Monday, February 13, 2012

கல்லூரி சாலை : முதல் நாள் கல்லூரிக்கு சாலையில்.

முதல் நாள் கல்லூரி செல்ல பெற்றோருடன் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஏர்வாடி செல்லும் அரசுப்பேருந்தில் பயணம் செய்தோம். பஸ்ஸில் நிற்க இடமில்லாத அளவிற்கு கூட்டம். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது பிஸ்தா ஐஸ்கிரீம் கலரில் சட்டையும், வெள்ளைக்கட்டம் போட்ட கைலியுமாக என்னைவிட மெலிந்த தேகத்தில் ஒருவன், நாங்கள் பேசிக்கொண்டிருந்தை ஒட்டுக்கேட்டு, கீழக்கரை காலேஜ் போறீங்களான்னான்,ஆமாம் என்றேன்.

பேசிக்கொண்டேயிருக்கையில் மண்வாசனை கருவாட்டு வாசனையாக மாறி வந்ததும், அதிராம்பட்டிணம் வந்துவிட்டோம் என்று புரிந்தது, பயங்கரமா ஸ்மெல் அடிக்குதுன்ன்னான், ராம்நாடு வரைக்கும் அப்படித்தான் அடிக்கும்னு சக பயணி ஒருவர் தைரியம் ஊட்டினார். ஒருத்தன் கிடைச்ச மகிழ்ச்சில அவனும் நானும் பேசிக்கொண்டே வந்தோம், அவன் மன்னார்குடி நேசனல் ஸ்கூலில் படித்ததாக சொன்னான், சொந்த ஊர் கூத்தாநல்லூர் பக்கம் தண்ணீர்குன்னம் என்று தண்ணி அடித்துவிட்டு மூக்கால் பேசுபவன் போல பதில் சொன்னான். ஆளு சின்னமா இருந்தாலும் விவரமாத்தான் பேசினான்.

உங்கூட வருவது யார் என்றேன், அப்பா இறந்துட்டாங்க, மாமாதான் வறாங்க என்றான், இந்தக்காலேஜ் பத்தி முன்னாடியே உங்களுக்கு தெரியுமான்னேன், கூத்தாநல்லூர்லேந்து நிறைய சீனியர்ஸ் இருக்காங்க, காலேஜ் ரொம்ப நல்ல காலேஜ், பயங்கர ஸ்டிரிக்ட் அப்படின்னு மூக்காலேயே சொன்னான். +2 படிக்கும்போது கொஞ்சம் மலையாளப்படம் பாத்ததுனால இவன் பேசறத புரிஞ்சிக்கிறது அவ்வளவு சிரமமா இல்லை.பஸ் மணமேல்குடி வந்து சேந்திருந்தது, கிட்டத்தட்ட பாதி பஸ் காலி ஆகிவிட்டிருந்தது. டீக்குடிக்கிறவங்க இறங்கி குடிக்கலாம்னு கண்டக்டர் அறிவிப்பு விடுத்தார்.

பேருக்கு ஏத்த மாதிரி தார் ரோடு கூட தெரியாம மணல்தான் இருந்தது,பத்து நிமிடத்தில் பஸ் மீண்டும் புறப்பட்டது, இப்போது பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தது, ஒரு இருக்கையில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டே வந்தோம், சரி காலேஜ்ல ராகிங் எல்லாம் இருக்குமே, இவனுக்கு தெரிஞ்ச சீனியருங்க இருக்காங்க தப்பிச்சிக்குவான், நமக்கு அப்படி யாரும் கிடையாதே என்ற பயத்தில் அவனிடம் அது பற்றி பேசநினைத்தேன்.

பஸ் தூக்கிப்போட்டதில் இருவரும் இருக்கையில் இருந்து நிலைகுலைந்தோம், டிரைவர் எதையும் கண்டுகொள்ளாமல் ஓட்டிக்கொண்டிருந்தார். என்ன இப்படி இருக்கு ரோடு என்று இருவரும் சலித்துக்கொண்டோம்.

காலேஜ்ல ராகிங்லாம் இருக்குமா? கேள்விப்பட்டிருக்கீங்களா?

இருக்கும்,ஆனால் நீங்க ஹாஸ்டல்தானேன்னான், ஆமாம் என்றேன்

ஹாஸ்டல் ஸ்டூடன்ஸூக்கு கைடு சிஸ்டம் உண்டுன்னான்.

