Monday, January 26, 2009

சீனாவில் நான் பார்த்த தமிழ் பேசிய பாகிஸ்தானி மற்றும் சில இடங்கள்.

குடுகுடுப்பை: சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : மஸாஜ்,குளியல் மற்றும் சில மக்கள் - பாகம் 3

முந்தைய பதிவுகளில் உணவு,சீன மருத்துவம்,மற்றும் சில பார்த்த மக்கள் பார்த்தோம், நான் மஸாஜ் எடுத்துக்கொண்ட சீன மருத்துவமனையில் தமிழ் நன்றாக தமிழ் பேசக்கூடிய ஒரு பாகிஸ்தானியரை சந்தித்தேன்,அவருடைய அம்மா தமிழ்நாட்டைச்சேர்ந்தவர், அப்பா பாகிஸ்தானியர், கத்தாரில் இருக்கிறார்கள் நன்றாக தமிழ் பேசுகிறார், இட்லி தோசை ரொம்ப பிடிக்குமாம், ஒருமுறை கூட தமிழ்நாட்டிற்கு வந்ததில்லை என்றார். அவர் கத்தாரில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்க்கிறார், அதனாலோ என்னவோ சீனர்களிடம் எப்படியாவது எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்.அரபு நாட்டில் உள்ள இரண்டு மனைவி கதைகளெல்லாம் சீனர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார், சீனர்களுக்கு குழந்தையே ஒன்றுக்கு மேல் கூடாதாம் இதில் இரண்டு மனைவி எங்கே, கண்டிப்பாக அவர்களுக்கு புரியவில்லை என்றே தோன்றியது.தமிழ் பேசும் என்னைக்கண்டதில் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி,அரேபியரிடம் பேசுவதை விட என்னிடம் பேசுவதையே விரும்பினார், தாய்மொழியை பேச சீனாவில் கிடைத்த வாய்ப்பை இருவரும் பயன்படுத்திக்கொண்டோம்.அவர் கொண்டு வந்திருந்த கத்தாரி மிக்ஸ் சுவையாக இருந்தது.


முதலில் சென்ற இடம் பெய்ஜிங் பாடலிங் பகுதியில் உள்ள கிரேட்வால்(great wall of china).காரில் ஒரு மணி நேர பயணம், பெய்ஜிங் சாலைகள் அமெரிக்கவை நகரைவிட 15 வருடம் பின் தங்கியுள்ளது, இந்தியாவைவிட 15 மடங்கு முன்னேறியுள்ளது, பாடாலிங் செல்லும சாலை நல்ல தரத்திலேயெ இருந்தது.

இந்த வாத்து நான் சாப்பிட்டாச்சு


நான் சென்ற நேரம் கொஞ்சம் மேக மூட்டமாக இருந்தது, கீழ்
மட்டத்திலிருந்து நடந்து மேலே செல்லலாம்,அல்லது ரோப்காரில் ஒரு குறிப்பிட்ட தூரம் செல்லலாம், முதல் முயற்சியை சில காரணங்களால் நான் தேர்ந்தெடுக்கவில்லை.ரோப்காரில் இருந்து கீழே பார்த்த போது கொள்ளை பயம் அதுவும் இறங்கி வரும்போது.மிக அழகாக கண்ணுக்கு எட்டிய தூரம் கட்டியிருக்கிறார்கள்.ரசித்துக்கொண்டே உச்சியை படிகளில் ஏறி அடைந்தேன். அங்கே ஒரு போட்டோ எடுத்து உச்சியை அடைந்ததற்கு ஒரு சர்டிபிகேட் கொடுத்தார்கள் 30யுவானுக்கு.அடிமைகள் இருந்தால் தேவையில்லாமல் இப்போது கூட இப்படி கட்டலாம் தேவையில்லாத சுவர்களை.

இன்னொரு நாள் நான் சென்றது பீஜிங் பேலஸ் இதுவும் பார்க்க நன்றாக இருந்தது, நுழைவாயிலில் சுற்றி ஒரு நீர்வழிப்பாதை ராணிகள் நீராட போல அதில் ஒரு சுற்று படகில் சென்றேன்.பின்னர் அரண்மனையை சுற்றிப்பார்க்க சிறிய மலை நிறைய படிக்கட்டுகள் ஏறினேன்,அழகான கட்டடக்கலை ரசிக்கும்படியாக இருந்தது. அங்கே ஒரு பெரிய புத்தர் சிலை மற்றும் சில புத்த மத விக்கிரகங்கள் இருந்தது ஒரே ஒரு சீனப்பெண் கையை மேலே தூக்கி இந்தியர்கள் கும்பிடுவது போலவே கும்பிட்டு வழிபட்டார்.
மன்னர் குடுகுடுப்பை



பீஜிங் பேலஸ்

அடுத்து நான் சென்ற இடம் forbidden city, இதற்கு எதிரில் உள்ள இடம்தான் டியானன்மென் ஸ்கொயர் பகுதி,600 ஆண்டுகளுக்கு முன் வரை அரண்மனை, இப்போது அருங்காட்சியகம் ஆகிவிட்டது, கிட்டத்தட்ட இரண்டு மைல் சுற்றளவு இருக்கும், அவ்வளவு பெரிய இடம், நடந்து எல்லா பகுதிகளையும் பார்ப்பது ஒரு நாளில் சாத்தியமில்லை என்று சொன்னார்கள்.நான் சென்ற பொழுது ஸ்டார்பக்ஸ் காபி கடை உள்ளே இருந்தது, இப்போது இல்லை.நான் பார்த்ததில் மிகவும் பிடித்த இடம் இதுதான் மன்னர்களின் அந்தப்புரம், அரசவை, சாமி கும்பிட கோவில் சாப்பிட அறை, பொதுமக்களை பார்வையிட என் நூற்றுக்கு மேற்பட்ட அறைகள்.









கடைசி படம் தியானென்மென் சதுக்கம்.


.

Sunday, January 25, 2009

உன்னை நினைத்து நினைத்து

உட்கார்ந்திருந்தால்

என்

மடியில் இருக்கிறாய்

படுத்திருந்தால்

என்

நெஞ்சில் இருக்கிறாய்

நீ என்னிடம் இருப்பது

சில நேரங்களில் எனக்கே

பிடிக்கவில்லை

என்ன பாவம் செய்தாய்

மடிக்கணினி.

Wednesday, January 21, 2009

சர்தார்ஜி நண்பனும் 2012 டிசம்பர் 21ல் அழியப்போகும் உலகமும்.

நானும் இந்த சர்தார்ஜி நண்பனும் 2000 மாவது ஆண்டிலிருந்து 2005 வரை ஒரே புராஜக்டில் வேலை பார்த்தோம். உதவி செய்யும் குணம் அதிகம் உள்ள நல்ல நண்பர்.ஆனால் வம்பிழுப்பதில் அவருக்கு நிகர் அவரே,அதற்கு இடம் ஆளெல்லாம் பார்க்கமாட்டார்.அதே போல பெரிய முன் ஜாக்கிரதை முத்தண்ணாவும் கூட.

சாம்பர்க் இல்லினாய்ஸில் அவருடன் வேலை பார்த்த போது, ஒருநாள் ஜிவெல் ஆஸ்கோ என்ற கடையில் சேர் வாங்கினார்,வழக்கமாக பெரும்பாலான பொருட்களுக்கு வாங்கி பிடிக்கவில்லை என்றால் முப்பது நாட்களுக்குள் திருப்பி கொடுக்கலாம். இவர் சேரை எடுத்துக்கொண்டு தேவைக்கு அதிகமான கேள்விகளை கேட்டதில் இவர் கண்டிப்பாக ரிட்டன் பண்ணப்போறார் என்று நினைத்த அந்த மேனேஜர், ரிட்டன் பண்ணினால் 15% restocking fee applicable. அப்படின்னு பில் போடுற பெண்ணிடம் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.உடனே மேனேஜரிடம் சண்டை போட்டு you are a racisit, you are doing this only because i am wearing turban..

மேனேஜர் பயந்து போயி நீங்க வாங்கிற சேருக்கு 30 day return policy தான் , வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டாரு, இவரு போட்ட சண்டைக்கிடையில் பயந்து போய் நான் பத்து டாலருக்கு தேவையில்லாம ஐஸ் கிரீம் வாங்கிட்டேன்.

எல்லாம் பேசி முடிச்சு தலைவர் சேரே வாங்காம வா போகலாம் அப்படின்னு கூட்டிட்டு வந்துட்டாரு.எனக்கு தேவையில்லாம பத்து டாலர் தண்டம்.

ஆபிஸ்ல வேலை செய்யும்போது தனக்கு தெரியாம எதுவும் நடக்ககூடாதுன்னு நினைப்பாரு.இவரோட தொல்லைக்கு பயந்து நான் ரெண்டு வருசம் மாலை 4 மணிலேர்ந்து அதிகாலை வரை இந்திய நேரத்தில் offshore team கூட வேல பாப்பேன்.அப்படியும் தனக்கு எதிரா ஏதோ சூழ்ச்சி நடக்குதுன்னு அவருக்கு பயம்.யாரு என்ன சொன்னாலும் அதை மறுத்தே கருத்து சொல்வார்.உதாரணமா 2+2 =4 அப்படின்னு சொன்னா. இல்லை 1+1+1+1=4 அப்படிதான் சொல்லனும் அப்படின்னு சொல்வார்.

எங்க உறவு இப்படி நம்பிக்கை இல்லாமல் போயிட்டே இருந்தது.ஒருநாள் எங்களோடு வேலை பார்த்த ஒரு தெலுகுப்பெண்,என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு டெஸ்டிங் மெசின்ல நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே எந்தக்கேள்வியும் கேக்காமல் கீ போர்டை இழுத்து அவருக்கு தேவையான வேலையை செய்ய முயன்றார். யம்மா நீங்க பர்மிசன் வாங்கனும், இது நாகரிமில்லைன்னு சொல்லிட்டிருந்தேன், வாய்த்தகறாரு முற்றி மேனேஜரிடம் சென்றது.அவர் ஒரு மாதிரியாக சமாளித்து அனுப்பிவிட்டார்.

