் உள்ள சாதிகளை வைத்து என்னுடைய கருத்து, இதில் கருத்துப்பிழைகள் தவறுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம், ஆனாலும் இதனை ஒரு விவாதப்பொருளாக்க விரும்புகிறேன்.


தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டத்தை களமாக வைத்து எழுதுகிறேன்.நான் எடுத்துக்கொள்ளப்போகும் சாதிகள், முத்தரையர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான கள்ளர்கள். இந்த மூன்று சாதியினரும் பெரும்பாலும் தஞ்சை, மற்றும் புதுக்கோட்டை கிராமப்பகுதிகளில் வசிப்பவர்கள். இவர்களது ஆதாரத் தொழில் விவசாயம் மட்டுமே. அன்றைய சாதிய மற்றும் வசதிப்படிநிலைகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் கள்ளர்கள் நில உடைமைக்காரர்களாககவும், முத்தரையர் மற்றும் தாழ்த்தபட்டவர்கள் விவசாயக்கூலிகளாகவும் பெரும்பாலும் இருந்தனர், முத்தரையர்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் நிலஉடைமக்காரர்களே,விவசாய நிலஉடைமைக்காரர்களை குடியானவர்கள் என்று அழைக்கும் பழக்கம் இன்றும் உண்டு, ஆலங்குடி பகுதியில் இன்றும் முத்தரையர்களை குடியானவர்கள் என்றே அழைக்கிறார்கள்.பழங்கதைகளில் கடைசியாக விவசாயம் கொழித்தபோது நிலஉடைமைக்காரர்களும் சரி அதனை நம்பி இருந்த விவசாயக்கூலிகளும் வாழ்க்கையை நன்றாகவே வாழ்ந்து வந்தனர். (சாதியக்கொடுமைகளை இங்கே பேசவில்லை). விவசாயம் இன்றைக்கு மற்றைய உலக முன்னேற்றத்திற்காக அமுக்கப்பட்ட தொழில், உணவுப்பொருள் உற்பத்தி செய்பவனுக்கு உழைப்பு இழப்பு மட்டுமே மிச்சம் என்ற நிலையில் இவர்களுக்கு வேறு தொழில் தெரியாததால் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இந்த மூன்று சாதியினருக்கும் வியாபாரம் எட்டாத கலை, எனக்குத் தெரிந்து இவர்கள் மளிகைக்கடை கூட வைப்பதில்லை, தலித்துக்கள் நினைத்தாலும் வைக்கமுடியாத அளவு ஆதிக்க கள்ளர் சாதியினரே அனுமதிக்க மாட்டார்கள்.பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு சாமான் வாங்க /சினிமா பார்க்க சென்றே பழக்கப்பட்ட இவர்களுக்கு, நகரமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நகரங்களில் ஒரு சிலரைத்தவிர இடமோ/வீடோ இருக்காது.தஞ்சை நகரில் இருக்கும் நிலங்களை கள் குடிப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னரே விற்றுவிட்டனர்.:)

இன்றைய ரியல் எஸ்டேட் மதிப்பில் நகரத்தின் மதிப்பு விளைநிலங்களில் இல்லை.நகரத்திற்கு அருகில் விளைநிலம் வைத்திருந்தவர்களும் அதனை குறைந்த விலைக்கு ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்று குடித்திருப்பார்கள்.கிராமங்களில் மிச்சமுள்ள விளைநிலங்களுக்கு மதிப்பும் கிடையாது, அந்த மதிப்பில்லாத நிலத்தை வாங்க/விற்க கூட இவர்களிடம் பொருளாதாரம் கிடையாது, ஒரு சில வட்டிக்கடைகாரர்கள், பண்ணைநிலம் தேடும் வெளியூர்க்காரர்களிடம் விற்றுவிட்டு வாழ்க்கையை ஓட்டுபவர்களும் உண்டு.

முத்தரையர் சமுதாயத்தை எடுத்துக்கொண்டால், ஆலங்குடி பகுதி தவிர இவர்கள் பெரும்பாலும் நாடோடி உல்லாச வாழ்க்கை வாழும் கிராமவாசிகள், இன்றைக்கும் இவர்கள் கூலி வேலை செய்து அன்றைக்கே செலவு செய்துவிட்டு,கிராமங்களிலேயே குடி இருப்பவர்கள், எம்ஜியார் படம் வந்தால் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்ப்பார்கள்.படிப்புக்கும் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்.வருங்காலத்தில் கிராமத்தை ஆள வாய்ப்புண்டு, ஆனால் என்ன இருக்கும் ஆள்வதற்கு என்பதுதான் கேள்விக்குறி.ஆலங்குடி.பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் பெருமளவில் வசித்தாலும் இவர்களுக்கும் பணம் சம்பாதிக்கும்/ பொருளாதார முன்னேற்றம் அடையும் எந்தக்கலையும் தெரியாது.நகரங்களில் எந்த ஒரு வியாபாரமும் இவர்கள் செய்ய வாய்ப்பில்லை, நினைத்தாலும் முடியாத அளவிற்கே லாபி இருக்கும்.

