Monday, November 18, 2013

சாதியும் சான்றிதழும்.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாள் எதற்காகவோ அவசரமாக சாதி சான்றிதழ் தேவைப்பட்டது, அதனை வாங்க எங்க ஊர் கிராம நிர்வாக அலுவலரைத்தேடி இரண்டு நாள் கிராம நிர்வாக அலுவலகம் அலைஞ்சதுதான் மிச்சம். கணேசன் கடைல மத்தியாணம் உச்சி வெயிலில் சுண்டக் காஞ்ச பாலில் டீ குடிச்சிட்டுருக்கும்போது ஒருநாள் நணபர் லெட்சுமணன் கிட்ட இதை சொன்னேன், உடனே அவரு சொன்னார் நாளைக்கு காலையிலேயே வண்டி எடுத்துட்டு அவரு வீட்டுக்கே போயிருவோம்.அங்கேயே ஆளை மடக்கி தள்ள வேண்டியத தள்ளி வாங்கிட்டு வந்திரலாம்.

அடுத்த நாள் எங்க வீட்ல இருந்த M80ய (80 ஒரு 40 கழண்டு போன வண்டி)எடுத்துட்டு கிளம்பினோம் , நண்பர் லெட்சுமணுக்கு சொந்தம் நண்பர்கள் என்று நிறைய பேர் VAO ஊருக்கு போகிற வழியில்.

வழியில் நடந்து வரும் ஒரு பெண்ணைப்பார்த்து லெட்சுமணின் உரையாடல்.

என்ன பாத்திமாயீ நடவுக்கு கெளம்பிட்டியளா?

ஆமாம்.

உங்க வீட்டுக்காரு பணத்தேரு ஓட்டுவாரே எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம்.

சவுதிக்கு போயி ஒட்டக சாணி அள்ளிட்டு வந்தவங்க ஒரு நாளு பேரு ஊருல வந்து அத்தர் அடிச்சிக்கிட்டு திரியிறாங்க, அப்படியே மாட்டுச்சாணி அள்ளுறது கேவலம்னு சொல்லி இந்தாளு பொழப்ப கெடுத்துபுட்டாங்க , மாட்டை வித்துப்புட்டு சவுதிக்கு போறதுக்காக பணம் கட்டிட்டு அவங்க பின்னாடியே திரியிறார்.ஒரு வருசமாச்சு இன்னும் போன பாட்டக்காணோம்.

அது சரி, எதாவது தொழில் தெரிஞ்சு போனா நல்ல வேலை கிடைக்கும், உங்க ஆளு பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத ஆளாச்சே,ஒட்டகம் பெரிசு அங்கேயே போய் அள்ளட்டும்.

போகும் வழியில் இன்னோரு ஊர், இந்த ஊர்லதான் உங்க தாத்தா மண்டையன்கிட்ட நெல்லு வட்டிக்கு கடன் வாங்குவாராம் உங்கப்பாவை படிக்க வைக்க, அறுவடை சமயத்துல களத்துலேயே நெல்லை ஏத்திட்டு போயிருவான் மண்டையன்.

கேள்விப்பட்டிருக்கேன், இது போல நிறைய பேரு வட்டிக்கு தாத்தாவுக்கு பணம் குடுத்துட்டு, நீ வாத்தியாரா இருக்கறதுக்கு நாந்தான் காரணம்னு எங்கப்பா கிட்ட சொல்ற ஒரு கும்பலே அலையுது.

அப்படியே கடந்து போய் இன்னோரு ஊரில் ஒரு கடையில் டீ குடிக்க அமர்ந்தோம்

என்ன லெட்சுமண் இரண்டு விதமா டபரா செட் வெச்சிருக்காங்க, சில்வர்ல ஒன்னு , வெங்கலத்துல ஒன்னு.

குடியான பொம்பள சனங்களுக்கு கொடுக்க சில்வர் டபரா செட், குடியான ஆம்பிளைகளுக்கு கிளாஸ், தாழ்த்தப்பட்டவகளுக்கு வெங்கல டபரா.

அது என்ன தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெங்கல டபரா?

அதுல எச்சி ஒட்டாதாம் இவங்க கண்டுபிடிப்பு, ஏரியாவில ஒருத்தன் கூட பத்தாவது படிச்சிருக்கமாட்டான் ஆனா இந்த அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் நிறையா இருக்கு.

என்னப்பா நம்ம ஊரு ஒரு ஆறு கிலோ மீட்டர் தள்ளிதான் இருக்கு, அங்கே ஆம்பிளைகளுக்கு கிளாஸ் பொம்பங்களுக்கு சில்வர் டபரா அப்படி தானே கடைகள்ல இருக்கு.