நம்ம சர்தார்ஜி எனக்கு சொன்ன அட்வைஸ் என்னன்னா,ஒரு பெண்ணிடம் சண்டை போடாதே அதுவும் அமெரிக்காவில், ஏன்னா செக்ஸுவல் ஹராஸ்மெண்ட்ன்னு சொல்லி உன்ன மாட்டி விட முடியும்,ஏற்கனவே அந்த கம்பெனியில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் எடுத்துக்காட்டாக கூறினார். உன்னிடம் நான் சண்டை போடுவது போல அந்த பெண்ணிடம் போட மாட்டேன் என்றார். எனக்கும் ஒரளவிற்கு அவரின் எச்சரிக்கை உதவியாக இருந்தது.

இன்னொரு நாள் சர்தார்ஜி தன் மனைவி மற்றும் மூன்று வயது மகன், 6 மாத குழந்தையை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.இப்ப சர்தார்ஜி என்ன பண்ணாருன்னா, லுப்தான்சா பிராங்பர்ட் டிரான்ஸிட்ல பையன் தொலஞ்சு போகாம இருக்க பையனோட கொண்டை முதல் உடலில் கிட்டத்தட்ட பத்து இடங்களில் இவருடைய போன் நம்பர்,இந்திய வீட்டு போன் நம்பர் ஒட்டி வைத்துவிட்டேன் என்றார்.நல்ல யோசனை அப்படின்னு சொன்னேன்,அவரு உடனே இது மட்டும் இல்லை 6 மாத குழந்தைக்கும் அதே அளவு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கேன் அப்படின்னார்.ஏன் குழந்தை எங்க ஓடப்போகுது அம்மாதானே தூக்கி வெச்சிருப்பாங்க.இல்ல பெரியவன் ஓட ஆரம்பிச்சா அவங்க அம்மா குழந்தைய எங்கனா வெச்சிட்டு பின்னாடியே ஓடினா என்ன பண்றது, அதுனால சின்ன குழந்தைக்கும் ஸ்டிக்கர் அப்படின்னாரு.நாம இவ்வளவு எச்சரிக்கையா இருப்போமா?

முந்தா நாள் திடீர்னு போன் பண்ணாரு, பேசிட்டிருக்கும்போது நான் சீக்கிரம் இந்தியா போயி செட்டில் ஆகப்போறேன் அப்படின்னேன்.

ஏன் 2012 டிசம்பர் 21 தான் காரணமா? அப்படின்னாரு ஏன் அந்த தேதிக்கு என்ன ஆச்சு.அதுக்கு அவரு மாயன் காலண்டர் படி உலகம் அழியப்போகுது நான் முழுமையா நம்புறேன்,நானும் இந்தியாவில் பெற்றோர்களுடன் வசிக்க ஆசைப்படுறேன், உனக்கு அதே காரணம்னு நினைச்சேன் அப்படின்னாரு.

எச்சரிக்கைத்தனத்தின் உச்சத்தை என்னவென்று சொல்வது. நீங்களும் பின்னூட்டம் போட்டிட்டு 2012 டிசம்பர் 21க்குள்ள உங்களுக்கு புடிச்சத செய்யுங்க....ஆடு கோழிய அடிச்சு சாப்புடுங்க ....................................

முந்தைய பதிவு

அமெரிக்க டவுசர்

Monday, January 19, 2009

புதிய அமெரிக்க கால்சட்டை : நகைச்சுவை உரையாடல்

ஒரு நகைச்சுவை கால்சட்டை கதை, அமெரிக்காவின் சில கால்சட்டை கம்பெனிகள் தங்கள் கால்சட்டை கம்பெனிகள் மூடவேண்டிய நிலையில் இருப்பதாக உதவி கேட்கும்போது கொடுத்த கற்பனையான விளக்கங்கள்

.அதிகாரி: வாங்க எல்லாரும் என்னா எல்லாரும் வந்திருக்கீங்க என்ன விசயம்?

கா.கம்பெனி அதிகாரி: பொருளாதாரம் மந்தமா இருக்கிறதுனால கால்சட்டை வியாபாரம் குறைஞ்சு போச்சு, அதுனால கம்பெனி நடத்த அரசாங்க உதவி வேணும் அப்பதான் கம்பெனியவும்,அங்கன வேலை பாக்கிரவங்களையும் காப்பாத்த முடியும். உதவி கேட்டு வந்திருக்கோம் எசமான்.நாங்க மூடிட்டா எங்க கம்பெனி வெலைக்காரங்க, எங்க கால்சட்டை விக்கிற கடைகளும் மூடனும் மொத்தமா ஒரு அஞ்சு லட்சம் பேரு எதிர்காலம் எசமான்.


.அதிகாரி: அது சரி நிறைய பேரு வேலை போயிரும் காப்பாத்திதான் ஆகனும்.நீங்க ஏன் உங்க கால்சட்டையோட வராம உயர்தர கோட் சூட்டெல்லாம் போட்டிட்டு வந்திருக்கீங்க?அதுவும் தனி விமானத்துல?

கா.கம்பெனி அதிகாரி: அடுத்த முறை நாங்க எங்க சொந்த கால்சட்டைய போட்டுட்டு வரோம் எசமான்.


.அதிகாரி: சரி நீங்க தயாரிக்கிற கால் சட்டையெல்லாம் அதிக சோப் எடுக்குதாம், வாசிங் மெசின்ல போட்டா ரொம்ப கரண்ட் ஆகுதாம் ஆனா ஜப்பான் காரன் கம்பெனி கால்சட்டையெல்லாம் குறைந்த நேரத்திலயே குறைந்த சோப்பிலேயே தொவக்க முடியுதாம் ஏன் அப்பிடி?

கா.கம்பெனி அதிகாரி: அது வந்து, எங்க கால்சட்டையெல்லாம் கொஞ்சம் சொகுசு கால்சட்டை அதுனால...


.அதிகாரி: என்ன சொகுசு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க?


கா.கம்பெனி அதிகாரி:எங்க கால்சடைல பாத்தீங்கண்ணா வலிக்காம இருக்க நிறைய பஞ்சு வெச்சிருப்போம்.அப்பரம் கால் சட்டைல காப்பி வைக்க ஹோல்டர், புடிச்சிக்க ஹோல்டர் எல்லாம் ரொம்ப தரமா /சொகுசா பண்ணிருக்கோம், சன் ஓட்டை /மூன் ஓட்டையெல்லாம் பீச்சங்கரைய பாத்தோன அதுவா தொறந்துக்கும்.ஜப்பான் கால்சட்டை அப்படி இல்லை.


.அதிகாரி: ஒகே,ஆனா மக்கள் ஜப்பான் கால்சட்டை நல்லா தரமா இருக்குன்னு சொல்றாங்க.ஜப்பான் மற்ற வெளிநாட்டுக்காரங்களுக்கு போட்டியா என்ன மாதிரி மாடல்கள் அறிமுகப்படுத்துனீங்க?


கா.கம்பெனி அதிகாரி: நாங்க எட்டு பாக்கெட் வெச்ச சட்டி கால்சட்டை அறிமுகப்படுத்தினோம்,கால்சட்டைய வேகமா மாட்டறதுக்கு தகுந்த மாதிரி V8 -super fast elastic வெச்சோம், இதுனால வேகமா கழட்டி மாட்டலாம்.


.அதிகாரி: ஒரு மனுசன் போடுற கால்சட்டைக்கு அதுவும் உள் கால்சட்டைக்கு எதுக்கு எட்டு பாக்கெட் ,அதுக்கு ஏன் V8 -super fast elastic.பாக்கெட்ல வெக்கவே ஒன்னும் இல்லாதப்ப ஏன் இவ்ளோ பாக்கெட், இதுனால சோப் செலவு துவைக்கிற கரண்ட் செலவு கூடிப்போச்சு.மாத்தி யோசிங்க?


கா.கம்பெனி அதிகாரி: இல்ல எசமான் கடன் ஈஸியா கெடச்சா மக்கள் அடிக்கடி கால்சட்டை வாங்குவாங்க, அதுலயும் எட்டு பாக்கெட் கால்சட்டையெல்லாம் அப்படிதான் வித்தோம், ஒருத்தரு மட்டும் மாசம் பத்து கால்சட்டை வாங்குர அளவுக்கு வியாபாரம் இருந்துச்சு,இப்ப கடன் கெடக்காததுனால வியாபாரம் படுத்து போச்சி.


.அதிகாரி: ஒரு மனுசனுக்கு மாசம் பத்து கால்சட்டை ஏன்? நீங்க சொல்றத பாத்தா கடனை கொடுத்து தேவையே இல்லாத கால்சட்டைங்கள அவங்ககிட்ட வித்திருக்கீங்க.இது ரியல் எஸ்டேட் பபுள் மாதிரி இது கால்சட்டை பபுள் இருக்கும் போல.


கா.கம்பெனி அதிகாரி: இல்ல எசமான் நம்ம கால்சட்டை சீக்கிரம் கிழிஞ்சி போயுரும் அதுனால புதுசு புதுசா வாங்கிதான் ஆகனும்.நம்ம குவாலிட்டில பிக்ஸ் பிக்மா பயன்படுத்துறோம்.கரெக்டா டைமுக்கு கிழிஞ்சிரும்.