புதுக்கோட்டை கள்ளர்களால் ஆளப்பட்ட தனி சமஸ்தானம் ஆனால் இன்றைக்கு புதுக்கோட்டை நகரில் அவர்களுக்கு சொந்தமாக இடம் இருக்குமா என்றால் இருக்காது, பெருமைக்காக வியாபாரிகளிடம் விற்றுவிட்டு குடித்து ஓட்டாண்டிகளாகத்தான் இருப்பார்கள். ஆலங்குடி நகரில் தலித்துக்களிடம் தங்களுடைய ஆதிக்கத்தை காட்டும் கள்ளர்களுக்கு வியாபாரம் செய்ய வாடகைக்கு கூட கடை கொடுக்கமாட்டார்கள் இதுதான் இவர்கள் நிலை, தங்களுடைய பொருளாதார நிலை தெரியாமல் ஜாதி ஜம்பம் பேசுவதில் எந்தக்குறையும் இன்றும் இருக்காது.

வட்டித்தொழில் நடத்தும் சிலர் உண்டு, சிலர் நேரடியாக நடத்துவார்கள் பலர் வட்டித்தொழில் நடத்தும் வியாபாரிகளிடம் அடியாட்களாக இருப்பார்கள்,வேற்று சமூகத்துக்காரன் கேட்டால் பணம் திரும்பக்கிடைக்காது அதனால் அடியாட்கள் வேலை இவர்களுக்கு கண்டிப்பாக உண்டு:)

தலித்துகளின் நிலை இட ஒதுக்கீட்டில் படித்த ஒரு சில குடும்பங்கள் வெளியேறி மீண்டும் அவர்களே இட ஒதுக்கீட்டை அனுபவித்து தப்பிக்கிறார்கள் மற்றபடி,தனக்கே ஒன்றுமில்லை என்று அறியாத ஆதிக்க சாதியினர்,நலிந்து போன விவசாயக்கூலிகளாக இருந்து, தங்களை ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதியினருக்கே திறக்கப்படாத லாபியைத்தாண்டி இவர்கள் மேலே எங்கே வருவது.?

இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்குவதால் இலவச அரிசிக்கும்/வேட்டிக்கும் அலையும், ஜனநாயகத்தை காப்பாற்றப்பயன்படும் வாக்காளர்கள் மட்டும் ஆகிப்போவார்கள் என்பதுதான் யதார்த்தம்.

Wednesday, May 30, 2012

செஸ் என்ற பார்ப்பனர்களின் சூழ்ச்சி விளையாட்டு.



விஸ்வநாதன் ஆனந்த என்ற பார்ப்பனர் செஸ் விளையாட்டில் வெற்றி பெற்றதற்கு ,பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் வாழ்த்து தெரிவிக்கும்போது நாம் அந்த விளையாட்டில் உள்ள பார்ப்பனரின் சூழ்ச்சி பற்றி விளக்குவது கடமையாகிறது.செஸ் என்ற விளையாட்டு பார்பனர் கண்டுபிடித்த சூழ்ச்சி விளையாட்டு என்பது மாஹாபாரதம் என்ற பாப்பன பண்டார கதையில் வரும் சகுனி என்ற நபரின் மூலம் நாமறிவோம்.


இந்த பார்ப்பானின் விளையாட்டில் உள்ள சூழ்ச்சியை இப்போது விளங்கிக்கொள்வோம். முதலில் 64 கட்டம் என்று ஏதோ ஜாதகத்தில் உள்ள கட்டம் போன்று இந்து என்ற பார்ப்பன மதத்தின் முட்டாள்தனத்தை மக்கள் மீது இந்த பண்டாரங்கள் திணிக்க ஆரம்பிக்கிறார்கள். கறுப்பு , வெள்ளைக்காய்களில் , வெள்ளைக்காயுடன் உள்ளவனே முதலில் ஆடமுடியும் என்ற நிறவெறியுடன் இருக்கும் இந்த விளையாட்டில் முதல் பார்ப்பன சூழ்ச்சி, அதில் இருக்கும் சிப்பாய் காய்கள் நேராகத்தான் நகர்த்தமுடியும் என்ற விதி வைத்துவிட்டு , எதிரியை தாக்கும்போது மட்டும் குறுக்காகவே சாய்ப்பார்கள், இதிலிருந்து பார்ப்பனர்களின் குறுக்கு புத்தியை அறிந்துகொள்ளலாம், மேலும் யானை, குதிரை போன்ற காய்களை முதல் வரிசையில் வைத்திருந்தாலும் ஓரங்கட்டி வைத்திருப்பார்கள், இதிலிருந்து இந்த பார்ப்பன பண்டாரங்கள் விலங்குகளையும் ஆடு, மாடு, குதிரை,யானை வளர்ப்பவர்களை ஓரங்கட்டி வைக்க நினைத்த அவர்களின் மன ஓட்டத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

பிஷப் என்ற காயை ராஜா, ராணி பக்கத்தில் வைத்திருந்தாலும் தன் குல புத்தியான குறுக்கு புத்தியுடன் அவர்களையும் தங்களுக்கு தேவை எனும்போது குறுக்காக செலுத்து பலியிட்டு விடுவார்கள், அதிலும் அந்தக்குதிரை அசுவ மேத யாகத்தில் ராணியுடன் கலவி கொண்ட போதையுடன் இரண்டு அடி நேராக செல்லுமாம், ஆனால் எதிரியை தாக்கும்போது மட்டும் அதே பார்ப்பன குறுக்குபுத்தியுடன் நாய் வாலை நிமிர்த்தவா முடியும்.

யானை நேராக செல்கிறதே என நினைக்கலாம், பெரும்பாலும் அது பலியிடப்படவே பயன்படும், ராணி நேராகவும் செல்லலாம் ,குறுக்காகவும் செல்லலாம் என்று தங்களின் குறுக்கு புத்தியை இந்த பண்டாரங்கள் அங்கேயும் தினித்தன.

கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் ராஜா ஒரு கட்டம்தான் நகர்த்தமுடியும்,இங்கேதான் பார்ப்பனர் தன்னுடைய கேடுகெட்ட புத்தியை பயன்படுத்துகிறான், ஏனென்றால் ராஜா தலையில் சிலுவை இருக்கும், சிறுபாண்மையினருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதுதானே இந்தக்கூட்டத்தின் வேலை. நாம் மட்டும் எதிர்க்காவிட்டால் இந்நேரம் ராஜா தலையில் உள்ள சிலுவையை அகற்றி கொண்டை போட்டிருப்பார்கள்.

நாம் விடமாட்டோம் ராஜா தலையில் சிலுவையுடனே இருப்பார், மேலும் ராஜா எங்கும் எப்போதும் செல்லலாம் என்று விதியை மாற்றியமைத்து மதச்சார்பின்மை காப்போம்.

பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.

Monday, February 13, 2012

கல்லூரி சாலை : முதல் நாள் கல்லூரிக்கு சாலையில்.

முதல் நாள் கல்லூரி செல்ல பெற்றோருடன் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஏர்வாடி செல்லும் அரசுப்பேருந்தில் பயணம் செய்தோம். பஸ்ஸில் நிற்க இடமில்லாத அளவிற்கு கூட்டம். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது பிஸ்தா ஐஸ்கிரீம் கலரில் சட்டையும், வெள்ளைக்கட்டம் போட்ட கைலியுமாக என்னைவிட மெலிந்த தேகத்தில் ஒருவன், நாங்கள் பேசிக்கொண்டிருந்தை ஒட்டுக்கேட்டு, கீழக்கரை காலேஜ் போறீங்களான்னான்,ஆமாம் என்றேன்.

பேசிக்கொண்டேயிருக்கையில் மண்வாசனை கருவாட்டு வாசனையாக மாறி வந்ததும், அதிராம்பட்டிணம் வந்துவிட்டோம் என்று புரிந்தது, பயங்கரமா ஸ்மெல் அடிக்குதுன்ன்னான், ராம்நாடு வரைக்கும் அப்படித்தான் அடிக்கும்னு சக பயணி ஒருவர் தைரியம் ஊட்டினார். ஒருத்தன் கிடைச்ச மகிழ்ச்சில அவனும் நானும் பேசிக்கொண்டே வந்தோம், அவன் மன்னார்குடி நேசனல் ஸ்கூலில் படித்ததாக சொன்னான், சொந்த ஊர் கூத்தாநல்லூர் பக்கம் தண்ணீர்குன்னம் என்று தண்ணி அடித்துவிட்டு மூக்கால் பேசுபவன் போல பதில் சொன்னான். ஆளு சின்னமா இருந்தாலும் விவரமாத்தான் பேசினான்.

உங்கூட வருவது யார் என்றேன், அப்பா இறந்துட்டாங்க, மாமாதான் வறாங்க என்றான், இந்தக்காலேஜ் பத்தி முன்னாடியே உங்களுக்கு தெரியுமான்னேன், கூத்தாநல்லூர்லேந்து நிறைய சீனியர்ஸ் இருக்காங்க, காலேஜ் ரொம்ப நல்ல காலேஜ், பயங்கர ஸ்டிரிக்ட் அப்படின்னு மூக்காலேயே சொன்னான். +2 படிக்கும்போது கொஞ்சம் மலையாளப்படம் பாத்ததுனால இவன் பேசறத புரிஞ்சிக்கிறது அவ்வளவு சிரமமா இல்லை.பஸ் மணமேல்குடி வந்து சேந்திருந்தது, கிட்டத்தட்ட பாதி பஸ் காலி ஆகிவிட்டிருந்தது. டீக்குடிக்கிறவங்க இறங்கி குடிக்கலாம்னு கண்டக்டர் அறிவிப்பு விடுத்தார்.

பேருக்கு ஏத்த மாதிரி தார் ரோடு கூட தெரியாம மணல்தான் இருந்தது,பத்து நிமிடத்தில் பஸ் மீண்டும் புறப்பட்டது, இப்போது பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தது, ஒரு இருக்கையில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டே வந்தோம், சரி காலேஜ்ல ராகிங் எல்லாம் இருக்குமே, இவனுக்கு தெரிஞ்ச சீனியருங்க இருக்காங்க தப்பிச்சிக்குவான், நமக்கு அப்படி யாரும் கிடையாதே என்ற பயத்தில் அவனிடம் அது பற்றி பேசநினைத்தேன்.

பஸ் தூக்கிப்போட்டதில் இருவரும் இருக்கையில் இருந்து நிலைகுலைந்தோம், டிரைவர் எதையும் கண்டுகொள்ளாமல் ஓட்டிக்கொண்டிருந்தார். என்ன இப்படி இருக்கு ரோடு என்று இருவரும் சலித்துக்கொண்டோம்.

காலேஜ்ல ராகிங்லாம் இருக்குமா? கேள்விப்பட்டிருக்கீங்களா?

இருக்கும்,ஆனால் நீங்க ஹாஸ்டல்தானேன்னான், ஆமாம் என்றேன்

ஹாஸ்டல் ஸ்டூடன்ஸூக்கு கைடு சிஸ்டம் உண்டுன்னான்.