அது மட்டுமா நம்ம கணேசன் கடைல யாரு டீ குடிச்ச கிளாஸையும் கழுவறதேயில்லை, ஒருத்தன் குடிச்ச கிளாஸ்லதான் இன்னோருத்தன் குடிக்கனும்.சமத்துவம் அந்த அளவுக்கு ஆகிப்போச்சு. நம்ம ஏரியாவில கையில காசு பணம் இருக்கோ இல்லியோ படிக்க வைக்கனும்னு நெனப்பாங்க, வெள்ளை வேட்டி சட்டை கலையாம வீட்டு வாசல் தாண்ட மாட்டாங்க, நாளு கிழமைன்னா தண்ணி போடாமயும் இருக்க மாட்டோம். இவங்க எல்லாரும் காசு நிறைய வெச்சிருப்பாங்க, ஆனா கோமணத்துக்கும் வேட்டிக்கும் வித்தியாசம் தெரியாது ரெண்டும் செம்மண் கலர்லதான் இருக்கும், மிஞ்சிப்போன பக்கத்து ஊரு சந்தை வரைக்கும் தான் தெரியும்.அரசாங்க தொடர்புன்னா நாயக்கர் பாத்துக்குவாரு. அவரு எந்த ஊருலேந்து இங்க வந்தாருன்னு தெரியல பல வருசமா அவருதான் பிரசிடெண்ட், அவங்க தம்பிதான் சொசைட்டி பிரசிடெண்ட் அவங்க
சொல்றதுதான் இவங்களுக்கு வேத வாக்கு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எதிர்ப்பு கெளம்புது.

அப்படியா?

சரி VAO வீடு வந்திருச்சி ,இருக்காரான்னு பாப்போம்.

ஹலோ சார் இருங்காங்களா?

VAOவின் மகள்: அப்பா வெணூமா, அப்பா டேஞ்சூர் போயிருக்காங்க, வரதுக்கு 2 டேய்ஸ் ஆகும்.

அப்படிங்களா? நான் எனக்கு சாதி சான்றிதழ் வாங்க வந்தேன் , காலேஜ்ல அவசரமா கேக்கிறாங்க

லெட்சுமண்: நீங்க என்னா பண்றீங்க?

VAOவின் மகள்: நான் டேஞ்சூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல பிகாம் பண்ணிட்டிருக்கேன்.

லெட்சுமண்: அப்படிங்களா ? அப்பா வந்தா சொல்லுங்க இந்த மாதிரி குடுகுடுப்பை சாதி சான்றிதழ் கேட்டு வந்ததா?

VAOவின் மகள்: கேஸ்ட் செர்டிபிகேட், குடுகுடுப்பை,குடுகுடுப்பையூர், சொல்லிடறேன்.

ஏமாற்றத்தோடு திரும்பி வந்தோம், லெட்சுமண் சொன்னார். இன்னும் நாளு வாட்டி சாதிச்சான்றிதழ் வாங்க VAO வீட்டுப்பக்கம் நீ வந்தா சான்றிதழ் கிடைக்குதோ இல்லையா சாதி மாறி VAO மகள் குடுகுடுப்பைக்காரனோட ஓடிப்போயிட்டான்னு பேராகிப்போயிரும் பாத்து இருந்துக்கோ.

Thursday, October 31, 2013

கம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்.

ராகவன்: மாப்பிள்ளை இன்னக்கி கம்பியூட்டர் சயின்ஸ் பேப்பர் பரீட்ச்சைக்கு என்னடா ப்ரொகிராம் வரும், எதுனா சொல்லுடா நானும் கடம் போட்டு வெக்கிறேன்.


ராவணன்: நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிற நமக்கு வைக்கிறாங்கன்னே தெரியலன்னு கடுப்புல இருக்கேன், ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. புரோகிராம்னு சொல்லி சும்மா பிராக்கெட்,பிராக்கெட்டா போட்டு வெச்சிருக்காங்க, இத கடம் போடரதோட ஒரு ஜாக்கெட்டுக்கு பிராக்கெட் போடறது ஈசிடா.

ராமசாமி(cse): கம்பியூட்டர் சயின்ஸ் புரோகிராமிங் ரொம்ப ஈசிடா, ஒன்னயும் ரெண்டையும் கூட்டரதுக்கு ஒரு புரோகிராம் போடரது மாதிரிதான்.

ராவணன்:டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பாடத்தை வெச்சாதான் எங்க கஷ்டம் புரியும். சரி விடு பரீட்சைல போய் தெரிஞ்ச தியரிய எழுதிட்டு வரவேண்டியது தான்.சரிடா ராமசாமி அப்படியே ஒரு பீடிய கொடுத்துட்டி போடா.