.அதிகாரி: என்னாது சின்ன புள்ளத்தனமா இருக்கு ஜப்பான் கால்சட்டை வருசக்கணக்கில வருதுங்கிறான் நீங்க என்னடான்னா தேவையில்லாத எட்டு பாக்கெட் V8 -super fast elastic கால்சட்டைய சீக்கிரம் கிழியற மாதிரி செஞ்சு கடன கொடுத்து வாங்க சொல்றது தப்பு மாதிரி இருக்கே,நீங்க என்னா பண்ணுங்க போயி நல்ல துணில சீக்கிரம் கிழியாம இருக்கிர மாதிரி நல்ல நூல்,துவைக்க அதிகம் சோப்பு ஆகாத மாதிரியும் நல்ல தரமா கால்சட்டை தயார் பண்ணுனாதான் உங்களுக்கு உதவி

கா.கம்பெனி அதிகாரி: அடிக்கடி கிளிஞ்சாதனே எசமான் வியாபாரம் பெருகும்,பொருளாதாரம் வளரும்.நீங்க புரியாம பேசரீங்க எசமான், இது 5 லட்சம் பேரோட வேலை அடங்கிருக்கு.

தொழிற்சங்க பிரதிநிதி : கால்சட்டை செஞ்சாலும் செய்யாட்டியும் எங்களுக்கு சம்பளம் வேணும்.இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்.

.அதிகாரி: யப்பா என்ன ஆள விடுங்க,எங்க தாத்தா எனக்கு மிச்சம் வெச்சிட்டு போன லங்கோடு யாருக்குங்கிற உயில தேட போகனும் நான் வறேன்.

டியூசன் டீச்சர் விமர்சனம்

பதிவுலகில் இதற்கு முன்னர் டியூசன் டீச்சர் பற்றிய பதிவுகள் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனாலும் இந்த விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றியதால்.

நான் கிராமத்தில் 10 வகுப்பு வரை படித்து வளர்ந்தவன்.மேல் நிலைப்பள்ளி படிப்பிற்கு பக்கத்து நகரத்தில் உள்ள ஒரு மிகப்பிரபலமான பள்ளிக்கு சென்றேன். நான் எடுத்தது கணிதப்பிரிவு.

+1 படிக்கும்போது இரண்டு மாதங்கள் கழித்து அங்குள்ள ஆசிரியர்கள் குறிப்பாக வேதியியல்,இயற்பியல் ஆசிரியர்கள் தங்களிடம் டியூசன் வைக்க சொல்லி மறைமுக வேண்டுகோள், அதுவும் +2 பாடத்திற்கு இப்போதே டியூசன் சேராவிட்டால் செயல்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும் என்ற பயம் மாணவர்கள் மத்தியில் ஊட்டப்பட்டது. கணித ஆசிரியர்கள் மிரட்ட முடியாது, ஆனால் வகுப்பு ஆசிரியர் நன்றாகவே கணிதம் எடுத்தாலும் நகரில் உள்ள பிரபல கணித டியூட்டர்களிடம் கூட்டம் அதிகமே அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்.

இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கும் டியூசன் வைக்கப்பட்டேன். + 1 படிக்கும்போது +2 பாடம் நடத்துவார்கள். என்ன கொடுமை இது ?.

+2 படிக்கும்போது ஒரு மாணவன் வேதியியல் பாடத்திற்கு ஆங்கிலம் எடுக்கும் ஆனால் வேதியியலில் நல்ல புலமை கொண்ட ஆசிரியரிடம் டியூசன் வைத்த காரணத்திற்காக கடுமையாக மிரட்டப்பட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் எனக்கும் வேதியியல் ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடு வந்தது, டியூசன் செல்வதை நிறுத்திவிட்டேன்.

தேர்வு நேரத்தில் டைபாய்டு வந்ததால் +2 பொதுத்தேர்வு எழுதவில்லை, பின்னர் தனித்தேர்வராக அதே பள்ளியில் வேதியியல் செயல்முறை தேர்வு எழுதும்போது டியூசன் காசெல்லாம் முழுசா கட்டினியா எனவும் கேட்டார். வந்தவரை கட்டினேன் என்றேன்.ஆனால் அதற்காக மதிப்பெண்ணெல்லாம் குறைத்ததாக தெரியவில்லை.

இன்றைக்கு பாலர் பள்ளிக்கு கூட டியூசன் வைக்கிறாங்க. என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.? என்னுடைய அனுபவத்தை எழுதி இந்த கேள்விக்கு விடை காண ஆசை.

இதற்கு காரணம் யார்? நமது கல்வி முறையா? பெற்றோர்களா? எதற்காக பின்னர் பள்ளிக்கூடங்கள் ?

ஆசிரியர்கள் சமுதாயத்தின் ஒளி விளக்கு என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. இந்த நேரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விமர்சன கால மறுபதிவு

Sunday, January 18, 2009

மொக்கை கெமிஸ்ட்ரியும் தேர்வு மொக்கையும்

கல்லூரி கால தேர்வு அனுபங்களில் முதலாண்டு கெமிஸ்ட்ரி தேர்வு ரொம்ப மறக்கமுடியாத ஒன்னு. காலேஜ்ல இந்த பாடத்துக்கு மோகன் அப்படிங்கற ஆசிரியர் எழுதுன ஒரு புத்தகம் கொடுத்தாங்க கட்டுன காசுக்கு.ஆனா விசாரிச்சப்ப ஜெயின் @ ஜெயின் புத்தகம் தரமானது அப்படின்னாங்க.நாமதான் கெட்டாலும் மேன்மக்கள் ஜாதியாச்சே பாலகிருஷ்ணா நடிச்ச தெலுங்கு டப்பிங் படத்தை கூட பால்கனிலதான் உக்காந்து பாப்போம். ஜெயின் @ ஜெயின் வாங்கியாச்சு அத ஹாஸ்டல்ல வெச்சு நான் படிக்கிறத பாத்து எல்லாருக்கும் ஒரு பொறாமை குறிப்பா ரூம்மேட் பதிவர் நாநா,நெட்டையன் மற்றும் ரிக்சாவுக்கும் ரொம்ப அதிகம்.

தேர்வு நானும் ஜெயின் @ ஜெயின் படிச்சுட்டு கொஸ்டின் பேப்பர வாங்கி பாத்தா ஒன்னுமே புரியல மினிமம் 30 நிமிசம் இருக்கனும்.முத ஆளா தேர்வு ஹால விட்டு எந்திரிச்சு ஓடி வந்துட்டேன். 0/100 வாங்கிட்டேன்.

பசங்க எனக்கு வெச்ச பேரு ஜெயின் @ ஜெயின், அப்புரம் எப்படியோ மூனாவது செமஸ்டர்ல மரியாதையா மோகன் எழுதுன புத்தகத்தை படிச்சு எழுதிட்டேன். இதுல ஒரு கேள்வி கேட்டிருந்தான் paint of paint? அப்படின்னு நெனக்கிறேன். நானும் ஒரு நாலு பக்கம் விடை எழுதினேன்.எதுக்கும் ஒரு சந்தேகம் கடைசில வெச்சி கட்டிட்டேன். ஹாஸ்டலுக்கு போய் மோகன ரெபர் பண்ணா ஒரு பெரிய சதுரம் அளவுக்கு
CH
|
CH-CH-CHO---
|
OH

இப்படி ஒரு பார்முலா போட்டிருந்தான்.என்னடா இது இந்த வாட்டியும் சங்குதானான்னு.நல்லவேளை எப்படியோ தப்பிட்டேன்.கடைசி நாலு பக்கத்தை முன்னாடி வெச்சி கட்டிருந்தா ஒருவேளை கடைசி வரைக்கும் என்ன பாஸ் போட்டிருக்கமாட்டங்க.

சரி இப்போ இந்த பதிவு எதுக்கு,பதிவர் சந்தனமுல்லை ஒரு கெமிஸ்ட்ரி கேள்வி கேட்டாங்க,சித்திரக்கூடம்: கெமிஸ்ட்ரி பத்தி உங்களுக்கு என்னத் தெரியும்?நானும் கேட்டிருக்கேன் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

எலெக்சன் காமெடி மாதிரி ரெண்டு தேர்வு காமெடி.

தேர்வுக்கு செல்லும் மாணவனை வாழ்த்தி many more happy returns of the day.
--------------------------------------------------------------

குகு: மாப்பிள்ளை பரிட்சை எப்படிடா எழுதிருக்க?

பாரிஸ்: வாழ்க்கையே போர்க்களம்,போர்க்களம் மாறலாம் போர்கள் மாறுமா?
----------------------------------------------------------------------
கணேஷ்: டேய் எப்படிடா கொஸ்டின் பேப்பர் ஈஸியா கஷ்டமா?

குகு: !?!!!!!!???!!!(இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது,பாடத்து பேர தவிர எதுவுமே தெரியாம)

இதையும் பாருங்க

வருங்கால முதல்வர்: தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

குடுகுடுப்பை: நகைச்சுவை ஆடல்/பாடல்

Saturday, January 17, 2009

நகைச்சுவை ஆடல்/பாடல்

பொதுவாக நான் ஒலி/ஒளிப்பதிவு இடுவதில்லை.ஆனாலும் இந்த வீடியோவை பார்த்த பின்னர் உங்களிடம் பகிராமல் இருக்கமுடியவில்லை.

Thursday, January 15, 2009

புதிய பறவை விமர்சனம்.

வில்லுவின் அம்பினால் தாக்கப்பட்ட கோபத்தில் வீட்டுக்கு வந்தேன் நண்பர் ஒருவர் சில சிவாஜி/கமல்ஹாசன் படங்களின் டிவிடி கொடுத்தார். அதில் புதியபறவையும் ஒன்று, நிறைய பேர் புதியபறவை நல்ல படம் என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன்.ஆனால் பார்த்ததில்லை.

இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது, ஒரே வரிதான் கதை,அதனை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் வியப்பு. சிவாஜி மலேசியாவில் தன்னுடைய இதயம் பலஹீனமான குடிகார மனைவியை (சவுகார் ஜானகி) அறைந்ததில் இறந்து விடுகிறார். அதனை மறந்து இந்தியாவில் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் மீண்டும் சவுகார் ஜானகி அத்தான் என்றபடி வீட்டுக்குள் நுழைகிறார்.இந்த தருணத்தில் சிவாஜி தான் செய்த கொலையை மறைத்து, வந்திருப்பவர் தன் மனைவி சவுகார் ஜானகி அல்ல என்பதை நிரூபிக்கவேண்டும்.இதனை அவரின் முகத்தில் கொண்டு வருவதுதான் இந்தபடம்.படத்தின் இறுதியில்தான் தான் மனைவியை கொலை செய்ததை சொல்வார். அதுவரை நடப்பதுதான் கதை.

பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.கப்பலில் சந்தித்த வி.கே.ராமசாமி அவரது மகள் சரோஜாதேவிக்கும் ஊட்டியில் தன் இல்லத்தில் இடம் கொடுத்திருப்பார்.அப்போது மிரட்டல் தொணியில் வரும் எம்.ஆர்.ராதாவின் போனை கேட்டு முடித்தவுடன் முகத்தில் குழப்பமும்/கோபத்தையும் ஒருங்கே கொண்டு வந்த அந்த நடிப்பு இந்த மனிதருக்கு மட்டுமே வரும் போல.

சரோஜாதேவியுடன் காதல் வயப்பட்டு நிச்சயம் செய்யும் ஒரு நன்னாளில், மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வருகிறார்,அவருடைய சித்தப்பாவாக எம்.ஆர்.ராதாவும் நுழைகிறார்.நிச்சயம் தடைபடுகிறது.இந்த சௌகார் ஜானகி தன் மனைவி அல்ல என்று நிரூபிக்கிறேன் அதுவரை வீட்டில் இருக்கசொல்கிறார்.அவர்களும் இருக்கிறார்கள்.

மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வீட்டுக்கு வந்தவுடன். அவர் தன் மனைவி இல்லை என்று நிரூபிக்க அவர் படும் சிரமங்களை சில இடங்களில் ஆணவத்தோடும், பல இடங்களில் எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்துடனும் தந்திருப்பார். சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் உண்டு. சரோஜாதேவியும் அருமையாக நடித்திருப்பார்.நாகேஷ்,வி.கே.ராமசாமியின் பங்கு அவ்வளவு சுகம் என்று சொல்லமுடியாது ஒருவேளை 2009 ல் ரசிக்கமுடியவில்லையாகவும் இருக்கலாம்.எங்கே நிம்மதி பாட்டையும் நன்றாகவே படமாக்கியிருப்பார்கள்.உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னை பாடச்சொன்னால் என்ன பாடத்தோன்றும் பாடலும் அருமை.

வந்திருப்பவர் தன் மனைவி அல்ல என்பதை நிரூபிக்க தன் போலிஸ் நண்பன், சிங்கப்பூர் நணபரை தொடர்பு கொள்ள முயற்சி,மனைவியின் அண்ணன் மூலம் இறுதி முயற்சி செய்கிறார்.கடைசியில் மனைவியின் அண்ணனும் தங்கச்சி,சித்தப்பா என்று சொன்னவுடன். எல்லா முயற்சியும் தோல்வியுற்ற நிலையில்,சிவாஜி தான் தான் அந்தக்கொலையை செய்தது என்பதை ஒரு நீண்ட விளக்கம் /பிளாஷ்பேக் மூலம் தருவார்.தந்து முடித்தவுடன் இப்போது தெரிந்ததா இவள் என் மனைவி அல்ல என்று கூறி சரோஜாதேவியை இப்போ என்னை நம்புகிறாயா எனக்கேட்கும் போது, சரோஜாதேவி இன்ஸ்பெக்டர் இவரை கைது செய்யுங்கள் என்று கூறூவார்.

எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி ஆகியோர் உண்மையைக்கண்டுபிடித்து சிவாஜியை கைது செய்ய வந்தவர் என்ற உண்மையை சொல்வார்.இதனைப்போல சில விஜயசாந்தி நடித்த டப்பிங் படம் மூலம் பார்த்துவிட்டதால் ஓரளவு யூகிக்கமுடிந்தது.ஆனாலும் அந்தக்காலத்தில் எடுத்த ஒரு திரில்லரை இப்போதும் ரசிக்கமுடிகிறது.

இந்த விமர்சனத்தை பதிவர் பழமை பேசிக்கு சமர்ப்பிக்கிறேன்.விரைவில் இந்தப்படம் பி.வாசுவால் ரீமேக் செய்யப்பட்டு புதிய குருவி என்ற பெயரில் வந்தால் மீண்டும் விமர்சனம் எழுதுவோம்.

Tuesday, January 13, 2009

முதல்வரிடம் அடி வாங்கிய அனுபவம் - பாகம் 2

கல்லூரி நான்காம் ஆண்டு வகுப்புகள் முடிந்து, தேர்வுக்கு முந்தைய விடுமுறை, இந்த விடுமுறையில் என்ன பாடம் இருக்கிறது என்று பெயர் தெரிந்து நோட்ஸ காப்பி எடுத்து படிக்கனும்.

பெரும்பாலான தேர்வு விடுமுறை நாட்களில் சிலர் விடுதியில் இருப்பது வழக்கம், அந்த நேரத்தில் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால்.அதில் நானும் ஒருவன். நண்பர் நெட்டையன் எந்தக்காலத்திலும் விடுதிக்கோ கல்லூரிக்கோ வந்து தொடர்ந்தார்போல் பத்து நாள் கூட தங்க மாட்டான்.

இந்த முறை திடீரென ஒருநாள் வந்தான்.இரவு எட்டு மணியளவில் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் காமராஜ் கடையில் சாப்பிடும் முடிவோடு நின்றிருந்தோம், நெட்டையன் சொன்னான் டவுண்ல போய் மீன் சாப்பிட்டு வருவோம்.ஆனா காலேஜ் கேட்,ஹாஸ்டல் கேட் இரண்டுமே 9 மணிக்கு பூட்டிருவாங்க.அப்புரம் நேர்மையா சுவரேறியோ வேலியேறியோ குதிச்சுதான் போகனும். பாம்புகள் தொலலை வேற கூட்டமா இருந்தா துணிச்சல் வரும்,எங்க ரெண்டு பேருக்கும் அப்போ அந்த துணிச்சல் வரவில்லை.நெட்டையன் சொன்னான் முதல்வர் வீடு எதிர்லதான இருக்கு வா போய் கேட்டுட்டு போய் சாப்பிட்டு பத்து மணிக்கு வருவோம்னான்.

சரின்னு போயி முதல்வர் வீட்டு காலிங் பெல்ல அடிச்சேன், வெளில வந்தாரு உன் பேரெண்ணன்னு கேட்டாரு,சொன்னேன் அடுத்த நிமிடம் கழுத்து பகுதியில் ஒரு நாளு அறை விழுந்தது.என்னடா பேர சொன்ன உடனே அடிக்கிறாருன்னு ஒன்னுமே புரியல. நெட்டையன பாத்து இந்த நாய் கூட ஏன் சேருற அப்படின்னு வேற சொன்னார். ஓடிப்போயிருன்னார்.

நெட்டையன் கிட்ட கேட்டேன் எதுக்குடா மனுசன் அடிச்சார்னு, அதுக்கு அவன் பிரின்ஸி அடிக்கிரது சாதாரண விசயந்தானே ஆனா என்னப்பாத்து நல்லவன்னு சொல்லிட்டாரு உங்கூட சேரகூடாதுன்னு சொல்லிருக்காரு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடான்னு சிரிச்சான்.

விதிய நொந்து காமராஜ் கடைல காஞ்ச புரோட்டாவை இழுத்துக் கொண்டிருந்தோம்,கணேசனிடம் என்ன உங்கண்ணன் ஆர்சி கடை தொறக்கலயான்னு கேட்டப்ப அவன் கடை அடுப்புல பூனை தூங்கிட்டு இருக்குன்னு சொல்லிட்டுருக்கும்போதே வாட்ச்மேன் வெள்ளையன் எங்களை தேடி வந்தார், என்னப்பா பிரின்ஸி நீங்க உள்ள வந்துட்டீங்களான்னு கேட்டு பத்து வாட்டி போன் பண்ணிட்டாரு,சீக்கிரம் சாப்பிட்டிட்டு வாங்கண்ணார்.

அடுத்த நாள் 9 மணிக்கு என்னை மட்டும் பிரின்ஸி ரூமுக்கு வரச்சொல்லி ஹாஸ்டல் வார்டன் கூட்டிட்டு போனார். என்னை நிக்க வெச்சிட்டு சிவில் டிபார்ட்மெண்ட்ல புதுசா வந்திருந்த HOD ய கூப்பிட்டார்.

அவருகிட்ட என்னக்காட்டி இந்த நாய்தானே வேலியேறிக் குதிச்சதுன்னார். அவரு என்னப்பாத்து இல்ல இவரு சிவிலே இல்லண்ணார். அப்பதான் எனக்கும் புரிஞ்சது என் பேர்ல சிவில் டிபார்ட்மெண்ட்ல ஒருத்தன் இருந்தான் அவன் மேல இவரு புகார் கொடுத்திருக்கார்.அதுக்காகத்தான் நான் போய் காலிங் பெல் அடிச்சவுடன் பேர கேட்டிருக்கார்,சொன்னவுடன் அடிச்சிருக்காருன்னு.

உடனே பிரின்ஸி என்கிட்ட நான் தப்பு பண்ணிட்டேன், வேணும்னா என்ன இந்த செருப்பால அடிச்சிருன்னு அவரு போட்டிருந்த சிலிப்பர கழட்டி போட்டாரு சிரிச்சிகிட்டே நானும் சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டேன்.

