Friday, April 15, 2011

கல்லூரி சாலை: கல்லூரி சாலையும் சாத்தூர் சாலையும்.

இந்தப்பதிவு வருங்கால முதல்வரில் விருதுநகர் பற்றிய நாநாவின் பதிவிற்கு துணைப்பதிவாக எழுதலாமென்றிருந்தேன்.நாநா ரெண்டு பதிவுக்கு அப்புரம் ஆளையேக்காணோம் அந்த வலைத்தளமும் விருதுநகர் மாதிரியே காஞ்சு போச்சு. இடையில் சஞ்சய் காந்தி வந்து தரும புரிய அவங்க ஊரு தோட்டம் மாதிரி பசுமையா காமிச்சாரு, கோடை காலம் வந்திருச்சா திரும்பவும் காஞ்சு போச்சு, தண்ணீர் இல்லாமேலேயே உயிர் வாழும் கலை அறிந்த புதுக்கோட்டை பத்தி எழுதி உயிர் கொடுக்க சொல்லி புதுகை அப்துல்லா கிட்ட சொன்னேன் அவரு சிங்கப்பூர், துபாய்னு குடும்ப விசயமாவும் வேலை விசயமாவும் பறந்துட்டே இருக்கிறதானலே ஜி சாட்ல ’பதிவு விரைவில் ரெடி’ அப்படின்னு தந்தி அடிக்கிறார், நானும் ஒரு தந்தி அடிச்சேன் பதிவு எங்கேன்னு அது எங்க வீட்டு பரண் மேல கெடக்குன்னு எடக்கா சொல்றார்.

இஞ்சினியரிங்க் இறுதித்தேர்வு முடிந்த சமயம், ஒரே ஒரு செய்முறைத்தேர்வு மற்றும் சேர்த்தவைகள் எழுதவேண்டிய நேரம். அயன் வடமலாபுரம்ன்னு ஒரு ஊர் அருப்புக்கோட்டைக்கும் , எட்டையபுரத்துக்கும் நடுவில் சாத்தூர் , விளாத்திக்குளம் சாலை சந்திப்பின் அருகில் இருக்கிறது. இந்த ஊரைச்சேர்ந்த நண்பன் பெரிசு அவங்க ஊர் திருவிழாவிற்கு கூப்பிட்டிருந்தான். அந்த மிகச்சிறிய கிராமம் பற்றிய பதிவுதான் இது.

ஜூலை மாதம் மதியம் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள தாப்பாத்தி என்ற ஊரில் பெரிசுவுடன்,டொல்பி மற்றும் நான் சென்று இறங்கினோம். அங்கிருந்து பெரிசு ஊருக்கு 3 கிலோமீட்டர் நடக்கவேண்டும்.ஜூலை மாதம் கரிசல்காட்டில் தார் ரோட்டில் மதிய நேரம் என் வாழ்க்கையில் முதன் முதலாக பூமியில் இருந்து ஒரு சூரியனும் மேலேயிருந்து ஒரு சூரியனும் சேர்ந்து தாக்குவதை கண்டேன். வெயிலின் கொடுமையை சொல்வதென்றால், சங்கமம் என்றொரு படத்திற்கு குமுதம் விமர்சனத்தில் ரகுமானும், விந்தியாவும் நடனமாடுவதை உச்சி வெயிலில் தார் ரோட்டில் செருப்பில்லாதவன் படும் அவஸ்தை போன்று இருந்தது வர்ணித்திருப்பார்கள் , ஓசி செருப்பு அணிந்திருந்தும் எங்கள் நிலைமையும் அதுதான்.

ஊரில் திருவிழாக்கோலம் கலை கட்டி இருந்தது, ஊரில் வாழும் அனைவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள்.பெரிசு வீட்டின் அருகில் ஒரு மிகப்பெரிய பங்களா இருந்தது, அது மதுரை அரவிந்த கண் மருத்துவமனை உரிமையாளரின் வீடு. சிறிய ஊரில் பிறந்து கண் மருத்துவத்தில் பெரிய புரட்சி செய்த அவரை எப்படி வேண்டுமானாலும் பாரட்டலாம்.