ராகவன் : ஒருவேளை பீடி குடிச்சா புரோகிராம் போடவருமாடா?

ராமசாமி(cse): டேய் லூசு எங்கிளாஸ் பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா, அவங்ககிட்டதான் நாங்க கத்துக்கிறோம்.

ராகவன் : உனக்கு யோகம், மெக்கானிக்கல்ல பொண்ணுங்க இருந்தாலாவது நாங்களும் உன்ன மாதிரி பிராக்கெட் போட கத்துப்போம்.

இடம்:தேர்வு அறை

ராகவன் கேள்விதாளை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு தெரிஞ்ச தியரியெல்லாம் எழிதிட்டாரு, பாஸ் மார்க் வாங்கனுமுன்னா ஒரு புரோக்கிராமாவது எழுதனும், அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல.கருமம் எந்தரிச்சு போகவேண்டியதுதான், ஒரு புரோகிராம் சரியா எழுதினா இந்த கருமத்தை திருப்பி எழுத வேண்டாமேடான்னு நெனச்சிட்டே பக்கத்தில் உட்காந்திருந்த கம்பியூட்டர் சயின்ஸ் ராமசாமி polyndrome program எழுதறது பாத்தாரு, ஆஹா அடிச்ச்துடா லக்குன்னு, டப்புன்னு அப்படியே காப்பி அடிச்சிட்டாரு, பாஸாகப்போற சந்தோசத்தில இருக்கும் போது அங்க வந்தாரு சூப்பரவைசர் நாகூரான்.

நாகூரான்: டேய் வேவஸ்த இல்லை அடுத்த பிராஞ்ச் காரன பாத்து காப்பி அடிக்கற என்ன எழுதறமுன்னாவது தெரியுமா.?

ராகவன்: அது வந்து இல்ல சார், ஒரே கேள்விதான் சார், அவனுக்கும் பாலிண்ட்ரோம் என்க்கும் பாலிண்ட்ரொம் அதான் சார் கண்டுக்காம விடுங்க சார் பாசயிருவேன். இந்த கம்பியூட்டர் பேப்பர்லாம் இழுத்துகிட்டு திரிய முடியாது சார்.

நாகூரான்: டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.

ராகவன்: அப்படி வேற இருக்கா? ஆனா என் புத்தகத்தில பாத்த மாதிரி பிராக்கெட்டாதானே சார் இருக்கு.

நாகூரான் : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Saturday, February 2, 2013

கதை மணிரத்தினம் கதை

கடல் படம் பின்வரும் பேட்டர்னில் வருகிறதா?

கதை 1: முதலில் பிடிக்கவில்லை, பிறகு பிடிக்கிறது, துணைக்கு ஆபத்து காப்பாற்றுகிறார்.


திரைக்கதை 1 – நாயகி கட்டாயத்தின் பேரில் ஒருவனை மணக்கிறார். பழைய நினைவுகள் மனதில் இருப்பதால் கணவனோடு ஒட்டவில்லை, டெல்லி செல்கிறார், பின்னர் கணவனை புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக லவ்வுகிறார்.இதனிடையே கணவனை குண்டர்கள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், டெல்லி பின்னனி , நேர்மை, குண்டர்கள், இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து மவுனராகம் ஆனது.


திரைக்கதை 2 – நாயகி கட்டாயத்தின் பேரில் அக்காவை பெண் பார்க்க வருபவரை மணந்து கொள்கிறார். நாயகிக்கு கணவனை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.கணவனோடு காஷ்மீர் செல்கிறார். உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். இதனிடையே கணவனை தீவிரவாதிகள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், காஷ்மீர் பின்னனி , தீவிரவாதம், தேசப்பற்று, ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து ரோஜா வானது.


திரைக்கதை 3 : இந்த படத்தையும் சற்றே மாற்றிய கதையின் மூலம் இந்த template ல் கொண்டு வரலாம். நாயகி பிடித்து திருமணம் செய்து கொள்கிறார்,பின்னர் பிடிக்காமல் போகிறது, உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். அதற்குள் விபத்தில் சிக்குகிறார்.இங்கே ஒரு மாறுதலாக கணவன், மனைவியை காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு மாற்றம் குண்டர், தீவிரவாதிகளுக்கு பதிலாக குஷ்பு,அரவிந்தசாமி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை பின்னனி , மென்பொருள், மிடில் கிளாஸ், ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து அலைபாயுதே வானது.