நம்ப முடியாத மாதிரி இருக்குல்ல, ஆனா அப்படிதான் அவர். தேர்வுக்கட்டணம் எழுதாட்டியும் தேர்வு எழுதவும் விடுவார். இப்படி அடிக்கவும் செயவார். மொத்தத்தில அவர் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்கவேண்டும். அந்த முதல்வர் இப்போது உயிருடன் இல்லை.

Sunday, January 11, 2009

வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

அயன் பார்த்த பின் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில்லை என்ற முடிவினால், வேட்டைக்காரன் திரைவிமர்சனம் இல்லை. அதனால் வில்லு விமர்சனம் மறுபதிவு.

வலையுலகில் முதன் முதலாக ஒரு திரைப்பட விமர்சனம் மீள்பதிவாகிறது.

சனிக்கிழமை இரவு எதிர்பாராமல் டாலஸில் கடுங்குளிர், கடுங்குளிரைவிட எதிர்பாராத முடிவு - இரவு 9:30 காட்சி வில்லுக்கு செல்வதென்று தீர்மானித்தது. ஏற்கனவே குருவியால் கொடூரமாக கொத்தப்பட்டிருந்தாலும் விதி வலியது என்பது நிரூபிக்கப்பட்டது.

படத்தில் நான் புரிந்து கொண்ட கதை இதுதான், கொள்ளை கூட்டக்காரர்கள் வழக்கம் போல எதையோ கடத்துகிறார்கள், வருகிறார் டாக்டர் வில்லு - நீரில் பறக்கும்/மூழ்கும் படகாய் வந்து கொள்ளை கோஷ்டியின் ஒரு தலையை சாய்க்கிறார்.

இப்போது கொள்ளை கூட்டத்தை விட்டு கிராமத்தில் ஒரு கல்யாணத்திற்கு போகிறார். அங்கே துணி பஞ்சத்தில் கஷ்டப்படும் அழகி நயன்தாராவுடன் கொஞ்சல், டான்ஸ், பாட்டு. இடையிடையே வடிவேலு வந்து அடி வாங்கிக் கொள்கிறார்.

நிற்க அனைவரும் எதிர்பார்த்தபடி டாக்டர் விஜயின் வித்தையில் சொத்தையாகிறார் நயன். இன்னோரு எதிர்பார்த்த திருப்பம் நயன்தாரா ஒரு கொள்ளை கூட்ட பாஸின் மகள்.

நமக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி கொள்ளை கூட்ட பாஸ்கள் பிரகாஷ்ராஜும்,தேவராஜும் அறிமுகப்படுத்தப்படும் போது ஏற்படும் திருப்பங்கள். இரண்டு தெலுங்கு,கன்னட மசாலா படத்தை ஒரே நேரத்தில் பார்த்த திருப்தி. கொள்ளை கூட்டப் படம் அப்படித் தான் இருக்கும் போல. இது முன் பழமைத்துவத்தின் அடிப்படை.

கொள்ளை கூட்ட பாஸ் தேவராஜின் மகன் தான் விஜய் என்று மற்றொரு திருப்பம். அப்பனும்,மகனும் பூச்சி மருந்து அடிக்கும் விமானத்தில் பயணம் செய்யும் போது, தேவராஜை விமானத்திற்குள்ளேயே பறந்து, டைவ் அடித்து, சண்டை போட்டு, இறக்கையை பிடித்தி தொங்கி விமானத்தின் அடிப்பகுதி வழியாக விமானத்தின் உள்ளே இருக்கும் தேவராஜை கத்தியால் குத்தி கொல்கிறார் டாக்டர் விஜய். இப்போது விஜய் உண்மையிலேயே தேவராஜின் மகன் இல்லை என பயங்கர ஹேர்பின் திருப்பம் வேறு.

அப்படியே விமானத்தில் இருந்து சரியாக நயன்தாரா பயணம் செய்யும் படகில் பாராசூட் மூலம் குதிக்கிறார் டாக்டர். போடுறா பாட்டை- ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும். இப்படி ஒரு ஏழெட்டு பாட்டு, அதே அளவு சண்டை.

நயனின் தந்தையும், கொள்ளை கூட்ட பாஸ்களில் ஒருவருமான பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் இருவரின் அதிரடி சந்திப்புகள், திருப்பங்கள் என போகிறது. அடுத்து டாக்டர் விஜய் கண்ணாடியை கழற்ற கொள்ளை கூட்ட பாஸில் ஒருவரான ஆனந்த்ராஜ் உட்பட பலர் சாகிறார்கள்.

நல்ல கொள்ளை கோஷ்டிப்படம் என்று நினைக்கையில் அடுத்த திருப்பம் விஜயின் அப்பா விஜய் ராணுவத்தில் மேஜராம்,மேற்கண்ட கொள்ளை கோஷ்டித்தலைவர்களாக இதுவரை நாம் நினைத்துக்கொண்டிருந்த அனைவரும் ராணுவத்தில் வேலை பார்த்தவர்களாம். இவர்கள் நேர்மையான மேஜரை கொன்றுவிட்டு அவரை தேசத்துரோகியாக்கிவிட்டனர், அவரது மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்திவிட்டனர். இவர்களை மகன் விஜய் பழிவாங்குறாராம் அதுதான் கதையாம்.இது சோல்ஜர் இந்திப்படத்தோட கதியாம் இன்னோரு பதிவில படிச்சேன்.

படம் ஜெர்மனி, ஸ்விஸ், சென்னை அப்படின்னு போகுது. திடீர்னு ஒரு புளுரே டிஸ்க் தேடுறாங்க, ரஜினியோட ஒரிஜினல் பில்லாவுல தேடுன டைரி, தலயோட பில்லாவில் தேடுன பென் டிரைவை விட லேட்டஸ்ட் டெக்னாலஜியா இருக்கணும்னு உத்தரவு போட்டது டாக்டர் விஜயா இல்லை தெலுங்கு சூப்பர் ஹிட் டைரக்டர் பிரபு தேவாவின் சுய மூளையான்னு சத்தியமா எனக்கு தெரியல.

கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டுரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.

ஆனாலும் குருவியை தாக்க புறப்பட்ட வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு தவறி படம் பார்த்தவர்களை பதம் பார்த்து விட்டது. ஆக இன்னும் குருவி தான் உயரத்தில் தான் பறக்கிறது. அடுத்த படத்திலாவது குருவியின் சாதனையை டாக்டர் விஜய் முறியடிப்பார் என நம்பலாம்.

படத்தின் ஒரே ஒரு குறை என்றால் கொள்ளை கோஷ்டித் தலைவர் ஆனந்தராஜுக்கு வைத்த மாதிரி தாடியை பிரகாஷ்ராஜ், தேவராஜ் மற்றும் சில அல்லக்கைகளுக்கும் ஒட்ட வைத்திருக்கலாம். படத்தின் நம்பகத்தன்மையாவது இன்னும் கொஞ்சம் கூடியிருக்கும்.

மேலும் பெட்டி மாற்றும் சீன், LIC க்கு எத்தனை மாடி, வாழைப்பழத்தை எப்படி சாப்பிடணும் போன்ற ரகசிய சொற்கள் வைத்திருந்தால் இன்னும் கொள்ளை கோஷ்டி கதையின் சுவை கூடியிருக்கும்.

இவ்வளவு திருப்பங்கள் நிறைந்த இந்த படத்தில் திருப்பவே முடியாத ஒன்றும் உண்டு, அது குஷ்பூவின் நடனம்.


S.Ve.சேகர் அவருடைய காதுல பூ நாடகத்தை தெலுங்கு டப்பிங் பட டைரக்டர்களுக்கு அர்ப்பணித்திருப்பார். அது போல நான் இந்த பட விமர்சனத்தை அவரோட "காதுல பூ" நாடகத்திற்கு அர்ப்பணிக்கிறேன்.

Saturday, January 10, 2009

புதிய வண்ணத்துப்பூச்சி விருது


எனக்கு விருது கொடுத்த பதிவர் சந்தனமுல்லைக்கு நன்றி. எனக்கு தெரிந்த அனைவரும் இந்த விருதை வாங்கிவிட்டமையால்.நானே ஒரு புது விருதை உருவாக்கி பல பேர் பதிவு நடத்த காரணமாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த விருதை வழங்குகிறேன்.

பட்டாம் பூச்சி விருது யாரோ விளையாட்டுக்காக ஆரம்பித்த ஒரு தொடர் பதிவாக எனக்கு தோன்றினாலும் நண்பர்களின் எழுத்துத்திறமையை பாராட்டும் விதம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது.

குழந்தைகளின் படிப்பிற்கு கொடுக்கும் ஊக்கம் அளவிற்கு நாம் அவர்களின் மற்ற திறமைக்கு கொடுப்பதில்லை.ஆகவே குழந்தைகளிடம் இருக்கும் தனிப்பட்ட திறமை கண்டறிந்து அதற்கும் ஊக்கமளிப்போம்.

முடிந்தால் உங்கள் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறமையை பதிவாக்கி, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு விருதாக/தொடர்பதிவாக தொடருங்கள்.

நான் சில பதிவர்களின் குழந்தைகளுக்கு அளிக்கிறேன். அவர்கள் அவர்கள் குழந்தைகளின் தனித்திறமையை விருதாக தொடரலாம்.

பப்பு - சந்தனமுல்லை
பாப்பு - மிஸஸ் டவுட்
நசரேயனின் மகள்
சின்ன அம்மினி பழமைபேசி
அமிர்தவர்ஷினி, அமிர்தவர்ஷினி அம்மா.
சகானா - ச்சின்னபையன்
செல்லம்ஸ் - தாரணிபிரியா வின் ரங்கமணியின் அண்ணன் குழந்தைகள்.

பி:கு பழமைபேசி,நசரேயன்,ச்சின்னபையன் வீட்டில் அவர்களுக்கு கிடைக்கப்போகும் விருதுகளுக்கு நான் பொறுப்பல்ல.

