கைடு சிஸ்டம்னா என்னான்னு புரியலை, கொஞ்சம் யோசிச்சு கேட்டேன், இல்லை ஹாஸ்டல்லேருந்து,கிளாஸ் வரைக்கும் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ஸ தனியா பாதுகாப்போட கிளாஸ் ரூம்ல கொண்டு வந்து விட்டுருவாங்கன்னான்.

நேரமும் நல்லிரவு நெருங்கி விட்டிருந்தது, திடீரென கருவாட்டு நாத்தம் கடுமையாக அடித்தது, ஜெகதாப்பட்டினம் என்ற ஊர் நெடுஞ்சாலைத்துறை போர்டு மூலம் தெரிந்துகொண்டேன், இந்த ஊர்ல ஈ விழாம டீ குடிக்கறது ரொம்ப கஷ்டம், கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லாதது. பல தூக்கிபோடலுக்குப் பிறகு, ராமர் இந்த வழியா போகும் போது இளைப்பாறியதாக சொல்லப்படும் உப்பூர், தொண்டி, தேவிப்பட்டிணம் கடந்து இரமாநாதபுரம் அடைந்தோம். இப்பொழுது இந்த சாலை நன்றாக இருக்கிறதாம்.

இராமநாதபுரத்தில் தெரிந்தவர் வீட்டிற்கு நாங்கள் சென்றுவிட, நண்பன் ஏர்வாடி பஸ்ஸில், ஏர்வாடிக்கு சற்று முன்னதாக இருக்கும் எங்கள் கல்லூரிக்கு சென்றுவிட்டான்.

அடுத்த நாள், பெற்றோர்களுக்கு ஒரு லைட் ரெப்ரெஷ்மெண்டோட மாணவர்களுக்கு லஞ்ச் மெஸ்ஸில் என்று அறிவிப்பு பலகை ஆங்கிலத்தில் இருந்தது, லஞ்ச் சாப்பிடும் போது புரிந்தது என்ன மாதிரி உணவை உண்ணப்போகிறோம் என்று, எங்கப்பா என்னடா கருமாதில கூட நல்ல சாப்பாடு போடுவாங்களேடா என்று சலித்துக்கொண்டார்.

முதலாண்டு மாணவர்களை பிஸ்தா ஐஸ்கிரிம் சட்டைக்காரன் சொன்னது போலவே கைடு சிஸ்டத்தோட வரிசைல நிக்கவெச்சி, முன்னாடி ஒரு ஆள் பின்னாடி ஒரு ஆள் காவலுக்கு வெச்சி கூட்டிட்டு போனாங்க, பயந்துகொண்டே கிளாஸூக்கு போனோம்.

தண்ணீர்குன்னத்துக்காரனும் என்னோட கிளாஸ்தான், எல்லோர்கிட்டயும் ஊர் பேர் கேட்கும்போது, ஒருத்தன் ஒக்கூர், இன்னொருத்தன் ஏம்பன்னதும் எல்லாரும் கொல்லுனு சிரிச்சாய்ங்க, தண்ணீர்குன்னத்துக்காரன், கூத்தாநல்லூர்னு சொன்னான், நானும் தஞ்சாவூர்னு சொல்லி சிரிப்பொலிலேந்து தப்பிச்சிட்டேன்.

சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் காலத்தில் ஒருநாள் போன் பண்ணினான், பயோடேட்டா எடுத்து வந்திருக்கேன் கொடுக்கனும்னான், எனக்கு பனியாரம் கொண்டு வந்திருக்கேன் கொடுக்கனும்னு காதுல விழுந்துச்சு.பனியாரம் ஊசிப்போயிருமே அதைப்போய் எதுக்கு எடுத்துட்டு வந்திருக்கான்னு நினைச்சிக்கிட்டே பாக்கப்போனேன், அப்பதான் புரிஞ்சது அவன் சொன்னது பயோடேட்டா பனியாரம் இல்லைன்னு. வட இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பான்னு சுத்திட்டு இப்போ சவுதி அரேபியாவில் ஐடில நல்ல பொறுப்பில் இருக்கிறான்.

பதிவு எழுத மீண்டும் நான் முயற்சி செய்யும் இந்த நேரத்தில் நய்னா அப்படின்னு ஒரு புது பாலோயர் அவனா இருக்குமோன்ன்னு ஒரு டவுட்டு, அதையே வெச்சு ஒரு பதிவு தேத்தியாச்சு.