கைடு சிஸ்டம்னா என்னான்னு புரியலை, கொஞ்சம் யோசிச்சு கேட்டேன், இல்லை ஹாஸ்டல்லேருந்து,கிளாஸ் வரைக்கும் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ஸ தனியா பாதுகாப்போட கிளாஸ் ரூம்ல கொண்டு வந்து விட்டுருவாங்கன்னான்.

நேரமும் நல்லிரவு நெருங்கி விட்டிருந்தது, திடீரென கருவாட்டு நாத்தம் கடுமையாக அடித்தது, ஜெகதாப்பட்டினம் என்ற ஊர் நெடுஞ்சாலைத்துறை போர்டு மூலம் தெரிந்துகொண்டேன், இந்த ஊர்ல ஈ விழாம டீ குடிக்கறது ரொம்ப கஷ்டம், கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லாதது. பல தூக்கிபோடலுக்குப் பிறகு, ராமர் இந்த வழியா போகும் போது இளைப்பாறியதாக சொல்லப்படும் உப்பூர், தொண்டி, தேவிப்பட்டிணம் கடந்து இரமாநாதபுரம் அடைந்தோம். இப்பொழுது இந்த சாலை நன்றாக இருக்கிறதாம்.

இராமநாதபுரத்தில் தெரிந்தவர் வீட்டிற்கு நாங்கள் சென்றுவிட, நண்பன் ஏர்வாடி பஸ்ஸில், ஏர்வாடிக்கு சற்று முன்னதாக இருக்கும் எங்கள் கல்லூரிக்கு சென்றுவிட்டான்.

அடுத்த நாள், பெற்றோர்களுக்கு ஒரு லைட் ரெப்ரெஷ்மெண்டோட மாணவர்களுக்கு லஞ்ச் மெஸ்ஸில் என்று அறிவிப்பு பலகை ஆங்கிலத்தில் இருந்தது, லஞ்ச் சாப்பிடும் போது புரிந்தது என்ன மாதிரி உணவை உண்ணப்போகிறோம் என்று, எங்கப்பா என்னடா கருமாதில கூட நல்ல சாப்பாடு போடுவாங்களேடா என்று சலித்துக்கொண்டார்.

முதலாண்டு மாணவர்களை பிஸ்தா ஐஸ்கிரிம் சட்டைக்காரன் சொன்னது போலவே கைடு சிஸ்டத்தோட வரிசைல நிக்கவெச்சி, முன்னாடி ஒரு ஆள் பின்னாடி ஒரு ஆள் காவலுக்கு வெச்சி கூட்டிட்டு போனாங்க, பயந்துகொண்டே கிளாஸூக்கு போனோம்.

தண்ணீர்குன்னத்துக்காரனும் என்னோட கிளாஸ்தான், எல்லோர்கிட்டயும் ஊர் பேர் கேட்கும்போது, ஒருத்தன் ஒக்கூர், இன்னொருத்தன் ஏம்பன்னதும் எல்லாரும் கொல்லுனு சிரிச்சாய்ங்க, தண்ணீர்குன்னத்துக்காரன், கூத்தாநல்லூர்னு சொன்னான், நானும் தஞ்சாவூர்னு சொல்லி சிரிப்பொலிலேந்து தப்பிச்சிட்டேன்.

சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் காலத்தில் ஒருநாள் போன் பண்ணினான், பயோடேட்டா எடுத்து வந்திருக்கேன் கொடுக்கனும்னான், எனக்கு பனியாரம் கொண்டு வந்திருக்கேன் கொடுக்கனும்னு காதுல விழுந்துச்சு.பனியாரம் ஊசிப்போயிருமே அதைப்போய் எதுக்கு எடுத்துட்டு வந்திருக்கான்னு நினைச்சிக்கிட்டே பாக்கப்போனேன், அப்பதான் புரிஞ்சது அவன் சொன்னது பயோடேட்டா பனியாரம் இல்லைன்னு. வட இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பான்னு சுத்திட்டு இப்போ சவுதி அரேபியாவில் ஐடில நல்ல பொறுப்பில் இருக்கிறான்.

பதிவு எழுத மீண்டும் நான் முயற்சி செய்யும் இந்த நேரத்தில் நய்னா அப்படின்னு ஒரு புது பாலோயர் அவனா இருக்குமோன்ன்னு ஒரு டவுட்டு, அதையே வெச்சு ஒரு பதிவு தேத்தியாச்சு.

Friday, February 10, 2012

தமிழகப்பயணம் -3 தங்கராசன் என்ற நட்பு.

தங்கராசன் என்னுடன் ஆறாம் வகுப்பில் ஒன்றாக படிக்க வந்தவன், மார்க் எடுக்கும் படிப்பில் கொஞ்சம் கூட தேறாதவன், ஆனாலும் பெரிதும் பெயில் போடாத அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை தப்பி வந்தவன். ஒன்பதாம் வகுப்பு வரையில் என்னுடன் அவனுக்கு அவ்வளவு பழக்கமும் இல்லை, ஒன்பதாம் வகுப்பில் ஒரே டெஸ்க்கில் உட்கார்ந்தோம், அதன் மூலம் டெஸ்க்மேட் என்ற வகையில் சில நாட்கள் பழக்கம்.

என்னுடைய தந்தை ஆறாம் வகுப்பிற்கு அவ்வப்போது வந்து நீதிபோதனை என்ற வகுப்பில் ஆங்கிலம் நடத்திவிட்டு செல்வார், ஆனால் முதன்முதலாக எனக்கு ஒரு பாட ஆசிரியராக அறிமுகமானது ஒன்பதாம் வகுப்பில்,வரலாற்று ஆசிரியராக.