Friday, January 9, 2009

கல்லூரி சாலை : முதல்வரிடம் அடி வாங்கிய அனுபவம்.

நான் படித்த சுய நிதி பொறியியல் கல்லூரியில், ஏறத்தாழ அனைத்து கல்லூரி நிர்வாக முடிவுகளும் கல்லூரி முதல்வரேதான் எடுப்பார்.கல்லூரி நிர்வாகம் எனக்கு தெரிந்தவரையில் தலையிட்டதில்லை.விழாக்களுக்கு மட்டுமே வருவர்.உதாரணமாக அங்கே இருக்கும் தென்னை மரங்களுக்கு தண்ணீர் இறைப்பவர்க்கு சம்பளம் கொடுப்பது முதல் சரஸ்வதி பூஜைக்கு நூலகத்தில் சுண்டல் கொடுப்பது வரை.

இப்போ எனக்கும் கல்லூரி முதல்வருக்குமான பாசப்பிணைப்பை மட்டும் எழுதறேன். முதலாண்டு படிக்கையில் மாசம் ஒருமுறை லீவு கேக்க போவேன்,ஒரு நாளும் அவர் மறுத்ததில்லை ஆனால் நண்பர்கள் லீவு கேட்டு அறை வாங்கி வந்திருக்கிறார்கள்.நான் தப்பித்தே வந்தேன்.

இரண்டாம் ஆண்டு படிக்கும்போது காலேஜ் பக்கம் அவ்வளவா(சுத்தமான்னும் வெச்சுக்கலாம்) போறதில்லை,கொஞ்சம் பெரிய ஆளுன்னு மத்தவங்களா நெனச்சிக்கிட்டாங்க போல,நானும் நண்பர் பாரிசும் ஹிட் லிஸ்ட்ல சேர்க்கப்பட்டோம். இரண்டாமாண்டு நண்பர் ஒருநாள் முதலாண்டு மாணவர்களை ராகிங் பண்ணும் போது அவர்களோடு ஏதோ பிரச்சினை,கேள்விப்பட்ட இரண்டாமாண்டு மாணவர்கள் எல்லாம் ஒரு இரவில் முதலாண்டு மாணவர் விடுதி புகுந்து கட்டையால கணிசமான மக்களை அடிச்சிட்டு வெற்றிகரமா யாருக்கும் தெரியாம விடுதிக்கு திரும்பிட்டாங்க.இரவோடு இரவா முதல்வருக்கு செய்தி போயாச்சு.

அடுத்த நாள் காலைல நான் ஊருலேந்து விடுதிக்கு வரேன் பசங்க மேலே நடந்த விசயத்தை சொன்னாங்க, நான் ரொம்ப நொந்து போயிட்டேன் நாமளும் நம்ம வீரத்தை காண்பிக்க கிடைச்ச வாய்ப்பு காலி ஆயிடுச்சுன்னு.சோகத்தோட காலேஜுக்கு போனேன், முதல்வரிமிருந்து நோட்டீஸ் வந்தது அடித்தவர்கள் லிஸ்டல நானும் பாரிசும் இருந்தோம், அவனும் சம்பவம் நடந்தப்ப விடுதில இல்லை.

கண்ணாடி போட்டுட்டு போனா அடிக்க மாட்டாருன்னு ஒரு நம்பிக்கை, நான் ஒரு கண்ணாடி போட்டிருந்தேன் அத போட்டிட்டு போனேன். லிஸ்ட்ல உள்ள ஆறு பேரும் வரிசைல நின்னோம். அதுல என்னையும் பாரிசையும் தவிர மத்தவங்கெல்லாம் நல்ல பேரு உள்ள பசங்க, அவங்கள பாத்த முதல்வர் வெங்கட்ன்னு ஒரு நண்பர பாத்து நீயுமா அடிச்சன்னு சொல்லி எல்லாரையும் போகச்சொல்லிட்டார்.வெங்கட் புண்ணியத்துல அடி வாங்காம தப்பிச்சாச்சு ஆனாலும் ஒரு உறுத்தல் ஏன் தேவையில்லாம நம்ம பேர எழுதி கொடுங்கராங்கன்னு.

இன்னொரு சம்பவம் இறுதியாண்டு தேர்வு விடுமுறைக்கு முன் கடைசி வகுப்புக்கு முந்திய நாள். எல்லாரும் டவுணுக்கு போயி கொண்டாடிட்டு வந்தோம். கொண்டாட்டத்தின் உச்சத்தில் எங்களால் கடைசி வரை கட்டுப்படுத்த முடியாமல் போன ஒரு அப்பாவி நண்பர்,ஹாஸ்டல் நோட்டிஸ் போர்டு கண்ணாடிய உடைச்சிட்டான்,இந்த நேரத்திலேயும் நாங்க எல்லாரும் மெஸ்ல இருந்தோம்.இவன் தனியா வெறிபிடித்த மாதிரி போய் கண்ணாடிய உடைச்சிட்டான்.கையில பெரிய காயம். நாங்க எல்லாரும் பக்கத்து டவுணுக்கு ஓடிட்டோம்.
அப்புரம் நள்ளிரவில் திரும்பவும் ஹாஸ்டல் போயி முதல்வர்கிட்ட மன்னிப்பு கேக்கிற முடிவ இறுதியாண்டு நண்பர்கள் ஆலோசனைப்படி எடுத்தோம்.

இப்போது முதல்வர் அறை, கண்ணாடி உடைத்தவரை கேட்டார் என்னத்த குடிச்சிட்டு உடைச்ச?

அப்பாவி: கள்ளு சார்.

முதல்வர் : கள்ளா? எவ்வளவுக்கு குடிச்ச?

அப்பாவி: ரெண்டு மட்டை சார் பத்து ரூபாய்க்கு.

முதல்வர் : ஏண்டா நாயே பத்து ரூபாய் கள்ள குடிச்சிபுட்டு பத்தாயிரம் ரூபாய் கண்ணாடியே உடைச்சிருக்க. are you proud of doing this?

அப்பாவி: யெஸ் சார்.

முதல்வர் : என்னது யெஸ் ஸாரா வெட்கமா இல்ல?உங்கப்பா என்ன பண்றார்?

அப்பாவி: நோ சார்,விவசாயம்

முதல்வர் : மாடு இருக்கா வீட்டில எத்தனை மாடு இருக்கு?

அப்பாவி: 5 மாடு இருக்கு சார்.

முதல்வர் : நீ ஒரு மாடு உன்னையும் சேத்து கட்டிப்போடச்சொல்லு, அந்தக்கயித்துல, வாட்ச்மேன் இவனுங்கள கட்ட நல்ல மாடு கட்டற கயிறு வாங்கிட்டு வா காலேஜ் கேட்ல கட்டிப்போடனும் இவனுங்கல.

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்

பாரிஸ் : மலேசியாவில இருக்கார்.

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்.

நான் : வாத்தியார்

முதல்வர் : உங்கப்பா கண்ணாடிய உடைச்ச பையன என்ன பண்ணுவார், சொல்லு நானும் அதையே பண்ணுரேன்.

நான் : மவுனம்

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்

நெட்டையன் : இறந்துட்டார்.

முதல்வர் : அம்மா

நெட்டையன் : அவங்களும் இறந்துட்டாங்க.

முதல்வர் : உங்கப்பா?

டொல்பி : இரண்டு பேரும் இறந்துட்டாங்க..

சரி இனிமே செய்ய மாட்டேன்னு எல்லா கிளால் ரூம்லயும் போயி மன்னிப்பு கேக்கனும் அப்ப்டின்னாரு? முதல்ல எங்க கிளாஸ் எல்லாரையும் பாத்து வெற்றிப் புன்னகையோட சிரிச்சோம்.முதல்வரின் மருமகன் தான் வழிநடத்தி சென்றார். எங்கள் வகுப்பு முடிந்த உடன் ஜீனியர் வகுப்புக்கு போக முடியாதுன்னு நான் சொல்லிட்டேன்.அவரும் சரின்னு சொல்லி பிரச்சினையின் விபரீதம் புரிந்து முதல்வரிடம் திரும்ப போயி மன்னிப்பு கேட்டாங்கன்னு சொல்லிட்டார். இந்த முறையும் தப்பிச்சோம் அடிவாங்காம..

கவலைப்படாதீங்க அடுத்த பாகத்தில ...........

Wednesday, January 7, 2009

நடிகர் விவேக்குடன் விஜயகாந்த் பேட்டி

வழக்கம் போல ஒரு கற்பனை பேட்டி நகைச்சுவை பேட்டி.யார் மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்.

விவேக்: வணக்கம் கேப்டன், வலைத்தளத்திற்கு உங்களிடம் ஒரு கற்பனை பேட்டி எடுக்க சொல்லி குடுகுடுப்பையின் ஒரு கோடி ரசிகர்கள் உத்தரவு போட்டிருக்காங்க பேட்டிய தொடங்கலாமா விஜயகாந்த்.

வி.ரசிகர்கள்: கேப்டன பேரு சொல்லி கூப்புடதா அப்புரம் டப்பா டான்ஸ் ஆடிடும்.

விஜயகாந்த்: தொண்டர்களே நமது கட்சியில் வன்முறைக்கு இடமில்லை அதனை புரிந்து நீங்கள் நடந்துகொள்ளுங்கள் ,விவேக் வன்முறையை தூண்டும் வகையில் இனி பேசமாட்டார்.

விவேக்: (மனதினுள்)பேர சொல்றது வன்முறையை தூண்டுறதா?நான் வழக்கமா எல்லாரையும் மரியாதை இல்லாம பேசிதான் காமெடி பண்ணுவேன் அதுக்கே மக்கள் சிரிக்கதான் செஞ்சாங்க ,ஆனா நேர்ல ஒழுங்கா பேசினா வன்முறைங்கிறாங்க.