கதை 2: ஒரு நல்ல மனசு கொண்ட தாதா, அவர் என்ன சொன்னாலும் நிறைவேற்றும் ஒரு அடியாள் நண்பர்.

திரைக்கதை 1 : ஒரு நல்ல மனசு உள்ள தாதா நாலு பேரு நல்லா இருக்க கடத்தல் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு அடிதடி மூலம் பதில். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ஜனகராஜ் நிறைவேற்றுகிறார். இந்த தாதாவை கைது செய்ய அவரின் போலிஸ் ஆபிசர் மருமகன் நாசர் மெனக்கடுகிறார். தாதாவின் மகள் தந்தையை நினைத்து கவலைப்படுவார்.

இந்த கதை, கொஞ்சமா வசனம், பம்பாய் குடிசை வாழ்க்கை பின்னனி, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து நாயகன் ஆனது.

திரைக்கதை 2: ஒரு நல்ல மனசு உள்ள தாதா அவரின் அல்லக்கை ஒருவரையே கொண்ற ஒருவரை காப்பாற்ற, அவர் , தாதாவின் தளபதி ஆகிறார். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ரஜினி நிறைவேற்றுகிறார். தாதாவை கைது செய்ய அவரின் கலெக்டர் தம்பி அரவிந்தசாமி மெனக்கடுகிறார். தாதாவின் அம்மா மூத்த மகனை நினைத்து கவலைப்படுவார். கிளைக்கதையாக ஷோபனா, ரஜினி காதல்,ஷோபனா, அரவிந்தசாமி திருமணம் , ஷோபனா கணவன் தன் காதலால் காப்பாற்றப்படுவதை கதை 1 னோடு நீங்கள் ஒப்பிட்டால் அதற்கு குடுகுடுப்பை பொறுப்பல்ல.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை வாழ்க்கை பின்னனி, இலவச இணைப்பாக மகாபாரத உணர்வு, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து தளபதி ஆனது.

காமெடி, டூயட்,இருட்டு,வெளிச்சம் எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள், பதிவில் எல்லாம் என்னால் அதை கொண்டு வர முடியாது.

இப்படியெல்லாம் சொன்னா அப்புறம் எப்படி தான் படம் எடுக்கிறது அப்படினு எல்லாம் எங்கிட்ட கேக்கக்கூடாது.

“முடியாது,கமெண்ட் போட முடியாது” அப்படியெல்லாம் சொல்லப்படாது
டிஸ்கி1 : முதல் இரண்டு திரைக்கதையும் நான் , ஜாம்பஜாரில் வாடை பிடித்துகொண்டிருந்தபோது கிடைத்த வாடை.

டிஸ்கி2 : 5 படங்களும் எனக்கு பிடித்து இருந்தது.

Wednesday, July 25, 2012

கோபாடெக்ஸ், திராவிடன் பண்ட்.


 மிகச்சிறிய கிராமத்தில் வளர்ந்தாலும், அப்பா ஆசிரியராக பணி ஆற்றியதால் நடுத்தர விவசாய குடும்பத்தினரை விட வசதியான ஒரு பிம்பம் எங்கள் குடும்பத்தின் மேல் எப்போதும் உண்டு. அதற்கு இரண்டு காரணம் எங்கப்பாவின் ஆசிரிய வருமானம் மற்றும், நகரத்தில் பிறந்த அம்மா.

தஞ்சை மாவட்ட விவசாய குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்தாலும், நகர மக்களை போல் விரும்பிய உணவு உட்கொள்ள முடியாது, வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கும் சமைக்க வேண்டும் என்பதால் பெரும்பாலும், காலையில் பழைய சோறும், மதியம் சில நாட்களில் பருப்பு கொழம்பு அல்லது ரசமோ தான் அன்றாட விவசாய குடும்பத்தின் உணவு, அதுவும் நடவு போன்ற பெரு வேலை நாட்களில் வெறும் கஞ்சி ஆகிவிடும்.(இப்பொழுது கஞ்சி இல்லை). கிராமங்களில் உள்ள குளங்களில் மீன் பிடித்தாலோ, பாய் ஆடு வெட்டினாலோ உயர் தர கவிச்சியும் , காசு இல்லாத நிலையில் ஒரத்தநாடு சந்தையில் வாங்கிய திருக்கை கருவாட்டை ரசம் சோத்துக்கு சுட்டுதின்பதும்தான் பெரும்பாலான விவசாயிகளின்  உணவு முறை. எங்கள் வீட்டிலும் இப்படியும் உண்டு  என்றாலும், பள்ளிக்கு செல்வதால், தினமும் மதிய உணவு, புது விதமான குழம்புகளுடன் நல்ல சாப்பாடு அம்மா புண்ணியத்தால் உண்டு.மேலும் விவசாய குடும்பங்களில் சில திண்ணு கெட்ட குடும்பங்கள் இருக்கும், அவர்களோடு நாங்கள் நெருக்கமாக இருப்போம், அவர்களோடு சேர்ந்து ஆடு வாங்குவது, மீன் வாங்க ஊரனிபுரம் செல்வது போன்றவை என்னுடன்  படிப்பவர் சிலருக்கு வசதியான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது.