ஒருநாள் தங்கராசனிடம் எந்த ஊர் என்று கேட்டார், ஊரைச்சொன்னவுடன் கருப்பையன்னு ஒருத்தன் என்கிட்ட படிச்சான் என்று சொல்லிமுடிக்குமுன், அவரின் தம்பிதான் நான் என்றான் தங்கராசன். கருப்பையன் இந்த பள்ளி கண்ட மிகச்சிறந்த மாணவன், வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பில் பாதியோடு சென்றவர், அவரின் தம்பியான நீ மக்கு மாணவனாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஒழுங்காக படி என்று கூறியதோடு சமீபகால வரலாறு முடித்து பானிபட் போருக்குள் சென்று விட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக தங்கராசன் என்னிடம் ஒட்டிப்பழக ஆரம்பித்தான், அவனுக்குள்ளே இருந்த அவன் அண்ணன் கருப்பையன் வெளிப்பட அவனுடைய திறமையும் வெளிப்பட்டது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது தங்கராசன் நிறையநாள் எங்கள் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தான், எனக்கும் அவனுக்கும் நட்பு என்பதில் எங்களையும் மீறி ஒரு வர்க்க இடைவெளி இருந்தது என்பதும் உண்மை, எங்களுக்குள்ளான ஒற்றுமையில் முக்கியமானது தேர்வுக்காக படிப்பது பிடிக்காதது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது கூட தங்கராசன் எங்கிருந்தோ கொண்டு வரும் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் கதையில் டெக்ஸாஸில் அலெக்ஸ் மாடு மேய்த்த கதையை, பத்தாய சந்தில் படித்தது நினைவு வருகிறது.பத்தாம் வகுப்பில் நான் முதலிடமும் அவன் இரண்டாமிடமும் எடுத்தோம்.

வேறு வேறு பள்ளி சென்றோம் இயல்பான பிரிவு, தங்கராசன் பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு படிக்காமல் பல தவறான செயல்களில் ஈடுபட்டு வறுமையின் பிடியில் சிக்கி, சிறிது காலம் காமராஜரால் கத்துக்கொடுக்கப்படாத குலத்தொழில் தானே கற்று பிழைப்பு நடத்தினான். பின்னர் அவன் ஊரை விட்டு பிழைப்பு தேடி எங்கேயோ சென்றுவிட்டான், நானும் என் குழந்தைகளை அமெரிக்க அதிபாராக்கும் நோக்கில் அமெரிக்கா வந்துவிட்டேன்.

கடந்த ஆண்டு முதல் என் தந்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறான், நானும் சென்ற ஆண்டு ஊர் சென்றபோது அழைப்பு விடுக்க நான் வந்திருப்பது தெரிந்து என்னுடன் தொலை பேசினான், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருப்பதாக கூறினான், கண்டிப்பாக உன்னைப் பார்க்கவேண்டும், நான் தஞ்சை வருகிறேன் என்றான், உன்னுடைய வேலையை விட்டு என்னைப்பார்க்க வராதே என்றேன், சனிக்கிழமை ஓய்வு நாள் வருகிறேன்.

ஒரு சனிக்கிழமை மதிய உணவிற்கு ஒட்டன்சத்திரத்திலிருந்து எனக்காக வந்திருந்தான், நிறைய பேசினோம் என்னுடைய நட்பை எந்த அளவிற்கு நேசித்திருக்கிறான் என்பதை தான் தோன்றியான எனக்கு புரியவைத்தான், இதய நலம் குன்றிய ஒரு பெண்ணை மணந்து ஒரு மகனோடு நிறுத்திக்கொண்டுள்ளான், ஒட்டன்சத்திரம் சந்தையில் கூலி ஆளாக வேலைக்கு சேர்ந்து, எந்தவித சாதிய பின்னணியும் இல்லாமல் இன்றைக்கு ஒட்டன்சத்திரம் சந்தையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் அளவுக்கு வியாபாரம் செய்யும் மண்டி வைத்திருக்கிறான். செத்துப்போன அண்ணன் கருப்பையனின் குழந்தைகளுக்கும் உதவிக்கொண்டிருக்கிறான்.

என் தந்தையின் பங்கும் என் நட்பின் பங்கும்(?) அவனுடைய முன்னேற்றத்தில் இருப்பதாக உறுதியாக கூறினான், அவன் மனைவியிடம் நண்பன் என்று கூறும் ஒரே நபர் நான் என்ற அளவில் நான் அவனுக்கு நட்பு, எனக்கு தங்கராசன் நினைவில் வந்தாலும் நான் அப்படி அல்ல, எப்போதும் போல தான் தோன்றியே. சமீபத்திய முல்லைப்பெரியாறு பிரச்சினையின் போது இவனுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற ஆதங்கப்பட்டபோது எனக்கும் அவன் மீது நல்ல நட்பு இருப்பது புரிந்தது.மீண்டும் தமிழகம் செல்லும்போது பார்க்கவேண்டிய நண்பன்.

Thursday, February 9, 2012

தமிழகப்பயணம் -2 : மாரியம்மன் கோவில்கள்.