Friday, February 10, 2012

தமிழகப்பயணம் -3 தங்கராசன் என்ற நட்பு.

தங்கராசன் என்னுடன் ஆறாம் வகுப்பில் ஒன்றாக படிக்க வந்தவன், மார்க் எடுக்கும் படிப்பில் கொஞ்சம் கூட தேறாதவன், ஆனாலும் பெரிதும் பெயில் போடாத அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை தப்பி வந்தவன். ஒன்பதாம் வகுப்பு வரையில் என்னுடன் அவனுக்கு அவ்வளவு பழக்கமும் இல்லை, ஒன்பதாம் வகுப்பில் ஒரே டெஸ்க்கில் உட்கார்ந்தோம், அதன் மூலம் டெஸ்க்மேட் என்ற வகையில் சில நாட்கள் பழக்கம்.

என்னுடைய தந்தை ஆறாம் வகுப்பிற்கு அவ்வப்போது வந்து நீதிபோதனை என்ற வகுப்பில் ஆங்கிலம் நடத்திவிட்டு செல்வார், ஆனால் முதன்முதலாக எனக்கு ஒரு பாட ஆசிரியராக அறிமுகமானது ஒன்பதாம் வகுப்பில்,வரலாற்று ஆசிரியராக.

ஒருநாள் தங்கராசனிடம் எந்த ஊர் என்று கேட்டார், ஊரைச்சொன்னவுடன் கருப்பையன்னு ஒருத்தன் என்கிட்ட படிச்சான் என்று சொல்லிமுடிக்குமுன், அவரின் தம்பிதான் நான் என்றான் தங்கராசன். கருப்பையன் இந்த பள்ளி கண்ட மிகச்சிறந்த மாணவன், வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பில் பாதியோடு சென்றவர், அவரின் தம்பியான நீ மக்கு மாணவனாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஒழுங்காக படி என்று கூறியதோடு சமீபகால வரலாறு முடித்து பானிபட் போருக்குள் சென்று விட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக தங்கராசன் என்னிடம் ஒட்டிப்பழக ஆரம்பித்தான், அவனுக்குள்ளே இருந்த அவன் அண்ணன் கருப்பையன் வெளிப்பட அவனுடைய திறமையும் வெளிப்பட்டது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது தங்கராசன் நிறையநாள் எங்கள் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தான், எனக்கும் அவனுக்கும் நட்பு என்பதில் எங்களையும் மீறி ஒரு வர்க்க இடைவெளி இருந்தது என்பதும் உண்மை, எங்களுக்குள்ளான ஒற்றுமையில் முக்கியமானது தேர்வுக்காக படிப்பது பிடிக்காதது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது கூட தங்கராசன் எங்கிருந்தோ கொண்டு வரும் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் கதையில் டெக்ஸாஸில் அலெக்ஸ் மாடு மேய்த்த கதையை, பத்தாய சந்தில் படித்தது நினைவு வருகிறது.பத்தாம் வகுப்பில் நான் முதலிடமும் அவன் இரண்டாமிடமும் எடுத்தோம்.

வேறு வேறு பள்ளி சென்றோம் இயல்பான பிரிவு, தங்கராசன் பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு படிக்காமல் பல தவறான செயல்களில் ஈடுபட்டு வறுமையின் பிடியில் சிக்கி, சிறிது காலம் காமராஜரால் கத்துக்கொடுக்கப்படாத குலத்தொழில் தானே கற்று பிழைப்பு நடத்தினான். பின்னர் அவன் ஊரை விட்டு பிழைப்பு தேடி எங்கேயோ சென்றுவிட்டான், நானும் என் குழந்தைகளை அமெரிக்க அதிபாராக்கும் நோக்கில் அமெரிக்கா வந்துவிட்டேன்.

கடந்த ஆண்டு முதல் என் தந்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறான், நானும் சென்ற ஆண்டு ஊர் சென்றபோது அழைப்பு விடுக்க நான் வந்திருப்பது தெரிந்து என்னுடன் தொலை பேசினான், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருப்பதாக கூறினான், கண்டிப்பாக உன்னைப் பார்க்கவேண்டும், நான் தஞ்சை வருகிறேன் என்றான், உன்னுடைய வேலையை விட்டு என்னைப்பார்க்க வராதே என்றேன், சனிக்கிழமை ஓய்வு நாள் வருகிறேன்.