அப்பா அதே பகுதியில் வேலை பார்த்ததாலும், நான் அவர் பள்ளியிலேயே படித்ததாலும் ஏற்பட்ட சங்கடங்கள் நிறைய. அதிலும் பள்ளி இருக்கும் ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் குடும்பம் எங்களுக்கு உறவும் கூட. அவர் ஒரு வித நக்கல் கலந்த சோகத்தோடும் பொறாமையோடு பேசுவார். அவரின் அப்பாவோ அடிக்கடி என்னிடம் ‘நான் பள்ளிக்கூடம் கட்டி வெச்சேன், ஒங்ஙொப்பன் சம்பாதிக்கிறான்’ என்பார். பள்ளிக்கூடம் கட்டினேன் என்று அவர் சொல்வது அவர் காண்ட்ராக்ட் எடுத்து கட்டிய பள்ளி. எனக்கு அப்போதுமே கொஞ்சம் வாய்க் கொழுப்பு அதிகம்.

‘நீங்க பள்ளிக்கூடம் கட்டாட்டியும், அவர் வேற ஊர்ல வாத்தியாரா இருந்து சம்பளம் வாங்கியிருப்பார்!’ என்று பதிலடி கொடுப்பேன்.

அவர் மகனும் அவர் போலவே ஆரம்பித்தான்.

’உனக்கென்னடா! உங்கப்பா தீவாளி, பொங்கலுக்கு கோபாடெக்ஸ்ல கெவருமெண்ட் காசுல துணி வாங்கி கொடுப்பாரு’ என்பான். உண்மையில் தீபாவளிக்கு வீட்டில் கோ ஆப்டெக்ஸ் போர்வை வாங்குவோம். அதோடு சகோதரர்கள் மூவருக்கும் போர்வை மாதிரியே இன்னோரு துணி அஞ்சு மீட்டர் எடுத்து சட்டைக்கு கொடுப்பார்கள். அதையும் என் பங்காளி டெய்லர் ஆறு மாசத்துக்கு பிறகு தைத்துக் கொடுப்பார்.

அதோடு அவன் புலம்பல் நிற்காது. ‘உங்களுக்கு பணத்துக்கு என்னடா குறைச்சல்? கெவருமெண்டு திராவிடன் ஃபண்டுல பணம் போட்டு வைக்கிறான். அடிச்சி மொழக்குவீங்கன்னு சொல்லுவான்.

இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அப்பாவால் எங்களைப் படிக்க வைத்திருக்க முடியாது. அவரின் ப்ராவிடன்ட் ஃபண்ட் கடன், நிலங்களை விற்றகாசோடு சம்பளமும் கொஞ்சம் உதவி இருக்கிறது.

விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருக்கிற அத்தனை குடும்பங்களும் இன்று மேலும் நலிவடைந்து இருக்கிறது.கிராமங்களில் இன்னும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலம் கண்டிப்பாக ஒரு வறட்சி தன்மையை எதிர் நோக்கியிருக்கிறது. வறுமை பல நேரம் போராட்ட குணத்தை கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும், ஆனால் கிடைக்கும் இலவச அரிசிக்கும் நூறு நாள் வேலைக்கும்,சாராயத்துக்கும் அடிமையாகி ஒட்டு உரிமை கொண்ட ஜனநாயக அடிமைகள் ஆகும் வாய்ப்பும் கண்ணுக்கு தெரிகிறது.

Tuesday, July 17, 2012

தஞ்சைக்கள்ளர் - முதலியார்கள்.


முதலியார்களில் பலவகை சாதி முதலியார்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் மட்டும் வாழும் தஞ்சைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த முதலியார்களைப் பற்றி எனக்கு வாய் வழியாக கிடைத்த தகவல்களை பகிர்கிறேன். 