100 வீடுகளுக்கு குறைவாக உள்ள ஊர், மிக ஒழுங்கான இரண்டு மூன்று தெரு, சாக்கடையை நடு ரோட்டில் ஓட விடமால் சிமெண்ட் குழாய்கள் வழியாக எடுத்துச்செல்ல வசதி, மழையே பெய்யாவிட்டாலும் அருமையான வடிகால் வசதி. கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பல ஏக்கர் நிலம் இருக்கிறது,ஆனால் அனைத்தும் விவசாயம் செய்யவே முடியாத கரிசல் காடு, ஏக்கர் 2000 ரூபாய்க்கு விற்றால் பெரிய விசயம் , அதுவும் இந்த ஊர்ப்பக்கம் உள்ள ரெஜிஸ்ட்டர் ஆபிஸில் கல்யாணம் ரெஜிஸ்ட்டர் ஆனால்தான் உண்டாம், பெரிசுக்கு தெரிந்து யாரும் நிலம் வாங்கியதோ விற்றதோ இல்லை.

திருவிழாவிற்கு வந்த இளம்பெண்கள் மத்தியில் எங்கள் பெரிசுதான் ஹீரோ, சினிமாவில மட்டும்தான் பெரிசுங்க ஹீரோ அப்படின்னு நெனச்சிருந்தா உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், பெரிசும் பெண்களும் தெலுங்கில் சிரித்துக்கொண்டார்கள் எங்களுக்கும் புரிந்தது, முளைப்பாறி பால் குடம் போன்ற திருவிழாக்கு உரித்தான அனைத்தும் முடிந்தவுடன், பெரிசு வீட்டில் எங்களுக்காக தயாராக இருந்த மட்டன் பிரியாணி நோக்கி நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.

போகும் வழியில் எங்கள் பெரிசுவிடம் அதைவிடப் பெரிசு ஒன்று
“என்ன விருந்தாடிகள் வந்திருக்காங்க வீட்டுல ஆட்டு மட்டனா , கோழி மட்டனா தம்பி எனக்கேட்டார்.பெரிசு சிரித்தபடியே ஆட்டு மட்டன் தான், கோழிக்கறிய சிக்கன்னு சொல்லுவாங்க என்று தெலுங்கிவிட்டு எங்களுக்கு நடந்ததை தமிழினார். நிறைய சிரிப்பு வந்தாலும் என் சிந்தனையெல்லாம் சீக்கிரமாக ஆட்டு மட்டன் பிரியாணியை சாப்பிடுவதிலேயே இருந்தது.

அருமையான பிரியாணி சாப்பிட்டோம், டொல்பி ரொம்பவே பிரியாணிய பாராட்டினான், உண்மையிலேயே துளுக்க வீட்டு பிரியாணி மாதிரியே இருக்கு அப்படின்னான். என்ன ஒரு குவாட்டர் உட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்னான்.அவன் குவாட்டர் உட்டிருந்தா எங்க நிலைமை வேற மாதிரி ஆயிருக்கும்.டொல்பி வீட்லேயும் பக்ரீத்துக்கு ஆடு வெட்டி சாப்பிட்டிருக்கேன்(நான் சாப்பிடதா ஊடு எதுன்னு கேக்காதீங்க) அதனால் அவன் சொன்னது சரியென்றே பட்டது.

எனக்கு அடுத்த நாள் செய்முறைத்தேர்வு இருந்ததால் நான் அன்று மாலையே மீண்டும் தாப்பாத்தி வந்து காலேஜுக்கு வந்துவிட்டேன்,அடுத்த நாள் ஹாஸ்டலுக்கு பெரிசு போன் பண்ணினார், டொல்பிய நட்டுவாக்கலி கடிச்சிருச்சு, இப்பதான் ஹாஸ்பிட்டலேந்து வரோம், ஒன்னும் பயமில்ல நாளைக்கு வந்திருவான் அப்படின்னார்.

இங்க ஹாஸ்டலில் நட்டுவாக்கலி , தேள், விஷப்பாம்புகள் வண்டுகள் எல்லாம் காசு குடுக்காம எங்க கூட தங்கியிருக்கும் ஜந்துக்கள்,ஆனாலும் ஒரு நாளும் இவைகள் எங்களை கடித்ததில்லை, இந்த அருப்புக்கோட்டை நட்டுவாக்கலி ஏன் டொல்பிய கடிச்சதுன்னு இன்னமும் எனக்கு புரியல..ஒருவேளை கரிசல் காட்டு நட்டுவாக்கலிக்கு செட்டிநாட்டு இரத்தம் பிடிக்குமோ?