தஞ்சைப்பகுதியில் மாரியம்மன் கோவில் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே, மகனுக்கு முடி எடுக்க தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன், சென்னை ரயில் நிலையத்தில் என்னைத்தேடி வந்து பார்த்து பேசிய பதிவர் அப்துல்லா யதார்த்தமாக கேட்டார், பையனுக்கு குல தெய்வத்துக்கு முடி எடுக்கிறீர்களா என்று, நான் எங்கள் குல தெய்வ வழிபாடு/மொட்டை அதற்கு மொட்டை அடிக்கும் பழக்கமெல்லாம் இப்போது வழக்கில் இல்லை, திராவிடர் கழக சிந்தனைகளில் மறக்கப்பட்டிருக்கலாம் என்றேன்

எங்கள் குல தெய்வத்தின் பெயர் ஆதியத்தம்மன்(ஆதியற்ற அம்மன்), பொதுவாக மாட்டுப்பொங்கல் அன்று பழங்கள் வைத்து இந்த சாமிக்கு வீட்டிலேயே படைப்பார்கள், பெரிதாக யாரும் எடுத்துச்செய்வதில்லை, எங்கள் பங்காளிகள் பலர் தற்போது எடுத்துச்செய்யவேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர், ஆதி என்ற பெயரும் சேர்த்து பெயரிடுகின்றனர்.

புன்னைநல்லூருக்கு பதிலாக கிராமியப்பொருளாதாரம் மற்றும் எங்கள் ஊர் போன்றவை கருத்தில் கொண்டு, எங்கள் பகுதியான பாப்பாபட்டி மாரியம்மன் கோவிலில் முடி இறக்க முடிவு செய்தேன்,குறிப்பிட்ட ஒரு நாளில் மைத்துனர் குடும்பம் சென்னையிலிருந்து வந்திருந்தனர்,பாப்பாபட்டி எங்கள் கிராமத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வானம் பார்த்த பூமி, கல்லணைக்கால்வாயின் வடிகால் உளவாய் என்று பெயர்,அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரில் அவ்வூரின் சிறுபகுதி பலனடையும். ஒரு காலத்தில் பெரிய சந்தை இருந்த ஊர், இப்பொழுது ஒரு பப்ளிக் ஹெல்த் சென்டர் உள்ளது, மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் வருமானமில்லாத ஏழைகளை மட்டுமே உள்ளடக்கிய ஊர். இந்த ஊரில் உள்ள கடையில் இரண்டு தோசை ஒரு டீ பத்து ரூபாய்தான், நான்கு கிலோ மீட்டர் தள்ளி உள்ள தஞ்சைப்பகுதி கிராமத்தில் ஒரு தோசை மட்டும் பத்து ரூபாய்.

மொட்டை போட சென்ற அன்று கோவில் பூட்டி இருந்தது, எதிரே இருந்த அய்யர் வீட்டில் சாவி இருக்கும் , அங்கே சென்று கேட்டேன் அய்யர் திருமண நாளுக்காக திருச்சி சென்று விட்டார், அவரையும் குறை கூற முடியாது ஒரு காலத்தில் வருமானம் அதிகம் தந்த கோவில் இன்றைக்கு இந்த கோவிலை நம்பி அவர் ஒன்றும் சம்பாதிக்கமுடியாது, நாட்டார் தெய்வமான மாரியம்மனுக்கு எதற்கு சமஸ்கிரத பூஜை என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, ஜெமோவின் மாடன் படித்தபின் கொஞ்சம் புரியவும் செய்தது.

அய்யர் வீட்டில் கோவில் சாவி கொடுங்கள் என்றேன், அவர் தந்தையிடம் போன் செய்துவிட்டு, வந்திருப்பது எங்கள் குடும்பம் என்று தெரிந்தவுடன் , அவரது மகளையே திறக்கச்சொல்லி பூஜையும் செய்யச்சொல்லிவிட்டார்.

மொட்டை அடித்து முடிக்கும் வரை அழுது தீர்த்துவிட்டான், மொட்டை முடிந்தவுடன் சாப்பாட்டிற்காக தஞ்சை தேவர்ஸ் பிரியாணிக்கு வந்தோம், ஒரு மணி நேரம் காத்திருக்க சொன்னார்கள், பசி தாங்காது என்பதால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு அசைவ உணவகத்தில் சாப்பிட்டோம், காடை, மட்டன் கறி, மீன் வருவல் எல்லாமே சுவை அமிர்தம்.

பின்னொரு நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றோம், நிறைய கூட்டம் , ஸ்பெஷல் வழியில் கூப்பிட்டு செல்கிறோம் என்று பணம் பறிக்க சிலர், சமயபுரத்திலும் அய்யர்களையே காணமுடிந்தது, ஏன் கிராமப்பூசாரிகளை இங்கே அனுமதிக்ககூடாது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, சமயபுரம் கோவிலின் வருமானம் கண்டிப்பாக அதிகமாக இருக்கும், அதற்கு ஏற்றார்போல் அதன் வெளிப்புறங்களில் சுகாதாரம் பேணப்படவில்லை.இந்து சமய அறநிலையத்துறை அரசிடம் இல்லாமல் இருந்தால் ஒருவேளை சுத்தமாக இருக்க வாய்ப்பு அதிகம்.

சாமி கும்பிட்டுவிட்டு (என்னுடைய பக்திமேல் எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை), கோவில் அருகே ஒரு உணவகத்தில் காலை சாப்பாடு, தமிழகத்தில் இம்முறை இங்கே குடித்த காபிதான் சூப்பர், ஒரு அதிமுக அரசியல்வாதியும் அவருடைய பரிவாரங்களோடு அங்கே சாப்பிட்டார், அவரும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தோம்.