முதலிப்பட்டி எனும் கிராமம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்,பழைய புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம், தற்போது முதலிப்பட்டி எனும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், அதனைச்சார்ந்த அவிச்சிக்கோன்பட்டி எனும் ஊர் தஞ்சை மாவட்டத்திலும் இருக்கிறது, முன்பு ஒன்றாக இருந்திருக்கவேண்டும்,இன்றும் இதன் ஊரின் எல்லை வீடுகளின் கொள்ளைப்புறம்தான். இந்தப்பெயரில் இருக்கும் முதலி மற்றும் கோனில் வரலாறு இருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டிற்கு முன் அல்லது சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முதலிப்பட்டி எனும் கிராமம், தற்போது இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மஹாராஜா சமுத்திரம் எனும் காட்டாற்றின் கரையில் இருந்திருக்கிறது, இன்னும் கிட்டத்தட்ட  ஐநூறாண்டு பழைய சிவன் கோவிலும், பொன்னிநதியின் பெயர் கொண்ட சாமியாகிய பொன்னியம்ம்மன் கோவிலும் இடிபாடுகளுடன் உள்ளது. இங்கு வாழ்ந்தவர்கள்தான் இந்தப்பதிவில் வரும் முதலியார்கள்.இன்றும் பொன்னியம்மன் கோவிலுக்கு காணும் பொங்கல் அன்று செல்வார்கள், சில காலம் முன் வரை பொன்னியம்மனுக்கு படையல் எல்லாம் செய்திருக்கிறார்கள், சிதிலமடைந்த சிவன் கோவிலில் பெரும்பாலும் யாரும் வழிபடுவதில்லை.

காட்டாற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு உயிரிழப்புகளும்,கால்நடை இழப்புகளும் ஏற்பட்டதால், மிச்சமிருந்தவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனார்கள் சிலர் வசித்த மேடான இடத்திற்கு குடியேறியிருக்கிறார்கள் முதலியார்கள், மேலும் சில குழுக்கள் இடம்பெயர்ந்து பட்டுக்கோட்டை பகுதி நோக்கி சென்றுள்ளனர், இவர்களின் தற்போதைய கிராமம் திருநல்லூர், கிளாமங்களம், கரம்பயம் ஆகியவை, கிளாமங்களம் குஞ்சான் தெருவில் இன்றைய முதலிப்பட்டியில் அன்று இருந்த கோனார்கள் குடியேறி இருக்கிறார்களாம், குஞ்சான் தெருவில் உள்ளவர்கள் இன்றைக்கும் முதலிப்பட்டி கிராமத்தினருக்கு தங்கள் இருப்பிடத்தில் இருந்து விரட்டி விட்டதால் குடிக்க தண்ணீர் கொடுக்கமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் முதலிப்பட்டியில் இருந்து செல்பவர்களிடம் எங்களுடைய பூர்வீகம் முதலிப்பட்டி என்று பொன்னாப்பூர், திருநல்லூர் பகுதி முதலியார்கள் சொல்வது கேள்விப்பட்டிருக்கிறேன்.

மன்னார்குடி பகுதி நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் பொன்னாப்பூர்,மூவரக்கோட்டை,பெருகவாழ்ந்தானிலும்,தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள குளிச்சப்பட்டு, கருப்பமுதலியார்கோட்டை போன்ற கிராமங்களிலும், ஊருக்கு அருகே இடம் பெயர்ந்தவர்கள் ஈச்சங்கோட்டை மற்றும் குருங்குளம் பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

தஞ்சைப்பகுதியில் இருப்பவர்கள் ,அதுவும் தஞ்சைக்கள்ளர் சாதியை சார்ந்தவர்களுக்கே பலருக்கு முதலியார் என்ற பட்டம் இருப்பது தெரியாது, என்னுடைய முந்திய பதிவின் மூலம் இவர்கள் பற்றி யாருக்கும் தெரியுமா என்று அறிய முயன்றேன்,எதிர்பார்த்தது போல் யாருக்கும் தெரியவில்லை.

இன்றைய அவிச்சிக்கோன்பட்டியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் செட்டியார்கள்,ஒரே ஒரு கோனார் குடும்பம்தான் உள்ளது.  முதலியார்கள் நகரமயமாக்கப்பட்ட சூழலில் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நாளைய முதலிப்பட்டியில் வேறு யாரோ இருக்கலாம்.

நாடோடி இலக்கியன் எழுதிய பதிவினை காணவில்லை, கிடைத்தவுடன் இணைப்பு தருகிறேன்.

Monday, July 16, 2012

தஞ்சை மாவட்ட முதலியார்கள், ஆனால் முதலியார் ஜாதி அல்லாதவர்கள்.