ஒரு சனிக்கிழமை மதிய உணவிற்கு ஒட்டன்சத்திரத்திலிருந்து எனக்காக வந்திருந்தான், நிறைய பேசினோம் என்னுடைய நட்பை எந்த அளவிற்கு நேசித்திருக்கிறான் என்பதை தான் தோன்றியான எனக்கு புரியவைத்தான், இதய நலம் குன்றிய ஒரு பெண்ணை மணந்து ஒரு மகனோடு நிறுத்திக்கொண்டுள்ளான், ஒட்டன்சத்திரம் சந்தையில் கூலி ஆளாக வேலைக்கு சேர்ந்து, எந்தவித சாதிய பின்னணியும் இல்லாமல் இன்றைக்கு ஒட்டன்சத்திரம் சந்தையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் அளவுக்கு வியாபாரம் செய்யும் மண்டி வைத்திருக்கிறான். செத்துப்போன அண்ணன் கருப்பையனின் குழந்தைகளுக்கும் உதவிக்கொண்டிருக்கிறான்.

என் தந்தையின் பங்கும் என் நட்பின் பங்கும்(?) அவனுடைய முன்னேற்றத்தில் இருப்பதாக உறுதியாக கூறினான், அவன் மனைவியிடம் நண்பன் என்று கூறும் ஒரே நபர் நான் என்ற அளவில் நான் அவனுக்கு நட்பு, எனக்கு தங்கராசன் நினைவில் வந்தாலும் நான் அப்படி அல்ல, எப்போதும் போல தான் தோன்றியே. சமீபத்திய முல்லைப்பெரியாறு பிரச்சினையின் போது இவனுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற ஆதங்கப்பட்டபோது எனக்கும் அவன் மீது நல்ல நட்பு இருப்பது புரிந்தது.மீண்டும் தமிழகம் செல்லும்போது பார்க்கவேண்டிய நண்பன்.

Thursday, February 9, 2012

தமிழகப்பயணம் -2 : மாரியம்மன் கோவில்கள்.

தஞ்சைப்பகுதியில் மாரியம்மன் கோவில் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே, மகனுக்கு முடி எடுக்க தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன், சென்னை ரயில் நிலையத்தில் என்னைத்தேடி வந்து பார்த்து பேசிய பதிவர் அப்துல்லா யதார்த்தமாக கேட்டார், பையனுக்கு குல தெய்வத்துக்கு முடி எடுக்கிறீர்களா என்று, நான் எங்கள் குல தெய்வ வழிபாடு/மொட்டை அதற்கு மொட்டை அடிக்கும் பழக்கமெல்லாம் இப்போது வழக்கில் இல்லை, திராவிடர் கழக சிந்தனைகளில் மறக்கப்பட்டிருக்கலாம் என்றேன்

எங்கள் குல தெய்வத்தின் பெயர் ஆதியத்தம்மன்(ஆதியற்ற அம்மன்), பொதுவாக மாட்டுப்பொங்கல் அன்று பழங்கள் வைத்து இந்த சாமிக்கு வீட்டிலேயே படைப்பார்கள், பெரிதாக யாரும் எடுத்துச்செய்வதில்லை, எங்கள் பங்காளிகள் பலர் தற்போது எடுத்துச்செய்யவேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர், ஆதி என்ற பெயரும் சேர்த்து பெயரிடுகின்றனர்.

புன்னைநல்லூருக்கு பதிலாக கிராமியப்பொருளாதாரம் மற்றும் எங்கள் ஊர் போன்றவை கருத்தில் கொண்டு, எங்கள் பகுதியான பாப்பாபட்டி மாரியம்மன் கோவிலில் முடி இறக்க முடிவு செய்தேன்,குறிப்பிட்ட ஒரு நாளில் மைத்துனர் குடும்பம் சென்னையிலிருந்து வந்திருந்தனர்,பாப்பாபட்டி எங்கள் கிராமத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வானம் பார்த்த பூமி, கல்லணைக்கால்வாயின் வடிகால் உளவாய் என்று பெயர்,அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரில் அவ்வூரின் சிறுபகுதி பலனடையும். ஒரு காலத்தில் பெரிய சந்தை இருந்த ஊர், இப்பொழுது ஒரு பப்ளிக் ஹெல்த் சென்டர் உள்ளது, மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் வருமானமில்லாத ஏழைகளை மட்டுமே உள்ளடக்கிய ஊர். இந்த ஊரில் உள்ள கடையில் இரண்டு தோசை ஒரு டீ பத்து ரூபாய்தான், நான்கு கிலோ மீட்டர் தள்ளி உள்ள தஞ்சைப்பகுதி கிராமத்தில் ஒரு தோசை மட்டும் பத்து ரூபாய்.