சமயபுரத்தில் இருந்து புன்னைநல்லூர், சுங்கச்சாலையில் வெகு விரைவாக வந்தடைந்தோம், புன்னைநல்லூரில் மாரியம்மன், மற்றும் குழந்தைகளுக்காக ஒரு அம்மனை வணங்கிவிட்டு, மாரியம்மன் கோவில் முறுக்கு கொஞ்சம் வாங்கிக்கொண்டு தஞ்சை வீட்டிற்கு திரும்பினோம்.

டைரி மாதிரி இருக்கிறது....:))))))

தமிழகப்பயண அனுபவம் - 1

கடந்த ஜூன் மாதம் தமிழகப்பயணம் செய்தது பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஆர்வக்குறைவால் எழுதமுடியவில்லை, டெக்ஸாஸில் மகளின் பள்ளிக்கு விடுமுறை ஜூன் முதல் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை என்பதால், தமிழகத்திற்கு விடுமுறைக்கு பெரும்பாலும் ஜூனில்தான் வரமுடியும்.இந்த ஆண்டு மகனின் பிறந்தநாளை எனது சொந்த கிராமத்தில் கொண்டாடவும் முடிவெடுத்திருந்தோம், மிகுந்த உற்சாகத்துடன் கிளம்பி சென்னை வந்து, ஒரு பகல் மட்டும் மைத்துனர் வீட்டில் தங்கிவிட்டு, அன்று மாலையே திருச்சிக்கு விமானம் மூலம் சென்றடைந்தேன், திருச்சியிலிருந்து சொந்த ஊருக்கு ஒன்னரை மணி நேரத்தில் சென்று விடலாம்.

திருச்சி வழியே செல்லும்போதெல்லாம் ஒரு உணவகத்தில் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன், அதே இடத்தில் இப்பொழுதும் இரவு டிபன் இரண்டு மூன்று நெய் தோசைகளை சாப்பிட்டுவிட்டு, ஊர் நோக்கிய பயணம், திருவெறும்பூர் தாண்டியதும், திருச்சி, தஞ்சை நான்கு வழி சுங்கப்பாதை அசத்தலாக இருந்ததால் வல்லத்திற்கு இருபது நிமிட நேரத்தில் வந்தடைந்தோம், அதற்குபின்னர் தஞ்சை செல்லாமல் எங்கள் கிராமத்திற்கு அரை மணி நேரம், தஞ்சையில் படிக்கும்போது பயணம் செய்த அதே கல்லணைக்கால்வாய் கரை ஒற்றைப்பாதை, இப்பொழுது எனக்கு மிகவும் குறுகலாக தெரிந்தது(அமெரிக்க என் ஆர் ஐ வியாதி). ஒரு வழியாக 2002க்கு பிறகு எனது உடல்நலன் காரணமாக ஊருக்கு செல்லாமல் இருந்ததை முறித்து சொந்த கிராமத்தில் அடி எடுத்து வைத்தேன்.

என் வீடு எனக்கு சிறியதாக தெரிந்தது, சிறிது நேரத்தில் சரியாகிப்போனது, மகள் விபரம் அறிந்து முதல்முறை இங்கே வருகிறாள், சுற்றும் பார்த்துவிட்டு, ஏன் இரண்டு வீடு இருக்கிறது, நடுவில் ஏன் இடைவெளி, இரண்டும் நம்ம வீடா என்றாள், வீடு பிடித்திருக்கிறது என்றாள், உறக்கமில்லாத உறங்கியபின்,அடுத்த நாள் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில் பலரை சந்திந்தேன், என் உருவமாற்றம் அவர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கும், ஐம்பது கிலோவில் இருந்து தொண்ணூறு கிலோவை பலர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மாமனார் வீட்டிற்கு அடுத்தநாள் சென்றுவிட்டு, மீண்டும் அடுத்தநாள் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழாவிற்கு ஊருக்கு வந்துவிட்டோம். பெரிய ஊர் திருவிழாக்களுக்கே ஆள் இல்லாத நிலையில், மிகச்சிறிய கிராமமான எங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது என்பதற்கு மைக் செட் சவுண்டைத்தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை.

திருவிழாவில் பெரிசுகளுக்கு தலையாட்டிவிட்டு,ஒன்பது ஆண்டுகளில் இளைஞர்களான சிறுவர்களின் அடையாளம் அறிந்து பேசிவிட்டு,மகளுக்கு வீட்டில் விளைந்த கொய்யாக்காய், சாத்துக்குடி, எலுமிச்சை பறித்துக்கொடுத்தேன், எல்லாவற்றையும் விட மகளுக்கு பிடித்தது இந்த தோட்டமும் உள்ள வீடு.பிடிக்காதது டாய்லெட்.

அடுத்தநாள் மகனின் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு, தஞ்சையில் சிலோன் தாசன் பேக்கரியில் கேக் வாங்கிக்கொண்டு டூ வீலர் பயணம். கல்லணைக்கால்வாய் ஆற்றங்கரையின் நாணல் புற்களை இப்போது ரசிக்கமுடிந்தது.

மகனின் பிறந்தநாள் முடிந்த அளவு சிறப்பாக கொண்டாடினோம். என் வீட்டிற்கு எதிராகவே பள்ளியும் இருப்பதால் அந்தக்குழந்தைகளையும் பிறந்தநாள் கொண்டாண்டத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டோம்.

எங்கள் கிராமம் பெரிதாக மாறவில்லை, ஆனால் மாறியவை பற்றியும் மற்ற அனுபவங்களும் இனி மெதுவாக.