தஞ்சை மாவட்ட முதலியார்கள், ஆனால் முதலியார் ஜாதி அல்லாதவர்கள்,தஞ்சை குருங்குலம், சுந்தராம்பட்டி, குளிச்சப்பட்டு, வாகரைகோட்டை,ஒரத்தநாடு ஈச்சங்கோட்டை, மன்னார்குடி மூவரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், கீழ்க்கரம்பையம், நீடாமங்கலம்,திருவரங்கநல்லூர், பட்டுக்கோட்டை கிளாமங்கலம், பொன்னாப்பூர், திருநல்லூர் ,ஒரத்தநாடு முதலிப்பட்டி என்னும் ஊரில் வாழும் முதலியார்கள் யார்?

அம்மாப்பேட்டை கருப்பமுதலியார் கோட்டையிலும் வசிக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

இவர்களுக்கும் செங்குந்த முதலியார், ஆற்காடு முதலியார் மற்றைய முதலியார் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்களை பற்றிய பதிவு ஒன்று விரைவில் எனக்கு வாய் வழியாக தெரிந்த செய்தியினை வைத்து எழுதப்போகிறேன், மேற்கண்ட ஊர்களில் வசிக்கும் நபர்கள் யாரும் இருந்தால் kudukuduppai@gmail.com தொடர்பு கொண்டு அவர்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

சில ஊர்களின் தகவல்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.

Thursday, June 7, 2012

உலகமயமாக்கலில் ஓரங்கட்டப்பட்ட சாதிகள்.



தலைப்பின் படி இது உலகமயமாக்கலின் சாதிகள் ஒழிந்துவிட்டதாக வெற்றுக்கோஷம் பேசும் பதிவு அல்ல,உலகமயமாக்கப்பட்ட இந்த சூழலில் தங்களை புதுப்பித்துக்கொள்ளாத/ வாய்ப்பளிக்கப்படாத சாதிகளைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையை என்னுடைய அனுபவம்,நான் சார்ந்த பகுதியில் உள்ள சாதிகளை வைத்து என்னுடைய கருத்து, இதில் கருத்துப்பிழைகள் தவறுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம், ஆனாலும் இதனை ஒரு விவாதப்பொருளாக்க விரும்புகிறேன்.


தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டத்தை களமாக வைத்து எழுதுகிறேன்.நான் எடுத்துக்கொள்ளப்போகும் சாதிகள், முத்தரையர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான கள்ளர்கள். இந்த மூன்று சாதியினரும் பெரும்பாலும் தஞ்சை, மற்றும் புதுக்கோட்டை கிராமப்பகுதிகளில் வசிப்பவர்கள். இவர்களது ஆதாரத் தொழில் விவசாயம் மட்டுமே. அன்றைய சாதிய மற்றும் வசதிப்படிநிலைகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் கள்ளர்கள் நில உடைமைக்காரர்களாககவும், முத்தரையர் மற்றும் தாழ்த்தபட்டவர்கள் விவசாயக்கூலிகளாகவும் பெரும்பாலும் இருந்தனர், முத்தரையர்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் நிலஉடைமக்காரர்களே,விவசாய நிலஉடைமைக்காரர்களை குடியானவர்கள் என்று அழைக்கும் பழக்கம் இன்றும் உண்டு, ஆலங்குடி பகுதியில் இன்றும் முத்தரையர்களை குடியானவர்கள் என்றே அழைக்கிறார்கள்.பழங்கதைகளில் கடைசியாக விவசாயம் கொழித்தபோது நிலஉடைமைக்காரர்களும் சரி அதனை நம்பி இருந்த விவசாயக்கூலிகளும் வாழ்க்கையை நன்றாகவே வாழ்ந்து வந்தனர். (சாதியக்கொடுமைகளை இங்கே பேசவில்லை). விவசாயம் இன்றைக்கு மற்றைய உலக முன்னேற்றத்திற்காக அமுக்கப்பட்ட தொழில், உணவுப்பொருள் உற்பத்தி செய்பவனுக்கு உழைப்பு இழப்பு மட்டுமே மிச்சம் என்ற நிலையில் இவர்களுக்கு வேறு தொழில் தெரியாததால் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இந்த மூன்று சாதியினருக்கும் வியாபாரம் எட்டாத கலை, எனக்குத் தெரிந்து இவர்கள் மளிகைக்கடை கூட வைப்பதில்லை, தலித்துக்கள் நினைத்தாலும் வைக்கமுடியாத அளவு ஆதிக்க கள்ளர் சாதியினரே அனுமதிக்க மாட்டார்கள்.பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு சாமான் வாங்க /சினிமா பார்க்க சென்றே பழக்கப்பட்ட இவர்களுக்கு, நகரமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நகரங்களில் ஒரு சிலரைத்தவிர இடமோ/வீடோ இருக்காது.தஞ்சை நகரில் இருக்கும் நிலங்களை கள் குடிப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னரே விற்றுவிட்டனர்.:)