மொட்டை போட சென்ற அன்று கோவில் பூட்டி இருந்தது, எதிரே இருந்த அய்யர் வீட்டில் சாவி இருக்கும் , அங்கே சென்று கேட்டேன் அய்யர் திருமண நாளுக்காக திருச்சி சென்று விட்டார், அவரையும் குறை கூற முடியாது ஒரு காலத்தில் வருமானம் அதிகம் தந்த கோவில் இன்றைக்கு இந்த கோவிலை நம்பி அவர் ஒன்றும் சம்பாதிக்கமுடியாது, நாட்டார் தெய்வமான மாரியம்மனுக்கு எதற்கு சமஸ்கிரத பூஜை என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, ஜெமோவின் மாடன் படித்தபின் கொஞ்சம் புரியவும் செய்தது.

அய்யர் வீட்டில் கோவில் சாவி கொடுங்கள் என்றேன், அவர் தந்தையிடம் போன் செய்துவிட்டு, வந்திருப்பது எங்கள் குடும்பம் என்று தெரிந்தவுடன் , அவரது மகளையே திறக்கச்சொல்லி பூஜையும் செய்யச்சொல்லிவிட்டார்.

மொட்டை அடித்து முடிக்கும் வரை அழுது தீர்த்துவிட்டான், மொட்டை முடிந்தவுடன் சாப்பாட்டிற்காக தஞ்சை தேவர்ஸ் பிரியாணிக்கு வந்தோம், ஒரு மணி நேரம் காத்திருக்க சொன்னார்கள், பசி தாங்காது என்பதால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு அசைவ உணவகத்தில் சாப்பிட்டோம், காடை, மட்டன் கறி, மீன் வருவல் எல்லாமே சுவை அமிர்தம்.

பின்னொரு நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றோம், நிறைய கூட்டம் , ஸ்பெஷல் வழியில் கூப்பிட்டு செல்கிறோம் என்று பணம் பறிக்க சிலர், சமயபுரத்திலும் அய்யர்களையே காணமுடிந்தது, ஏன் கிராமப்பூசாரிகளை இங்கே அனுமதிக்ககூடாது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது, சமயபுரம் கோவிலின் வருமானம் கண்டிப்பாக அதிகமாக இருக்கும், அதற்கு ஏற்றார்போல் அதன் வெளிப்புறங்களில் சுகாதாரம் பேணப்படவில்லை.இந்து சமய அறநிலையத்துறை அரசிடம் இல்லாமல் இருந்தால் ஒருவேளை சுத்தமாக இருக்க வாய்ப்பு அதிகம்.

சாமி கும்பிட்டுவிட்டு (என்னுடைய பக்திமேல் எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை), கோவில் அருகே ஒரு உணவகத்தில் காலை சாப்பாடு, தமிழகத்தில் இம்முறை இங்கே குடித்த காபிதான் சூப்பர், ஒரு அதிமுக அரசியல்வாதியும் அவருடைய பரிவாரங்களோடு அங்கே சாப்பிட்டார், அவரும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தோம்.

சமயபுரத்தில் இருந்து புன்னைநல்லூர், சுங்கச்சாலையில் வெகு விரைவாக வந்தடைந்தோம், புன்னைநல்லூரில் மாரியம்மன், மற்றும் குழந்தைகளுக்காக ஒரு அம்மனை வணங்கிவிட்டு, மாரியம்மன் கோவில் முறுக்கு கொஞ்சம் வாங்கிக்கொண்டு தஞ்சை வீட்டிற்கு திரும்பினோம்.

டைரி மாதிரி இருக்கிறது....:))))))

தமிழகப்பயண அனுபவம் - 1

கடந்த ஜூன் மாதம் தமிழகப்பயணம் செய்தது பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஆர்வக்குறைவால் எழுதமுடியவில்லை, டெக்ஸாஸில் மகளின் பள்ளிக்கு விடுமுறை ஜூன் முதல் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை என்பதால், தமிழகத்திற்கு விடுமுறைக்கு பெரும்பாலும் ஜூனில்தான் வரமுடியும்.இந்த ஆண்டு மகனின் பிறந்தநாளை எனது சொந்த கிராமத்தில் கொண்டாடவும் முடிவெடுத்திருந்தோம், மிகுந்த உற்சாகத்துடன் கிளம்பி சென்னை வந்து, ஒரு பகல் மட்டும் மைத்துனர் வீட்டில் தங்கிவிட்டு, அன்று மாலையே திருச்சிக்கு விமானம் மூலம் சென்றடைந்தேன், திருச்சியிலிருந்து சொந்த ஊருக்கு ஒன்னரை மணி நேரத்தில் சென்று விடலாம்.