விவேக்: உங்களை கேப்டன்னு கூப்பிடனுமா புரட்சிக்கலைஞர்னு கூப்பிடனுமா?

விஜயகாந்த்: ரெண்டையும் சொல்லி கூப்பிட்டா என்ன தப்பு, புரட்சிகலைஞர்னு கூப்பிட்டா கலைஞர வம்புக்கிழுக்கிறேன் திமுககாரங்க சண்டைக்கு வருவாங்க வரட்டும். கேப்டன் புரட்சிக்கலைஞர்னு கூப்பிடறதான் மேடம் விரும்புறாங்க.

விவேக் :கேப்டன் உங்களுக்கும் வடிவேலுவுக்கும் என்ன பிரச்சினை,ஏன் எங்கள மாதிரி நகைச்சுவை நடிகர்கள் கூட உங்களுக்கு பிரச்சினை?

விஜயகாந்த்: முதல்ல நகைச்சுவை நடிகர்கள் உங்கள மட்டும் நீங்க சொல்லிக்கறதே தப்பு, என்னோட நடிப்ப பாத்து மக்கள் சிரிக்கலையா? நானும் நகைச்சுவை நடிகன் தான், வல்லரசு படத்த இந்த குடுகுடுப்பை அவரோட நண்பரோட உக்காந்து கிளைமாக்ஸ் சீன் வரைக்கும் சிரிச்சது உண்மையில்லயா? அவரோட நண்பர் அந்த படத்த அஞ்சு வாட்டி பாத்தது எதுக்காக? நகைச்சுவை நடிகர்களோட எனக்கு பிரச்சினை அப்படின்னா எனக்கே எங்கூட பிரச்சினைதான். இதில் பெரிய சூழ்ச்சி இருக்கு.


விவேக் : 10% கேக்குறீங்களே நீங்க என்ன தேமுதிகவான்னு செந்தழல் ரவி கேக்குறாரே? இந்தக்க்குற்றச்சாட்டுக்கு என்ன சொல்றீங்க?

விஜயகாந்த்: உலக அரசியல் தெரிஞ்சவரா இருந்தா 10 % கேக்கறீங்களே நீங்க என்ன ஆசிப் அலி சர்தாரியான்னு கேட்டிருப்பார், ஆனா தேமுதிக வில் அமைப்பு ரீதியா எல்லா பதவிகளும் சரியாகவே நடக்கிறது, அதற்கான புள்ளிவிவரங்கள் நான் கொடுப்பேன் நெனச்சுதான் நீங்க இந்த கேள்விய கேக்கறீங்க, சினிமான்னா லியாகத் அலிகான் நம்பர் சொல்வாரு வசனமா பேசிரலாம். அரசியலுக்கு பண்ருட்டியார்தான் இந்த வேலையை பண்றது, டாக்டர் பலாப்பழம் சாப்பிடவேணாம்னு சொன்ன ஒரே காரணத்திக்குகாக என் ஊரு பலாப்பழத்தை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றதுக்கு டாக்டர் யார்னு முழுசா சாப்பிட்டுட்டு இப்ப அவர் மருத்துவமனைல இருக்கார். அவரு வந்தவுடன் புள்ளிவிவரம் வங்கி கணக்குகள் எல்லாம் வலை மன்றத்தில வெக்கத்தான் போறேன்.அப்போ பாப்போம் அந்த செந்தழல் ரவியா இல்ல இந்த செங்கண்ணு விஜயகாந்தான்னு.

விவேக்: டாக்டர் சொன்னா கேட்டுக்கவேண்டியதுதானே? ஏன் அப்படி பண்ணார்?

விஜயகாந்த்: அவரு டாக்டர் ராமதாஸ் சொன்னார்னு நினைச்சு அப்படி பண்ணிட்டார்.

விவேக்: இப்பவே நிறைய குடும்ப அரசியல் பண்றீங்கன்னு குற்றச்சாட்டு இருக்கு,பதவிக்கு வந்தா உங்கள் குடும்பத்தின் தலையீடு ஆட்சியில் இருக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

விஜயகாந்த்: யாரு குடும்ப அரசியல் பண்ணலை, குடுகுடுப்பைக்கு பதிவு போட ஒன்னும் இல்லண்ணா என் மகளின் பதிவு,பெற்றோருக்கு பரிசு,ஓவியங்கள் ஒரு குடும்ப பதிவு போடலியா, பதிவர் வாசகர் சந்திப்புன்னு பதிவு போடலியா? அதையெல்லாம் நீங்க கேட்டீங்களா?எல்லாத்தையும் மக்கள் படிச்சிட்டுதான் இருக்காங்க.

விவேக் : கறுப்பு எம்ஜியார்?

விஜயகாந்த்: ஏன் கூப்பிடக்கூடாது, வடிவேல கறுப்பு நாகேஷ்னு கூப்பிடலாம் என்ன கறுப்பு எம்ஜியார்னு கூப்பிடக்கூடாதா?இதுல என்ன அரசியல் ஏன் காழ்ப்புணர்ச்சி.

விவேக் : சன் டிவி காரங்க திரும்ப திமுக வோட ஐக்கியமாயிட்டாங்க? நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

விஜயகாந்த்: சன்னும்,கலைஞரும் சேந்தா மாதிரி நானும் திமுக கூட்டணில சேரலாம், ஆனா என்னை முதலவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் அப்படி நடந்தால் எந்தக்கட்சியும் எங்களுடன் கூட்டணி சேரலாம்.

விவேக்: தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் அப்படின்னு பேரு வெச்சிருக்கீங்க? அப்ப மத்த கட்சில உள்ளவங்கெல்லாம் பிற்போக்கு திராவிடர்களா?

விஜயகாந்த்: யாரு தூண்டிவிட்டு பேசறீங்கண்ணு எனக்கு நல்லாவே தெரியும், அடிச்சன்னா தெரியுமா?

விவேக்: அடிவாங்க நான் என்ன வடிவேலா? அதுக்கெல்லாம் நான் அல்லக்கை கொட்டாங்குச்சிய வெச்சிருக்கேன் அடிங்க?

விஜயகாந்த்: ஏய் கை வலிக்குதுப்பா?

விவேக்: பின்ன கொட்டாங்க்குச்சில அடிச்சா கை வலிக்கத்தான் செய்யும் கேப்டன்.எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்..

விஜயகாந்த்: எங்க போயிருவே ஒரு நாள் நீயும் கட்சி ஆரம்பிச்சி என்கிட்ட கூட்டணிக்கு வரத்தானே போற...அப்ப வெச்சுக்கறேன்.

நானும் ஒரு அரசியல் பதிவு போட்டிருக்கேன், அப்படியே இதையும் படிங்க
குடுகுடுப்பை: வி.பி.சிங் ஏற்படுத்திய பின்விளைவுகள்.

Tuesday, January 6, 2009

வி.பி.சிங் ஏற்படுத்திய பின்விளைவுகள்.

இப்பதிவு வி.பி.சிங்கின் ஆட்சி/அரசியல் பற்றிய விமர்சனமோ அல்ல,மாறாக அவரது அரசியல்/ஆட்சியினால் ஏற்பட்ட அரசியல் சமூக பின்விளைவுகள் என்ன என்று என் பார்வையில் ஒரு சிறிய அலசல்.

ராஜிவ் காந்தியுடன் ஏற்பட்ட கோபத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து அனைத்து நகைச்சுவை ஜனதா கட்சிகளை ஒன்றினைத்து ஜனதாதளம் என்ற கட்சியை உருவாக்கி,கம்யூனிஸ்ட்,வாஜ்பாய் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் நடிகர்களிடம் தோற்றுக்கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சி அனைத்தும் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து வெற்றி பெற்றார்.

பாரதீய ஜனதா பின்வாங்கியது, பின்னர் நகைச்சுவை ஜனதாதளத்தின் சார்பில் சந்திரசேகர்,கவுடா,குஜ்ரால் என மாதக்கணக்கில், இந்திய ஜனநாயகத்தில் உள்ள குறைகளை பயன்படுத்தி ஆட்சி செய்தார்கள் என்று சொல்வதை விட பிரதமராக இருந்தார்கள்.நகைச்சுவை ஜனதாதளமும் இன்றையவரை உடைந்துகொண்டிருக்கிறது. நேரு சாகும் வரை பிரதமராக இருந்ததும் இந்திய ஜனநாயகத்தில் உள்ள குறையே.

சமூக ரீதியாக மத்திய அரசு நிறுவணங்களில் மண்டல் கமிசன் பரிந்துரை எந்த அளவுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு பயன் அளிக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அரசியல் ரீதியாக ஒரு எழுச்சி நடந்தது.

ஜனதாவின் மிச்சங்களான லல்லு எவ்வளவுதான் கோமாளித்தனம் செய்தாலும்,ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சியை பீகார் மாநிலத்தில் அமைக்க முடியும் என்று நிரூபித்தவர்.காங்கிரஸ் முதல்வர்கள் போல் அல்லாமல் தனியாக முடுவெடுக்க முடியும் என்று நிரூபித்தவர்.பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆளலாம் என்ற எண்ணத்தை வட மாநிலங்களில் விதைத்தவர். இது கண்டிப்பாக இந்திய ஜனநாயகத்தின் வெற்றியே. வி.பி.சிங்கின் பின்விளைவாகவே இதை கருதுகிறேன்.

என்னதான் கன்ஷிராம் பல வருடங்களாக தலித் கட்சி நடத்திக்கொண்டிருந்தாலும் ஆட்சியை பிடிப்பது நடக்கவில்லை, ஆனால் மாயாவதி அந்த நேரத்தில் நடந்த குழப்பங்களில் விளைவாக காங்கிரஸ் அல்லாத ஒரு தலித் பெண் நாடாள முடியும் என நிரூபிக்கமுடிந்தது.இவர் மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் யார் மேல் இல்லை. ஊழல் இந்திய ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது குறைய இன்னும் நாள் ஆகும். மாயாவதி நாடாள முடிந்ததும் வி.பி.சிங் ஆட்சியின் பின்விளைவாகவே கருதுகிறேன்.