இன்றைய ரியல் எஸ்டேட் மதிப்பில் நகரத்தின் மதிப்பு விளைநிலங்களில் இல்லை.நகரத்திற்கு அருகில் விளைநிலம் வைத்திருந்தவர்களும் அதனை குறைந்த விலைக்கு ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்று குடித்திருப்பார்கள்.கிராமங்களில் மிச்சமுள்ள விளைநிலங்களுக்கு மதிப்பும் கிடையாது, அந்த மதிப்பில்லாத நிலத்தை வாங்க/விற்க கூட இவர்களிடம் பொருளாதாரம் கிடையாது, ஒரு சில வட்டிக்கடைகாரர்கள், பண்ணைநிலம் தேடும் வெளியூர்க்காரர்களிடம் விற்றுவிட்டு வாழ்க்கையை ஓட்டுபவர்களும் உண்டு.

முத்தரையர் சமுதாயத்தை எடுத்துக்கொண்டால், ஆலங்குடி பகுதி தவிர இவர்கள் பெரும்பாலும் நாடோடி உல்லாச வாழ்க்கை வாழும் கிராமவாசிகள், இன்றைக்கும் இவர்கள் கூலி வேலை செய்து அன்றைக்கே செலவு செய்துவிட்டு,கிராமங்களிலேயே குடி இருப்பவர்கள், எம்ஜியார் படம் வந்தால் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்ப்பார்கள்.படிப்புக்கும் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்.வருங்காலத்தில் கிராமத்தை ஆள வாய்ப்புண்டு, ஆனால் என்ன இருக்கும் ஆள்வதற்கு என்பதுதான் கேள்விக்குறி.ஆலங்குடி.பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் பெருமளவில் வசித்தாலும் இவர்களுக்கும் பணம் சம்பாதிக்கும்/ பொருளாதார முன்னேற்றம் அடையும் எந்தக்கலையும் தெரியாது.நகரங்களில் எந்த ஒரு வியாபாரமும் இவர்கள் செய்ய வாய்ப்பில்லை, நினைத்தாலும் முடியாத அளவிற்கே லாபி இருக்கும்.

புதுக்கோட்டை கள்ளர்களால் ஆளப்பட்ட தனி சமஸ்தானம் ஆனால் இன்றைக்கு புதுக்கோட்டை நகரில் அவர்களுக்கு சொந்தமாக இடம் இருக்குமா என்றால் இருக்காது, பெருமைக்காக வியாபாரிகளிடம் விற்றுவிட்டு குடித்து ஓட்டாண்டிகளாகத்தான் இருப்பார்கள். ஆலங்குடி நகரில் தலித்துக்களிடம் தங்களுடைய ஆதிக்கத்தை காட்டும் கள்ளர்களுக்கு வியாபாரம் செய்ய வாடகைக்கு கூட கடை கொடுக்கமாட்டார்கள் இதுதான் இவர்கள் நிலை, தங்களுடைய பொருளாதார நிலை தெரியாமல் ஜாதி ஜம்பம் பேசுவதில் எந்தக்குறையும் இன்றும் இருக்காது.

வட்டித்தொழில் நடத்தும் சிலர் உண்டு, சிலர் நேரடியாக நடத்துவார்கள் பலர் வட்டித்தொழில் நடத்தும் வியாபாரிகளிடம் அடியாட்களாக இருப்பார்கள்,வேற்று சமூகத்துக்காரன் கேட்டால் பணம் திரும்பக்கிடைக்காது அதனால் அடியாட்கள் வேலை இவர்களுக்கு கண்டிப்பாக உண்டு:)

தலித்துகளின் நிலை இட ஒதுக்கீட்டில் படித்த ஒரு சில குடும்பங்கள் வெளியேறி மீண்டும் அவர்களே இட ஒதுக்கீட்டை அனுபவித்து தப்பிக்கிறார்கள் மற்றபடி,தனக்கே ஒன்றுமில்லை என்று அறியாத ஆதிக்க சாதியினர்,நலிந்து போன விவசாயக்கூலிகளாக இருந்து, தங்களை ஆதிக்கம் செய்யும் ஆதிக்க சாதியினருக்கே திறக்கப்படாத லாபியைத்தாண்டி இவர்கள் மேலே எங்கே வருவது.?

இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்குவதால் இலவச அரிசிக்கும்/வேட்டிக்கும் அலையும், ஜனநாயகத்தை காப்பாற்றப்பயன்படும் வாக்காளர்கள் மட்டும் ஆகிப்போவார்கள் என்பதுதான் யதார்த்தம்.