திருச்சி வழியே செல்லும்போதெல்லாம் ஒரு உணவகத்தில் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன், அதே இடத்தில் இப்பொழுதும் இரவு டிபன் இரண்டு மூன்று நெய் தோசைகளை சாப்பிட்டுவிட்டு, ஊர் நோக்கிய பயணம், திருவெறும்பூர் தாண்டியதும், திருச்சி, தஞ்சை நான்கு வழி சுங்கப்பாதை அசத்தலாக இருந்ததால் வல்லத்திற்கு இருபது நிமிட நேரத்தில் வந்தடைந்தோம், அதற்குபின்னர் தஞ்சை செல்லாமல் எங்கள் கிராமத்திற்கு அரை மணி நேரம், தஞ்சையில் படிக்கும்போது பயணம் செய்த அதே கல்லணைக்கால்வாய் கரை ஒற்றைப்பாதை, இப்பொழுது எனக்கு மிகவும் குறுகலாக தெரிந்தது(அமெரிக்க என் ஆர் ஐ வியாதி). ஒரு வழியாக 2002க்கு பிறகு எனது உடல்நலன் காரணமாக ஊருக்கு செல்லாமல் இருந்ததை முறித்து சொந்த கிராமத்தில் அடி எடுத்து வைத்தேன்.

என் வீடு எனக்கு சிறியதாக தெரிந்தது, சிறிது நேரத்தில் சரியாகிப்போனது, மகள் விபரம் அறிந்து முதல்முறை இங்கே வருகிறாள், சுற்றும் பார்த்துவிட்டு, ஏன் இரண்டு வீடு இருக்கிறது, நடுவில் ஏன் இடைவெளி, இரண்டும் நம்ம வீடா என்றாள், வீடு பிடித்திருக்கிறது என்றாள், உறக்கமில்லாத உறங்கியபின்,அடுத்த நாள் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில் பலரை சந்திந்தேன், என் உருவமாற்றம் அவர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கும், ஐம்பது கிலோவில் இருந்து தொண்ணூறு கிலோவை பலர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மாமனார் வீட்டிற்கு அடுத்தநாள் சென்றுவிட்டு, மீண்டும் அடுத்தநாள் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழாவிற்கு ஊருக்கு வந்துவிட்டோம். பெரிய ஊர் திருவிழாக்களுக்கே ஆள் இல்லாத நிலையில், மிகச்சிறிய கிராமமான எங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது என்பதற்கு மைக் செட் சவுண்டைத்தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை.

திருவிழாவில் பெரிசுகளுக்கு தலையாட்டிவிட்டு,ஒன்பது ஆண்டுகளில் இளைஞர்களான சிறுவர்களின் அடையாளம் அறிந்து பேசிவிட்டு,மகளுக்கு வீட்டில் விளைந்த கொய்யாக்காய், சாத்துக்குடி, எலுமிச்சை பறித்துக்கொடுத்தேன், எல்லாவற்றையும் விட மகளுக்கு பிடித்தது இந்த தோட்டமும் உள்ள வீடு.பிடிக்காதது டாய்லெட்.

அடுத்தநாள் மகனின் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு, தஞ்சையில் சிலோன் தாசன் பேக்கரியில் கேக் வாங்கிக்கொண்டு டூ வீலர் பயணம். கல்லணைக்கால்வாய் ஆற்றங்கரையின் நாணல் புற்களை இப்போது ரசிக்கமுடிந்தது.

மகனின் பிறந்தநாள் முடிந்த அளவு சிறப்பாக கொண்டாடினோம். என் வீட்டிற்கு எதிராகவே பள்ளியும் இருப்பதால் அந்தக்குழந்தைகளையும் பிறந்தநாள் கொண்டாண்டத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டோம்.

எங்கள் கிராமம் பெரிதாக மாறவில்லை, ஆனால் மாறியவை பற்றியும் மற்ற அனுபவங்களும் இனி மெதுவாக.