ஆனால் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த எழுச்சியாக இருந்திருக்கவேண்டிய இந்த பின்விளைவுகள் சாதிக்கட்சி என்ற பெயரில் மிக மோசமான ஒரு பின்விளைவையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.உதாரணம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் மட்டும் எத்தனை கட்சி.

காங்கிரஸ் மட்டுமே வெல்லமுடியும் என்ற விசித்திரமான நிலை போய், பாரதீய ஜனதா கட்சி வலுப்பெற்றது,அதே அளவில் மாநில கட்சிகளும் ஆங்காங்கே வலுப்பெற்றது. ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு சம பலம் வாய்ந்த கட்சிகள் தேவை.பாரதீய ஜனதா கட்சியின் விரைவான வளர்ச்சி அதனை நோக்கியே செல்வதாக நான் கருதுகிறேன்.இதுவும் வி.பி,சிங் ஆட்சியின் பின்விளைவாகவே கருதுகிறேன்

வலுவான காங்கிரஸ் கட்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு தேவை,ஆனால் வேண்டாம் என்று ஒதுங்கிப்போன நேரு குடும்பத்தினர் இல்லாமல் இந்த கட்சி இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கிய அதன் தொண்டர்கள்/தலைவர்களை என்ன செய்ய. இந்த கட்சி எவ்வளவோ நல்ல தலைவர்களை உருவாக்கியிருக்கலாம், ஆனால் உட்கட்சி ஜனநாயகம் இல்லாத மன்னர் கட்சியையே இவர்கள் விரும்புகிறார்கள்,இக்கட்சியின் முதல்வர்கள் காமராசர் போன்று எப்போது தனித்து இயங்குவது.இந்த நிலை எப்போது மாறும்.?

பாரதீய ஜனதா கட்சி ஓரளவு உட்கட்சி ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது, ஆனால் உயர் சாதிக்காரர்களின் கட்சி என்ற நிலை மாறி மாயாவதி போன்ற வலிமை மிக்க தலித்துக்களும் அதன் தலைமை பீடத்தையும் அக்கட்சி வெற்றியின் மூலம் இந்தியாவின் பிரதமராகவும் ஆக முடியும் என்ற நிலையை அந்தக்கட்சி உருவாக்கவேண்டும்.

வி.பி.சிங் ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம், எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லாமலேயே இருந்திருக்கும்.இவர் ஏற்படுத்திய கலகம் நன்மைக்கே. வலுவான காங்கிரஸ், வலுவான பாரதீய ஜனதா, வலுவான மாநிலக்கட்சிகள் எல்லாம் இந்திய ஜனநாயகத்துக்கு தேவை வரும் காலத்தில் இவை எல்லாம் வலுப்பெற்று ஊழல்கள் குறைந்து ஜாதிக்கட்சிகள் ஒழிந்து ஒரு ஆரோக்கியமான அனைத்து மக்களையும் உள்ளடக்கிய தனி நபர் வழிபாடு குறைந்த வலிமையான மக்களாட்சியாக இந்தியா மாறும் என நம்புவோம்.

Sunday, January 4, 2009

கல்லூரி சாலை:புளூயிட் மெக்கானிக்ஸ் தேர்வும் நானும்

முதலாண்டு தேர்வு முடிவுகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள், மூன்றாம் பருவத்தேர்வு வந்துவிட்டது,வழக்கம் போல தேர்வுக்கு முன்பான விடுமுறை நாட்கள் படிக்காமல் காலம் கடத்தியாச்சு.மூன்றாவது பருவத்தில் முதல் தேர்வு கணக்கு அதில் வந்த லாப்லாஸ் கணக்கு கமல்ஹாசன் பேசறது மாதிரி, படிக்கிறப்ப புரியுர மாதிரியே இருந்துச்சு, பரிட்சை எழுதினப்பதான் தெரிஞ்சது, கமல் படம் மாதிரி நாளஞ்சு வாட்டி எழுதி(பாத்து)தான் புரியும் போல ஆச்சு.கால மேல கால் போட்டு படுத்துக்கிட்டே கணக்கு புத்தகத்தை படிச்சா வேலைக்காவதுன்னும் தெரிஞ்சுச்சு.

இரண்டாவது தேர்வு அடுத்த நாள், கணக்கு புட்டுகிச்சி அடுத்து புளூயிட்ஸ் ஈஸி பேப்பர், இன்னைக்கு நைட் படிச்சு தூக்கிரலாம்கிற எண்ணத்தில மெஸ்ஸுல போடுற சைவ பூச்சி உணவ சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தேன்.வந்தாங்க நம்ம புராஜக்ட் கும்பல் .டேய் கணக்கே போச்சி சோகத்தை போக்கறதுக்கு நாம எல்லாம் படத்துக்கு போறோம்.வாசல் வழியா இனி போகமுடியாது வெள்ளையந்தான் வாட்ச்மேன் அவன் கண்ணுல படாம எப்படியாவது வேலியேறி குதிச்சு சின்னமாயாகுளத்துல பஸ் ஏறிருவோம் காலேஜ் பஸ் ஸ்டாப்ல ஏறுனா வெள்ளையன் பாத்து பிரின்சிபால்கிட்ட போட்டுகுடுத்துருவான்.அப்படியே எதாவது ஒரு படத்தை பாத்திட்டு வருவோம் அப்படின்னாங்க.

சரி திட்டப்படி எல்லாருமா சேந்து வேலியேறி குதிச்சாச்சு, பொதுவா இரவில் நாங்க பயன்படுத்துற வேலி முள்ளுவாடி பக்கம் இருக்கும், இந்த முறை எதிர் திசையில் உள்ள சின்னமாயகுளம் பக்கம் போனோம்,பயங்கரமான மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வயல்களில் வரப்புகளை கண்டு நடப்பதே சிரமமா இருந்தது. செருப்பு வேற தண்ணில போச்சு.

டேய் இப்படி சிரமப்பட்டு படத்துக்கு போறதுக்கு படிச்சிருக்கலாம்டா,

டேய் குகு சும்மா பினாத்தாம வாடா - பாரிஸ்

ஒரு வழியா பஸ் பிடிச்சி வந்தாச்சி, சரிடா எதாவது ஒரு தெலுங்கு டப்பிங் படம் போவோமா.

வாய மூடுறா வேற எதுக்காவதும் போவோம்,அப்படின்னு எதோ ஒரு சரத்குமார் படம் போனோம், படத்தின் தரம் ஒழுங்கா படிச்சிருக்கலாம் அப்படின்னு இன்னொரு முறை மணியடித்ததது.

மீண்டும் ஹாஸ்டல் முக்கால் வாசி பேர் தூங்கிவிட்டிருந்தனர், தேர்வுக்கு முதல் இரவில் மட்டுமே படிக்கும் சில மாணவர்கள் படித்த படி இருந்தனர்.அப்படியே பேசியபடி படிக்காத குற்ற உணர்ச்சியில் அரைகுறையாய் தூங்கினேன்.

அடுத்த நாள் மதியம் தேர்வு, படத்துக்கு போன எல்லாரும் தேர்வுக்கு தயார்,பாடத்து பேரத்தவிர வேற எதுவும் தெரியாம கெளம்பிட்டாங்க பாரிஸ் மட்டும் படுத்தே இருந்தான். ஏண்டா நீயும் தேர்வுக்கு போறியா?

இல்லடா மாப்பிள்ளை ராத்திரி மழையில நெனஞ்சதுனால ஒரே பீவர், சாதாரண பீவரா இருந்தா பரவாயில்லை இது சபரிங் பிரம் பீவர் அதுனால நான் லீவு போட்டுக்கிறேன் அப்படின்னான். எனக்கும் துணைக்கு ஒரு ஆள் இருக்கானேன்னு நானும் வரலடா நீங்க போங்கன்னேன்.

தேர்வு முடிவு வந்தபோது என்னையும் பாரிஸையும் தவிர அனைவரும் புளூயிட் மெக்கானிக்ஸ்ல பாஸாயிட்டாங்க.

நான் திரும்பவும் எழுதினேன்.புளூயிட் மெக்கானிக்ஸ் கைகூடியது, ஆனா லாப்லாஸ் கணக்கு கமலின் முயற்சி போல தொடர்ந்தது...

வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ

Friday, January 2, 2009

பதிவுலகத்திற்கு 2009ம் ஆண்டில் இருந்து புதிய விருது.

பதிவுலகத்திற்கு 2009ம் ஆண்டில் இருந்து புதிய விருது.

வலைப்பதிவு உலகத்தில் தரமான பதிவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி கெளரவம் செய்வது ஒன்றும் புதிதல்ல, ஆனால் 2009 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் இந்த விருது புதிய ஒன்று.இந்த விருது ஒருவர் ஒருவருக்கே அளிக்க முடியும்.

இந்த விருதைப்பெறுபவர் விருதின் படத்தை தன் வலைப்பதிவில் போட்டுக்கொள்ளவேண்டும்,இந்த விருதின் பெயர் நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் "குடுகுடுப்பை விருது". இது பதிவர் குடுகுடுப்பையின் வலைப்பூ பெயரால் வழங்கப்படும்.பரிசோடு மட்டுமன்றி $500 பரிசுத்தொகையும் உண்டு.

இந்த ஆண்டுக்கான இந்த விருதை நான் அளிக்க நினைத்தது என் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பதிவருக்கு,ஆனால் குடும்ப பதிவரசியல் என பேச்சு வந்துவிடும் என்ற காரணத்தினால் மற்றொரு பதிவருக்கு இந்த விருதும் பரிசுப்பணமும் அளிக்கப்படுகிறது.

இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.