Saturday, January 14, 2012

த்ரீ இடியட்ஸூம் அவதாரும், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகாரமும்

இந்த வாரம் த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தாகிவிட்டது, வெகுசில இந்திப்படங்களே நான் பார்த்துள்ளேன், இந்தப்படத்தையும் மொழி தெரியாமல் ரசித்துப் பார்க்கமுடிந்தது, காரணம் இது ஒரு சாதாரண படமாக எடுக்கப்பட்டிருந்தது என்றே எனக்குத்தோன்றியது. படத்தில் 44 வயது அமீர்கானை இளமையாக காண்பிக்க கரினா கபூரை ஜோடியாக போட்டிருப்பார்களோ என்று ஒரு பயங்கர சந்தேகம். அமீர்கான் எந்தவித ஹீரோயிசமும் காண்பிக்காமல் ஒரு மாணவனாக அசத்தியிருக்கிறார்.இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்னர் இயக்கிய முன்னாபாய் படத்தை டெம்ப்பிளேட்டாக வைத்தே இப்படத்தை தந்திருக்கிறார். தாரே சமீன் பர் படத்தில் ஒரு ஆசிரியர் மாணவனின் டிஸ்லேக்ஸியா கண்டுபிடித்து அவனின் தனித்திறமையும் கண்டுபிடித்து ஊக்குவிப்பார். இந்தந்தனித்திறமை என்ற கருவை எடுத்து, வழக்கமாக பெற்றோர்களின் இஞ்சினியர்/டாக்டர் கனவுகளோடு சேர்த்து முன்னாபாய் படத்தளத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அந்தப்பேராசிரியர் வேடம், அவரின் மகள் கரினா கபூரும் , வசூல்ராஜா படத்தில் வந்த பிரகாஷ்ராஜ் , சினேகா பாத்திரப்படைப்புகளின் வேறு மாதிரியான பிரதி, அமீர்,மாதவன் உள்ளிட்ட மூவர் கூட்டணி கமல் , பிரபு , கருணாஸ் கூட்டணியின் வேறு பிரதி. மூவர் கூட்டணியில் இயல்பான கல்லூரி கால வாழ்க்கை மூலம் வெகு அழகாக கதையை திரைக்கதை அமைத்து நகர்த்தி உள்ளார். குறிப்பாக கரீனாவின் அக்காவிற்கு அமீர் பிரசவம் பார்க்கும் காட்சி , வசூல்ராஜா கோமா கேரக்டருக்கு கமல் வைத்தியம் செய்து சிரிக்கை வைத்ததை போன்ற அதே உத்தி, அதே போல் கமலின் தேர்வுக்கு கிரேஸி உதவுவது போன்றதே, ராஜீ கேரக்டருக்கு அமீர் தேர்வுப்பேப்பரை கடத்தி உதவுவதும் மாட்டிக்கொள்வதும், இந்த இலகுவான உத்தியை வைத்து அதே அளவு நகைச்சுவையுடன் தெளிவான கருத்தை மொழி தெரியாதவனும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். தமிழில் இப்படத்தை எடுத்தால் என்னுடைய தேர்வு நடிகர் விஜய். குருவி.வில்லு,வேட்டைக்காரன்,சுரா ஆகியவற்றை கலக்கி ஒரு இறா கொடுப்பதற்கு பதில் இப்படி ஒரு நல்லபடத்தை கொடுக்கலாம். விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்.

மீள்பதிவு.
----------------------------------------------------------------------------------------------------

அவதார் படம் பார்க்க என் மகள் அனுமதி கொடுக்கவில்லை,எப்படியோ அனுமதி பெற்று ,டாலஸில் இரண்டே இரண்டு ஐமேக்ஸ் தியேட்டரில்(?) ஒன்றான சினிமார்க் ஐமேக்ஸ் 3Dயில் பார்த்தேன் வெகு எளிமையான கதை அதன் பிரமாண்டம் பிரமிக்க வைத்தது, இயல்புடன் சேர்ந்த வாழ்க்கையை வலியுறுத்தும் இந்தப்படமும் எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ்ஹிந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இப்பட விமர்சனத்தில் இயற்கை வழிபாட்டோடு இணைத்து எழுதியிருந்தார்,பெரும்பகுதி அதில் எனக்கு உடன்பாடு உண்டு, இயற்கை வழிபாடு என்ற பெயரில் மூடநம்பிக்கையே / நம்பிக்கையோ எதுவாக இருப்பினும் மஞ்சள் கயிறு கட்டி சாமி மரமாகிய வேப்பமரம் அதிகநாள் உயிர்வாழ்கிறது, அதுபோல் கோவிலில் உள்ள ஸ்தல விருட்சங்கள். கிராமக்கோவில்களில் உள்ள அரசமரம் எதுவாக இருப்பினும் இயற்கை வழிபாடு நல்லதாகவே இருந்திருக்கிறது. அதே நேரத்தில் மூடநம்பிக்கையில் வீட்டு வாசலில் புளியமரம் நின்றால் வெட்டுவதும் நடக்கத்தான் செய்கிறது.

நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். முன்னூறுக்கு மேற்பட்ட அளவிற்கு மக்கள் வந்திருந்தனர், ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றாக நடந்தது, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நடித்து வழங்கிய சிலப்பதிகாரம் வெகுவாக என்னைக் கவர்ந்தது, பெரும்பாலான குழநதைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆனாலும் மிகத்தெளிவாக தமிழ் உச்சரிப்பு இருந்தது, வீடியோ தொகுப்பு கிடைத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் இணைப்பு தருகிறேன்.